அருந்ததி நட்சத்திரம் உண்மையா?

உழவாரப் பணிக்குச் சென்றிருந்தோம். நிறைவில் வழிபாடு நடைபெற்றது. அப்போது பக்தர்களின் ‘அரோஹரா’ முழக்கத்தைக் கேட்ட என் பேரன், அதற்கான விளக்கத்தைக் கேட்டான். எனக்குச் சொல்லத் தெரியவில்லை. நீங்கள் விளக்குங்களேன்.

ஹரன் (அரன்) என்றால் ஈசன்; ஹர என்றால் அழித்து விடுதல். அதாவது, ‘ஈசனே எனது பாபத்தைக் கவர்ந்து விடு; எனது பாபத்தை அழித்து விடு’ என்று பொருள். ‘நம பார்வதீ பதயே...’ என்றதும், ‘ஹரஹர மஹா தேவா!’ என்பார்கள். இதில் முதலில் வரும் ‘ஹர’ எனும் சொல் இறைவனை அழைப்பது. இரண்டாவது ஹர - ‘பாபத்தை அபகரித்துக் கொள்’ என்று பொருள் தரும். ‘ஹரஹர’ என்பதே காலப்போக்கில் ‘அரோ ஹரா’ என்றாகிவிட்டது.

கற்பூர ஆரத்தியை ஏற்கும் போது, ‘ஓம் ஹர’ என்று சொல்லிக் கண்களில் ஒற்றிக் கொள்பவர்களும் உண்டு. ஹரனின் மைந்தன் முருகப் பெருமான். ‘எனது பாபத்தை அகற்றிவிடு!’ என்று முருகப் பெருமானிடம் பிரார்த்திப்ப தாகவும் எடுத்துக்கொள்ள லாம்.

 சனிப்பெயர்ச்சியின் பொருட்டு, சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடச் சொல்லி அறிவுறுத்துகிறார்கள் வீட்டுப் பெரியவர்கள். பணியின் நிமித்தம் சனிக்கிழமை இயலாதபட்சத்தில் வேறு நாள்களில் தீபம் ஏற்றி வழிபடலாமா?



 எல்லாக் கிழமைகளிலும் சனீஸ்வரருக்கு தீபம் ஏற்றி வழிபடலாம். அவரின் பெயரில் ஒரு கிழமை இருப்பதால், அந்தத் தினத்துக்குச் சிறப்பு அதிகம் என நம் மனம் எண்ணுகிறது. எல்லா நாளும் வழிபட வேண்டியவர் அவர். வெள்ளிக்கிழமைகளில் ஆலயம் செல்வோம். அங்கு நவகிரகங்களை வலம் வரும்போது, சனீஸ்வரரையும் சேர்த்தே வலம் வருவோம்.

போரில் இறங்கிய ஸ்ரீராமன், ஞாயிற்றுக்கிழமையைப் பார்த்து, சூரியனை வழிபடவில்லை. அவசர அவசியத்தை உணர்ந்து வழிபட்டார்; வெற்றி பெற்றார். பிறந்த நாளில் நவக்கிரக ஹோமம் உண்டு. அப்போதும் சனீஸ்வரரை வழிபடுவோம். அந்த தினம் சனிக்கிழமையாக இல்லாமல் இருக்கலாம். அதேபோல், நவக்கிரக பிரதிஷ்டை செய்யும் நாளும் சனிக்கிழமையாக இருக்காது.  நவகிரகங்களுக்கும் தினமும் அபிஷேகம் உண்டு. அதில் சனீஸ்வரருக்கும் அபிஷேகம் இருக்கும். எல்லாக் கிழமைகளிலும் காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் இரண்டு கைகளிலும் தண்ணீரை ஏந்தி, சனீஸ்வரரை வழிபடுவார்கள் அந்தணர்கள். ஆக, எல்லாக் கிழமைகளிலும் எள் தீபம் ஏற்றி அவரை வழிபடலாம்.


 ஒருமுறை திருக்கோயிலில் கூட்டம் அதிகமிருந்ததால் எல்லாருக்குமாகச் சேர்த்துப் பொதுவாக சங்கல்பம் செய்து, அர்ச்சனை வழிபாடு செய்தார் அர்ச்சகர். இந்த நிலையில் எனக்கான பிரத்யேக பிரார்த்தனைக்குப் பலன் கிடைக்குமா?



 எல்லோருக்குமாகச் சேர்த்துப் பொதுவாக சங்கல்பம் செய்தாலும் தனித் தனியே எல்லோருக்கும் பலன் கிடைத்துவிடும். குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேருக்கும் சேர்த்து, குடும்பத் தலைவனின் வழிபாடு பலனளிக்கும். ஒருவேளை கோத்திரம், பெயர் போன்றவை விடுபட்டுப்போனாலும், அவரது பொருள்கள் அர்ச்சனையில் கலந்தால் அந்த நபருக்கும் பலன் கிடைத்துவிடும். கோயிலைப் பராமரிக்கும் அரசனுக்கும் அங்கு நடக்கும் வழிபாடுகள் பலனளிக்கும். அர்ச்சகர், எல்லோருக்குமாகச் சேர்த்து ஒரேநேரத்தில் சொல்லும்போது, ஒருமுறைதான் சங்கல்பம் சொல்ல வேண்டும். உறுதிமொழி ஏற்கும்போது, அத்தனை பேருக்குமாகச் சேர்த்து ஒருமுறை சொல்வதுண்டு. அதுபோல், கூட்டாகச் செயல்பட்டாலும் தனித் தனியே நடப்பதாகத்தான் பொருள். தனிப்பட்டவருக்கு முழுப் பலன் கிடைத்துவிடும்.

 கல்யாணத்தின்போது, கண்ணுக்குத் தெரியாத அருந்ததி நட்சத் திரத்தைக் காட்டுவதெல்லாம் வெற்றுச் சடங்குதான் என்கிறான் என் நண்பன். அவன் கூற்று சரியானதா? விளக்குங்களேன்...



 விதிக்கு மாறாகப் பகலிலேயே திருமணத்தை முடிக்க வேண்டும் என்று நாம் விரும்பும்போது, புரோகிதர் வேறு வழியின்றி பாசாங்குக் காட்டுகிறார். இது எப்படி தவறாகும்? புரோகிதரை பாசாங்குக் காட்டவைத்து, பிறகு அதையே தவறு என்று சொல்வது என்ன நியாயம்? இரவில்தான் அருந்ததி நட்சத்திரத்தைப் பார்க்க இயலும் என்பது தெரிந்தும், அதை பகலில் காட்ட வைத்து வேடிக்கை பார்ப்பது அழகல்ல.

இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன்பு திருமணச் சடங்கு இரவில் நடந்தேறியது. அப்போது, உண்மையி லேயே அருந்ததி நட்சத்திரத்தைக் காட்டினார்கள் புரோகிதர்கள். இப்போது, நமது விருப்பப்படி பகலில் நடத்துகிறோம். புரோகிதர்களும் அந்த நட்சத்திரத்தைக் காட்டுவதுபோல் பாவனை செய்கிறார்கள்.

 திருச்செந்தூரில் கடல் நீராடுவது போன்றும், அப்போது அலைகளில் சிக்கித்தவிப்பது போன்றும் கனவு கண்டேன். அதுபற்றி விவரித்தபோது, ‘ஒருமுறை திருச்செந்தூருக்குப் போய் வா’ என்கிறார்கள் நண்பர்கள். இதுகுறித்து தங்களின் அறிவுரை தேவை.


கனவில் வருவதெல்லாம் நிஜம் இல்லை. சிந்தனைக்கு எட்டாத விஷயங்களும், சில தருணங்களில் நிகழ இயலாதவையும்கூட கனவில் தோன்றும். கனவில் கண்டதை நிஜ வாழ்க்கையில் ஏற்பது சரியல்ல.

பெரும்பாலான கனவுகள் மனக்குறைவில் தோன்று பவை. எவரேனும் ஒருவர் அப்படியான அனுபவத்தை தங்களிடம் பகிர்ந்திருப்பார் அல்லது திரைக் காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். அவை தங்களின் மனதின் அடித்தளத்தில் மறையாமல் இருந்திருக்கும். பக்குவப்படாத மனம், கனவையும் நிஜத்தையும் இணைத்துப் பார்க்கும்.

மனச் சஞ்சலம் நீங்கும் என்று நீங்கள் கருதினால், திருச்செந்தூருக்குச் சென்று முருகனைத் தரிசித்து வாருங்கள். ஆனால், கனவுகளைத் தொடர்புபடுத்தி குழம்பத் தேவையில்லை.

Comments