குழந்தை வரம் தரும் குமரன்!

பிள்ளை வரம் பெற ஒரு பாடல் உள்ளது. நம்பிக்கையுடன் தினமும் இதை துதிப்பவருக்கு மடிமேல் மழலை நிச்சயம்! பாடல் இதோ:
‘ஜெகமாயை யுற்ற என் அகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்பம் உடலூறித்
தெசமாத முற்றி வடிவாய் நிலத்தில்
திரமாயளித்த பொருளாகி
மகவாவினுச்சி விழியாறறத்தில்
மலைநேர் புயத்தில் உறவாடி
மடிமீதடுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி தரவேண்டும்
முகமாயமிட்ட குறமாதினுக்கு
முலைமேலணைக்க வருநீதா
முதுமாமறைக்குள் ஒருமாபொருட்குள்
மொழியே யுரைத்த குருநாதா
தகையாதெனக்கு உன் அடிக்காண வைத்த
தனியேரகத்தின் முருகோனே
தருகாவிரிக்கு வடபாரி சத்தில்
சமர் வேலெடுத்த பெருமானே”
பொருள்:
எழில் முகத்தையுடைய வள்ளிப் பிராட்டியுடன் வந்தருளிய பெரியோனே! சிறந்த வேதத்தின் ஒப்பற்ற உட்பொருளாகிய ஓம் எனும் பிரணவப் பொருளை சிவமூர்த்திக்கு அருளிய குருநாதரே! தடையேதுமின்றி அடியேனுக்கு உமது திருவடியை காணுமாறு அருள்செய்த ஒப்பற்ற திருவேரகத்தில் உறையும் முருகக் கடவுளே! காவிரி நதிக்கு வடபுறத்தில் போருக்குரிய வேலைத் தாங்கி நிற்கும் பெருமை உடையவரே!
உலக மாயையில் சேர்ந்து என் இல்லற வாழ்வில் அமைந்த மனைவியின் கருவில் தங்கி, உடலில் பத்து மாதம் இருந்து, முதிர்ச்சி பெற்ற குழந்தையாக தேவரீர் எனக்கு கிடைக்க வேண்டும். அடியேன், பிள்ளை பாசத்துடன் உம்மை உச்சி முகர்ந்தும், கொஞ்சியும் விளையாட வேண்டும். அப்போது தாங்கள் என் மடியில் அமர்ந்து நாள்தோறும் உமது மணிவாயால் முத்தம் பெற அருள வேண்டும்.

இதுதான் இப்பாடலின் அர்த்தம். என்னே ஒரு பக்தி கலந்த பாசம்!

Comments