மனக்குறை தீர்க்கும் மகாதேவன்!

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது ஆன்றோர் மொழி. இதற்கு இரண்டு பொருள் கொள்ளலாம். ஆலயம் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது ஒன்று; முறையற்ற அரசியல் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது மற்றொரு பொருள். இரண்டு பொருள்களுமே ஒன்றை ஒன்று சார்ந்திருப்பவைதான். ஓர் அரசாங்கம் தர்மநெறிப்படி நடக்க வேண்டுமானால், அரசை ஏற்று நடத்துபவருக்கு இறை நம்பிக்கை இருக்க வேண்டும். இறை நம்பிக்கை என்பது ஆலயங்களைச் சார்ந்தே அமைவது. எனவே, ஆலயங்களில் நித்திய பூஜைகளும் விழாக்களும் நடைபெற்று தெய்வ சாந்நித்தியத்துடன் திகழும்போதுதான், அரசும் தர்மநெறிப்படி இயங்கும்.

இதன் காரணமாகத்தான் நம் நாட்டை ஆண்ட மன்னர்கள் எண்ணற்ற கோயில்களை நிர்மாணித்து, அங்கே நித்திய பூஜைகளும் விழாக்களும் தடையின்றி நடைபெற மானியங் களையும் அளித்துள்ளனர். பிற்காலத்தில் மானியங்களை மற்றவர்கள் அபகரித்துக் கொள்ளாதபடி கல்வெட்டுகளிலும் பொறித்துவைத்தனர்.
ஆனாலும், அந்நியர்களின் படையெடுப்பு களாலும் இயற்கைச் சீற்றங்களினாலும் எண்ணற்ற கோயில்கள் சிதிலமடைந்து, ஒருவேளை பூஜைக்கும் வழியின்றி இருப்பதை பல ஊர்களில் காண முடிகிறது. சமீபத்தில் நாம் புதுக்கோட்டை  கீரனூர் பகுதிக்குச் சென்றிருந்தபோது, கீழக்குறிச்சி எனும் ஊரில் அப்படியோர் ஆலயத்தைக் காண நேர்ந்தது. ஆலயத்தின் அமைப்பானது, ஒரு காலத்தில் அங்கே நித்திய பூஜைகளும் விழாக்களும் வெகு விமர்சையாக நடைபெற்று, கோயில்  மிகுந்த சாந்நித்தியத்துடன் திகழ்ந்திருக்கக்கூடும் என்ப தைச் சொல்லாமல் சொல்வதுபோல் இருந்தது.

இன்று அந்த ஆலயம் முற்றிலும் சிதிலமடைந்து இருப்பதைக்கண்டு சோகத்தால் மனம் கனத்து, மனதின் கனம் கண்ணீராக வெளிப்பட்டது. கல்லுக்குள் தேரைக்கும் உணவளிக்கும் ஐயனின் திருக்கோயில் விரைவிலேயே புனர்நிர்மாணம் செய்யப்பட்டு, புதுப்பொலிவுடன் திகழவும் நித்திய பூஜைகளும் விழாக்களும் முறையாக நடக்கவும் இறைவனைப் பிரார்த்தித்துக் கொண் டோம். இந்தத் திருக்கோயிலின் திருப்பணிகளை மேற்கொண்டிருக்கும் கந்தசாமி சிவனடியாரிடம் பேசினோம்.

‘‘இந்தக் கோயில் மூன்றாம் குலோத்துங்க சோழ மன்னரின் காலத்தில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதற்கான கல்வெட்டுகளும் கோயிலில் காணப்படுகின்றன. இந்த ஊரில் கோயில் கட்டியதன் பின்னணியில் செவிவழிச் செய்தியாக ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது. சோழ நாட்டுக்கும் பாண்டிய நாட்டுக்கும் எல்லைப் பகுதியில் அமைந்திருந்த ஊர்களில் இதுவும் ஒன்று. எனவே, இரு நாட்டு ஒற்றர்கள் மற்றும் படை வீரர்களின் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

என்னதான் கீழக்குறிச்சி நீர்வளமும் நிலவளமும் நிறைந்து, செல்வச் செழிப்பான ஊராக இருந்தாலும் ஊர் மக்கள் வழிபடுவதற்கு ஒரு கோயில் இல்லை என்ற குறை ஊர் மக்களுக்கு இருந்துவந்தது. நல்ல நாள், கிழமை என்றால் வெளியூர்களில் இருக்கும் கோயில்களுக்குத்தான் செல்ல வேண்டும் என்ற நிலை. ஊர்மக்களின் குறை, சோழ தேசத்து ஒற்றர்களின் மூலம் மன்னருக்குத் தெரியவந்தது. ஊர் மக்கள் கோயில் வழிபாட்டுக்காக வெளியூர்களுக்குச் சென்று விட்டால், பாண்டிய வீரர்கள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்துவிடும் என்ற உண்மையும் புரியவந்தது.
மக்களின் குறை தீர்க்கவும் பாண்டிய வீரர்களின் அட்டகாசம் இல்லாமல் இருக்கவும் அமைச்சரின் ஆலோசனைப்படி மூன்றாம் குலோத்துங்க சோழ மன்னர், இந்தக் கோயிலைக் கட்டியதுடன் அருள்மிகு ஆனந்தவள்ளி அம்மன் சமேத அருள் மிகு சோமசுந்தரேஸ்வரரை பிரதிஷ்டை செய்து, நித்திய பூஜைகளும் விழாக்களும் நடைபெற மானியங்களையும் ஏற்படுத்தினார். இந்தக் கோயிலுக்கு வந்து அருள்மிகு சோமசுந்தரேஸ் வரரை வழிபட்டால், மனம்தொடர்பான பிரச்னைகள் எல்லாம் தீர்ந்துவிடும் என்பது ஐதீகம். காலப்போக்கில் கோயில் சிதிலமடைந்து ஒருகால பூஜைக்கும் வழியில்லாமல் போய்விட்டது. மூன்று வருடங்களுக்கு முன்புதான், புதர் மண்டிக் கிடந்த இந்தக் கோயிலைச் சீர்படுத்தி, ஒருவேளை பூஜைக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்’’ என்றார்.

அவருடன் இருந்த வீரசிங்கம் என்பவர் நம்மிடம், ‘`இந்தக் கோயில் இந்துசமய அறநிலையத் துறையின் கீழ் உள்ளது. உபயதாரர்களைக் கொண்டு திருப்பணிகளைச் செய்வதற்காக அறநிலையத்துறைக்கு விண்ணப்பித்தோம். இதுபற்றி அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த சி.விஜயபாஸ்கர் அவையில் கேள்வி எழுப்பினார். அதற்கு, ஸ்தபதியிடம் மதிப்பீடு கோரப்பட்டிருப்பதாகவும் விரைவில் திருப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அரசு சார்பில் பதிலளித்தனர். இந்த விவரம் சட்டமன்றக் குறிப்பிலும் இடம் பெற்றிருக்கிறது. ஆனால், மூன்றாண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை ஒன்றும் நடக்கவே இல்லை’’ என்று ஆதங்கத்துடன் கூறினார்.
கீழக்குறிச்சி ஊர்த்தலைவர் நம்மிடம், ‘‘மூன்று வருடங்களுக்கு முன்புதான் கந்தசாமி சிவனடியார் இந்தக் கோயிலுக்கு வந்து, உழவாரப் பணி செய்ததுடன், திருப்பணிகள் தொடங்க வேண்டிய அவசியத்தையும் ஊர்மக்களிடம் எடுத்துச் சொன்னார். அவர் ஏற்கெனவே, ஓர் அறக்கட்டளை ஏற்படுத்தி, அதன்மூலம் பல கோயில்களுக்குத் திருப்பணி செய்து, கும்பாபிஷே கமும் நடத்தியிருக்கிறார். எனவே, அவர் மூலமாவது இந்தக் கோயில் திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடக்கட்டும் என்று ஊர்மக்கள் எல்லோரும் அவருடைய முயற்சிக்கு ஒத்துழைப்பு தருவதாகக் கூறினர். ஆனாலும், போதிய பொருளுதவி கிடைக்காத காரணத்தால் திருப்பணிகள் பாதியிலேயே நிற்கின்றன’’ என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

கந்தசாமி சிவனடியாரிடம் அறக்கட்டளை பற்றிய விவரம் கேட்டோம். ‘`நாங்கள்,  கீரனூரில் உள்ள அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் பெயரில் ஓர் அறக்கட்டளை ஏற்படுத்தி, அந்த அறக்கட்டளை மூலம் பல கோயில்களில் திருப்பணிகளைச் செய்து வருகிறோம். மூன்று வருடங்களுக்கு முன்பு இந்தக் கோயில் திருப்பணி களைத் தொடங்க முடிவு செய்தோம். ஊர்மக்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு தருகின்றனர். ஆனால், போதுமான நிதி வசதி இல்லாத காரணத்தினால் திருப்பணிகள் தடைப்பட்டிருக்கின்றன. ஐயன் சோமசுந்தரேஸ்வரர் அருளால், போதிய நிதி உதவி கிடைத்து, விரைவி லேயே திருப்பணிகள் நிறைவுபெற்று கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்’’ என்றார்.
அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் ஓர் ஆலயம் இருக்கிறதென் றால், அந்தக் கோயிலைப் பராமரித்து, நித்திய பூஜைகள் தவறாமல் நடைபெறச் செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை. ஆனால், அரசாங்கமோ அலட்சியமாக இருக்கிறது.

‘முன்னவனார் கோயில் பூசைகள் முட்டிடின்
மன்னர்க்குத் தீங்கு உள வாரி வளம் குன்றும்
கன்னம் களவு மிகுந்திடும் காசினி
என் அரு நந்தி எடுத்து உரைத்தானே’
என்பது திருமூலர் வாக்கு.

மக்களின் நன்மை கருதி நம் முன்னோர்கள் கட்டிவைத்த கோயில் களில் நித்திய வழிபாடுகள் தவறிவிட்டால், ஏற்படும் விளைவுகளைச் சொல்கிறது இந்தப் பாடல். நாட்டில் இயற்கைச் சீற்றங்கள், நோய் நொடிகள், வறுமைப்பிணி முதலான துன்பங்கள் நீங்கி சுபிட்சம் மிகுந்திட, புராதான ஆலயங்களை முறையாகப் பராமரிப்போம். அப்போது இறையருள் ஸித்திக்கும்; நாடும் மக்களும் வளம் பெறலாம்.அவ்வகையில், கீழக்குறிச்சி அருள்மிகு சோமசுந்தரேஸ்வரர் திருக் கோயில் திருப்பணிக்கும் நாமும் தாராளமாகப் பொருளுதவி செய்து, நாமும் நம் சந்ததியினரும் சோமசுந்தரப் பெருமானின் திருவருளால் மனநலமும், குறைவற்ற செல்வமும், நோயற்ற வாழ்வும் பெற்றுச் சிறப்புற வாழ்வோம்.

எங்கிருக்கிறது... எப்படிச் செல்வது..?

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் அமைந்திருக்கிறது கீழக்குறிச்சி அருள்மிகு சோமசுந்தரேஸ்வரர் திருக்கோயில். புதுக்கோட்டையில் இருந்து பேருந்து வசதி உண்டு.

வங்கிக் கணக்கு விவரம்:

Name: ARULMIGU AGNEESWARAR THIRUKKOIL

Bank Name:
INDIAN OVERSEAS BANK

A/c.No: 024201000022279

IFSC.No: IOBA 0000242

மேலும் விவரங்களுக்கு: கந்தசாமி சிவனடியார்: 9360779163

Comments