சிவலிங்க வடிவில் அருளும் ஸ்ரீகாலபைரவர்!

சிவாம்சமான பைரவர் லிங்க மூர்த்தமாக தரிசனம் தரும் கோயிலைப் பற்றி நண்பர் ஒருவர் தெரிவித்தபோது, உடனே நமக்கும் அந்தக் கோயிலுக்குச் சென்று தரிசிக்கும் ஆர்வம் எழ, உடனே புறப்பட்டுவிட்டோம். மேற்குத் தமிழகத்தில் கிருஷ்ணகிரிக்கு அருகில் மிக ரம்யமான சூழலில் அமைந்திருக்கிறது ஸ்ரீகாலபைரவர் கோயில்.

கிருஷ்ணகிரி நகரின் பழைய பேட்டையிலிருந்து குப்பம் செல்லும் சாலையில், சையத் பாஷா எனும் மலைக்கு வலப்புறமாக ஆஞ்சநேயர் மலைக்குச் செல்லும் பாதையில், சுமார் 2 கி.மீ. தூரம் பயணித்தால் பைரவர் கோயிலை அடையலாம்.

கோயிலை நெருங்குவதற்கு முன்பாக மலையின் அடிவாரத்தில் ஓர் அரசமரத்தின் அடியில் பெரிய பாறையைக் குடைந்து வடிக்கப்பட்ட ஆஞ்சநேயரைத் தரிசிக்கலாம். அங்கிருந்து சிறிது தூரத்திலேயே காலபைரவர் கோயில் அமைந்துள்ளது.
கிழக்கு மற்றும் வடக்குப்புறங்களில் ஏரியும், மேற்கே ஆஞ்சநேயர் மலையும், பைரவர் மலையும் அமைந்திருக்க, இந்த இரண்டு மலைகளுக்கும் இடையில், அற்புதமாக கோயில் கொண்டிருக்கிறார்  ஸ்ரீகாலபைரவர்.
முற்காலத்தில் மேற்சொன்ன இரண்டு மலைகளுக்கு இடையில் இருந்த ஒற்றையடிப் பாதை வழியாகவே பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வருவார்களாம். 17 வருடங்களுக்கு முன்புதான் ஆஞ்சநேயர் மலையை ஒட்டி, வாகனங்கள் செல்லும் வகையில் சாலை அமைக்கப்பட்டது.

திருக்கோயிலின் மகிமை குறித்து கோயில் அறக்கட்டளையின் கௌரவ தலைவரும், கோயில் அறங்காவலர் குழுவின் முன்னாள் தலைவருமான சேகரிடம் பேசினோம்.

‘`சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு ஹொய்சாள மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் இந்தக் கோயில் கட்டப்பட்டதாகச் சொல்கிறார்கள். இங்குள்ள சிவலிங்க மூர்த்தம் சுயம்புவாகத் தோன்றியதாகவும் அந்தச் சுயம்பு லிங்கமே கால பைரவரின் அம்சமாக விளங்குவ தாகவும் வழிவழியாகச் சொல்லப் பட்டு வருகிறது. கிருஷ்ணதேவ ராயர் காலத்தில் போர் வீரர்கள் இந்தக் கோயிலில் போர்க்கருவிகளை வைத்து வழிபட்டதாகவும் செவிவழித் தகவல் ஒன்று இப்பகுதி மக்களிடையே நிலவி வருகிறது.

விவசாயம் மற்றும் கால்நடை களை மேய்க்கும் தொழில்களை அடிப்படையாகக் கொண்ட 150 கிராமங்களைச் சேர்ந்த பல்வேறு சமூகத்தினர் ஸ்ரீகாலபைரவரை தங்களின் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். அவர்கள், தங்களது வீட்டில் எந்தவொரு சுபநிகழ்ச்சி களை நடத்துவதாக இருந்தாலும், இந்த பைரவரை வழிபட்ட பிறகே அந்த சுப காரியங்களைத் துவங்குகிறார்கள்.
கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமின்றி, பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்தும் நிறைய பக்தர்கள் இங்கு வந்து ஸ்ரீகாலபைரவரை வழிபட்டுச் செல்கின்றனர். இந்தக் கோயிலுக்கு அருகில் ராஜேந்திர சோழர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப் பட்டதாகச் சொல்லப்படும் நந்தீஸ்வரர் சிலை ஒன்றும் உள்ளது. நந்தியின் இரண்டு கொம்புகளுக்கு இடையில் சிவலிங்க மூர்த்தம் தெரிவதுபோல் அமைக் கப்பட்டிருப்பது விசேஷம்!'' என்று சிலிர்ப்புடன் விவரித்தவரிடம், கோயிலின் சிறப்பு வழிபாடுகள் குறித்து கேட்டோம்.

‘`ஆத்தி மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்டிருக்கும் இந்தக் கோயிலில், லிங்க வடிவில் காட்சி தரும் ஸ்ரீகாலபைரவருக்கு அஷ்டமி தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

அப்போது எலுமிச்சை, பூசணி, தேங்காய் மூடி ஆகியவற்றில் நெய்தீபம் ஏற்றி வைத்து பக்தர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.அதன்மூலம்ஸ்ரீகாலபைரவர் தங்களுக்குக் காவலாக இருப்பதுடன், தங்கள் வேண்டுதல் களை எல்லாம் நிறைவேற்றுவார் என்று மனப்பூர்வமாக நம்புகிறார்கள். அதேபோல், வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டுத் தவறான முடிவுக்கு வரும் நிலையில் இருப்பவர்கள் ஒருமுறை இந்தக் கோயிலுக்கு வந்து சென்றால், அவர்கள் தங்களது பிரச்னை களில் இருந்து சீக்கிரம் மீண்டு விடுவார்கள் என்பது நம்பிக்கை’’ என்றார் நெகிழ்ச்சியோடு.

கருவறையில் சிவலிங்க மூர்த்தத்துடன் பஞ்ச லோகத்தினால் ஆன பைரவர் மூர்த்தத்தையும்,  சிவபார்வதியர் மூர்த்தங்களையும் தரிசிக்கலாம். சிவபார்வதியர் மூர்த்தங்களை பிரதிஷ்டை செய்ததற்குக் காரணமான சம்பவம் என்று ஒரு செவிவழித் தகவலை விளக்கினார் சேகர்.

‘`இங்கு ஆரம்பத்தில் சிவலிங்க மூர்த்தம் மட்டும்தான் இருந்துள்ளது. இவர் பைரவர் அம்சம் என்பதால், மரத்தால் ஆன பைரவர் சிலை வைக்கப்பட்டது. தற்போது பஞ்ச லோகத்தால் ஆன பைரவர் சிலையை வைத்து வழிபட்டு வருகிறோம்.

விழாக் காலங்களில் பைரவரின் வாகனமான நாய் சிலையை எடுத்துக் கொண்டு கோயிலைச் சுற்றி வலம் வருவார்கள். அந்த நாய் சிலை, தன்னைச் சுமந்து வருபவர்களை ஆளுக்கொரு திசையாக இழுத்துச் செல்லுமாம். `ஏதேனும் தெய்வக் குறையாக இருக்குமோ' என்று ஐயப்பட்ட மக்கள், இதுபற்றி அருள்வாக்குக் கேட்டபோது கிடைத்த அறிவுறுத்தலுக்கு இணங்க, சிவபார்வதியர் சிலையைச் சுதைச் சிற்பமாக இங்கே பிரதிஷ்டை செய்தார்களாம்'' என்று கூறிய சேகர் தொடர்ந்து, ‘` இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலுக்கு  2011-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு, கோயில் கோபுரம் மற்றும் சுற்றுப் பிராகாரத்தில் வண்ணங்கள் தீட்டப் பட்டு, கடந்த ஜூன் மாதம் 28-ம் தேதி ஒரு கும்பாபிஷேகம் நடைபெற்றது’’ என்றார்.
இந்தக் கோயிலுக்கு செங்குந்த முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தாம் பரம்பரை பரம் பரையாக பூஜை செய்துவருகிறார்கள். தற்போது கோயிலில் பூஜை செய்துவரும் ஆரோக்கிய சாமியிடம் பேசினோம்.
``காலபைரவர் கோயில்களில் இந்தக் கோயில் வித்தியாசமானது. பொதுவாக காலபைரவரை திகம்பரராக இருக்கும் கோலத்தில்தான் தரிசித்திருப்போம். ஆனால், இங்கே லிங்க வடிவத்தில் காட்சி தருகிறார். சிவலிங்கத்தின் நெற்றிப்பகுதியில் திரிசூலம் பொறிக்கப்பட்டிருக்கிறது. கருவறை வாயில் வழியே தரிசித்தால் பஞ்சலோக பைரவ  மூர்த்தத்தையும் சிவபார்வதி யரையும்தான் தரிசிக்க முடியும். லிங்க வடிவிலான பைரவரை சுவரில் இருக்கும் ஒரு துவாரத்தின் வழியாகத்தான் தரிசிக்க வேண்டும். இங்கே சிவபெருமான் மீசையுடன் காட்சி தருவது சிறப்பு.  நித்திய பூஜைகள் தவறாமல் நடைபெறு வதுடன் திங்கட்கிழமைகளிலும் பௌர்ணமி, அமாவாசை, அஷ்டமி தினங்களிலும் விசேஷ  பூஜைகள் நடைபெறுகின்றன’’ என்றார்.

பக்தர்கள் அனைவரும் அவசியம் தரிசிக்க வேண்டிய  கோயில் இது. நீங்களும் ஒருமுறையேனும் லிங்க சொரூபமான காலபைரவரைத் தரிசித்து வாருங்கள்; அவரருளால் கவலைகள் இல்லாத வாழ்க்கை வரமாகக் கிடைக்கும்.

ஞாயிறுகளில் நெய்தீபம்...

சாதாரண நாள்களில் காலை 9 முதல் மதியம் 1.30 மணி வரையிலும், அஷ்டமி நாள்களில் காலை 9.30 முதல் இரவு 8.30 மணி வரையும் கோயில் திறந்திருக்கும். திருமணத் தடை, தீராத பிணி, வேலையின்மை, கல்வியில் தடைகள் முதலான பிரச்னைகள் உள்ளவர்கள், தொடர்ந்து 12 ஞாயிற்றுக் கிழமைகள் ராகு காலத்தில் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வேண்டிக் கொண்டால், வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும்.

எப்படிச் செல்வது?

சென்னை-பெங்களூரு மார்க்கத்தில் சென்னையில் இருந்து சுமார் 256 கி.மீ. தூரத்திலுள்ளது கிருஷ்ணகிரி. இவ்வூரில் `பழைய பேட்டை' என்ற இடத்திலிருந்து கோயிலுக்குச் செல்ல ஆட்டோ வசதி உள்ளது. விசேஷ நாள்களில் ஷேர் ஆட்டோக்கள் நிறைய வரும்.

Comments