அழிவிடைதாங்கி பைரவர் கோவில்

தமிழ்நாட்டில் பல பைரவர் கோயில்கள் இருந்தாலும் ஸ்ரீசொர்ணகால பைரவர் போன்ற தனி ஆலயம் வேறு எங்கும் இதுபோன்று கிடையாது.
அழிவிடைதாங்கி பைரவர் கோவில்
ஆலய தல வரலாறு

பழங்காலத்தில் தொண்ட மண்டலம், தொண்ட காருண்யம் என்ற காடுகளை திருத்தி நாடாக்கி அதனை பெளத்த மன்னர்கள் ஆண்டு வந்தனர். கி.பி.3 ஆம் நூற்றாண்டில் இங்கு கல்விக்கூடம் சிறப்பாக இயங்கி வந்தது. வட இந்திய மாணவர்கள் இங்கு கல்வி பயின்றனர். ஹிமசீதன மன்னர் அசுலங்கர் என்ற சமண அறிஞர் பொளத்தர்களை வாதிட்டு வென்று அவர்களை நாடு கடத்தினார் பின்னர் இங்கு சமண கல்வி கூடத்தை அமைத்தார். அப்போது இந்த ஊர் அறவழித்தாங்கி என அழைக்கப்பட்டது.

பொற்காலத்தில் இந்த பகுதியை பல்லவர்களும் சோழர்களும் ஆட்சி செய்த போது சிவனை போற்றும் சைவ நெறியானது வளம் பெற்றது. சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் {கி.பி.14ஆம் நூற்றாண்டில்} வீர சம்புவராயன் என்ற மன்னர் இங்கு கோட்டையை கட்டி ஆட்சி செய்து வந்தான். அப்போது வடக்கே இருந்து யாதவராயன் என்ற மன்னன் படையெடுத்து வந்தான் இருவருக்கும் இடையே பெரும்போர் மூண்டது. முதல் நாள் நடந்த போரில் சம்புவராயன் படைகள் நாசமடைவதைக்கண்டு வருந்தினர்.

அன்று இரவு கால பைரவர் அவரது கனவில் தோன்றி நீ வருத்தப்படவேண்டாம் நாளைய போரில் நீ வெற்றி பெற நான் துனையிருப்பேன் என்றார். அடுத்த நாள் போரில் சம்புவராயன் பெரும் வெற்றி பெற்றான் அழிந்துபோன தனது படையையும், பட்டணத்தையும் இறைவன் காப்பாற்றியதால் இவ்வூரை அழிபடைதாங்கி என பெயரிட்டார்.

இந்த வெற்றியை அருளிய ஸ்ரீசொர்ணகாலபைரவருக்கு பெரியதொரு கோயிலையும் எழுப்பினார். இக்கோயிலின் மகிமையானது திருவோத்தூர் வேதபுரீஸ்வரர் ஆலய ஸ்தலபுராணத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. ஸ்ரீபைரவப்பெருமான் அனைவரது வாழ்க்கைக்கும் துணை நின்றார். வந்து வணங்கும் பக்தர்களுக்கு சகல விதமான வெற்றிக்கும் வழியமைத்து தருகிறார்.

சிவபெருமான் எடுத்த 64 அவதாரங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவ அம்சமே. தொல்லைகள் அகன்றிட மற்றவர் செய்த ஏவல், பில்லி, சூனியம் போன்ற அபிசார தோஷங்கள் விலகிட, மருத்துவர்களை தோல்வியுறச் செய்யும் கர்ம வியாதிகளில் இருந்து விடுபட, அஷ்ட தரித்திரம் நம்மை விட்டு விலகி பெருஞ்செல்வம் சேர்ந்திட, தங்கம் நம்மோடு எந்நாளும் தங்கியிருக்க, வம்பு வழக்குகளில் வெற்றி பெற்றிட, பொறாமை, கண்திருஷ்டி அகன்று சுகம் பெற்றிட, தொட்டது துலங்கிட, எதிரிகளும், தடைகளும் மறைந்து எதிலும் வெற்றி பெற்றிட, பைரவரை துதிப்பது மிகவும் அவசியமாகும். பைரவ பூஜைக்கு கைமேல் பலன் என்பது அனுபவ பூர்வ வசனம் ஆகிறது.

இத்திருக்கோயிலின் சிறப்பம்சங்கள்

சுமார் 500 வருடங்கள் பழைமையான திருக்கோயில். இத்திருக்கோயில் பைரவர் தெற்கு நோக்கி காட்சிதந்து, சுனவாகனம் கிழக்கு நோக்கி தனிக்கோயிலாக அருள்பாலிக்கிறார், பொதுவாக பைரவரின் வாகனம் மேற்க்கு நோக்கி இருக்கும். காசியிலிருக்கும் ஸ்ரீ கால பைரவருக்கு நிகரான ஷேத்திரம், தமிழ்நாட்டில் பல பைரவர் கோயில்கள் இருந்தாலும் ஸ்ரீசொர்ணகால பைரவர் போன்ற தனி ஆலயம் வேறு எங்கும் இதுபோன்று கிடையாது. ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.



ஸ்ரீசொர்ணகால பைரவரை வழிபடுவதினால் பலன்

வாஸ்து பகவானுக்கு குரு என்பதால் நிலம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் விலகும். சனி பகவானுக்கு குரு என்பதால் சனி பகவான் தொல்லையிலிருந்து விடுபடலாம். திருமணத்தடை, பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வர். பில்லி சூனியம் விலகும். வியாபார அபிவிருத்தி, வீட்டில் சண்டை சச்சரவுகள் விலகும். பூர்வீக தோஷம் அனைத்தும் நிவர்த்தி ஆகும். முன்னோர்களின் சாபமும், பெற்றோர்களின் பாவமும், பிறப்பின் கர்ம வினைகள் அகலும். குழந்தைகள் நன்றாக படிப்பர். கடன் பிரச்சினை விலகும். மனநிலை பாதிப்பு விலகும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். மனதுக்கு நிம்மதி கிடைக்கும்.

பரிகாரங்களும்.... தீர்வும்....

வறுமை நீங்க :

வெள்ளிக்கிழமை மாலை வில்வத்தினால் அர்ச்சனை செய்ய அஷ்ட தரித்திரம் விலகும்.

பிள்ளைப்பேறு உண்டாக :

தேய்பிரை அஷ்டமியில் விரதம் இருந்து,செவ்வரளிப் பூவாள் 11 அஷ்டமிகளில் அர்ச்சித்தால் கைமேல் பலன்.

வழக்குகளில் வெற்றி பெற, வியாபார லாபம் அடைய :

பைரவருக்கு ஸஹஸ்ர நாம அர்ச்சனை செய்து வடை, சர்க்கரைப் பொங்கல், தேன் முதலியன படைக்கவேண்டும்.

இழந்த பொருட்களை திரும்ப பெற :

7 மிளகுகளை துணியில் மூட்டை கட்டி, நல்லெண்ணைய் தீபம் ஏற்ற இழந்தவற்றை திரும்ப பெறலாம்.

திருமண தடை நீங்க :

ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் பைரவருக்கு விபூதி அபிஷேகம் செய்ய மிக விரைவில் பலன்.



நவக்கிரக தோஷம் விலக :

சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை மாலை ராகுகால வேளையில் பைரவருக்கு விபூதி அபிஷேகம் செய்ய மிக விரைவில் பலன். ஸ்ரீ பைரவரை தொடர்ந்து இடைவிடாமல் வழிபடுவோருக்கு சிறந்த குருநாதர் அல்லது சித்தர் அருள் தன்னால் கிடைக்கும்.

அமைவிடம் :

திருவண்ணமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுக்கா அழிவிடைதாங்கி கிராமம் மதுரா பைரவபுரம்.

கோவில் திறந்திருக்கும் நேரம்:

தேய்பிறை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.

வழித்தடம்:

காஞ்சிபுரத்தில் இருந்து வெம்பாக்கம் வழியாக அழிவிடைதாங்கி வந்தடையலாம், வெம்பாக்கத்திலிருந்து ஷேர் ஆட்டோ மூலமாகவும் வரலாம்.

தொகுப்பு :

ஸ்ரீராஜசேகர்.பு
4/43, இரன்டாவது மெயின் தெரு
அண்ணா நகர், செய்யார் - 604407
திருவண்ணாமலை மாவட்டம்
தமிழ்நாடு.

Mail id:-sreerajasekarp@gmail.com.

Comments