குமரிமுனையில் குதூகல நவராத்திரி

கன்யாகுமரி அம்மனின் மூக்குத்தி பிரகாசமாக ஒளி வீசுவதால், கடலில் பயணம் செய்யும் மாலுமிகள், இதை கலங்கரை விளக்கு என்று நினைத்து ஏமாந்து விடுவார்களாம். இதனால் ஒரு சமயம் ஒரு கப்பல் திசை மாறி இங்கு வந்து தரை தட்டி விட்டதாம். ஆகவே, அம்மன் சன்னிதியின் கிழக்கு வாசல் எப்பொழுதும் மூடப்பட்டே இருக்கும்.
பரசுராமனால் நிறுவப்பட்ட பஞ்ச பகவதி தலங்களில் ‘பாலாம்பிகா’ என்ற பெயரில் தமிழகத்தின் தெற்கு முனை முக்கூடலில் அமைந்த கன்யாகுமரி தலமும் ஒன்று. கிருஷ்ணாவதாரத்தில் கம்ஸன் தன் தங்கை தேவகிக்குப் பிறந்த ஏழு குழந்தைகளைக் கொன்று எட்டாவது பெண் குழந்தையையும் கொல்ல முயன்ற போது, தேவி ஆவேசம் கொண்டு அவனைக் காலால் எட்டி உதைத்து விண்ணில் பறந்தார். பரமேஸ்வர பக்தனான கம்சனை எட்டி உதைத்த பாவத்துக்கு பரிகாரம் வேண்டி கன்யாகுமரி முனையில் பரமேஸ்வரனை நோக்கித் தவமிருந்தாள்.
அப்பகுதியில் இருந்த பாணாசுரன் என்ற அசுரன் குமரி அம்மனை அடைந்தே தீர வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தான். அச்சமயம் குமரி முனையின் அருகில் இருக்கும் சுசீந்திரத்தில் குடிகொண்டிருந்த தாணுமாலய ஸ்வாமிக்கும், குமரி அம்மனுக்கும் திருமணம் நிச்சயமாக, தேவரிஷியான நாரதர் குழப்பம் விளைவித்து திருமணத்தைத் தடை செய்து நிறுத்தி விடுகிறார்.
தாணுமாலய ஸ்வாமியை மணக்க முடியாததால், ‘இனிமேல் தனக்குத் திருமணமே வேண்டாம்’ என்று முடிவு செய்து குமரி முனையில் நின்று தவத்தில் ஈடுபட்டாள் அம்பிகை. இதுதான் சரியான சமயம் என்று எண்ணிய பாணாசுரன் மீண்டும் பகவதி அம்மனுக்குத் தொல்லை கொடுக்க ஆரம்பித்தான். பொறுத்துப் பார்த்த தேவி, ஆவேசமுடன் சூலாயுதத்தை எடுத்துப் பாணாசுரன் மீது வீசி அவனை வதம் செய்தாள். அந்த தேவிதான் இன்றுவரை கன்யாகுமரி அம்மனாக இருந்து நமக்குக் காட்சி கொடுத்து அருள்பாலிக்கிறாள்.
நவராத்திரி திருநாளில் பாணாசுரனை தேவி வதம் செய்த நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து, கன்யாகுமரி அம்மனை ஒரு குதிரை வாகனத்தில் அமர்த்தி பாணாசுரனுடன் போர் செய்து அவனை வதம் செய்வது போன்ற ஒரு நிகழ்ச்சியை, ‘அம்பு காத்தல்’ என்ற பெயரில் மிக அமர்க்களமாகக் கொண்டாடுகிறார்கள். இந்த விழா விஜயதசமியன்று நடைபெறும்.
நவராத்திரி ஒன்பது நாட்களிலும் இங்கு வெகு விமரிசையாக ‘கன்யா பூஜை’ நடைபெறும். இரண்டு முதல் ஒன்பது வயது வரை உள்ள பெண் குழந்தைகளை ஒன்பது நாளும் ஒன்பதுவித அலங்காரங்களில் அழைத்து வரப்படுவார்கள். முதல் நாள் ஒரு குழந்தை, இரண்டாம் நாள் இரண்டு குழந்தைகள் என்று அதிகரித்து ஒன்பதாம் நாள் ஒன்பது கன்னிகளையும் நிற்க வைத்துப் பூஜை செய்வார்கள். இப்படிச் செய்தால் நவராத்திரியின் முழுப் பயனும் கிட்டும் என்பது ஐதீகம்.
நவராத்திரி ஒன்பது நாளும் கன்யாகுமரி அம்மன் கோயில் முழுவதும் விளக்குகளால் ஜொலிக்கும். பிரகாசமான அந்த விளக்கொளியில் ஒன்பது நாளும் ஒன்பதுவித அலங்காரங்களுடன் அம்மனைக் காணக் கண் கோடி வேண்டும்.
கன்யாகுமரி அம்மனின் மூக்குத்தி பிரகாசமாக ஒளி வீசுவதால், கடலில் பயணம் செய்யும் மாலுமிகள், இதைக் கலங்கரை விளக்கு என்று நினைத்து ஏமாந்து விடுகிறார்களாம். இதனால் ஒருசமயம் கப்பல் ஒன்று திசை மாறி இங்கு வந்து தரை தட்டி விட்டதாம். ஆகவே, அம்மன் சன்னிதியின் கிழக்கு வாசல் எப்பொழுதும் மூடப்பட்டே இருக்கும். ஆனால், விஜயதசமி அன்று மட்டும் இக்கதவைத் திறந்து வைத்திருப்பார்கள்.
குழந்தை பாக்கியம் வேண்டுவோர் நவராத்திரியில் ஒன்பது நாளும் இங்கு வந்து தங்கி இருந்து அம்மனைத் தரிசனம் செய்து கன்னியா பூஜை செய்தால், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். திருமணத் தடை நீங்க, நவராத்திரியில் இங்கு வந்து அம்பாளுக்கு ஒருநாள் அலங்காரச் செலவை ஏற்றுக்கொள்ள, பலன் கிடைக்கும்.

Comments