ஆலயம் தேடுவோம் - 'இது கனவில் கிடைத்த கட்டளை!’

‘சான்றோருடைத்து’ என்று சிறப்பித்துச் சொல்லப் படும் தொண்டைமண்டலத்தில் பல்லவர்கள் ஆட்சிக் காலத்தில் எண்ணற்ற பல சிவாலயங்கள் ஏற்படுத்தப் பட்டு, நித்திய பூஜைகள் நடப்பதற்கான மானியங்களும் வழங்கப்பட்டன. அத்தகைய ஆலயங்களில் ஒன்றுதான், மங்கலம் அருள்மிகு காமாட்சி அம்பிகை சமேத அருள்மிகு  திருப்பாலீஸ்வரர் திருக்கோயில்.

மகேந்திரவர்ம பல்லவ மன்னரால் ஏற்படுத்தப்பட்ட மகேந்திரவாடி ஏரிக்கரையில் வயல்கள் சூழ அமைந் திருக்கிறது மங்கலம் கிராமம். இவ்வூரின் அருகில் அருணகிரிநாதரால் பாடப்பெற்ற ஞானமலை முருகன் திருக்கோயிலும் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு.

ஒருகாலத்தில் நித்திய பூஜைகளும், திருவிழாக்களும் விமர்சையாக நடைபெற்று வந்த திருப்பாலீஸ்வரர் கோயில், பல்லவர்களின் பிரதிநிதியாக வட ஆற்காடு பகுதியை நிர்வாகம் செய்து வந்தவர்களால் கட்டப் பட்டதாகவும், பிற்காலத்தில் அந்நியர்கள் படையெடுப் பால் ஆலயம் முழுவதுமாகச் சிதைக்கப்பட்டு, கோயில் மண்மேடிட்டுப் போனதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால், மண்மேடிட்டுப்போன இந்த ஆலயத்தின்  மகிமையை மீண்டும் உலகுக்குப் பறைசாற்றவும், மீண்டும் தம்மை வெளிப்படுத்திக்கொண்டு தம்மை வழிபடுபவர்களுக்குத் திருவருள் புரியவும் திருப்பாலீஸ் வரர் திருவுள்ளம் கொண்டுவிட்டார் போலும். அதற் கேற்ப அவர் நிகழ்த்திய அருளாடலைச் சிலிர்ப்போடு பகிர்ந்துகொண்டார் அன்பர் ராமமூர்த்தி.

ஆம். காவேரிப்பாக்கம் - சோளிங்கர் சாலையில் உள்ள மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அன்பர் ராமமூர்த்தி, கோயிலைப் பற்றித் தெரிவித்த செய்திகள், இறைவனின் பூரண அருள்திறம் அங்கே நிறைந்திருப் பதை நமக்கு உணர்த்துவதுபோல் அமைந்திருந்தது.

‘`ரொம்ப வருஷமாகவே இங்கே இப்படியொரு கோயில் இருந்திருக்குன்னு எங்களுக்குத் தெரியாம லேயே இருந்தது. ஒருநாள் காலையில் இந்த ஊரைச் சேர்ந்த பச்சையப்பன் என்கிறவர், தன்னுடைய கனவில்  ஓர் அர்ச்சகர் வடிவத்தில் இறைவன் தோன்றி, ஊரில் மண்மேடா இருக்கிற இடத்துல சுவாமி சிலை இருக்கிறதாகவும், அங்கே ஒரு கோயில் கட்டும்படியும்  சொன்னதாகத் தெரிவித்தார்.

எங்களுக்கு அதில் நம்பிக்கை இல்லைன்னாலும், பச்சையப்பன் முக்கியமான ஒரு பொறுப்பில் அமர்ந்து பணிபுரிந்து ரிடையரானவர். ஆகவே, அவர் சொல்வதில் ஏதேனும் விஷயம் இருக்கலாம் என்ற எண்ணத்துடன், ஊர்மக்கள் சேர்ந்து குறிப்பிட்ட அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தார்கள்.

அப்போது, பெரியதொரு சிவலிங்கமும் நந்தியும் தெரிஞ்சுது. அப்பத்தான் பச்சையப்பன் சொன்னது உண்மைன்னு தெரிஞ்சிக்கிட்டோம். இப்ப அந்த இடத்துலயே ஒரு சின்ன குடிசையில சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செஞ்சு எங்களால முடிஞ்சவரை பூஜை செஞ்சுக்கிட்டு வர்றோம்’’ என்றார்.

‘`சுவாமிக்கு திருப்பாலீஸ்வரர் என்ற பெயர் எப்படி வைத்தீர்கள்?’’ என்று அவரிடம் கேட்டோம்.

‘`சுவாமியை எடுத்து வெச்சதும், பச்சையப்பன் அந்த இடத்தோட சர்வே நெம்பரை வெச்சு விசாரிச்சப்போ, 1917-ம் வருஷத்து ஆவணங்கள் மூலம் அந்த இடம் திருப்பாலீஸ்வரர் கோயிலோட இடம்னு தெரிஞ்சது. அதை வெச்சுத்தான் சுவாமிக்குத் திருப்பாலீஸ்வரர்னு பேரு வெச்சோம்’’ என்றார்.
தொடர்ந்து, அந்த அன்பர் வழிகாட்ட தற்காலிகமாகத் தகரக்  கொட்டகையில் அருள்பாலிக்கும் ஐயனைத் தரிசிக்கச் சென்றோம். எளிமையான அந்தக் கொட்டகையில் எளியவருக்கு எளியவனாகிய ஐயன் இருப்பதுகண்டு, மனம் பதைபதைத்துப் போனதுடன் நம்மை அறியாமல் கண்ணீர் கசிந்தது.

‘`சுவாமி சிலையை வெளியில எடுத்து வைத்ததும், கோவை பேரூர் சிவன் கோயிலின் பரம்பரை குருக்கள் வம்சத்தில் வந்த செந்தில்நாத குருக்களிடம் விவரம் சொன்னோம். அவரும் ஊருக்கு வந்து இறைவனிடம் பூ போட்டு உத்தரவு பெற்று, தேவபிரச்னம் பார்த்தபோது அதிர்ச்சியும் வருத்தமும் ஏற்படுத்தும் தகவல் ஒன்று தெரியவந்தது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட யுத்தத்தில் கோயில் சிதைக்கப்பட்டதுடன், அம்பாள் விக்கிரகத்தின் கை கால்களைத் துண்டித்ததாகவும், அதனால் கோபம்கொண்ட அம்பிகை அந்தப் பகுதி மண்மேடாக மாறிவிடும்படி சாபம் கொடுத்துவிட்டு, அருகில் இருந்த குளத்தில் இறங்கிவிட்டதாகவும் தெரியவந்தது.அப்போதுதான் இங்கே இருக்கும் குளத்துக்கு `அம்மன் குட்டை' என்ற பெயர் வழங்கி வருவதற்கான காரணமே எங்களுக்கு விளங்கியது’’ என்றவர் தொடர்ந்து கூறிய ஒரு விஷயம், தனது ஆலயம் சிதைந்திருந்தாலும், தன்னை வழிபடும் அன்பர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் ஐயனின் அருள்திறத்தை உணர்த்துவதாக இருந்தது.

‘`சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருப்பவர் சோபனா ராமசுப்பிரமணியம். அவரிடம் நான் ஏற்கெனவே கோயிலைப் பற்றிச் சொல்லி இருந்தேன். ஒருநாள் எனக்கு போன் செய்து, ‘நானும் என் அண்ணனும் அண்ணியும்  கோயிலுக்கு வரவுள்ளோம். அண்ணன் மகன், மனைவியுடன் அமெரிக்கா சென்றதிலிருந்து, பெற்றோரைக் கவனிக்கவே இல்லை; போனில்கூட விசாரிப்பது இல்லை. உங்கள் ஊருக்கு வந்து பூஜை செய்ய வேண்டும். அதன் பிறகாவது அவர்களுக்கு  நல்லதொரு தீர்வு கிடைக்கட்டும்' என்று பேசினார்.

சொன்னது போலவே ஒருநாள் கோயிலுக்கு வந்து வழிபட்டும் சென்றார்கள். அப்படி அவர்கள் இங்கு வந்து பூஜையை முடித்துவிட்டு அவர்கள் சென்னைக்குத் திரும்பும் போதே அமெரிக்காவில் இருந்து அவருடைய அண்ணன் மகன் தன் அப்பாவுக்குப் போன் செய்து பேசியதுடன், பின்னர் தன் பெற்றோரை அமெரிக்காவுக்கே அழைத்துச் சென்றுவிட்டார் என்ற தகவலையும் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார்'' என்றார் பச்சையப்பன்.

திருப்பணிகள் பற்றிக் கேட்டபோது, ‘`கோயிலில் சிவ லிங்கமும் நந்தியும் மட்டும்தான் உள்ளன. அம்பாள் விக்கிரகம் உட்பட வேறு எந்த விக்கிரகமும் இல்லை. தற்போது, திருப்பணி கமிட்டி ஏற்படுத்தி ஊர்மக்களின் ஒத்துழைப்புடன் வேலைகளைத் தொடங்கியுள்ளோம். திருமணத்தடை, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், குறிப்பாகக் கடன் பிரச்னையால் கஷ்டப்படுபவர்கள் இங்கே வந்து வேண்டிக்கொண்டால் அவர்களுடைய வேண்டுதல்கள்  நிச்சயம் நிறைவேறும். அந்த அளவுக்குச் சக்திவாய்ந்த சுவாமி  இவர். இந்தக் கோயிலின் திருப்பணிகள் விரைவில் நிறைவேறி கும்பாபிஷேகம் சிறப்புற நடக்கவும் அவரது திருவருள் துணையாக இருக்கும்’’ என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

தமது அளப்பரிய கருணைத் திறனால் வேண்டியவருக்கு வேண்டியபடி வரம் அருளும் ஐயன் திருப்பாலீஸ்வரருக்குச் சிறப்பான முறையில் ஆலயம் அமைந்து, அங்கே நித்திய பூஜைகளும் விழாக்களும் சிறப்புற நடைபெறச் செய்ய வேண்டும். இது  நம்முடைய கடமை மட்டுமல்ல; நம்மையும் நம் சந்ததியினரையும் காலத்துக்கும் காத்து அருள்புரியும் ஐயனுக்கான நமது நன்றிக்கடனும்கூட. சிறுதுளி பெரு வெள்ளம். நாம் ஒவ்வொருவரும் நம்மால் இயன்ற பொருளுதவி செய்வோம். அதன் பயனாக, ‘பேராது நின்ற பெருங்கருணைப் பேராறும், ஆரா அமுதும்,அளவிலா பெம்மா’னுமாகிய ஐயன் கயிலைநாயகனின் திருக்கோயில் கம்பீரமாக எழும்பும்; அவருடைய பேரருளால் நமது வாழ்க்கையும் செழிக்கும்.

எங்கிருக்கிறது... எப்படிச் செல்வது..?

வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் வழியில், சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ளது மங்கலம் கிராமம். காவேரிப்பாக்கத்தில் இருந்து பேருந்து மற்றும் ஆட்டோ வசதி உள்ளது.

வங்கிக் கணக்கு விவரம்:

A/C  Name:  ARULMEGU
KAMAKSHIAMMAN
TIRUPPALISWARAR TEMPLE TRUST
BANK NAME:
CENTRAL BANK OF INDIA,
BANAVARAM BRANCH
A/C NO: 3612509705
IFSC CODE: CBI N0284913


மேலும் விவரங்களுக்கு
கோ.பச்சையப்பன் செல்: 9688156765
த.ராமமூர்த்தி செல்: 9994460775

Comments