எங்கள் வீடே கோயிலானது!’

சைக்க முடியாத நம்பிக்கையுடன்  ஸ்ரீஷீர்டி சாயிபாபாவின் பாதங்களில் தனது துன்பங்களைச் சமர்ப்பித்துத் தொழுபவனின் உள்ளத்தில் பாபா குடிகொள்கிறார் என்பது ஒவ்வொரு சாயி பக்தரும் அனுபவித்து உணரும் உண்மை. அதற்கும் மேலே போய், தனது வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் பாபாவையே நினைத்து, ஒவ்வொரு செயலையும் அவருக்கே அர்ப்பணித்து வாழும் பக்தர்கள் வாழ்வில் அவர் நிகழ்த்தும் அருளாடல்கள் மகத்தானவை. 

இதற்கு உதாரணமாகத் திகழ்கிறது, புதுக் கோட்டை மாவட்டம்  பொன்னமராவதிக்கு அருகிலுள்ள கொப்பனாபட்டி என்ற சிறு கிராமத் தில் அமைந்திருக்கும் ஸ்ரீஷீர்டி சாயிபாபா ஆலயம்.
இந்தக் கோயிலை நிர்மாணித்து, நிர்வகித்து வருபவர்கள் திருநாவுக்கரசு - முத்தாத்தாள் தம்பதி. பாபாவுக்கு அபிஷேகம், அலங்காரம், ஆரத்தி என ஒவ்வொன்றையும் பார்த்துப்பார்த்து, ரசித்து, ஆனந்தமாகச் செய்து முடித்த முத்தாத்தாள் அன்னதானம் முடிந்த பிறகு நம்மிடம் பேசினார்.

‘‘ஆறேழு வருஷங்களுக்கு முன்னால எனக்கு சாயிபாபான்னா யாரு, என்னன்னுகூடத் தெரியாது. ஆனா, இப்போ பாபாவைத் தவிர வேறெதுவும் தெரியாது. அந்த அளவுக்கு என்னை ஆட்கொண்ட பெருமான். அவரைத் தினமும் பூஜை செய்து வணங்கும் பாக்கியத்தை எனக்குக் கொடுத்ததை என்னோட பூர்வ ஜென்ம புண்ணியம்னுதான் சொல்லணும். கடந்த அஞ்சு வருஷமா எங்க வாழ்க்கையில் அவர் செய்திருக்கும் அற்புதங்கள் ஏராளம்.

அப்போது நாங்க மதுரையில் இருந்தோம். என் கணவர் சொந்தத் தொழில் செய்துட்டிருந்தார். நான் சேர்ந்திருந்த சுயஉதவிக் குழுவில் இருக்கும் பெண்கள் அடிக்கடி எல்லா கோயில்களுக்கும் போவாங்க. அப்படி ஒருமுறை அவங்களோடு மதுரையில் இருக்கும் ஒரு பாபா கோயிலுக்குப் போனேன். எனக்கு பாபா அறிமுகமானது அப்போதான்.

சும்மா பார்த்து, கும்பிட்டு வந்தேனே தவிர, குறிப்பிடும்படியாக எதுவும் தோணலை. சில மாதங்கள் கழித்து, அந்தக் குழுவினருடன் ஷீர்டி போகும் வாய்ப்பு கிடைச்சுது. உள்ளே சமாதி மந்திரில் அவரை தரிசனம் செய்த பிறகு வெளியே வந்த எனக்கு அதிசயமாகக் கோயில் பிரசாதம் கிடைச்சுது. ஷீர்டி கோயிலில் பிரசாதம் கிடைக்கிறது எவ்வளவு அரிய வாய்ப்பு என்பது அங்கே போயிட்டு வந்தவங்களுக்குத்தான் தெரியும். அதை கையில் வாங்கிட்டுத் தோட்டத்தில் அவர் இருந்த மரத்தடியில் நின்னபோ, எனக்கெதிரே பிரத்யட்சமாக பாபா உருவம். என்னிடமிருக்கும் பிரசாதத்தைக் கேட்பது போல கையை நீட்டினார். என் உடல், ஆவி எல்லாம் ஏதோ ஓர் ஆனந்த அதிர்வால் நடுங்க, அப்படியே பிரசாதத்தை அவரிடம் கொடுத்தேன். வாங்கி வாயில் போட்டபடி மறைஞ்சிடுச்சு அந்த உருவம்.

ஒரே விநாடிதான் இருக்கும். எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. கை கால் எல்லாம் ஆடி, உணர்ச்சிப்பெருக்கில் தாரை தாரையாகக் கண்ணீர்விட்டேன். என்னே எனக்கு கிடைச்ச பேறு! உலகமே போற்றும் ஒரு மாபெரும் மகான் எனக்குக் காட்சி தந்ததோடு மட்டுமல்லாமல், என் கையால் பிரசாதம் சாப்பிட்டார்னா... நான் எவ்வளவு பாக்கியம் பண்ணியிருக்கணும்.அப்போதிலிருந்தே பாபா சிலை ஒண்ணை வீட்டில் வெச்சு வணங்க ஆரம்பிச்சேன். எங்கள் சொந்த ஊர் கொப்பனாபட்டி. அங்கேயும் எங்க  வீட்டில், ஒரு பாபாவை வெச்சு, வியாழக்கிழமை தோறும் மதுரையிலிருந்து வந்து பால் வெச்சு, ஆரத்தி காண்பிச்சு, வணங்கிட்டு மறுநாள் காலையில் மதுரைக்குப்  போயிடுவோம். ஆனா, ‘என்னை உள்ளே வெச்சு பூட்டிட்டுப் போறியே!’ன்னு அவர் கனவில் வந்து கேட்பது போலிருந்தது.

பாபாவுக்காக நான் ஊரிலேயே வந்து செட்டில் ஆயிட்டேன். தினமும் நைவேத்தியம் பண்ணி, ஆரத்தி காட்டி வணங்க ஆரம்பிச்சதும் பல மாற்றங்கள் தெரிய ஆரம்பிச்சது. கல்யாணமாகி பல வருஷங்கள் குழந்தையில்லாத தம்பதி ஒருத்தங்க எங்க வீட்டுக்குவந்து பாபாவை வேண்டிக்கிட்டுப் போனாங்க. அவங்களுக்கு மறு மாதமே கருத்தரிச்சு குழந்தையும் நல்லபடியா பிறந்தது. எங்க வீட்டுக்கு வந்ததும் பாபா அருளிய முதல் அதிசயம், குழந்தைப் பேறுதான்!’’ என்று உணர்வு பொங்க பேசினார் முத்தாத்தாள்.

திருநாவுக்கரசு தொடர்ந்தார். ‘‘நாமக்கல் பக்கத்தில் இருக்கும் ஒரு சாயி பக்தரைப் பார்க்கப் போனபோது, பெரிய சைஸ் சாயி விக்கிரகம் ஒண்ணு கொடுத்தார். அதைக்கொண்டுவந்து வீட்டில் வெச்சு கும்பிட்டு வந்தோம். நிறைய பேர் வந்து கும்பிட்டு, பிரார்த்தனை செய்துட்டு போவாங்க.

ரெண்டு வருஷத்துக்கு முன்னால, வித்தியாசமான ஒரு கனவு. எங்க வீட்டின் ஒரு பகுதி, ஒரு காலத்தில் சித்தர் அடங்கிய இடம் என்றும் அதில் பாபாவுக்குக் கோயில் கட்டணும்னு கனவில் உத்தரவு வந்தது. எங்க வீட்டிலேயே, குறிப்பிட்ட அந்த இடத்தில், எங்க செலவிலேயே பாபாவுக்கென ஒரு பெரிய கூடம் கட்டி, அவரை பிரதிஷ்டை செய்யணும்னு நினைச்சோம். அவர்கிட்டே உத்தரவு கேட்டப்போ, சிவலிங்கத்துக்கு இருக்கிற மாதிரி ஆவுடையோடு பிரதிஷ்டை பண்ணணும்னு உத்தரவு வந்ததால், சிவாச்சார்யர்களிடம் கேட்டு அவங்க சொன்னபடி ஆவுடை செய்யச் சொன்னோம்.

ராஜஸ்தானில் செய்யப்பட்ட முப்பரிமாண, வெண்பளிங்கு பாபா சிலை ஷீர்டிக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கேயிருந்து கன்டெய்னரில் பத்திரமாக ஒரு சின்ன தடங்கல்கூட இல்லாம எங்க கிராமத்துக்கு வந்தது. பாபா உருவச் சிலையுடன், சிவபெருமானின் ஆவுடையார் இருப்பதால் சாயி நந்தி, சாயி விநாயகர், துவாரகமாயி, சாயி பாதம் எல்லாமே வந்தது. எல்லா தெய்வங்களையும் பிரதிஷ்டை பண்ணி, மிகச் சிறப்பாக கும்பாபிஷேகம் செய்தோம். எங்க ஊருக்குப் பக்கத்து ஊர்களிலிருக்கும் மக்கள் தவிர, எங்கெங்கெல்லாம் இருந்தோ  இந்த யோக பாபாவைப் பத்திக் கேள்விப்பட்டு வர்றாங்க’’ என்று முடித்தார் திருநாவுக்கரசு.

சித்தர் அடங்கிய பூமியில், சிவபெருமானின் ஆவுடையின்மேல் அமர்ந்திருக்கும் மகான் என்பதால், இந்தக் கோயில் ‘சித்தர் - சிவன் - மகான்’ என்ற தத்துவத்தில் அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. தினமும் நான்கு கால பூஜைகளும் ஆரத்தியும் செய்யப்பட்டு, பிரசாதம் வழங்கப்படுகிறது. வியாழன்தோறும் சிறிய பாபா சிலைக்குப் பால், இளநீர், பன்னீர் அபிஷேகம் செய்யப்படுகிறது. அன்றைய தினம் மதியமும் இரவும் பொதுமக்களுக்கு அன்னதானமும் செய்யப்படுகிறது. அதற்கான சமையல் வேலைகளைத் தன்னார்வப் பணி செய்யும் சில பெண்களுடன் சேர்ந்து முத்தாத்தாள் தம்பதியே கவனிக்கின்றனர்.

இந்தக் கோயிலில் வந்து பிரார்த்தனை செய்துகொண்டு, திருமணம், வேலை, குழந்தைப் பேறு போன்ற வரங்களைப் பெற்ற பக்தர்கள், தாமாக முன்வந்து அன்னதானம் அளிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றனர். மாதம் தோறும் பவுர்ணமி தினத்தில் சத்யநாராயண பூஜை நடத்தப்படுகிறது. 27 சுமங்கலி பெண்கள் விளக்கு பூஜை செய்து, சத்யநாராயணரின் புகழைக் கூறி, பாடல்களைப் பாடி வழிபாடு நடத்துகின்றனர். இரவு இனிப்பு மற்றும் பாயசத்துடன் அன்னதானம் வழங்கப்படுகிறது.

‘‘கடந்த ஏப்ரல் மாதம், பாபாவுக்குப் பல்லக்கு செய்தோம். பாபாவின் ஐம்பொன் சிலை உருவத்தை அந்தப் பல்லக்கில் வெச்சு, ஊரின் முக்கியமான தெருக்கள் வழியே நகர்வலம் வருவோம். வருஷத்துக்கு நாலு முறை இந்த பல்லக்கு ஊர்வலம் நடக்கும். சமீபத்தில், குரு பவுர்ணமி தினத்தில் பல்லக்கு ஊர்வலம் நடந்தபோது, மேலே கருடன் சுற்றி வந்தது ரொம்ப சிறப்பான சம்பவம். ஏப்ரல் மாதத்தில் வருடாபிஷேகத் தையும் ரொம்ப விமர்சையாகப் பண்ணினோம். ‘பண்ணினோம்’னு சொல்றதே தப்பு. அவருக்கான எல்லாத்தையும் அவரே தீர்மானிக்கிறார்; ஜோரா பண்ணிக் கிறார்னுதான் சொல்லணும். நான் ஒரு கருவி. அவ்வளவுதான். இங்கே வந்து நம்பிக்கையோடு வேண்டுகிறவங்களுக்கு, கேட்ட வரத்தைக் கொடுக்கிறார் இந்த யோக பாபா. பொறுமையோடும் நம்பிக்கையோடும் பிரார்த்திக் கிறவங்களுக்கு, மனதில் எண்ணி வரும் காரியங்கள் கண்டிப்பாக வெற்றியாக முடியும்!’’ என்கிறார் முத்தாத்தாள்.

இக்கோயிலில் ஒவ்வொரு பூஜையின்போதும் கூட்டுப் பிரார்த்தனை நடைபெறுகிறது. பாபாவின் அருளால் அப்பிரார்த்தனை முழுமையடைகிறது. ஏதேனும் ஒரு கோரிக்கையை நினைத்துக்கொண்டு, கோரிக்கை புத்தகத்தில் சாயி நாமம் எழுதினால் அதுவும் நிறைவேறுகிறது. இது இங்கு தவறாமல் வந்துசெல்லும் பல பக்தர்களின் சொந்த அனுபவம்.

உள்ளூரிலுள்ள பல சாயி பக்தர்கள் இங்கே தொண்டு செய்து மன நிறைவடைகின்றனர். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஷீர்டி செல்ல விரும்பும் பக்தர்களை, திருநாவுக்கரசு தம்பதியர் அழைத்துச் செல்கின்றனர். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சுற்றுப் பகுதியில் இருக்கும் பாபா கோயிலுக்குப் பக்தர்களை அழைத்துச் செல்கின்றனர். இப் பகுதி மக்கள் அனைவரும் நம்பிக்கையோடு வந்து வணங்கி பாபாவின் நல்லருள் பெறுகின்றனர்.

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 8 மணி முதல் பகல் 12 வரை.

மாலை 5 மணி முதல் இரவு 8 வரை.

Comments