திருமகளாய் அருளும் திருமால்! - ஒளஷதகிரி அற்புதம்!

ல்யாண வரம் அருளும் பெருமாளின் திருத் தலங்களில் ஒன்று ஔஷதகிரி. சென்னை - செங்கல்பட்டு மார்க்கத்தில் உள்ளது சிங்க பெருமாள்கோவில். இங்கிருந்து ஒரகடம் செல்லும்  வழியில் சுமார் 8 கி.மீ. தொலைவில், ஆப்பூர்  எனும் கிராமத்தின் வலப்புறம் அமைந்திருக்கிறது ஒளஷதகிரி எனும் குன்று. இதன்மீது கோயில் கொண்டிருக்கும் பெருமாளுக்குப் புடவை சாத்தி வழிபடுகிறார்கள் பக்தர்கள்!

பொதுவாக பெருமாளின் திருமார்பில் திருமகளும் தாயாரும் இருப்பதை நாம் பல தலங்களில் தரிசித்திருப்போம். ஆனால், ஒளஷதகிரி கோயிலில் அருளும் ஸ்ரீநித்ய கல்யாண பிரசன்னவேங்கடேச பெருமாளே  திருமகளாக தரிசனம் தருவதாக ஐதீகம். அதன் காரணமாகவே இங்கே பெருமாளுக்கு ஆறு கஜ புடவை வஸ்திரமாகப் பக்தர்களால் சாத்தப்படுகிறது. கல்யாண வரம் வேண்டி வருபவர்கள் பெருமாளுக்குப் புடவை சாத்துவதாக வேண்டிக்கொள்கிறார்கள்.
உயர்ந்த மலையின் மீது இயற்கை எழில் நிறைந்த சூழ்நிலையில் கோயில் கொண்டிருக் கும் பெருமாளைத் தரிசிக்க 508 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். கோயில் சிறியதுதான். ஆலய முன்மண்டபத்தில் கருடாழ்வார் கூப்பிய கரங்களுடன் காட்சி தருகிறார். மண்டபத்தின் விதானத்தில் தசாவதாரக் காட்சிகளும், அஷ்டலட்சுமியர் வடிவங்களும் சுதைச் சிற்பமாக வடிக்கப்பட்டிருக்கின்றன.

கருவறையில் ஸ்ரீநித்யகல்யாண பிரசன்ன வேங்கடேச பெருமாள் சங்கு சக்கரம் ஏந்தியும், அபய-வரத ஹஸ்தம் காட்டியபடி யும் நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சி தருகிறார். சித்தர்களும், அகத்திய மகரிஷியும் வழிபட்ட பெருமாளே இங்கு எல்லாமுமாக இருப்பதாக ஐதீகம். ஆகவே, பெருமாளையும் கருடாழ்வாரைத் தவிர வேறு தெய்வங்களோ, சந்நிதிகளோ இல்லை.
அனுமன் இலங்கைக்குச் சஞ்சீவி மலையைத் தூக்கிச் செல்லும் வழியில் விழுந்த சிறு குன்றே ஒளஷதகிரியாக இங்கு காட்சி தருகிறது. அற்புத மூலிகைகள் நிறைந்த மலை என்று இதைக் குறிப்பிடு கிறார்கள்.  தஞ்சையில் உள்ள தங்க ஏட்டுச் சுவடியில் இந்த ஒளஷதகிரியின் பெருமை கள் சொல்லப்பட்டுள்ளதாக அர்ச்சகர் தெரிவித்தார். எப்போதும் வற்றாமல் திகழும் கிணற்று தீர்த்தமே பெருமாளின் திருமஞ்சனத்துக்குப் பயன்படுகிறது.
பெருமாளே திருமகளின் அம்சமாகவும் அருளும் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டால் வறுமை, கடன் தொல்லைகள் நீங்கும்; செல்வகடாட்சம் ஸித்திக்கும். மேலும், மூலிகைகள் நிறைந்த தலமாதலால் இங்குவரும் பக்தர்களுக்கு உடற்பிணிகள் நீங்குவதோடு, பெருமாளின் திருவருளால் மனப்பிணிகளும் நீங்கி மகத்தான வாழ்க்கை அமையும்.

எப்படிச் செல்வது?

சென்னை, சிங்கபெருமாள் கோயிலிலிருந்து ஆப்பூருக்குச் செல்ல பேருந்து மற்றும் ஷேர் ஆட்டோ வசதிகள் உள்ளன. ஆப்பூரில் கடைகள் இல்லை என்பதால், பூஜைக்கான பொருள்களைச் சிங்கபெருமாள் கோவிலில் வாங்கிச் செல்லலாம். கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 9 முதல் 10 மணி வரை; சனி - ஞாயிறுகளில் காலை 9 முதல் 12 மணி வரை.

Comments