கேள்வி பதில் - பிள்ளையாருக்கும் தண்ணீருக்கும் என்ன தொடர்பு?

ஆற்றங்கரையிலும் குளங்களின் கரைகளிலும் எழுந்தருளியிருக்கிறார் பிள்ளையார். அதேபோல், விநாயக சதுர்த்தி விழாவின் நிறைவாக விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கிறோம். பிள்ளையாருக்கும் தண்ணீருக்கும் அப்படியென்ன தொடர்பு?

 `பார்வதிதேவி, நீராடும் வேளையில் தனது பாதுகாப்புக்காக ஒரு புதல்வனைத் தோற்றுவித் தாள். அவரே நாம் வணங்கும் பிள்ளையார்’ என்கிறது சிவபுராணம். எனவே, அவர் நீர் நிலைகளின் கரையில் எழுந்தருளியிருப்பது சிறப்பு. ‘முதல் படைப்பு நீர்!’ என்கிறது வேதம். பரம்பொருளில் முதல் தோற்றம் பிள்ளையார். முதலும் முதல்வனும் அருகருகே இருப்பது சிறப்பு தானே.

சைதன்யமும் ஜடப்பொருளும் சேரும்போது... அதாவது, சிவனும் பார்வதியும் சேரும்போது புதுப் பொருள் ஒன்று தோன்றும். அப்படித் தோன்றி யவரே முழுமுதற் கடவுளான பிள்ளையார். நீரில் அத்தனை தேவதை களும் குடிகொண்டுள்ளன என்று வேதம் கூறும் (ஆபோவை ஸர்வா தேவதா). அத்தனை ஜீவராசிகளது மொத்த உருவம் பிள்ளையார். மனித ரூபமும் விலங்கு ரூபமும் இணைந்த வடிவானவர். எல்லா உயிரினங்களும் தன்னுள் அடக்கம் என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்.

மனிதன் வேள்வியில் பங்கு பெறுகிறான். யானைக்கும் அதில் பங்கு உண்டு (ஹிமவ தோஹஸ்தீ). கழுத்துக்குக் கீழே - மாயை; தலை - பரம்பொருள் என்று பிரபஞ்சத்துடன் விளங்கும் பரம்பொருளாக விநாயகரைப் பார்க்கிறது புராணம் (கண்டாதோ மாயயா யுக்தம் மஸ்தகம் பிரம்ம வாசகம்).


அறிவு புலன்கள் கழுத்துக்கு மேலும், செயல் புலன்கள் உடலிலும் இருக்கும். வேதம் சொல்லும் கர்ம காண்டம் மற்றும் ஞான காண்டம் என்ற பிரிவுகளே உடலும், தலையுமாகக் காட்சியளிக் கின்றன. வேதத்தின் கடைசிப் பகுதி உபநிடதம். அதற்கு, ‘வேத சிரஸ்’ என்று பெயர். அது அளவிலும், கருத்தாழத்திலும் மிகப் பெரியது. இதைச் சுட்டிக்காட்ட யானைத் தலையுடன் பிள்ளையார் காட்சியளிப்பது பொருந்தும். உடல் செயல்பட தலையும்; தலை செயல்பட உடலும் வேண்டும். அதாவது உழைப்பும் (செயல் புலன்களும்) வேண்டும்; அறிவும் (அறிவுப் புலன்கள்) வேண்டும். காலையில் நீராடியதும், நமது உழைப்பும் அறிவும் சிறப்புற்று விளங்க விநாயகரைப் பணிவது சிறப்பு. அதற்கேற்ப நீர் நிலை களின் அருகில் அமர்ந்து நமக்காகக் காத்திருக்கிறார் அவர்.

அரச மரம் வேள்விக்குப் பயன்படும். மும்மூர்த்திகளின் மொத்த உருவம் அது (மூலதோ பிரம்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபிணே. அக்ரத சிவரூபாய விருஷ ராஜா யதே நம). ‘முத்தொழிலுக்கும் நானே பொறுப்பு!’ என்பது போல் அதன் அடியில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் பிள்ளையார். நீராடியவுடன் முதல் வேலையாக விநாயகரை வலம்வந்து தலையில் குட்டிக்கொள்ள வேண்டும். வலம்வருவது நமது உழைப்பைச் சிறப்பிக்க. தலையில் குட்டிக்கொள்வது நமது சிந்தனையைச் சிறப்பிக்க. ஆம், நமது அடிப்படைத் தேவையை முழுமையாக அளிப்பவர் பிள்ளையார்.

நெருப்பில் தோன்றிய முருகன், சரவணப் பொய்கையில் உருப்பெற்றார். நீரில் தோன்றிய தாமரையில் பிரம்மன் வீற்றிருக்கிறார். பாற்கடலை இருப்பிடமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார் ஸ்ரீமந் நாராயணன். மலையில் இருந்தாலும், தலையில் கங்கையைச் சுமக்கிறார் ஈசன். இந்தத் தெய்வங்கள் அனைவருமே படைப்புக்கு ஆதாரமான நீருடன் இணைந்திருப்பவர்கள். மும்மூர்த்திகளை, அவர்களது இருப்பிடம் சென்று வணங்குவது சிரமம். ஆனால், மும்மூர்த்திகளின் இணைப்புடன் விளங்கும் மோதகப்பிரியனை வணங்குவது சுலபம். கருணைகூர்ந்து நாம் நீராடும் இடத்துக்கே வந்து அருள்பாலிப்பது அவரது தனிச் சிறப்பு.

ஆட்டைப் போல் உணவு உட்கொள்ள வேண்டும். யானை போல் நீராட வேண்டும் என்று சொல்வதுண்டு (அஜவத் சர்வணம் குர்யாத் கஜவத் ஸ்னானமாசரேத்). தாவரங்களை உணவாக ஏற்கும் யானை, கையால் (துதிக்கையால்) உணவை எடுத்து உட்கொள்ளும். மனிதனும் அப்படியே. இந்தத் தகவலையும் உணர்த்துகிறது கணபதியின் யானை முகம்.

‘மோதகம்’ என்றால் ‘சந்தோஷம்’ என்று பொருள். அதைக் கையில் ஏந்தி, தம்மை அடிபணிபவர்களுக்கு அளிக்கிறார் பிள்ளையார். மோதகத்துக்கு உள்ளே இனிப்பான ‘பூரணம்’ உண்டு. தம்மிடம் அடைக்கலம் தேடி வருவோருக்குப் பூரணத்தை அதாவது முழுமையை அளிக்கிறார் என்றும் சொல்லலாம். இத்தகு சிறப்புகள் வாய்ந்த பிள்ளையாரை, நாம் நீராடியவுடன் வணங்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் எண்ணினார்கள். அதன் விளைவு... ஆற்றங்கரையிலும் குளத்தங்கரையிலும் அவரது திருவுருவம் அருள்பாலிக்கிறது.

பிள்ளையார் சதுர்த்தியை ஒட்டி, சுத்தமான மண்ணில் விநாயகர் உருவம் செய்து, வழிபாட்டுக்குப் பிறகு நீர் நிலைகளில் கரைத்து விடுவோம். விநாயகரின் உருவம் அமைக்க உதவுவது நீர். அதேபோல்... நீரில் தேவதைகள் அத்தனையும் குடிகொண்டிருப்பதால், விநாயகரை நீரில் கரைப்பது தகும். ‘அவர், தனது இருப்பிடத்தை அடைந்தார்!’ என்பதே இதன் தாத்பர்யம். மண் பிள்ளையார் மட்டுமல்ல, மஞ்சள் பிள்ளையாரையும் வழிபாடுகள் முடிந்த பிறகு நீரில் கரைப்பதுண்டு.

ஆற்றிலிருந்து சாளக்கிராமத்தைப் பெறுகிறோம். கோயில் உற்சவங்களில் ஆராட்டு, அதாவது நீர் நிலைகளில் நீராடச் செய்வது உண்டு. மண் அல்லாத இறை உருவங்களை நீராட்டி எடுத்து வருவதுண்டு. ஆனால், பிள்ளையார் மட்டும் மண்ணில் தோன்றி நீரில் கலக்கிறார். மண் பொருள்கள் நீரில் கலப்பது சிறப்பு. பாலிகைகளை நீரில் கரைத்து விடுவோம். உடல், பஞ்சபூதங்களில் பிருதிவி (மண்) அம்சமானது. அதன் அடையாளமான எலும்பை நீரில் கரைப்பது மரபு. வேள்வியும் நீராடலில் முற்றுப்பெறும். இதை, ‘அவ பிருதஸ்நானம்’ என்பர்.

குடமுழுக்கின்போது, நீரில் தங்கும் இறை சாந்நித்தியம் சிலைகளில் ஒன்றி விடும். அன்றாடம் மண்ணால் லிங்க வடிவம் அமைத்து, வழிபட்ட பிறகு நீரில் கரைப்பதுண்டு. மறை ஓதுபவர்கள் காலைக் கடனை தொடங்கும்போது (அதிகாலை நீராடும் வேளையில்) தனது பவித்ர விரலால், ‘ஓம் கேசவாய நம’ என்று எழுதுவார். இதில் உள்ள பிரணவத்தில் பிள்ளையார் உறைந்திருக்கிறார்.

ஓங்காரத்தின் உட்பொருள் அவர். ‘சூடு’ என்ற இயல்பு, நெருப்பை விட்டு விலகாது. ‘குளிர்ச்சி’ தண்ணீரை விட்டு விலகாது. அதுபோல, ‘ஓம்’ என்ற பிரணவமும் பரம் பொருளை விட்டு விலகாது. பிள்ளையாரும் நீரோடு ஒன்றியிருப்பார். ஆகையால், அவரை நீர் நிலைகளின் அருகில் வைத்து வணங்குவது சிறப்பு.
 நான்காம் பிறையைத் தரிசிக்கக் கூடாது என்கிறார்களே, ஏன்?


தேய்ந்தும், வளர்ந்தும் இருப்பது சந்திரனின் இயல்பு. அது நம் மனதுக்கும் பொருந்தும்.துயரத்தில் தேய்ந்தும், மகிழ்ச்சியில் வளர்ந்தும் தென்படும். சந்திரனை மனதோடு ஒப்பிடும் ஜோதிடம். மன வளர்ச்சிக்குச் சந்திரனின் பங்கு முக்கியமானது என்றும் அது கூறும். ஈசனும், உமையும், கணேசனும் பிறைச் சந்திரனைத் தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள். சந்திர மௌலி, பாலச்சந்திரன் என்ற பெயர்கள் அவர்களுக்குப் பெருமை அளிக்கிறது.


ஒருமுறை சந்திரலோகத்துக்கு விஜயம் செய்தார் கணபதி. கையில் கொழுக்கட்டை ஏந்திய கணபதியின் தோற்றத்தைப் பார்த்து ஏளனம் செய்தான் சந்திரன். அன்று பிள்ளையார் சதுர்த்தி. கோபமுற்ற கணபதி, ‘சதுர்த்தியில் உன்னைப் பார்ப்பவர்கள் வீண்பழிக்கு ஆளாவார்கள்!’ என்று சபித்தார். மனம் கலங்கிய சந்திரன் மன்னிக்கும்படி வேண்டி, அவரை வழிபட்டார். சாப விமோசனம் கிடைத்தது. அதோடு மூன்றாம் பிறையைப் பார்ப்பவர்களுக்கும் முழு மகிழ்ச்சி பொங்கும் என்று அருளினார்.

சதுர்த்தி சந்திரனைப் பார்த்து வீண் பழிக்கு ஆளானான் கண்ணன். கணபதியை வேண்டி பழியில் இருந்து விடுபட்டான். சதுர்த்தி சந்திரனைப் பார்த்தவர்கள் கண்ணனின் ஸ்யமந்தக வரலாற்றைச் சொன்னால் பழியிலிருந்து விடுபடுவார்கள் என்று புராணம் தெரிவிக்கிறது. சொல்ல வேண்டிய செய்யுள் இதோ...

சிம்ஹ: ப்ரசேனமவதீத்
சிம்ஹோ ஜாம்பவதா ஹத:
ஸீகுமாரக மாரோதீ:
தவ ஹ்யேஷ ஸ்யமந்தக:
 மாதந்தோறும் சஷ்டி விரதம் இருந்து வருகிறேன். வயதைச் சுட்டிக்காட்டி, ‘ஒருவேளையாவது சாப்பிடுங் கள்’ என்று கண்டிக்கிறாள் என் மனைவி. அப்படிச் செய்தால், விரதத்துக்குப் பங்கம் ஏற்படாதா?


 உடலும் உள்ளமும் வலுவாக இருப்பவர்கள் நாள் முழுக்க எதுவும் உண்ணாமல் விரதம் இருக்கலாம். தண்ணீர் அருந்துவது விரதத்தைக் கெடுக்காது. சில விரதங்களில் இரவில் மட்டும் உணவருந்தலாம். உடல், உள்ளம் ஆகியவை பலவீனமாக இருந்தால், மதியம் உணவையும் இரவில் பலகாரத்தையும் எடுத்துக் கொள்ளலாம். நாம், அரிசி உணவை மட்டுமே உண்பவரானால், அதைத் தவிர்த்து, கோதுமையைப் பயன்படுத்தலாம். அதாவது அரிசியை முற்றிலுமாக விலக்கி, மற்ற பண்டங்களைப் பயன்படுத்தலாம். வீம்புக்காக உணவை முற்றிலுமாகத் துறப்பது தவறு. உடல் நலனைக் கருத்தில்கொண்டு விரதத்தில் மாற்றம் செய்ய, தர்ம சாஸ்திரம் அனுமதிக்கிறது.





பிரசாதம் பிரமாண்டம்!

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தை அடுத்த மலைக்கோயில் விநாயகர் சந்நிதி, பிள்ளையார்பட்டியை போன்றே மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அருள்பாலிக்கும் விநாயகருக்கும் கற்பக விநாயகர் என்றே திருநாமம். இது, மகேந்திரவர்ம பல்லவ மன்னரால் கட்டப்பட்டது.

வேலூர் அருகிலுள்ள ஆம்பூரில் அருளும் எல்லையம்மன் கோயிலில், விநாயகர் சதுர்த்தி திருநாளன்று விநாயகருக்குப் பிரமாண்டமான லட்டு படைக்கப்பட்டுப் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
சேலம் மாவட்டம், ஆத்தூரில் அருளும் தலையாட்டிப் பிள்ளையார்  இடப்புறம் தலைசாய்த்தபடி அருள்கிறார். இந்தப் பகுதி மக்கள் எந்தக் காரியத்தைத் தொடங்குவதாக இருந்தாலும் இவரை வழிபட்டுவிட்டே தொடங்குகிறார்கள். இதனால் அந்தக் காரியம் நல்லபடியாக நிறைவேறும் என்பது நம்பிக்கை.

Comments