வேலை கிடைக்கும், கல்யாணம் நடக்கும்!

பிரம்மாவின் புத்திரராகிய மரீசி மகரிஷி, ஒருமுறை தடாகத்துக்கு நீராடச் சென்றபோது, தடாகத்தில் தாமரை ஒன்றின்மேல் அழகிய பெண் குழந்தை தவழ்வதைக் கண்டார். அந்தக் குழந்தைக்கு வல்லபை எனப் பெயர் சூட்டி வளர்த்து வந்தார்.

சிவபக்தையாகவே வளர்ந்தாள் வல்லபை. ஒருநாள் வல்லபையை அசுரன் ஒருவன் தூக்கிச் சென்றான். அவனிடம் இருந்து தன்னைக் காப்பாற்றும்படி சிவனாரை வேண்டினாள் வல்லபை. விநாயகரை அனுப்பி அவளைக் காப்பாற்ற திருவுளம் கொண்டார் சிவனார். அவரிடம், அந்த அசுரனை அழிக்க விநாயகருக்குத் தனது ஆசியும் சிவனாரின் ஆசியும் தேவை என்பதை எடுத்துரைத்தாள் பார்வதிதேவி.


அதை ஏற்றுக்கொண்ட சிவனார், ‘‘கச்சிஅனேகதங்காவதம் தலத்துக் குச் சென்று தம்மை வழிபட்டுவிட்டுச்சென்றால் அசுரனை அழிக்கத் தேவையான வலிமை கிடைக்கும்’’ என்று பிள்ளையாருக்கு எடுத்துரைத் தார். அதன்படியே, கச்சிஅனேகதங்காவதம் தலத்துக்குச் சென்று சிவ வழிபாடு செய்து பலம் பெற்று, அசுரனை வீழ்த்தி வல்லபையை மீட்டார் பிள்ளையார். அப்போது அம்பாளோடு தோன்றிய சிவன், வல்லபையை விநாயகருக்கு மணம்முடித்து வைத்தார் என்கிறது தலபுராணம்.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் அருகிலுள்ள கச்சபேஸ்வரர் கோயிலிலிருந்து மேற்கு நோக்கி கயிலாசநாதர் கோயிலுக்குச் செல்லும் வழியில், பிள்ளையார் பாளையம் பகுதியில் அமைந்திருக்கிறது கச்சிஅனேகதங்காவதம் கோயில்.  இங்கே, எஸ்.எஸ்.கே.வி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை ஒட்டியே இந்த ஆலயம் அமைந்துள்ளது. காலை 8 மணியிலிருந்து 10 மணிவரை மட்டுமே கோயில் நடை திறந்திருக்கும். இங்குள்ள சிவனார் மரண பயத்தை நீக்கி மேலான வாழ்வைத் தருபவர் என்கிறார்கள். மேலும், சுக்ரனின் கர்வத்தை அடக்கி, குபேரனுக்கு சிவனார் அருள்புரிந்த தலம் இது. ஆகவே, இங்கு வந்து வழிபட்டால், சத்ரு பயம் நீங்கும்; செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம்.

மணக்கோலம் பூண்ட இடம் என்றாலும் இங்கே விநாயகர் தனித்தே அருள்பாலிக்கிறார். இங்கு வந்து விநாயகரை வழிபட்டால் திருமணத் தடை நீங்கும் என்கிறார்கள். அமைதியான சூழல், படிப்பதற்கான வசதி இரண்டும் இருப்பதால், காலை முதலே புத்தகத்தோடு கோயிலுக்கு வரும் இளைஞர்கள், மாலை வரையிலும் அங்கேயே தங்கிப் படிக் கிறார்கள். விநாயகரை மணம் உருக வேண்டி வழிபட்டுப் படித்தால் அரசு வேலை நிச்சயம் என்கிறார்கள் கோயிலுக்கு வரும் இளைஞர்கள்.

Comments