காளிங்க நர்த்தனம் புரியும் கண்ணன்!

ஊத்துக்காடு என்றதுமே நினைவுக்கு வருவது, காளிங்க நர்த்தனம் புரியும் கிருஷ்ணன் கோயிலும், மகாகவி ஊத்துக்காடு வேங்கடசுப்பையரும்தான்! இவர், 17ஆம் நூற்றாண்டில் 2,500 கீர்த்தனைகளைத் தமிழில் பாடியுள்ளார். ஊத்துக்காடு திருத்தலத்து கிருஷ்ணர் மீது இவர் பாடிய, ‘தாயே யசோதா’, ‘அலைபாயுதே கண்ணா’, ‘பால் வடியும் முகம்’, ‘அசைந்தாடும் மயில் ஒன்று’, ‘என்ன தவம் செய்தனை’, ‘ஆடாது அசங்காது வா கண்ணா’ போன்ற பாடல்கள் மிகவும் புகழ்பெற்றவை.
இவர் பாடும்போது தொடையில் தாளம் போட்டுப் பாட மாட்டாராம். காரணம், தொடையில் சதாசர்வ காலமும் கிருஷ்ணன் அமர்ந்து கொண்டிருக்கிறான் என்பது அவரின் அசைக்க முடியாத நம்பிக்கை. தாளம் போட்டால் கிருஷ்ணன் மீது அடிபடுமோ என்பது அவரது கவலை.
தஞ்சை மாவட்டம், ஊத்துக்காடில் உள்ளது காளிங்க நர்த்தனம் புரியும் கிருஷ்ணன் கோயில். நாலாயிர திவ்யபிரபந்தம் தந்த ஸ்ரீநாதமுனி ஒருமுறை ஊத்துக்காடு வந்தபோது காளிங்கன் என்கிற விஷப் பாம்பின் மீது கிருஷ்ணன் நடனமாடி அவனது ஆணவத்தை அடக்கிய கதையை கூறினாராம். அதைக்கேட்டு அங்குள்ள பசுக்கள், ‘சிறு குழந்தை கிருஷ்ணனுக்கு இந்தக் கஷ்டம் ஏற்பட்டதே’ என கலங்கி அழத் தொடங்கினவாம்.
அதனை தேவலோக பசு காமதேனு பார்த்து, பூலோகத்தில் உள்ள தனது குழந்தைகளான பசுக்களின் வேதனையைப் போக்க கிருஷ்ணனிடம் வேண்ட, பகவான் செவி சாய்த்து, ஊத்துக்காட்டில் தோன்றி அந்த வனத்திலேயே ஓர் ஊற்றை உண்டாக்கினானாம். பசுக்கள் காளிங்க நர்த்தனத்தை நேரில் கண்டுகளிக்கும் வகையில் மீண்டும் அந்நிகழ்ச்சியை நடத்திக்காட்டி, தான் கஷ்டப்படவில்லை என்பதை உணர்த்தினாராம். அதைக் கண்ட பின்னர்தான் அந்தப் பசுக்கள் ஆறுதல் அடைந்தனவாம்.
நாரதரின் வேண்டுகோளுக்கு இணங்க இத்தலம், ‘தென் கோகுலம்’ என அழைக்கப்பட்டு, அவரே இங்கு காளிங்க நர்த்தன கிருஷ்ணரை பிரதிஷ்டை செய்தார் என்பதை தல புராணம் சிறப்பாகவும் விரிவாகவும் கூறுகிறது. காளிங்க நர்த்தன கிருஷ்ணனுக்கு தனிக்கோயில் வேறு எங்கும் இல்லை எனலாம். மிகவும் நேர்த்தியான வேலைப்பாடுகள் அமைந்த பஞ்சலோக திருமேனி.
ஊத்துக்காடு காளிங்க நர்த்தனப் பெருமாள் திருக்கோயில் அளவில் சிறியதுதான். ஆனால், மிகவும் பழைமையானது. உள்ளே பகவான் கிருஷ்ணன் ஆனந்தமாக நர்த்தனம் புரிவதாலோ என்னவோ, வெளியே கோபுர வாசலுக்கு அருகில் ஆனந்த நர்த்தன கணபதிக்குத் தனிக்கோயில் அமைத்திருக்கிறார்கள்.
கருவறை மூலவர், ஸ்ரீதேவி, பூதேவி சகித வேத நாராயணர் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவருக்கு முன்பு தேவலோகப் பசு காமதேனு புத்திரிகள் நந்தினி, பட்டி ஆகியவற்றுக்குக் காட்சி கொடுத்த கோலத்தில் அமைந்துள்ளது. ருக்மிணி, சத்யபாமா சகித ஸ்ரீ காளிங்க நர்த்தன கிருஷ்ணர், பேரருள் பொங்கக் காட்சி தருகிறார்.
இத்தலத்தில் நந்தினிக்கும், பட்டிக்கும் பகவான் கிருஷ்ணர் தமது காளிங்க நர்த்தனக் காட்சியை ஆடிக் காட்டினாராம். இந்த லீலையைக் காணப்பெற்று மகிழ்ச்சி அடைந்த நாரத முனிவரின் வேண்டுகோளை ஏற்று பகவான், அதே திருக்கோலத்தில் கோயில் கொண்டதாக வரலாறு.
காளிங்க நர்த்தன திருச்சிலை இக்கோயிலுக்குப் பின்புறமுள்ள காளியன் மடுவிலிருந்து கண்டெடுக்கப் பட்டதாம். சுமார் இரண்டரை அடி உயரம் உள்ள கிருஷ்ண பகவானின் திருவுருவம் மிகவும் நேர்த்தியாக, பிரமிக்கத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
காளிங்கன் என்ற ஐந்து தலைப் பாம்பின் மீது தமது இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கி இடது கரத்தால் பாம்பின் வாலைப் பிடித்துக் கொண்டு வலக்கரம் அபய ஹஸ்தம் காட்ட நர்த்தனமாடும் பாணியில் பகவான் ஒய்யாரமாகக் காட்சி தருகிறார். ஸ்ரீ கிருஷ்ண பகவானின் முழு உருவமும் இடது திருக்கரம் பிடித்திருக்கும் பாம்பின் வாலின் ஆதாரத்தில் தாங்கி நிற்க, சிற்பியின் திறமைக்குச் சான்றாக விளங்குகிறது இத்திருச்சிலை.
காளியனின் தலையைப் பிடித்துக் கொண்டிருப்பது போல் தோன்றும் பகவானின் திருப்பாதம், பாம்பின் தலை மீது படவில்லை. பாம்பின் தலைக்கும் பகவானின் திருப்பாதத்துக்கும் இடையில் ஒரு நூலிழை இடைவெளி இருக்கிறது. ஒரு காகிதத்தை அந்த இடைவெளியில் நுழைத்துத் தடையின்றி வெளியே எடுத்து விடலாம்!
ராகு மற்றும் சர்ப்ப தோஷ பரிகாரத் தலமாக ஊத்துக்காடு திகழ்கிறது. மேலும், காளிங்க நர்த்தனக் கிருஷ்ணரை வழிபட்டு திருமணத் தடை, புத்திரப்பேறு தடை நீங்கி பக்தர்கள் பயன் பெறுகின்றனர். கிருஷ்ண பகவானின் திருநட்சத்திரமான ரோஹிணி அன்று மாதந்தோறும் சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன.
அமைவிடம்: கும்பகோணத்திலிருந்து மெலட்டூர் செல்லும் சாலையில், திருக்கருகாவூரில் இருந்து 7 கி.மீ., கும்பகோணத்திலிருந்து 11 கி.மீ., தஞ்சாவூரிலிருந்து 13 கி.மீ. தூரம். தரிசன நேரம்: காலை 10 முதல் 12 வரை. மாலை 6 முதல் இரவு 8.30 மணி வரை.

Comments