ராவணன் பூஜித்த சிவலிங்கம்!

இது அகோர தலமாகும். அகோரஸ்திர மந்திரம் ஜபித்து, யாகம் வளர்த்துதான், இந்தத் திருத்தலத்தில் அமர்ந்து சிவனை அழைத்தான் ராவணன்.
திருச்சி மாவட்டத்தில் போக்குவரத்து வசதிகளில் இருந்து மிகவும் உள்ளடங்கிய பழைமையான கிராமம் திருத்தலையூர். ராமாயணக் காலத்துக்கு முற்பட்ட கிராமம் இது எனப்படுகிறது. ஆதியில், ‘திருகுதலையூர்’ என்று அழைக்கப்பட்டு, பின்னர் காலப்போக்கில் மருவி, ‘திருத்தலையூர்’ என்றாகிப் போனது. இத்திருத்தலத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீகுங்குமாம்பிகை சமேத அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் தல வரலாறு சுவாரஸ்யம் மிக்கது.
கோயிலை தொலைவில் நின்று பார்க்கும்போது சற்றே பெரியதாகவும், புராதனக் கோயிலாகவும் தெரிகிறது. தீர்த்தக் குளத்துக்கு எதிரே திருக்கோயில் விரிந்து காட்சி தருகிறது. தற்போது சுற்றுச்சுவர் மற்றும் திருக்கோயிலின் உள்மண்டபப் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கிழக்கு நோக்கிய சிவன் கோயில். ராஜகோபுரம் கடந்து உள்ளே செல்கிறோம். பிராகார மண்டபத் திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. காலத்தால் அழியாத கல் தூண்களைத் தாங்கி நிற்கும் மண்டபத்தின் மேல் விதானக் கூரையின் நீண்ட கருங்கற்களைப் பெயர்த்து எடுத்து புனரமைத்து மீண்டும் மேல் விதானத்தில் பொருத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதனால், திருக்கோயில் உள்ளே சென்று சுவாமி, அம்பாளைத் தரிசித்து வலம் வர முடியவில்லை.
உள்பிராகார மண்டபத்தில் தனி சன்னிதியில் அமைந்துள்ளது, ராவணன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கம். பத்து தலை ராவணன் உருவாக்கிய லிங்கம் என்பதாலோ என்னவோ, சிவலிங்கம் கொஞ்சம் பெரிதாகவே அமைந்துள்ளது.
கருவறையில் சுயம்பு மூர்த்தமாக ரிஷிகள் வழிபட்ட சிறிதான சிவலிங்கம். கருவறை மூலவர் மிக எளிமையாகக் காட்சியளிக்கிறார். கிழக்கு நோக்கிக் காட்சி தரும் மூலவர் சன்னிதிக்கு வெளியே தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள் அருள்மிகு குங்குமாம்பிகை.
பெண்கள் மற்றும் ஆண்களின் திருமணத் தடை நீக்கும் வரப்ரசாதியாகத் திகழ்கிறாள். ஈசன் மற்றும் குங்குமாம்பிகையை தரிசித்து விட்டு, உள்பிராகாரத்தை வலம் வருகிறோம். மகாமண்டபத்தின் உள்ளே, அகோர வீரபத்திரர் தனி மேடையில் பளிச்சென அருள்பாலிக்கிறார். அகோர வீரபத்திரருக்கு இங்கு என்ன வேலை? அர்ச்சகர் சொல்லக் கேட்போம்.
இது அகோர தலமாகும். அகோரஸ்திர மந்திரம் ஜபித்து, யாகம் வளர்த்துதான், இந்தத் திருத்தலத்தில் அமர்ந்து சிவனை அழைத்தான் ராவணன். ராவணனின் மிகக் கடுமையானப் தபஸின் விளைவாக இறுதியில் சிவபெருமான் நெற்றிக் கண்ணைத் திறந்து காட்சியளித்தார். சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து அகோர வீரபத்திரர் உதித்த தலம் இது" என்கிறார். தனி மேடையில் அகோர வீர பத்திரர்க்கு இடதுபுறமாக விநாயகர், வலதுபுறமாக ருத்ர பசுபதி நாயனார்.
கருவறை பின்புறம் தல விருட்சம் மருத மரம். அதன் அடி பாகத்தில் முண்டும் முடிச்சுகளுமாகக் காணப்படுகிறது. முண்டும் முடிச்சுகளுமாக எனச் சொல்லாதீங்க சார். அவை அத்தனையும் ரிஷிகள் ஐக்கியமான பாகங்கள்" என்று நம்மை எச்சரிக்கிறார் அர்ச்சகர்.
ராவணன் இங்கு எப்போது வந்தான்? இந்த ஊருக்கு திருகுதலையூர் (திருத்தலையூர்) எனப் பெயர் வரக் காரணம் என்ன? எனக் கேட்டபோது...
இலங்கையிலிருந்து ராவணன் கயிலாயம் நோக்கிக் கிளம்பி வரும் வழியில் இப்பகுதியில் வனாந்திரமாக இருக்கக் கண்டு, இங்கேயே தங்கி விட்டார். இப்பகுதியில் யாகம் வளர்த்து, சிவனை வழிபட்டுக் கொண்டிருந்த ரிஷிகள், பத்து தலை ராவணனைக் கண்டவுடன் பயந்து நடுங்கி, மருத மரத்தில் ஐக்கியமாகி விடுகின்றனர். அந்த மருத மரமே திருக்கோயிலின் தல விருட்சமாக மாறியது.
‘ரிஷிகள் வழிபட்ட லிங்கத்தை தான் வழிபடுவதா?’ என எண்ணிய ராவணன், உடனே புற்று மண்ணெடுத்துப் புதிதாக அவன் கைகளாலேயே ஒரு பெரிய சிவலிங்கத்தை உருவாக்கி வழிபடத் தொடங்கினான். தனக்கு ஈஸ்வரன் நேரிலே தரிசனம் தர வேண்டும் என்று யாகங்கள் வளர்த்து தொடர்ந்து வழிபட்டான்.
ஆனால் ஈஸ்வரனோ, தரிசனம் தரவில்லை. யாகம் தொடர்கிறது. நாட்கள் நகர்கின்றன. மிகவும் வெறுத்துப் போன ராவணன், ஒரு கட்டத்தில் தனது பத்து தலைகளில் ஒவ்வொன்றாகத் திருகி யாகத்தில் வீசினான். அப்படி ஒன்பது தலைகளையும் திருகி வீச, ஒரு தலை மட்டுமே மிஞ்சியது. அப்போதும் பரமேஸ்வரன் காட்சி தராததால், தனது பத்தாவது தலையையும் திருகி யாகத்தில் வீச முயற்சித்தான் ராவணன்.
மனம் கசிந்துபோன சிவபெருமான், நெற்றிக் கண்ணைத் திறந்தபடி ராவணனுக்குக் காட்சியளித்தார். அதோடு, ராவணனால் திருகி வீசப்பட்ட ஒன்பது தலைகளையும், சிவபெருமானே வரமளித்து ராவணனுக்கு ஒட்ட வைத்து மீண்டும் அவனைப் பத்து தலை ராவணனாக உருவாக்கினார்.
தான் பிடித்து வைத்த புற்று மண்ணினால் ஆன சிவலிங்கத்தை வணங்கி வழிபட்டு கயிலாயம் கிளம்பிச் சென்றான் ராவணன். இத்தனைச் சிறப்புகள் பெற்றது இந்தத் திருத்தலையூர் திருத்தலம்" என்கிறார் மகுடேஸ்வரன் குருக்கள்.
அமைவிடம்: முசிறி மற்றும் துறையூரிலிருந்து 18 கி.மீ., முசிறியிலிருந்து தண்டலைப்புத்தூர் வழியாகச் செல்லலாம். துறையூரிலிருந்து புலிவலம், அங்கிருந்து திருத்தலையூர்.

 

Comments