அதிரூப சுந்தரன் துவாரகாதீசன்!

ஸ்ரீமந் நாராயணனை பத்ரியில் தவக் கோலத்திலும், நைமிசாரண்யத்தில் ஆரண்ய ரூபத்திலும், புஷ்கரில் ஜல ரூபத்திலும், திருமலையில் மலை வடிவிலும் தரிசிக்கலாம். அதிரூப சுந்தரனாக அவனைத் தரிசிக்க வேண்டுமெனில் துவாரகைக்குத் தான் செல்ல வேண்டும். கோமதி நதிக்கரையில் உள்ளதால், ‘கோமதி துவாரகா’ என்கிறார்கள். இங்குள்ள ஸ்ரீ கிருஷ்ணன் சிலை மனிதராலோ, தேவ சிற்பியாலோ படைக்கப்பட்டதல்ல. கிருஷ்ண பரமாத்மா, தாமே தம்மை உருவாக்கிக் கொண்டதால்தான் இத்துணை அழகாக உள்ளது.
துவாரகாதீசன் கருமை நிறத்தில், சதுர்புஜங்களுடன் உள்ளம் கவரும் கள்ளங்கபடமற்ற குழந்தை போன்ற கண்களுடன், அழகிய புன்னகையை அதரத்தில் தாங்கி, தேஜோமயமாக உள்ளத்தை வசீகரிக்கிறான். வண்ண உடைகளிலும், அழகிய ஆபரணங்களிலும் அவன் அழகு கோடி சூரியனாய் பிரகாசிக்கிறது.
துவாரகாதீசனின் பூரணப் பொலிவைப் போற்றி பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கை ஆழ்வார், திருமழிசை ஆழ்வார் மற்றும் நம்மாழ்வார் ஆகியோர் பாசுரங்களாலே மங்களாசாசனம் செய்துள்ளனர்.
கோமதி நதிக்கரையில், காசியைப் போல பல படித்துறைகள் உள்ளன. கோமதி மாதாவுக்கும் இங்கு ஆலயம் உள்ளது.
கோமதி நதியில் நீராடி, துவாரகாதீசனான ஸ்ரீகிருஷ்ணனை தரிசனம் செய்பவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் உறுதி செய்யப்படுகிறது என்பது ஐதீகம். மேலும், அவரது முன் ஏழு தலைமுறையினரும் மோட்சம் அடைவார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன.
ஆலய நுழைவாசலின் பெயர் சொர்க்கத்வார், ஆலயத்திலிருந்து கோமதி நதிக்குச் செல்லும் வாசலின் பெயர் மோஷத்வார். மோஷத்வாரிலிருந்து கோமதி நதிக்குப் போகும் வழியிலுள்ள சாட்சி கோபால் சுவாமியைத் தரிசிக்க வேண்டும். கோமதி நதி கடலுடன் சங்கமமாகும் கரையில் சமுத்ரநாராயணன் ஆலயம் உள்ளது.
தசாவதாரத்தில் எட்டாவது அவதாரமான ஸ்ரீகிருஷ்ணர் ஜராஸந்தனை வென்று அரசாட்சி புரிந்த தலமே துவாரகை. தற்போதுள்ள ஆலயம், கண்ணனின் பேரன் வஜ்ரநாபனால் கட்டப்பட்டது. கோபுரமும் சிகரமும் ஏழு அடுக்குக் கொண்டது. இதற்கு ஜகத்மந்திர், திரிலோக்சுந்தர் மந்திர் என்றும் பெயர். வெளிப்பிராகாரத்தில் குக்ஷேஷ்வர் மகாதேவ், சத்யநாராயண், நவகிரகம், கோல்வாபகத், காசி விசுவநாதர், காயத்ரி, கிருஷ்ணனின் மகன் பிரத்யும்னன், பேரன் அனிருத், குருகுல துர்வாசர், வேணுமாதவர், ராதா கிருஷ்ணர், பலராம் மந்திர் சன்னிதிகளும் உள்ளன.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான துவாரகையில் விண்ணை முட்டும் கருவறை சிகரத்தில் அடிக்கடி கொடியை மாற்றிக் கொண்டே இருக்கின்றனர். பக்தர்கள் ஆடல், பாடலுடன் வாத்தியங்களை இசைத்துக் கொண்டே கொடியை சுமந்து வந்து பழைய கொடியை இறக்கி, புதிய கொடியை ஏற்றுகின்றனர்.
வண்ணப் பட்டாடைகளில் அதிரூப சுந்தரனாகக் காட்சி தரும் துவாரகாதீசனை ஆர்த்தியின்போது ஆனந்தமாக சேவித்தால் பிறவிப்பயனை அடையலாம். குலேசனுக்கு அருளிய துவாரகாதீசன் நமக்கும் குறைவில்லா வாழ்வு அருள்வான் என்பதில் ஐயமில்லை.
அமைவிடம்: குஜராத் மாநிலம், ராஜ்கோட்டிலிருந்து துவாரகா செல்லலாம்.

Comments