பாக்கியம் அருளும் பாணலிங்கம் - வழிபாடு செய்வது எப்படி?

கல்லால் செய்யப்பட்ட ஆயிரம் சிவலிங்கங்களுக்கு, ஒரு ஸ்படிக லிங்கம் சமமானது. அதே போல் 12 லட்சம் ஸ்படிக லிங்கங்களுக்கு சமமானது ஒரு பாணலிங்கம்.
பாக்கியம் அருளும் பாணலிங்கம் - வழிபாடு செய்வது எப்படி?
எல்லா நேரங்களிலும் இறைவனால் மனிதர்களுக்கு நேரடியாக உதவிக்கொண்டிருக்க முடியாது. அதனால்தான் இறைவனும், இயற்கையும் இணைந்து, மனிதர்களின் ஆன்மிக வாழ்விற்கு உதவக்கூடிய வகையில் பல்வேறு பொருட்களை நமக்கு அருளியிருக்கிறார்கள்.

அவை பல்வேறு விதங்களில் ஆச்சரியம் தருவதாகவும், நமது வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தருவதாகவும் உள்ளன. இன்றைய நாகரிக வாழ்க்கை சூழலில் அத்தகைய பொருட்கள் பற்றி நாம் தெரிந்துகொள்ளும்போது, நிச்சயம் அது வியப்பளிப்பதாகவே இருக்கும். அதுபோன்ற சாதனங்கள் பற்றி தான் இந்தத் தொடரில் நாம் பார்க்கவிருக்கிறோம்.

இயற்கையிலேயே இறையம்சம் பொருந்தியதாக உள்ள பல பொருட்களில் பாணலிங்கம் ஒன்று. இது லிங்க வடிவத்தில், வழவழப்பான தன்மையுடன் இருக்கும் ஒரு வகைக் கல். அவற்றின் மேற்புறத்தில் பூணூல் அணிந்திருப்பது போன்ற ரேகை அமைப்பு இயற்கையாகவே இருக்கும். பாணலிங்கம் என்பது, பாணம் எனப்படும் நீரில் தாமாக உற்பத்தியாகிறது என்ற கருத்தும் இருக்கிறது.

கல்லால் செய்யப்பட்ட ஆயிரம் சிவலிங்கங்களுக்கு, ஒரு ஸ்படிக லிங்கம் சமமானது. அதே போல் 12 லட்சம் ஸ்படிக லிங்கங்களுக்கு சமமானது ஒரு பாணலிங்கம் என்கிறார்கள் ஆன்மிகப் பெரியோர்கள். தானாகவே தோன்றக்கூடிய பாணலிங்கம், மத்திய பிரதேசத்தில் உள்ள நர்மதை நதியில் பெருமளவுக்கு கிடைக்கின்றன. பாணலிங்கத்தை முன்வைத்து செய்யப்படும் பல்வேறு பூஜை முறைகளைப் பற்றி இங்கே அறிந்து கொள்வோம்.

பாணாசுரன் வழிபட்ட லிங்கம் :

பாணாசுரன் என்ற அசுரன், சாஸ்திரங்களின் உள்ளர்த்தங்களை, அதற்குத் தகுந்த பெரியவர்களிடம் கேட்கும் பழக்கம் கொண்டவன். அவ்வாறு கேட்டதன் வாயிலாக, சிவலிங்க வழிபாட்டின் மகிமையையும், சிவபூஜை செய்வதன் பலன்களையும் மானசீகமாக உணர்ந்து, அதைச் செய்ய விரும்பினான். அதற்காக சிவபெருமானை நோக்கி கடுமையான தவத்தில் ஈடுபட்டான்.

அவனது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், அவன் முன்பாக தோன்றி, ‘என்ன வேண்டும்?’ என்று கேட்டார்.

பாணாசுரன், சிவபெருமானிடம் ‘ஆயிரம் தலைகள் கொண்டும், இரண்டாயிரம் கைகளுடனும் சர்வேஸ்வரனான உம்மை வழிபட விரும்புகிறேன். அந்த வழிபாட்டைச் செய்வதற்காக எனக்கு 14 கோடி சிவலிங்கங்கள் வேண்டும்’ என்று கேட்டான்.

அவனது வேண்டுதலின்படியே சிவபெருமான் வரத்தை அளித்தார். தனது பூத கணங்களின் மூலமாக, பாணாசுரனுக்கு 14 கோடி சிவலிங்கங் களைத் தந்தருளினார். அதைக் கொண்டு பாணா சுரன் பல காலமாக வழிபாடு செய்தான். அவன் வழிபட்ட சிவலிங்க திருமேனிகள் ‘பாணலிங்கம்’ என்று அழைக்கப்படுகிறது.


புண்ணிய தீர்த்தக்கரைகள் :

பாணாசுரன், தான் வழிபட்ட சிவலிங்கங்களை புண்ணிய தலங்களான ஸ்ரீசைலம், கங்கை, நீலகண்டம், நேபாளம், யமுனை, நர்மதை, கன்னியாகுமரி முதலான புண்ணிய தீர்த்தங்கள் கொண்ட வழிபாட்டு தலங்களில் ஸ்தாபித்து வழிபட்டான். அத்தகைய சிவலிங்கங்கள் தற்போதும் பரவலாக காணப்படுகின்றன. சிறிய முந்திரி பருப்பு அளவில் இருக்கும் லிங்க வடிவம் முதல், ஒரு அடி நீளத்துக்கும் மேல் அளவு கொண்ட லிங்கங்கள் வரையில் அவனால் வழிபடப்பட்டன. அவன் மந்திரங்கள் கொண்டு சிவ பூஜை செய்திருந்த காரணத்தால், அந்த லிங்கங்களில் எல்லா காலத்திலும் சிவசான்னித்தியம் இருப்பதாக ஐதீகம்.

நர்மதேஸ்வர சிவலிங்கம் எனப்படும் பாணலிங்கத்தில், வெடிப்பு அல்லது பிளவுகள் இருந்தால் அவற்றை வைத்து பூஜைகள் செய்வது கூடாது. பாணலிங்கம் அல்லாத வேறு வகை லிங்க வடிவங்களும் ஆங்காங்கே பரவலாக காணப்படுகின்றன. தற்காலத்தில் புனிதமான நர்மதை நதியின் படுகையில் கிடைக்கும் பாணலிங்கங்கள் விலை மதிப்பற்றவையாக கருதப்படுகின்றன. அவை கீறல் போன்ற ரேகையுடனும், பிந்து வட்டம், பளபளப்பு, கருமையான நாவல்பழம் போன்ற நிறத்தோடு நீள் உருண்டை வடிவம் கொண்டதாகவும் இருக்கின்றன. அத்தகைய பாணலிங்கங்களே வழிபாட்டிற்கு உகந்ததாக உள்ளன.

பஞ்சாயதான பூஜை :

நமது சம காலத்தில் வாழ்ந்து, சித்தியடைந்த மகான் ஒருவரால் பெரிதும் போற்றப்பட்ட வழிபாட்டு முறை ‘பஞ்சாயதான பூஜை’ என்பதாகும். அந்த பூஜை முறையில் ஐந்து தெய்வங் களின் அருளை, ஒரே நேரத்தில் அடைவது சாத்தியமாகும். அந்த பூஜையானது தற்போது வழக்கத்தில் அவ்வளவாக நடைமுறையில் இல்லை. பாணலிங்கம் உள்ளிட்ட மற்ற நான்கு தெய்வ சான்னித்தியம் கொண்ட கற்களை பயன்படுத்தி செய்யப்படும் பூஜை அது. நமது நாட்டின் முக்கியமான இடங்களிலிருந்து பெறப்படும் தெய்வ அம்சம் பொருந்திய கற்களை பூஜைக்கு பயன்படுத்துவதால், அந்தந்த இடங்களுக்கு தீர்த்த யாத்திரை செய்த பலனும் கிடைக்கும்.

இந்த பூஜையில் வைக்கப்படும் ஐந்துவித தெய்வாம்சம் பொருந்திய கற்கள் பாணலிங்கம், ஸ்வர்ணமுகி சிலா, சாளக் கிராமம், ஸ்படிகம் மற்றும் சோணபத்ரம். அவற்றில் ஈஸ்வர அம்சம் கொண்ட பாணலிங்கம், நர்மதை நதியின் ஓங்கார குண்டம் பகுதியில் கிடைக்கிறது. பார்வதியின் அம்சம் கொண்டு தங்க ரேகையுடன் கூடிய ஸ்வர்ணமுகி சிலா என்ற கல்லானது, ஆந்திராவில் பாயும் ஸ்வர்ணமுகி ஆற்றில் கிடைக்கிறது. மகாவிஷ்ணுவின் அம்சமான சாளக்கிராமம், நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் கிடைக்கிறது. சூரியதேவனின் அம்சமாக உள்ள ஸ்படிக கல்லானது, தஞ்சாவூருக்கு அருகில் உள்ள வல்லத்தில் கிடைக்கிறது. விநாயகரின் அம்சம் பொருந்திய சோணபத்ரம் என்ற கல், கங்கையில் கலக்கும் சோணா நதியில் கிடைக்கிறது.

பஞ்சாயதான பூஜையை செய்வதற்கு அதிகமாக நேரம் தேவைப்படுவதில்லை. பூஜைக்கான இடம், பொருட்கள் ஆகிய அனைத்தும் எளிமையான முறைகளைக் கொண்டதாக உள்ளது. ஐந்து வகையான கற்களுக்கும் சந்தனம், குங்குமம் அட்சதை ஆகியவற்றை வைத்து, அர்ச்சனை மற்றும் நைவேத்தியம் செய்து பூஜையை முடிக்கலாம்.

பாணலிங்கத்துக்கு வில்வம், சாளக்கிராமத்துக்கு துளசி, ஸ்வர்ணமுகி சிலாவுக்கு சிவந்த மலர்கள், சோணபத்திரத்துக்கு அருகம்புல், ஸ்படிகத்துக்கு தாமரை ஆகியவற்றை பூஜை மற்றும் அர்ச்சனைகளுக்கு பயன்படுத்த வேண்டும். அவை கிடைக்காத சமயங்களில் அட்சதை கலந்து வைத்துக்கொண்டு பூஜிக்கலாம். நைவேத்தியமாக உலர்ந்த திராட்சைகளை வைத்துக்கொள்ளலாம்.

எங்கும் செய்யலாம் :

நித்திய பூஜையாக பஞ்சாயதான பூஜையை செய்து வருபவர்கள், வெளியூர் செல்ல நேரும்போது அங்கும் அதைத் தொடர்ந்து செய்யலாம். மேற்கண்ட பொருட்கள் சிறிய அளவில்இருப்பதால், சுலபமாக எடுத்துச்சென்று பயன்படுத்தலாம். வீடுகளில் பூஜை செய்யும்போது சுத்தான்னம் நைவேத்தியம் செய்வது நல்லது.

மேற்கண்ட பூஜையானது நமது உடலிலும், வெளியிலும் பரவியிருக்கும் பஞ்சபூத சக்திகளை முறைப்படுத்துவதற்கு பயன்படுத்தலாம் என்பது கூடுதல் செய்தி. அதாவது பாணலிங்கம் பூமி அம்சமாகவும், சாளக்கிராமம் ஆகாய அம்சமாகவும், ஸ்வர்ணமுகி சிலா நெருப்பின் அம்சமாகவும், சோணபத்ரம் நீரின் அம்சமாகவும், ஸ்படிகம் வாயுவின் அம்சமாகவும் இருப்பதாக ஐதீகம். நமது உடலில் செயல்படும் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று கூறுகளை அடிப்படையாக வைத்து இயங்கும் பஞ்சபூத இயக்கங்கள், மேற்கண்ட பூஜையால் சிறப்பாக செயல்படும் என்பது ஆன்மிக நம்பிக்கையாகும்.


தார சக்கர சிவலிங்கம் :

மனித உடலில் அமைந்துள்ளதாக கருதப்படும் 7 ஆதார சக்கரங்களை குறிப்பதுபோலவும், சிவலிங்கங்கள் பூமியில் அமைந்திருக்கின்றன. மூலாதார சக்கரத்தை குறிக்கும் திருவாரூர், சுவாதிஷ்டான சக்கரத்தை குறிக்கும் திருவானைக்காவல், மணிபூரகம் எனப்படும் நாபி ஸ்தானத்தை குறிக்கும் திருவண்ணாமலை, இதயமத்தியில் உள்ள அனாகத சக்கரத்தை குறிக்கும் சிதம்பரம், விசுத்தி எனப்படும் கழுத்தின் கீழ்ப்புற சக்கரத்தை குறிக்கும் காளஹஸ்தி, புருவ மத்தியான ஆக்கினை சக்கரத்தை குறிக்கும் காசி, பிரம்மாந்திரம் எனப்படும் உச்சந்தலையாக கயிலாசம், துவாதசாந்தம் எனப்படும் உச்சிக்கு மேல் 12 அங்குலத்தில் உள்ள மையம் மதுரை என்பதாக அவை இருக்கின்றன.

மேற்கண்ட தலங்களில் பொங்கும் இறைவனது அருளானது உலகம் முழுவதும் பரவுவதாக அறியப்படுகிறது. பாணலிங்கமானது மனித உடலில் சூட்சுமமாக இயங்கும் அந்த சக்கரங்களை நல்ல முறையில் இயங்க வைப்பதாக ஆன்மிக ஆன்றோர்கள் கருதுகிறார்கள்.

பூஜை முறை :

சிவ பஞ்சாயதான பூஜை:- சிவபூஜை செய்பவர்கள் பாணலிங்கத்தை மத்தியில் வைக்க வேண்டும். சூரியனுக்குரிய ஸ்படிகத்தை தென்கிழக்கிலும், கணபதிக்குரிய சோணபத்திரத்தை தென்மேற்கிலும், அம்பாளுக்கு உரிய ஸ்வர்ணமுகி சிலாவை வடமேற்கிலும், விஷ்ணுவுக்குரிய சாளக்கிராமத்தை வடகிழக்கிலும் வைத்து பூஜையை செய்ய வேண்டும்.

அம்பாள் பஞ்சாயதான பூஜை:- உலக அன்னை பார்வதி தேவிக்கான சக்தி பூஜை செய்பவர்கள் ஸ்வர்ணமுகிசிலாவை மத்தியில் வைக்க வேண்டும். சூரியனுக்கு உரிய ஸ்படிகத்தை வடமேற்கிலும், கணபதிக்குரிய சோணபத்திரத்தை தென்மேற்கிலும், சிவனுக்குரிய பாணலிங்கத்தை தென்கிழக்கிலும், விஷ்ணுவுக்கு உரிய சாளக்கிராமத்தை வடகிழக்கிலும் வைத்து பூஜை செய்ய வேண்டும்.

விஷ்ணு பஞ்சாயதான பூஜை:- விஷ்ணு பூஜை செய்பவர்கள் சாளக்கிராமத்தை மத்தியில் வைக்க வேண்டும். மேலும், சூரியனுக்கான ஸ்படிகத்தை தென்மேற்கிலும், கணபதிக்கு உரிய சோணபத்திரத்தை தென்கிழக்கிலும், அம்பாளுக்கு உரிய ஸ்வர்ணமுகிசிலாவை வடமேற்கிலும், சிவனுக்கு உரிய பாணலிங்கத்தை வடகிழக்கிலும் வைத்து பூஜை செய்ய வேண்டும்.

கணபதி பஞ்சாயதான பூஜை:- கணபதி பூஜை செய்பவர்கள் சோணபத்திரத்தை மத்தியில் வைக்க வேண்டும். சூரியனுக்குரிய ஸ்படிகத்தை தென்மேற்கிலும், அம்பிகைக்கு உரிய ஸ்வர்ணமுகிசிலாவை வடமேற்கிலும், மஹாவிஷ்ணுவுக்கு உரிய சாளக்கிராமத்தை வடகிழக்கிலும், சிவ அம்சம் பொருந்திய பாணலிங்கத்தை தென்கிழக்கிலும் வைத்து பூஜை செய்ய வேண்டும்.

சூரிய பஞ்சாயதான பூஜை:- சூரிய பூஜை செய்பவர்கள் ஸ்படிகத்தை மத்தியில் வைப்பதோடு, மஹாவிஷ்ணுவுக்கு உரிய சாளக்கிராமத்தை தென்மேற்கிலும், அம்பாளுக்குரிய ஸ்வர்ண முகிசிலாவை வடமேற்கிலும், ஈஸ்வர அம்சம் கொண்ட பாணலிங்கத்தை வடகிழக்கிலும், கணபதியின் சோணபத்திரத்தை தென்கிழக்கிலும் வைத்து பூஜை செய்ய வேண்டும்.

Comments