தோஷங்களை நீக்கும் எமதர்மன் வழிபாடு

திருவாஞ்சியத்தில் சனி பகவானின் அதிதேவதையான எமதர்மராஜாவே இங்கு ஷேத்திர பாலகராக உள்ளதால், அனைத்து விதமான தோஷங்களும், எமதர்மனை வழிபட்டால் அகலும் என்பது ஐதீகம்.
தோஷங்களை நீக்கும் எமதர்மன் வழிபாடு
எமதர்மனுக்கு ஏற்பட்ட ஆணவத்தின் காரணமாக, அவனது பணியைப் பறித்தார் சிவபெருமான். இதையடுத்து எமதர்மன், திருவாரூர் தியாகராஜ பெருமானை தரிசித்து, திருவாஞ்சியம் வந்து தவமிருந்தான். மாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் ஈசன், எமதர்மனுக்கு காட்சி கொடுத்து, அவனது பணியை திரும்ப வழங்கினார்.

மேலும் ‘திருவாஞ்சியம் தலத்திற்கு வரும் பக்தர்கள், தல தீர்த்தமான குப்த கங்கையில் நீராடிவிட்டு, உன்னை வணங்கிய பிறகுதான், விநாயகரை வழிபட்டு, என்னை வணங்குவார்கள்’ என்று எமனுக்கு வரமும் அளித்தார். திருவாஞ்சியம் ஆலயத்தில் அமர்ந்த கோலத்தில் தெற்கு நோக்கிய சன்னிதியில் எமதர்மன் அருள்பாலிக்கிறார். அருகில் சித்திரகுப்தரும் வீற்றிருக்கிறார்.

இங்கு விழாக் காலங்களில் நந்தி வாகனத்திற்கு பதிலாக, இறைவன் எம வாகனத்திலேயே திருவீதி உலா வருகிறார். சனி பகவானின் அதிதேவதையான எமதர்மராஜாவே இங்கு ஷேத்திர பாலகராக உள்ளதால், ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, கண்டச் சனி முதலிய தோஷங்களும், எமதர்மனை வழிபட்டால் அகலும் என்பது ஐதீகம்.

Comments