கால பைரவருக்கு மிளகுத் திரி தீபம்!

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்திலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக் கிறது குண்டடம் என்ற ஊர். பிரசித்தி பெற்ற ‘கொங்கு கால பைரவ வடுவநாத சுவாமி’ திருக்கோயில் இங்குதான் அமைந்திருக்கிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் குண்டடம் என்ற ஊரில் கோயில்கொண்டிருக்கும் காசி விசுவநாதரின் அருளைப்பெற, ‘விடங்க முனிவர்’ தவத்தில் ஆழ்ந்திருந்தார். குண்டடத்தின் வனப்பகுதிகளில் வாழும் மிருகங்களால் விடங்க முனிவருக்குத் தொந்தரவு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக கால பைரவரை அனுப்பி அவரைக் காவல் காக்குமாறு கட்டளையிட்டிருந்தார் சிவபெருமான்.      
‘விடங்க முனிவர் தவம் முடிக்கும்வரை அவருக்கு நீ காவல் காக்க வேண்டும்’ என சிவபெருமான் உத்தரவிட்டிருக்க, விடங்க முனிவரின் தவமோ பல நாள்கள் தொடர, கால பைரவரும் அவருக்குக் காவலிருக்க, இருவரைச் சுற்றியும் புற்று தோன்றி, அவ்விருவரையுமே மூடிவிட்டது.

குறுமிளகு கொஞ்சம் தாருங்கள்!

காலங்கள் கடந்தன... சேர நாட்டிலிருந்து பாண்டிய நாட்டுக்கு, வணிகர்கள் சிலர், ‘குறுமிளகு’ மூட்டைகளை ஏற்றிக்கொண்டு, வாணிபம் செய்வதற்காகப் பயணம் செய்திருக்கிறார்கள். அப்போது, அந்தப் புற்றை வணிகர்கள் கடக்கும்போது, முதியவர் ஒருவர் அவர்களை வழிமறித்து, தனக்கு இருக்கும் இருமலைப் போக்கிக்கொள்ள, ‘கொஞ்சம் மிளகு தாருங்களேன்’ எனக் கேட்டிருக்கிறார். வணிகர்களோ, மூட்டையில் இருப்பவை மிளகு அல்ல. அனைத்தும் பாசிப்பயறு என்று பொய் உரைத்திருக்கிறார்கள். `அப்படியா... சரி' என்று கூறிவிட்டு, அவ்விடத்திலிருந்து கிளம்பி விட்டாராம் அந்த முதியவர்.  

வணிகர்கள் பாண்டிய நாட்டை அடைந்து, மன்னனைக் காணச் சென்றனர். ‘மிளகுகளின் தரத்தைப் பரிசோதிக்க வேண்டும். மூட்டையைப் பிரித்துக்காட்டுங்கள்' என உத்தரவிட்டிருக்கிறார் மன்னர். அவரது கண்முன்னே மூட்டைகள் அவிழ்க்கப்பட, மூட்டை முழுவதும் பாசிப்பயறு நிறைந்து காணப்பட்டன. திகைத்துப்போய் நின்ற வணிகர்கள், அவர்கள் வரும்வழியில் நிகழ்ந்த சம்பவத்தை, பதைபதைப்போடு  மன்னனிடம் தெரிவித்தனர்.

இலந்தை மரத்தடியில்...

அப்போது கூட்டத்திலிருந்த வணிகர் ஒருவர்மீது அருள்வந்து இறங்கிய கால பைரவர், ‘முதியவராக வந்து தோன்றியது நான்தான்' என்றும் மேலும், `பாண்டிய - சேர நாட்டு எல்லையில் உள்ள இலந்தை மரத்தடியில் பெரிய புற்று ஒன்று வளர்ந்திருக்கும். அந்தப் புற்றுக்குப் பாலபிஷேகம் செய்து வழிபட்டால், அப்புற்றிலிருந்து எனது சிலை வெளிப்படும். அதை எடுத்து கோயில் கட்டி பிரதிஷ்டை  செய்து  வழிபடுங்கள்.  உங்கள் கவலைகள் அனைத் தையும் போக்கி நான் காத்தருள்வேன்’ என்று ஒலித்திருக்கிறார். அதன்படியே, பாண்டிய மன்னனும் கோயில் எழுப்பி வழிபாடு நடத்த, அந்த மன்னனின் வாரிசுகளுக்கு இருந்த உடற்கோளாறுகள் நிவர்த்தியாகின.   

இத்திருக்கோயிலில் விடங்கீஸ்வரரும் - விசாலாட்சி அம்மனும் வீற்றிருந்தாலும், கால பைரவர் கோயில் என்றால்தான் பக்தர்கள் அனைவருக்கும் தெரியவரும். வாரியார் சுவாமிகளுக்கும் பிடித்தமான ஆலயம் இது. ‘காசு இருந்தால், காசிக்குச் செல்லுங்கள், காசு இல்லையேல், குண்டடத்துக்கு வாருங்கள்’ என்று கால பைரவ வடுகநாத சுவாமியைப் போற்றி யிருக்கிறார் கிருபானந்த வாரியார்.   
இங்குள்ள ஈசன், ‘விடங்கீஸ்வரர் ‘என்ற திருப்பெயருடன் லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். விசாலாட்சி அம்மனுக்கு தனிச் சந்நிதி அமைக்கப்பட்டிருக்கிறது. விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, சனி பகவான், நவகிரகங்கள் எனத் திருக்கோயில் தெய்வங்கள் அனைத்தும் தனித்தனிச் சந்நிதியில் காட்சியளிக்கின்றனர்.    

ராகு கால பூஜை விசேஷம்!

கொங்கு கால பைரவர் தடைகளைத் தகர்த்தெறியும் வல்லமைக் கொண்டவர், பக்தர்களுக்கு நேரும் எந்தவொரு தடையையும் தகர்த்து, தன் இன்னருளால் காத்தருள்வார் கொங்கு கால பைரவர். 

பைரவருக்கு உகந்த அஷ்டமி தினங்களில், பைரவருக்குப் பிடித்த மான சிவப்பு வஸ்திரம், செவ்வரளி மாலை, மாதுளம் பழங்கள் ஆகியவற்றை வைத்துப் படைத்து, எந்தவொரு காரியத்தை வேண்டி னாலும், விரைவில் அதை நிவர்த்தியாக்கித் தருவார் பைரவர்.

திருமணத்தடை உள்ளவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை நடைபெறும் ராகு கால பூஜையில் கலந்துகொண்டு, விபூதி அபிஷேகத்தில் அருள்பாலிக்கும் கால பைரவரைத் தரிசித்தால், உடனடியாக நல்ல வரன் அமைந்து, திருமண வாழ்க்கை சுபிட்சம் பெறும் என்பது நம்பிக்கை. எதிரி பயம் நீங்க, கால பைரவருக்கு வடை மாலையும், வெண் பொங்கலும் நிவேதனம் செய்து பக்தர்கள் வழிபடுகின்றனர்.   

மிளகுத் திரி தீபம்

இத்திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள், எந்தவொரு வேண்டுதலாக இருந்தாலும், பைரவருக்கு, ‘மிளகுத் திரி’ தீபமேற்றி வழிபடுவது நடைமுறை.  குண்டடத்தில் கால பைரவர் தோன்றுவதற்கு, மிளகு வணிகர்கள் ஒரு காரணமாக இருந்தமையால், சாதாரண தீபத் திரிகளைவிட, இங்கு மிளகுத் திரி தீபமேற்றி வழிபடுவதன்மூலம் பைரவரின் பூரண அருளை நாம் பெறலாம்.


கருவில் வளரும் குழந்தையின் சிற்பங்கள்

ன்றைய நவீன உலகத்தில் பெண்ணின் கருவறையில் உருவாகும் குழந்தை எப்படியிருக்கிறது என்பதைக் காண, மருத்துவ உலகில் பல சாதனங்கள் வந்துவிட்டன. ஆனால், இதுகுறித்த எந்தவொரு மருத்துவத் தொழில்நுட்பமும் இல்லாத அன்றைய காலத்திலேயே, கருவில் இருக்கும் குழந்தை இப்படித்தான் இருக்கும், அதன் வளர்ச்சி இவ்வாறுதான் இருக்கும் என்பதை இத்திருக்கோயிலில் அமைந்திருக்கும் ஒரு தூணில் சிற்பங்களாகவே செதுக்கி வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்; வியக்கவைக்கும் சிற்ப அற்புதம் இது.  

Comments