ராவணன் பாடலுக்கு நடராஜர் ஆடிய தாண்டவம்!

டராஜப் பெருமானின் நாட்டிய அசைவில் தான் உலகமே இயங்குகிறது என்பதும், பிரபஞ்ச அசைவே ஓர் ஒழுங்கான தாளகதியில் நடைபெறும் தாண்டவம்தான் என்பதும், நம் உடலில் இயங்கும் வாயுக்களின் அசைவும்கூட நாட்டியம்போலவே இருக்கிறது என்பதும் இந்துக்களின் நம்பிக்கை. நடராஜப் பெருமான் பல வகையான தாண்டவங் களை ஆடியிருக்கிறார். ஆனந்த தாண்டவம், சந்தியா தாண்டவம், உமா தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், உன்மத்த தாண்டவம், காளிகா தாண்டவம் என்று பல தாண்டவங்களை நடராஜப் பெருமான் ஆடியிருக்கிறார். இப்படிப் பல்வேறு  காலகட்டங்களில் பல காரணங் களுக்காகச்  சிவபெருமான் ஆடிய தாண்டவங்களில் ராவணனுக்காகச் சிவபெருமான் ஆடிய தாண்டவம்தான் பஞ்ச சகார சண்ட நாட்டியம் என்னும் தாண்டவமாகும்.     
துள்ளலான நாட்டியமான பஞ்ச சகார சண்ட தாண்டவம் ஆடிய வரலாற்றைப் பார்க்கலாமே...

ராவணன் மிகச் சிறந்த சிவபக்தன். மிகக் கடுமையாகத் தவமியற்றி எண்ணற்ற வரங்களைப் பெற்ற மாவீரன். பெற்ற வரத்தை நல்லமுறையில் பயன்படுத்தாமல், இந்திராதி தேவர்களையும் முனிவர்களையும் கொடுமைப்படுத்தினான். தன்னை வெல்ல யாருமே இல்லை என்ற செருக்குடன் திரிந்த ராவணனைக்கண்டு அனைவரும் பயந்து நடுங்கினர்.

ஒருமுறை அவன் தனது புஷ்பக விமானத்தில் ஏறி வடதிசை நோக்கிச் சென்றுகொண்டிருந்தான். ஓர் இடத்தில் விமானம் மேலே செல்லமுடியாமல் அப்படியே நின்றுவிட்டது. காரணம் புரியாமல் திகைத்த ராவணன் விமானத்தைவிட்டுக் கீழே இறங்கினான்.

அவனுக்கு எதிரில் தோன்றிய நந்திதேவர், ‘`ராவணா, எல்லா உயிர்களுக்கும் இறைவனாகிய சிவபெருமான் உறைகின்ற கயிலை மலையின் எதிரில் நீ நின்றுகொண்டிருக்கிறாய். தான் என்னும் அகந்தை கொண்ட உன்னால் இந்த மலையைத் தாண்டிச் செல்ல இயலாது. எனவே, நீ மலையைச் சுற்றிக்கொண்டு பறந்து போ’’ என்றார்.

தானே மிகச் சிறந்த சிவபக்தன் என்ற ஆணவத்தில், ‘`குரங்கினைப்போல் தோன்றும் நீயா என்னைத் தடுத்து நிறுத்துவது? சிறந்த சிவபக்தனான என் பராக்கிரமம் உனக்குத் தெரியாது. என்னை இழித்துப் பேசிய நீ யார்?’’ என்று கேட்டான்.
‘`ராவணா, என்னைக் குரங்கு என்று நீ இகழ்ந்து பேசியதால், நீயும் உன் இலங்கை நகரமும் அழிந்து போவதற்கு ஒரு குரங்குதான் காரணமாக இருக்கும்’’ என்று சாபம் கொடுத்தார்.

இதனால் மேலும் கோபம்கொண்ட ராவணன், தான் அனுதினமும் வழிபடும் ஈசன் உறையும் மலை என்றும் பாராமல், ‘`இந்த மலையையே நான் தூக்கிக்கொண்டு செல்கிறேன் பார்’’ என்று சபதம் செய்தவனாக, அந்த மலையை அடியோடு பெயர்த்தெடுக்க தன் ஒரு கையை மலையின் அடியில் கொடுத்து தூக்கத் தொடங்கினான்.

அவ்வளவுதான். இமயமே பூகம்பம் வந்ததுபோல் ஆடியது. அன்னை உமையவளே ஆடிப்போய்விட்டாள். இதைக்கண்ட சிவ பெருமான், தன்னுடைய பரம பக்தனாக இருந்தாலும், ராவணனின் அகந்தையை அடக்கத் நினைத்தார். தன் வலக்கால் பெருவிரலால் மலையின்மீது ஓர் அழுத்து அழுத்தினார். கயிலைச் சம நிலைக்கு வந்தது. ஆனால், சிவபெருமானின் கால் கட்டை விரல் வலிமைக்குக்கூட ஈடுகொடுக்க மாட்டாத ராவணன், மலையின் அடியில் சிக்கிக் கொண்டு வலி ஏற்படுத்திய துன்பம் தாங்க முடியாமல் கதறினான். இப்படியே அவனுடைய துன்ப நிலை ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்தது. அதன் பிறகே தான் இழைத்த பெரும் பிழையை உணர்ந்துகொண்ட ராவணன், தன் பத்து தலைகளில் ஒரு தலையைக் கிள்ளிக் குடமாக்கி, ஒரு கையைத் துண்டாக்கி, அதன் நரம்பை வீணைத் தந்தியாகக்கொண்டு இனிய இசையைச் சாமகானமாகப் பொழிந்தான். சாமகான பிரியரான ஈசனை சாமகானம் இசைத்தே வசப்படுத்திவிட்டான், வீணைக்கொடியுடை வேந்தனான ராவணன். ஆம், அவனுடைய சாமகான இசையில் மயங்கிய சிவபெருமான் ராவணனை மன்னித்து விடுவித்தார். அவனுடைய இசைக்குப் பரிசாக சந்திரஹாசம் என்னும் ஒளி பொருந்திய வாளையும் அளித்தார்.      


சிவபெருமானின் அருளைப்பெற்ற ராவணன், ‘`ஐயனே, என் அகந்தை அடக்கி ஆட்கொண்ட பரமனே! நான் பாட, அதற்கேற்ப தாங்கள் திருநடனம் ஆடும் காட்சியை நான் தரிசிக்க வேண்டும்’’ என்று பிரார்த்தித்தான். ஐயனும் இசைவு தெரிவித்தார். மனம்மகிழ்ந்த ராவணன், ‘மஹா பரமேஸ்வரனின் தலைவழியே சிந்தும் புனித கங்கை பூமியைப் புனிதமாக்குகிறாள். அந்த புனித பூமியில் சிவன் ஆனந்தமயமான நாட்டியம் ஆடுகிறார். அப்போது அவரது கழுத்தில் உள்ள ராஜநாகம் மாலை போல சுழல்கிறது. சிவனின் கையில் இருக்கும் உடுக்கை எழுப்பும் `டமட் டமட் டமட்' என்ற நாதத்தின் ஓசைக்கேற்ப ஈசனின் சகார சண்ட தாண்டவம் ஆடப்படுகிறது’ என்ற கருத்துடன் தொடங்கும் பாடலைப் பாட, அதன் தாளகதிக்கு ஏற்ப, சிவபெருமான் ‘பஞ்ச சகார சண்ட தாண்டவம்' ஆடினார். ராவணன் பாடிய சிவதாண்டவ ஸ்தோத்திரப் பாடல்களை எவரொருவர் பக்தியுடன் பாடுகிறாரோ அவருக்கு சிவபெருமானின் அருளால் அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

ராவணன் பாடிய சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தின் கருத்துரை இங்கே உங்களுக்காக...

1. சிவன் ஆனந்தமயமான நாட்டியம் ஆடுகிறார். அப்போது அவரது கழுத்தில் உள்ள ராஜநாகம் மாலை போல சுழல்கிறது. சிவனின் கையில் இருக்கும் உடுக்கை எழுப்பும் `டமட் டமட் டமட்' என்ற நாதத்தின் ஓசைக்கேற்ப ஈசனின் சகார சண்ட தாண்டவம் ஆடப்படுகிறது.

2. சிவனின் நீண்ட ஜடாமுடியும், கங்கையும் சிதறி வீச,நெற்றி பிரகாசமாக ஜொலிக்கிறது. கொண்டை முடியில் சூடிய பிறை தகதகவென ஜொலிக்க, சிவன் ஆனந்த தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறார்.

3. பார்வதியை இடபாகமாகக்கொண்டு, உலகைக் காக்க திருவிளையாடல் புரிகிறான் ஈசன். பற்றில்லாத ஞானியான ஈசன், அவனைத் தொழும் பக்தர்களிடம் திருவிளையாடல் புரிய ஆடுகிறார்.

4. ஆடும் பரமனின் கழுத்து நாகங்கள் வெளியிடும் மாணிக்கங்களின் ஒளியில் திசைகள் அனைத்தும் சிவந்து பவளம் போல ஜொலிஜொலிக்கிறது. யானையின் தோலாலான ஈசனின் மேலாடை பெரும் ஒளியோடு அசைந்தாடுகிறது. ஈசனின் நடனத்தைக் காணும் என் உள்ளம் ஆனந்த வெள்ளத்தில் மிதக்கிறது.

5. இந்திரனும், தேவர்களும் ஈசனின் அருள் வேண்டி வணங்குகிறார்கள். ஈசனின் திருப்பாத துளி அவர்களுக்கு அருளை வாரி வழங்குகிறது. அள்ளி முடிந்த ஈசனின் திருமுடியை ராஜ நாகத்தால் கட்டி, அதன்மீது சந்திரனைச் சூடியுள்ளார். அது அவர் அருள்போன்ற தூய ஒளியைச் சிந்திக்கொண்டிருக்கிறது.

6. ஈசனின் நெற்றிக்கண் நெருப்பால் மன்மதனின்  ஐந்து மலர்க்கணைகளையும் எரித்து, காமனையும் எரித்து சாம்பலாக்கினார். நிலவைச் சூடியிருக்கும் மஹா கபாலியின் ஜடாமுடியிலிருந்து, நாம் அனைவரும் சகல செல்வ சுகங்களையும் பெற்று வாழ்வோமாக.

7. சிவனே அனைத்து படைப்புகளையும் உருவாக்கும் ஒரே சிற்பியாக  இருக்கிறார். மூலப் பெருமானின் இந்த தாண்டவத்தால் என் இதயம்  மகிழ்ச்சிக் கொள்கிறது.

8.
விஷத்தைத் தன் கண்டத்தில்  வைத்துள்ளவரே! கங்கையைச் சடையில் தாங்கியவரே! அண்ட சராசரங்களை காப்பவரே! அனைவரையும் காப்பாயாக.
9.
திரிபுரங்களை அழித்தவரே! ஆணவ தட்சனின் யாகத்தை வீழ்த்தியவரே! கஜாசூரனை ஒழித்தவரே! அந்தகன் எனும் அசுரனை வீழ்த்தியவரே!  அறியாமையை அழித்து எங்களைக் காக்கும் சிவனே! உன்னை வணங்குகிறேன்.

10. எம்பெருமான் நாட்டியத்தில் பெருக்கெடுக்கும் அமுதம் பொங்கி வழிந்து, அவரால்  உருவாக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளையும் மகிழ்விக்கிறது. காலனைத் தண்டித்த கருணா மூர்த்தியே! உன்னைப் பாடித் தொழுகிறேன், அருள்புரி.

11. ஈசனின் நெற்றிக்கண், பலிபீடம் போல் ஜொலிக் கிறது. மிருதங்கமானது `டிமிட் டிமிட் டிமிட்' என்று ஒலித்துக்கொண்டிருக்க... அந்தத் தாள லயத்தோடு சேர்ந்து, நடராஜனான சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறார்.

12. ஈசனே! எப்போது சுகமுள்ள மெத்தையையும், கட்டாந்தரையையும் ஒன்றே என்று உணரப் போகிறேன்? எப்போது நவரத்தினத்தால் செய்யப்பட்ட அணியையும்  குப்பைகூளத்தையும் ஒன்றென எண்ணி உணரப் போகிறேன்? ஈசனே! எப்போது புல்லைப்போன்ற சாதாரணக் கண்களையும், தாமரையைப் போன்ற அழகிய கண்களையும் ஒன்றாக எண்ணப் போகிறேன்? எப்போது சாதாரண ஜனத்தையும், அரசனையும் ஒன்றாகவே எண்ணி  உணரப் போகிறேன்? ஈசனே என்று நான் சதாசிவனையே எதிலும் கண்டு இன்புறும் நாள் வருமோ?

13.
சதாசிவனே! எப்போது உன் குகையினை வந்தடைந்தடைய இருக்கிறேன்? சகல தீய எண்ணங்கள் எல்லாம் நீங்கி, இரு கரங்களையும் சிரசின் மேல் தூக்கி உன்னை வணங்கிப் போற்றும் நாள் எப்போது வருமோ?  திருநீற்றோடு சிவ நாமத்தை சொல்லியபடி, ஆனந்தம் பொங்க உன்னில் நான் கலந்திடும் காலம் என்றுதான் வருமோ?

14. எல்லா செல்வங்களைவிடவும் மேலான இந்தப் பாடல்களை அனுதினமும் உள்ளத்தூய்மையோடு பாடித் துதிப்பவர்களுக்கு ஈஸ்வரனே குருவாக வந்து அருளுவான். இந்தப் பாடலை தவிர ஈசனை அடைய சிறந்த வழி இல்லை. இந்தப் பாடல்களைத் தியானிப்பவர்களின் அறியாமையை நீக்கி ஈசன் நிச்சயம் அருள்புரிவார்.

15.
தினமும் சிவனை எண்ணி வழிபடும் நேரத்தில், பத்து தலைகளைக்கொண்ட ராவணனின் இந்தப் பாடலைப் பாடி, துதி செய்பவர்களுக்கும் பிரதோஷ காலங்களில் இதைப் பாடி, சிவ சிந்தனையில் நிலைத்திருப்பவர்களுக்கும் ஈசன் சகல செல்வங் களையும் தந்து அருளுவார். இதைப் பாடும் அன்பர்களுக்கு  லட்சுமி தேவியும் இன்முகம் காட்டி அருள்புரிவார். மஹா தேவனும் மனமகிழ்ச்சியோடு வேண்டியதைக் கொடுப்பார். இது நிச்சயம்.

Comments