பிணிகள் தீர்க்கும் ரட்சை தீர்த்தம்!

டைக்கும் திறனை இழந்திருந்த பிரம்மதேவர், தன்னுடைய படைக்கும் திறனை மீண்டும் பெற்ற தலம், ‘தன் தந்தை சம்ஹாரம் செய்யப்படுவதற்குத் தானே காரணமாகிவிட்டோமே’ என்று சித்தப்பிரமை பிடித்ததுபோல் இருந்த பிரகலாதனின் சித்த பிரமையைப் போக்கிய திருத்தலம், மகாபலி சக்கரவர்த்திக்கு சிரஞ்ஜீவித்துவம் அருளிய திருத்தலம், ‘சீரார் வடுவூர்  சிவற்கொரு நந்தா விளக்கு’ என்று திருஞான சம்பந்தப் பெருமான் போற்றிப் பாடிய ஐயன் ஸ்ரீநடனபாதேஸ்வரர் அருளும் திருத்தலம்... இப்படி பல பெருமைகளுக்குரியது திருகண்டேஸ்வரம்.  
கடலூர் - பண்ருட்டி சாலையில் கடலூரிலிருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் திருகண்டேஸ்வரம் உள்ளது. 2-ம் ராஜேந்திர சோழன் காலத்தில், ‘திருவடுகூர் சோழ வளநாடு’, விக்கிரம சோழன் காலத்தில், ‘ராசராச வளநாடு’, ‘சோழகுலவல்லி’, ‘நல்லூர்’ என்றெல்லாம் அழைக்கப்பெற்ற திருகண்டேஸ்வரம் திருக்கோயில் சுமார் 1600 ஆண்டுகள் பழைமையானது என்றும் பிற்காலச் சோழர்களாலும் பாண்டியர்களாலும் திருப் பணிகள் செய்யப்பட்டது என்றும் கல்வெட்டுச் செய்திகள் மூலம் தெரியவருகிறது.

இந்தக் கோயிலில் ஈசான்ய மூலையில் சந்நிதி கொண்டருள்கிறார் ஸ்ரீஆனந்த பைரவர். பிரம்மதேவன் படைப்புத் திறனை மீண்டும் பெறுவதற்கு அருள்பாலித்த மூர்த்தி இவர்தான் என்கிறார்கள். இந்தப் பைரவருக்குத் தேய்பிறை அஷ்டமியில் திராட்சைச் சாறு, மாதுளம் சாறு மற்றும் தேன் நைவேத்தியம் செய்து வழிபட்டால் கண்திருஷ்டி விலகும், திருமணத் தடை நீங்கி நல்ல வரன் அமையும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. அதேபோல், கொடுத்த கடன் திரும்பாவிட்டால், அஷ்டமி நாளில் இங்கு வந்து பைரவரை வழிபட்டால், வாராக் கடன்கள் வசூலாகும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே நிலவுகிறது.

அடுத்தபடியாக பைரவரின் சந்நிதியில் பிரசாதமாக வழங்கப்படும் ரட்சை தீர்த்தம் மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது. வெட்டிவேர், விளாமிச்சைவேர், நன்னாரி வேர், பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, பன்னீர், கோரக்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், ரோஜா மொட்டு, செண்பகம் மொட்டு, மிராட்டி மொட்டு, பேரீச்சங்காய் ஆகியவை சேர்த்து ஆகம முறைப்படி தயாரிக்கப்படும் தீர்த்தம் ஆனந்த பைரவருக்கு நைவேத்தியம் செய்யப்படுகிறது. இந்தப் பிரசாத தீர்த்தத்தைப் பருகினால், உடற்பிணிகள் அனைத்தும் நீங்கிவிடுவதாக ஐதீகம்.

கோயிலில் நடைபெறும் திருவிழாக்கள் பற்றி கோயில் அர்ச்சகர் சேனாபதி குருக்களிடம் கேட்டோம். ‘`ஆனி மாதம் ஆயில்யம் தொடங்கி, கேட்டை வரை பத்து நாள்களும், ஆடி மாதம் பரணி தொடங்கி, பூரம் முடிய பத்து நாள்களும் திருவிழா நடைபெறுகிறது. பைரவர் வீதி உலா வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்’’ என்றார்.

தம்மைத் தரிசிக்கும் பக்தர்கள் அனைவருக் கும் ஆனந்தம் அருள்வதற்காகவே ஆனந்த பைரவர் என்னும் திருப்பெயருடன் திகழும் இந்த பைரவ மூர்த்தியை நாமும் தரிசித்து, அருள் பெற்று மகிழ்வோம். 

Comments