பக்திக்கு மிஞ்சிய பரிகாரம் இல்லை'

இன்பத்தை கண்டால் மகிழ்ச்சியடையும் மனம், துன்பத்தைக் கண்டால் வாடி விடுகிறது. மனிதனுக்கு ஏன் துன்பம் உண்டாகிறது என்பது குறித்து, பாரததேசத்தை ஆண்ட போஜ மகாராஜன் தனது நீதி நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அதில்,""ஒருவன் தவறாமல் முன்னோர் வழிபாடு செய்யாவிட்டால் அவனை துன்பம் விரட்டும். இது தவிர, தெய்வ நிந்தனை செய்வது, ஒற்றுமையாக இருக்கும் கணவன் மனைவியைப் பிரிப்பது, கோள் சொல்லி குடும்ப ஒற்றுமையைக் குலைப்பது, வாயில்லா ஜீவன்களைத் துன்புறுத்துவது போன்ற பாவங்களை எந்தப் பிறவியில் செய்திருந்தாலும், அது விரட்டி வந்து துன்பத்தைத் தரும்,'' என்று சொல்லியிருக்கிறார்.

ஆனால், பாவம் செய்யாத மனிதர் யார் இருக்கிறார்கள்? ஏதோ, ஒரு பாவத்தை செய்து தொலைத்ததால் தான், இப்போது கஷ்டம் நம்மை வாட்டுகிறது. இவ்வாறு, அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களால், கிடைத்து வரும் தண்டனையில் இருந்து விடுபட லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும். "பக்திக்கு மிஞ்சிய பரிகாரம் இல்லை' என்ற முழுமையான நம்பிக்கையுடன், நரசிம்மரின் திருவடிகளில் சரணாகதி அடைவது, தண்டனையில் இருந்து விடுதலை தரும்.

தன்னை நம்பிச் சரணடைந்தவர் யாராக இருந்தாலும், அந்த விநாடியே ஏற்று அருளும் தாயுள்ளம் படைத்தவர் அவர். அவரது படத்தை, பூஜை அறையில் கிழக்கு நோக்கி வையுங்கள்.



தினமும் நீராடிய பின், "நரசிம்ம பிரபத்தி' ஸ்லோகத்தை 3,12,24,48 என உங்களுக்கு வசதிப்படும் அளவுக்கு பாராயணம் செய்யுங்கள்.

அஹோபில மடத்தின் 44வது பட்டமாக வீற்றிருந்த அழகிய சிங்கர் முக்கூர் சுவாமிகளால் அருளப்பட்ட மந்திரம் இது. இந்த ஸ்லோகத்தைச் சொல்லும்போது, லட்சுமி நரசிம்மரின் முன் விளக்கேற்றி, காய்ச்சி ஆற வைத்த பசும்பால் அல்லது பானகம் நைவேத்யம் செய்ய வேண்டும். இப்பிரசாதத்தை குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு வரவேண்டும். கைமேல் பலனளிக்கும் சக்தி வாய்ந்த ஸ்லோகம் இது.

48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடியபின் நரசிம்மர் கோயிலில் சுவாமிக்கு நெய்தீபம் ஏற்றி துளசிமாலை சாத்தி வழிபட வேண்டும். கடன், நோய், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு, வேலையில் இடைஞ்சல் இன்னும் எந்த வித கோரிக்கைக்காகவும் இந்த பிரபத்தியைச் சொல்லலாம்.
பால், பானகம் வைக்க வசதிப்படாதவர்கள் தண்ணீரை வைத்தாலே போதும். நரசிம்மர் மனம் உவந்து ஏற்பார்.

Comments