தம்பால் இரட்டை சிவாலயம்

தம்பால் - தொட்டபசவர் கோவில் சிவனைப் பற்றிய நினைவு ஒருவருக்கு வந்தால் உடனே நந்தியம்பெருமானின் தோற்றமும் மனதில் எழுவதை தவிர்க்கவே இயலாது.
அந்த அளவுக்கு ஈஸ்வரனோடு இணைபிரியாத நிலையில் இருப்பவர் நந்திதேவர். சிவபெருமானை தரிசிப்பதையே தனது உயிர் மூச்சாகக் கொண்டவர் நந்திதேவர். இன்னொரு வகையில் சதா நிருத்தம் செய்யம் சர்வேஸ்வரன், சற்று ஏகாந்தமாக ஊஞ்சலில் அமரும் சமயத்தில், நந்தியின் மூச்சுக் காற்றே அந்த ஊஞ்சலைத் தொடர்ந்து ஆடச் செய்வதாக ஒரு கூற்றும் .ண்டு.
கயிலையின் காவலன், தர்மத்தின் அவதாரம், ஈசனின் நேசன் என்றெல்லாம் போற்றப்படும் நந்திதேவருக்க மேலும் பெருமை சேர்ப்பதுபோல் அமைந்த தலம். தொட்டபசவர் ஆலயம். இறைவன் அருளும் தலங்கள் எல்லாம், அவரது பெயராலேயே அழைக்கப்படுவது மரபு. ஆனால் இங்கோ நந்திதேவரின் பெயரால், தொட்ட பசவர் கோயில் என்றே இத்தலம் அழைக்கப்படுவது சிறப்பு. தொட்ட என்றால் பெரிய. பசவா என்றால் நந்தி. தொட்ட பசவா - பெரிய நந்தி.
இங்கே ஏன் நந்தியைப் பெரிதாக அமைத்தார்கள்? என்பதற்கு காரணம் தெரியவில்லை. ஆனால், இந்த நந்தியை பார்க்கும்போது புராணத்தில் உள்ள ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஒரு சமயம் சிவபெருமான் அசுரர்களுடனான போருக்குச் சென்ற போது, திருமால் தாமே காளை வடிவம் பூண்டு அவரை தாங்கிச் சென்றாராம். விண்தொட்டு விஸ்வரூபம் எடுக்க வல்லவரான விஷ்ணு, நந்தி வடிவம் எடுத்தார் என்றால், சாதாரணமாகவா எடுத்திருப்பார்? அதுவும் பேருருவாகத்தானே இருந்திருக்கும் அதைத்தான் இத்தலத்து நந்தி நினைவூட்டுகிறதோ! என்று நினைக்கத் தோன்றுகிறது.
கோயிலை நெருங்கும்போதே அதன் வனப்பு நம்மைத் திகைத்து நிற்க வைத்து விடுகிறது. தொலைவில் இருந்து பார்க்கும்போது பிரமிக்கச் செய்யும் தேற்றத்தை அப்படியே பார்வையால் பருகி, மனத் திரையில் பதித்துக் கொள்வதற்காக, தூரத்திலேயே சில நிமிடங்கள் நின்று விடுவீர்கள். தரையிலிருந்தே தொடங்கி விடுகிறது இக்கோயிலின் விமானம். வேலவனின் வேல், ஞானத்தின் அடையாளம். அது கீழே பருத்து மேலே செல்லச் செல்ல கூர்மையாகத் தேற்றம் அளிக்கும். அது போலவே இந்தக் கோயிலின் விமானம் கீழே அகலமாகவும், மேலே செல்லச் செல்ல குறுகி வித்தியாசமாகத் தேற்றமளிக்கிறது. நட்சத்திர வடிவில் அமைந்திரக்கும் கருவறையின் வெளிப்புறம் கண்களைக் கட்டிப் போடுகிறது.
முக மண்டபம் அர்த்த மண்டபம் நவரங்கா மற்றும் கருவறை என்ற வடிவமைப்பில் கோயில் அமைந்துள்ளது. கருவறை வாயிலில் உள்ள நிலைக்கதவு நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் எழிலாக அமைக்கப் பட்டுள்ளது. முழுதும் கல்லாலான கதவின் சட்டம், சாளுக்கியரின் திறமைக்கு மற்றும் ஒரு சான்று.
கிழக்கு மற்றும் தெற்கு திசையில் வாயில்கள் உள்ளன. கிழக்குப் பகுதியின் முக மண்டபத்தில் தரிசனம் தரும் நந்தி தேவர், இந்தக் கோயிலுக்குத் தன் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது என்ற கர்வம் சிறிதும் இன்றி, கலை அழகுடன் காட்சியளிக்கிறார். ஒட்டு மொத்த அழகையும் ஒன்று திரட்டிச் செய்தாற்போன்ற அவரது தோற்றத்தைக் காணும்போது இறைவனின் அருளால் இத்துணை அழகாக அவரை உருவாக்கிய சிற்பியையும் கை தொழ வைக்கிறது.
கட்டத்தைத் தாங்கி நிற்பவைதான் தூண்கள் என்ற எண்ணத்தை மாற்றி, கலை அழகைத் தாங்கி அதன் அழகை இன்னும் சற்று நேரம் பார்க்கலாமே என்று ஏங்கி நிற்க வைப்பவையாக காட்சியளிக்கின்றன இங்குள்ள தூண்கள். சிறிது நவரங்காவில் காணப்படும் வட்ட வடிவ தூண்கள் ஹொய்சாளர் பாணியை நினைவூட்டுகின்றன.
கருவறையில் லிங்க ரூபத்தில் மகாதேவர் தரிசனம் தருகிறார். எத்தனையோ நூற்றாண்டுகளாக எண்ணற்றோர் தரிசனம் செய்த பரமேஸ்வரனைக் காணும் பாக்கியத்தினை நானும் பெற்றேன் என்று எண்ணும்போது மனம் நெகிழ்கிறது ஆண்டுதோறும் சிவராத்திரி இங்கே விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
நந்தி ஆராதித்த நடேசனை நமஸ்கரித்து விட்டுக் கொஞ்சம் நகர்ந்து சென்றால், பக்கத்திலேயே அமைந்திருக்கிறது இன்னொரு கோயில்.

தம்பால் - சோமேஸ்வரர் திருக்கோயில்
சதா சிவ தரிசனம் செய்து கொண்டிருப்பவர் நந்தி என்றால், எப்போதும் சிவபெருமானின் திருமேனியிலேயே தரிக்கப்பட்டிருக்கும் பேறினைப் பெற்றவர், சந்திரன்.
சிவபெருமானுடைய ஆயிரம் திருப்பெயர்களுள் சோமசுந்தரன், சோமேஸ்வரன், பிறைசூடன், சந்திர சேகரன் என்பவை எல்லாம் பிறைமதியாக கறைகண்டன் சிரத்தினில் நிலவு இடம் பெற்றிருக்கும் காரணத்தினால் ஏற்பட்ட பெயர்களே. சந்திரனுக்கு அருள்பாலித்த சங்கரன், சோமேஸ்வரர் என்ற பெயரோடு ஆட்சி செய்யும் கோயில், தொட்ட பசவர் ஆலயத்தின் அருகே அமைந்துள்ளது.
சிறந்த சிவபக்தனான மன்னன் நான்காம் சோமேஸ்வரனின் மனைவி, இக்கோயிலைக் கட்டியதாகத் தெரிகிறது. கருவறை, சுகனாசி, விசாலமான மூன்று புறமும் திறந்த வெளி முக மண்டபம் என்ற அமைப்புடன் காணப்படுகிறது கலையம்சம் மிகுந்த தூண்கள் நம்மைத் தன்னிலை மறந்து வியந்த ரசிக்கச் செய்கிறன்றன.
கருவறையில் லிங்க ரூப சோமேஸ்வரர் தரிசனம் கிடைக்கிறது ஒரு கால பூஜை நடைபெறுகிறது. சிவராத்திரி அன்று பூஜை நடைபெறுகிறது. சிவராத்திரி அன்று பக்தர்கள் கூடி வணங்குகிறார்கள்.
இவ்விரு ஆலயங்களும் தம்பால் என்ற இடத்தில், ஊர்க் கோடியில் அமைந்துள்ளன. ஒரு காலத்தில் ஊரே கூடி வணங்கிய கோயில்கள் இவை. இன்று உள்ளூர் வாசிகள் ஒருசிலர் மட்டுமே தினமும் வந்து செல்கிறார்கள்.
ஏராளமான வெளிநாட்டுப் பயணிகள் இக்கோயில்களின் கலையழகும், கடவுள் அழகும் உணர்ந்து பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவு கடந்து இங்கே வந்து ரசித்து வணங்கிச் செல்வதைப் பார்க்கும்போது பக்கத்து ஊரில் உள்ளவர்கள்கூட இதுபோன்ற தங்களின் பாரம்பரியம், பக்தி அதிர்வு, கலை அழகினை உணராமல் இருக்கினறனரே என்ற எண்ணம் மனதுள் தோன்றி வருந்தச் செய்கிறது. மண்ணின் பெருமையும் மகேசனின் கருணையும் உணர்ந்து இனியாவது நம்நாட்டுக் கோயில்களை நாம் புறக்கணிக்காமல் போற்றினால் பாரதத்தின் பெருமை பார் உள்ளவரை நிலைக்கும்.

எங்கே இருக்கு
: கர்நாடகாவில் ஹூப்ளியிலிருந்து 80 கி.மீ. தொலைவில் தம்பால் உள்ளது. பெங்களூருவிலிருந்து 372 கி.மீ.

Comments