கும்பாபிஷேகம் தெரிங்சுக்க சில விஷயங்கள்!

கோயில் கும்பாபிஷேகம் நிறைய பார்த்திருப்பீர்கள், கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் கும்பாபிஷேகம் என்பது என்ன, அதில் என்னென்ன பூஜை செய்கிறார்கள் என்பது பலருக்கு தெரிந்திருக்காது.

அதைப் பற்றி ஒரு சிறு விளக்கம் இங்கே...
கும்பாபிஷேகத்தில் வகைகள்:
* ஆவர்த்தனம் - ஓரிடத்தில் புதிதாக ஆலயம் அமைத்து பிரதிஷ்டை செய்யப்படும் மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.
* அனாவர்த்தம் - பூஜை இல்லாமலும் ஆறு, கடல் இவற்றால் சிதிலமடைந்திருந்தாலும் அக்கோயிலைப் புதிதாக நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்வது.
* பணராவர்த்தம் - கருவறை, பிராகாரம், கோபுரம் முதலியன பழுதுபட்டிருந்தால் பாலாலயம் செய்து அவற்றைப் புதுப்பித்து அஷ்டபந்தனம் சாத்தி மீண்டும் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வது.
* அந்தரிதம் - கோயிலுள் ஏதேனும் தகாதன நேர்ந்துவிடின் அதன் பொருட்டு செய்யப்படும் சாந்தி.

கும்பாபிஷேகத்தின்போது விக்ரக பிரதிஷ்டையில் மேற்கொள்ளப்படும் சில முக்கியமான விஷயங்கள்:
* அனுக்ஞை (அனுமதி வாங்குதல்) - செயல்களைச் செய்யும் ஆற்றல்மிக்க ஓர் ஆசாரியனைத் தேர்ந்தெடுத்து இச்செயலை செய்வதற்கு இறைவனிடம் அனுமதி பெற்று நியமனம் செய்தல்.
* சங்கல்பம் - இளைவனிடத்தில் நமது தேவைகளை கோரிக்கையாக வைத்தல்.
* பாத்திர பூஜை - இறைவனுக்காக செய்யப்படும் பூஜைக்குண்டான பூஜை பாத்திரஙகளை சுத்தம் செய்யும் பொருட்டு அந்தந்த பாத்திரங்களுக்குரிய தேவதைகளை பூஜை செய்தல்.
* கணபதி பூஜை - செயல் இனிது நிறைவேற கணபதியை வழிபடுதல்.
* வருண பூஜை - அவ்விடத்தை சுத்தம் செய்யும் பொருட்டு வருண பகவானையும் சப்த நதி தேவதைகளையும் வழிபடுதல்.
* பஞ்ச கவ்யம் - ஆத்ம சுத்தி செய்யும் பொருட்டு பசு மூலமாகக் கிடைக்கும் பால், தயிர், நெய், பசுநீர், பசுசாணம் முதலியவற்றை வைத்து செய்யப்படும் கிரியை.
* வாஸ்து சாந்தி - தேவர்களை வழிபட்டு கும்பாபிஷேகம் எவ்வித இடையூறுமின்றி இனிது நிறைவேற; செயலுக்கும் செய்பவர்களுக்கும் இடையூறு வராதபடி காக்கச் செய்யும் செயல்.
* பிரவேச பலி - எட்டுத் திக்கிலும் உள்ள திக்பாலர்களுக்கு உரிய பிரீதி செய்து அவர்களை அந்தந்த இடத்தில் இருக்கச் செய்தல் (துர்தேவதைகளை வர விடாமல் காக்கும் பொருட்டு)
* மிருத்சங்கிரஹணம் (மண் எடுத்தல்) - அஷ்ட திக்பாலரிடம் அனுமதி பெற்று சுத்தமான இடத்திலிருந்து மண் எடுத்து அப்பள்ளத்தில் அபிஷேகம் செய்தல். (ஆலயம் நிர்மாணம் செய்ய பூமித் தாயான பூமாதேவியை கஷ்டப்படுத்தினதன் காரணமாக பூமாதேவியை மகிழ்விக்கச் செய்யப்படும் கிரியை)
* அங்குரார்ப்பணம் (முளையிடுதல்) - எடுத்த மண்ணை பாலிகைகளில் விதைகளையிட்டு முளை வளரச் செய்தல். இதில் பன்னிரு சூர்யர்களான வைகர்த்தன், விவஸ்வதன், மார்த்தாண்டன், பாஸ்கரன், ரவி, லோகப்பிரகாசன், லோகசாட்சி, திரிவிக்ரமன், ஆதித்யன், சூரியன், அம்சுமாலி, திவாகரன் போனறவர்களையும் சந்திரனையும் வழிபடுதல்.
* ரக்ஷாபந்தனம் (காப்புக்கட்டுதல்) - கிரியைகளைச் செய்யும் ஆசாரியனுக்கும், செய்யும் கர்த்தாவுக்கும் எவ்வித இடையூறும் வராதபடி காத்தற் பொருட்டு அவன் கையில் மந்திரப் பூர்வமாகக் காப்பு (கயிறு) கட்டுதல்.
* கும்பலங்காரம் - கும்பங்களை (கலசம்) இறைவன் உடம்பாக பாவித்து அலங்காரம் செய்தல்.
* கலசாக்ர்ஷ்ணம் - (சக்தி அழைத்தல்) விக்ரஹத்தில் இருக்கும் சக்தியை கும்பத்திற்கு மந்திரபூர்வமாக அழைத்தல்.
* யாகசாலை பிரவேசம் - கலசங்களை யாகசாலைக்கு எடுத்து வருதல்.
* சூரிய, சோம பூஜை - யாகசாலையில் சூரியன், சந்திரனை வழிபடுதல்.
* மண்டல பூஜை - அமைக்கப்பட்டிருக்கும் யாகசாலையை பூஜை செய்தல்.
* பிம்ப சுத்தி - விக்ரகங்களை மந்திரபூர்வமாக சுத்தம் செய்தல்.
* நாடி சந்தானம் - யாகசாலை இடத்திற்கும் மூலத் திருமேனிக்கும் தர்ப்பைக் கயிறு, தங்கக்கம்பி, வௌ்ளிக் கம்பி அல்லது பட்டுக் கயிறு இவற்றால் இணைப்பு ஏற்படுத்துதல், (இறைவனின் சக்தியில் ஒரு பகுதியை இநத இணைப்பு மூலமாக விக்ரகங்களுக்குக் கொண்டு சேர்த்தல்)
* விசேஷ சாந்தி - முப்பத்தாறு தத்துவ தேவதைகளுக்கும் அர்க்யம் தருவது. உலகத்தில் உள்ள அனைத்து ஆத்மா பித்ரு்களுக்கு அர்க்யம் தருவது.
* பூத சுத்தி - இந்த பூத (மனித) உடம்பை தெய்வ உடம்பாக மந்திர பூர்வமாக மாற்றி அமைத்தல்.
* ஸ்பர்ஸ ஆஹூதி - முப்பத்தாறு தத்துவங்களை யாகத்திலிருந்து மூல விக்ரகங்களுக்கு கொண்டு சேர்த்தல்.
* அஷ்டபந்தனம் - எட்டு மருந்துப் பொருள்களால் ஆன மருந்து சாந்தினால் மூர்த்தியையும் பீடத்தையும் ஒன்று சேர்த்தல், இதை மருந்து சாத்துதல் என்பர்.
* பூர்ணாஹூதி - யாகத்தைப் பூர்த்தி செய்தல்.
* கும்பாபிஷேகம் (குடமுழுக்கு) - யாகசாலையில் மூர்த்திகளுக்குரியதாக வைத்து பூஜிக்கப்பட்ட குடத்து நீரை அந்தந்த மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்தல். இதனால் அந்த மூர்த்தி அந்த விக்ரகத்தில் எழுந்தருள்கிறார்.
* மஹாபிஷேகம் - கும்பாபிஷேகம் முடிநத பிறகு மூல விக்ரகத்திற்கு முறைப்படி அபிஷேகம் அலங்காரம் செய்தல்.
* மண்டலாபிஷேகம் - பிறந்த குழந்தையாக பாலரூபியாக விக்ரகத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனை 48 நாட்கள் விசேஷ அபிஷேக பூஜைகள் செய்து முழுமையான ஆற்றலை அடையச் செய்வது.

குண்டங்களின் எண்ணிக்கை: ஏக குண்டம் - ஒரு குண்டம் அமைத்தல். பஞ்சாக்னி - ஐந்து குண்டம் அமைத்தல். நவாக்னி - ஒன்பது குண்டம் அமைத்தல். உத்தம பட்சம் - 33 குண்டம் அமைத்தல்.
கும்பாபிஷேகத்திற்கு செய்யப்படும் யாகங்களை எத்தனை தடவை செய்யவேண்டும் என்ற விதிமுறை உள்ளது. 2 காலம், 4 காலம், 8 காலம், 12 காலம் வரை செய்யும் முறை வழக்கத்தில் உள்ளது.

கும்பம்: யோகஜம் என்ற சிவாகமம், கும்பமாகிய குடம் மாமிசமாகும். குடத்திலுள்ள தண்ணீர் ரத்தமாகும். கும்பத்தினுள் போடப்படும் ரத்தினங்கள் சுக்லமாகும், கும்பத்தில் உள்ள தர்ப்பபையினால் செய்யப்பட்ட கூர்ச்சம் நாடியாகும். குடத்தின் மேலே நெருக்கமாகச் சுற்றப்படும் நூல்களே நரம்புகளாகும். கும்பத்தைச் சுற்றி போர்த்திக் கட்டியுள்ள வஸ்திரம் தோல் ஆகும். குடத்தின் மேல் இருக்கும் தேங்காய் சிரசாகவும், முகமாகவும் கூறப்படுகிறது. தேங்காயின் மேலே விரிந்துள்ள தர்ப்பபையினால் செய்யப்பட்ட லம்ப கூர்ச்சம் சிகை (குடுமி) ஆகவும், தேங்காய்க்கு அடியில் போடப்படும் மாவிலைகள் சுவாமியின் ஜடாபாரங்கள், உச்சரிக்கப்படும் மந்திரங்களே பிராணனாகும் என்று கூறுகிறது.

Comments