தம்பதி சமேதராய் ஈசன்

சிவாலயம் என்றாலே பொதுவாக கருவறையில் பரம்பொருளாகிய ஈசனின் சிவலிங்கத்திருமேனிதான் காட்சி தரும். அதோடு அம்பிகைக்கு தனி சன்னிதியும் இருக்கும்.
அபூர்வமாக உமாமகேசுவரியுடன் சிவபெருமான் உருவத்திருமேனியராக எழுந்தருளியுள்ள திருத்தலங்களும் உண்டு. அப்படிப்பட்ட ஆலயங்களுள் திருமலையும் ஒன்று.
முற்காலப் பாண்டிய மன்னர்களின் ஆட்சிக் காலமான கி.பி. எட்டாம் நூற்றாண்டில் திருமலை எனப்படும் ஒரு பெரிய குன்றில் குடைவரைக் கோயில் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இம்மலைக்குத் தென்புறம் உள்ள சிற்றூர் ஒன்றில் மக்கள் வசிக்கின்றனர். தொன்மை பழம் பெருமை வாய்ந்ததாக இம்மலை திகழ்வதால், ஊரும் மலையின் பெயராலேயே திருமலை என்றே அழைக்கப்படுகிறது.
இறைவனும், இறைவியும் தம்பதி சமேதராய் ஒரே கருவறைக்குள், எழுந்தருளியிருக்கும். ஞான சம்பந்தரால் பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் திருத்தலமான திருக்கொடுங்குன்றம் எனும் பிரான் மலை போலவே இத்திருமலையிலும் அத்தகைய தெய்வீகக் காட்சியைக் காண முடிகிறது.
ஓங்கி உயர்ந்து விளங்கும் குன்றின் வடக்குப் பக்கமாக சில படிகளைக் கடந்து மேலே ஏறி வந்தால் கிழக்குப் பார்த்த வண்ணம் உள்ளது கோயில். சாளக்கோபுர வாசல் தாண்டி உள்ளே வந்ததும் உள்ள மண்டபத்தின் தென்பகுதியில் விநாயகர் சந்நதி காணப்படுகிறது. முகமண்டபம் கடந்து உள்ளே போனால் விஸ்தாரமான மகாமண்டபம் தென்படுகிறது. அதன் மையப்பகுதியில் பலிபீடம், நந்தீசுவரரைக் காணமுடிகிறது. மண்டபத்தின் தெற்குப் புறமுள்ள நான்கு படிகளில் ஏறிச் சென்றால் தமிழர்களின் நாகரிகத்திற்கு சிற்பக் கலைத்திறனுக்கும் சான்றாக வளங்கும் வண்ணம் அமைந்த குடைவரை கோயிலைக் காணலாம். கி.பி.எட்டாம் நூற்றாண்டில், முற்காலப் பாண்டியர் காலத்தில் உருவாக்கப்பட்ட கோயில் இது.
பிரதான வாசல் தாண்டியதும், கலை வேலைப்பாடு மிக்க பிரமாண்டமான இரு தூண்கள் அமைந்துள்ளன. முக மண்டபத்தின் தெற்குச் சுவரில் இரண்டு கரங்களுடன் அருளும் சிங்கார வேலனின் நின்ற கோலத் திருவடிவை தரிசிக்கலாம். பாறையிலேயே புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ள முருகன், பெரிய மலர் மாலையுடன் ருத்திராட்ச மாலையும் அணிந்து காட்சி அளிக்கிறான். முருகனின் வலதுபுறம் சேவல் கொடியும், சிறு பூதம் ஒன்றும், இடதுபுறம் அடியார் உருவம் ஒன்றும் காணப்படுகிறது. தலைக்க மேல் குடை கவிழந்த மாதிரியான அமைப்பு உள்ளது. முருகின் திருவடியின் கீழ் ஆடு மற்று் மயில் உருவங்கள் அமைந்துள்ளன. இவ்வுருவங்களுக்கு இடையே மலர்க்கொத்து ஒன்று உள்ளது. முருகனுக்குச் சற்று தள்ளி விநாயகர் சிற்பம் இருக்கிறது.
கருவறையில் அமர்ந்த கோலத்தில் கிழக்குப் பார்த்த வண்ணம் இறைவனும், இறைவியும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் எனும் திருப்பெயரோடு எழுந்தருளியுள்ளன். இறைவன் தனது இடது கரத்தால் அம்பாளின் வலக்கரத்தைப் பற்றியவாறு காட்சிளிப்பது. அபூர்வமான அமைப்பு மேலும் பல்வேறு சிற்பங்களும் அமைந்துள்ள இக்குடைவரைக் கோயில் குன்றத்து நாயனார் கோயில் என்றே அழைக்கப்படுகிறது.
மகாமண்டபத்தின் வடபுறம் அம்பிகை பாகம் பிரியாள் சந்நதி அமைந்துள்ளது. அடுத்து அர்த்த மண்டபம், கருவறை அமைந்துள்ளன. இந்தக் கல்கட்டுமானக் கோயில் பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில், அதாவது கி.பி. தின்மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். அர்த்த மண்டப வாசலில் விநாயகர், பாலதண்டாயுத பாணி சிற்பங்கள் உள்ளன. கருவறையில் மூலவராக ஆவுடைலிங்கேசுவர மூர்த்தியாக மலைக்கொழுந்தீஸ்வரர்.
அடி, தை, புரட்டாசி ஆகிய மாதங்களில் அமாவாசை நாளில் நீத்தார் கடனாக குன்றுக்கு வடபுறம் அமைந்துள்ள சிவபுஷ்கரணியில் தர்ப்பணம் செய்து விட்டு, பின்னர் மலைக் கொழுந்தீஸ்வரருக்கு அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர். தொன்று தொட்டு இத்திருத்தலத்தில் இந்த வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. சுற்று வட்டாரக் கிராமத்தினர் ஏராளமானோர் இந்தத் திருமலை இறைவனை தங்களது குலதெய்வமாகக் கொண்டு வௌ்ளிக் கிழமைகளில் இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.
தேவகோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு துர்க்கை, சண்டிகேசுவரர் சந்நதிகள் காணப்படுகின்றன. மூலவர் விமானம் சுதைக் கட்டுமானம் பிராகாரச் சுற்றில் முக்குறுணி விநாயகர், பன்னிரு கரங்களுடன் திகழும் ஆறுமுகம், காலபைரவர், நவகிரகம், சூரியன், சந்திரன் ஆகிய பரிவார சந்நதிகள் அமைந்துள்ளன. முக்குறுணி விநாயகர் திருமேனியின் பின்புறம் எழிலான அமைப்பு செதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கணபதி சந்நதி வாசலில் ராகு, கேது, மகிஷாசுரமர்த்தினி, சப்தகன்னிமார் ஆகியோரது சிற்பங்கள் உள்ளன.
தல விருட்சமாகத் திகழ்வது, காட்டாத்தி மரம், இக்கோயிலில் ஏராளமான கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கி.பி. 1233ல் இக்கோயிலில் இருந்த ஐந்நூற்றுவன் திருக்காவனம் என்ற மண்டபத்தில், வணிகர்கள் குழு ஒன்று கூடி, பலவகையான அத்தியாவசியப் பொருட்களுக்கும் வரி நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இதே காலத்தில் பஞ்சவன்மாதேவி பெருந்தெருவைச் சேர்ந்த எண்ணெய் வணிகர்கள் இக்கோயிலில் திருவிளக்கு எரிப்பதற்காக தாங்கள் வைத்திருந்த செக்காலை ஒவ்வொன்றில் இருந்தும் குறிப்பிட்ட அளவு எண்ணெய் தானமாக அளித்துள்ளனர் என்பன போன்ற பல விஷயங்களை கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது.
சோழியர் பழங்காசு, வீர பஞ்சணம் காசுகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன. மணப்படை வீட்டைச் சேர்ந்த சகோதரர் இருவர் இக்கோயில் விநாயகரையும், மாணிக்கவாசகரையும் மன்னன் பராக்கிரம பாண்டியன் காலத்தில் பிரதிஷ்டை செய்துள்ளனர். விக்கிரம பாண்டியன் காலத்தில் திருச்சிற்றம்பல பிள்ளையார் நிறுவப் பட்டது.
வடக்கு பிராகாரச் சுற்றில் ஒரு வாசல் அமைந்துள்ளது. பூ, கட்டுவதற்கும், சந்தனம் தயாரிப்பதற்கும் என்றே பிரத்யேகமாக கலைநயமிக்க கல்மேடையும், ஆசனமும், கல்தொட்டியும் பார்ப்போரது கண்ணையும், கருத்தையும் கவர்வது மாதிரி அமைந்துள்ளன.
பௌர்ணமிதோறும் மாலை ஆறு மணியளவில் மலைக் கொழுந்தீசுவரருக்கு சிறபபு அலங்காரம், அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறும். அதனை தொடர்ந்து நூற்றுக் கணக்கான மெய்யடியார்கள் திருமலைக் குன்றைச் சுற்றி கிரிவலம் வந்து வணங்குவர்.
சித்திரை தமிழ் வருடப் பிறப்பு, வைகாசி விசாகம், ஆடி கடைசி வௌ்ளி, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை மகாதீபம், தனுர் மாத 30 நாட்கள் சிறப்பு வழிபாடு, தைப்பொங்கல், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், ஆருத்ரா தரிசனம், நவராத்திரி, தேய்பிறை அஷ்டமி ஆகிய விழாக்கள் ஆண்டு முழுவதும் இங்கே வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.
நோய்களால் பாதிக்கப்பட்டவரகள் தங்கள் பிணி தீர இங்கு வந்து வேண்டிக் கொண்டு, மலைமேல் தங்கள் கோரிக்கையை வெட்டி வைத்துச் செல்லும் வழக்கம் உள்ளது. அவ்வாறுகோரிக்கை வைத்து நிறைவேறியதும், இங்கு குடும்பத்தோடு வந்து முடி காணிக்கை செலுத்தி தங்கள் நேர்த்திக் கடனை முடிக்கின்றனர். அதுபோல, தங்கள் குடும்ப நலனுக்காக கோயில் மடைப்பள்ளியில் அரிசி மற்றும் பணத்தைத் தந்து பிரசாதக் கட்டிகள் தயாரித்து, இறைவனுக்கு நிவேதனம் செய்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கும் வித்தியாசமான பழக்கமும் இங்கே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
வடக்கு கிரிவலப் பாதையில் இரண்டு சுனை தீர்த்தங்கள் உள்ளன. இங்கே திருத்தலத்திற்கு வருபவர்கள் அனைவரும் இந்த சுவைமிக்க சுனை நீரைப் பருகி மகிழ்கின்றனர். மேலும் வழுக்குப் பாறை என்னும் இடத்தில் நான்காயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆதிமக்கள் வரைந்த சுவர் ஓவியங்கள் இன்றும் புதியவை போல் காட்சியளிக்கின்றன. இந்த தேய்பிறை அஷ்டமி நாளன்று கால பைரவருக்கு விசேஷ ஆராதனைகள் நடத்தப்படுகிறது. இங்குள்ள கால பைரவர் ஆயுதம் சூலாயுதத்திற்கு பதில் கதை உள்ளது. மேலும் பைரவர் வாகனமாக இங்கே நாய் இல்லாதது புதுமை.
காமிகா ஆகம விதிப்படி கோயிலில் நித்ய பூஜைப்பணிகள் குறைவர நடத்தப்பட்டு வருகிறது. குடைவரை தெய்வங்களான இறைவனுக்கு வௌ்ளை வஸ்திரமும், அம்பாளுக்கு மஞ்சள் பட்டும் சாத்தி வழிபட்டு வர நினைத்த காரியம் கைகூடும் என்பது இங்கு நாடி வரும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது.

எங்கே இருக்கு: சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடி - மேலூர் நெடுஞ்சாலையில் 5 கி.மீ. தூரத்தில் திருமலை ஊர் அமைந்துள்ளது.

தரிசன நேரம்: காலை 6.30 - 12.30; மாலை 4.30-8.30

Comments