தம்பதியர் ஒற்றுமை காக்கும் ராமர்

கருப்பூர் என்ற பெயரில் தமிழகத்தில் நிறைய ஊர்கள் உள்ளன. அந்த வகையில், பக்கத்து ஊரான கோடாலியை தன்னுடன் இணைத்துக் கொண்டு கோடாலி கருப்பூர் என அழைக்கப்படும் தலம் ஒன்று, கும்பகோணம் அருகே உள்ளது.
இத்தலத்தில் தன் தேவியோடும் இளவலோடும் ராமபிரான் சேவை சாதிக்கும் திருக்கோயில் ஒன்று இருக்கிறது.
ராமநாராயணப் பெருமாள் ஆலயம் என்றழைக்கப்படும் அக்கோயில், கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் மூன்று நிலை ராஜகோபுரம் கம்பீரமாக காட்சி தர, உள்ளே உழைந்ததும் விசாலமான பிராகாரத்தின் நடுவே பீடம், அதை அடுத்து கொடிமரம், கருடாழ்வார் சன்னதி அமைந்துள்ளது.
அதைத் தொடர்ந்து சிறப்பு மண்டபமும் மகா மண்டபமும் உள்ளது. மகாமண்டபத்தின் வலதுபுறம் ஆழ்வார்களின் திருமேனிகள் உள்ளன.
அர்த்த மண்டபத்தை தொடர்ந்துள்ள கருவறையில் சீதாதேவி மற்றும் லட்சுமணருடன் ராமபிரான் சேவை சாதிக்கிறார்.புன்னகை தவழும் திருமுகத்துடன் விளங்கும் ராமபிரானின் கரங்களில் உயரமான வில் மற்றும் அம்புகள் உள்ளன.
மேற்கு பிராகாரத்தில் வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி-பூதேவியுடன் தனி சன்னதியில் சேவை சாதிக்கிறார்.
இங்கு புரட்டாசி சனி, வைகுண்ட ஏகாதசி, ராமநவமி ஆகிய நாட்களில் மூலவருக்கும், தேவியர்களுக்கும், வரதராஜப் பெருமாளுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. தினசரி இரண்டு கால பூஜை உண்டு. தடையை விலக்கி விரைந்து திருமணம் நடைபெற அருள்புரிவதில் இங்குள்ள ஆஞ்சநேயர் வல்லவர் என பக்தர்கள் கூறுகின்றனர்.
ஆஞ்சநேயரிடம் வேண்டிக் கொள்ளும் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் அவருக்கு வடைமாலை சாத்தி, தயிர் சாத பிரசாதத்தை பக்தர்களுக்கு வினியோகம் செய்து மகிழ்கின்றனர்.
மனவேறுபாடுகளால் கவலைப்படும் தம்பதியர் இங்கு வந்து ராமபிரானையும் சீதாதேவியையும் வேண்டிக் கொள்கின்றனர். சில தினங்களிலேயே அவர்களிடையே உள்ள பிணக்கு மறைந்து மனம் மகிழ்ந்து தம்பதிகளாய் வாழத் தொடங்குகிறார்களாம்.
பின்னர் அவர்கள் இங்கு வந்து ராமபிரானுக்கும் சீதாதேவிக்கும் அபிஷேக, ஆராதனைகள் செய்து தங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறார்கள்.
சொத்துப் பிரச்னையால் தனித்து நிற்கும் சகோதரர்களில் யாராவது ஒருவர் இங்கு வந்து ராமபிரான், சீதாதேவி, லட்சுமணன் ஆகியோரை வணங்கி சகோதரர்களின் பிணக்கு தீர்ந்து இருவரும் ஒரு சுமுக முடிவுக்கு வருவது ராமபிரானின் அருளால்தான் என்று பலனடைந்த பக்தர்கள் சிலிர்ப்போடு விவரிக்கின்றனர்.
எங்கே இருக்கு:கும்பகோணம் - அணைக்கரை நெடுஞ்சாலையில் அணைக்கரையிலிருந்து வடமேற்கே 4 கி.மீ. தொலைவில் அரியலூர் மாவட்டத்தில் கோடாலி கருப்பூர் என்ற கிராமத்தில் இந்த ஆலயம் உள்ளது.

தரிசன நேரம்: காலை 7-8; மாலை 5-6

Comments