பஞ்சம் போக்கிய மாரியம்மன்

தமிழ்நாட்டில் மாரியம்மன் கோயில்கள் அதிகமாக உள்ளன. அவற்றுள் பல மிகவும் பழமையானவை, அத்தகைய கோயில்களுள் ஒன்று கோவையில் தென்னமநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில்.
இனி, ஆலய வரலாற்றைப் பார்ப்போம்.
சுதந்திரப் போராட்ட தியாகி தீரன் சின்னமலை நிகழ்த்திய கோயம்புத்தூர் புரட்சி 1800ம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் முறியடிக்கப்பட்டது. அதன் பின் கோவை மாவட்டத்தின் தங்கள் ஆளுகையினை ஸ்திரப்படுத்தினர். 1804ல் கோவை, புதியதாக நிறுவப்பட்ட மாவட்டத்தின் தலைநகராக மாறியது. சிறு கிராமமாக இருந்த கோவன் புதூர் சிறிது சிறிதாக வளர்ச்சி பெற்று 1848ல் நகராட்சியாக உயர்ந்தது.
காங்கயே நாட்டுப் பகுதியில் 1820 முதல் 1830 வரை கடுமையான வறட்சி ஏற்பட்டது. அதனால், பஞ்சமும் பட்டினியும் தலைவிரித்தாட அப்பகுதியில் வசித்து வந்த வேளாண் குடிமக்கள் நிர்வளம் மிக்க மேற்குப் பகுதியை நோக்கி பயணித்தனர்.
வௌ்ளியங்கிரி மலை முதல் பேரூர் வரை காஞ்சிமா நதிக்கரையோரம் நீர்வளம் மிக்க வனாந்திர பகுதியாக விளங்கியது. இப்பகுதியில் சிறு குடியிருப்புகளை அமைத்து பல வருடங்களாக தெலுங்கு பேசும் இனத்தவர்கள் வாழ்ந்து வந்தனர். தென்னம நாயக்கன் என்பவர் அந்தக் குடியிருப்பின் தலைவனாக இருந்தான் எனவே இப்பகுதி பிற்காலத்தில் அவன் பெயரால் தென்னம நல்லூர் என வழங்கப்பட்டது.
உறவுகளுடன் புலம் பெயர்ந்த வேளாண் குடிமக்கள் இப்பகுதியில் குடியேறி விவசயத்தில் ஈடுபட்டு நல்ல ஏற்றம் கண்டனர்.
அந்தக் கால கட்டத்தில் 1876-77ம் ஆண்டுகளில் நாடு முழுவதும் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. கொங்கு சீமையிலும் மழை பொய்த்தது. விளைச்சல் முற்றிலும் அழிந்தது ஏராளமான மக்கள் இப்பஞ்சத்தால் அழிந்தனர்.
எனவே, தங்கள் துயரங்களைப் போக்க மழைக்குரிய தெய்வமான மாரியம்மனுக்கு ஒரு கோயில் அமைக்க முடிவு செய்து 1890ம் ஆண்டில் மாரியம்மன் மாகாளியம்மன் சந்நதிகளுடன் ஒரு கோயில் உருவாக்கினர். 1939-40ஆம் ஆண்டுகளில் மீ்டும் பஞ்சம் ஏற்பட இப்பகுதி மக்கள் தென்னமநல்லூர் மாரியம்மனை வேண்டிக் கொள்ள சிறிது சிறிதாக மழை பொழிந்து ஊர் செழிப்படைந்தது. மாக்களின் வாழ்க்கை தரமும் உயர்ந்தது.
தொன்மை வாய்ந்த இக்கோயில் நாளடைவில் முறையான பராமரிப்பு இன்றி சிதிலமடைந்தது. பின்னர் ஊர்மக்களின் பங்களிப்புடன் கோயில் கான்கிரீட் தளமாக அமைத்து, பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 2000ம் ஆண்டில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
நொய்யல் நதி என்றழைக்கப்படும் காஞ்சி மாநதியின் வடபுறம், சுற்றிலும் தென்னந்தோப்புகள் மற்றும் பசுமை நிறைந்த வயல்வெளிகள் சூழ்ந்த பகுதியில் எழிலாக இத்தலம் அமைந்துள்ளது.
வடக்கு நுழைவு வாயில் வழியாக நுழைந்தால் 12 தூண்கள் தாங்கி நிற்கும் விசாலமான மகா மண்டபம் அமைந்துள்ளது. இதன் விதானத்தில் பன்னிரு ராசிகளின் புடைப்புச் சிற்பங்கள் அழகுடன் காட்சியளிக்கின்றன. அர்த்த மண்டபத்தில் அம்மனின் வாகனமான சிம்மம் அடர்ந்த பிடரியுடன் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் உள்ளது. அதன் பின்புறம் அம்மனின் ஆயுதமான சூலத்தைக் காணலாம். கருவறை வாயிலில் இருபுறமும் துவார சக்திகள் கம்பீரமாக காவல் புரிய கருவறையில் மாரியம்மன் அமர்ந்த நிலையில் புன்னகை ததும்ப காட்சி தருகிறார். அம்மனின் அழகு திருமேனியை பார்த்த கண்கள் நகர மறுக்கின்றன. துவார சக்திகளின் இருபுறமும் விநாயகர் மற்றும் முருகனின் தனிச் சந்நதிகள் அமைந்துள்ளன.
மகா மண்டபத்தின் கிழக்குப்புறம் மாகாளியம்மன் சந்நதியும், மேற்குப்புறம் சீதா, ராமர், லட்சுமணன் சந்நதிகளும் உள்ளன. ராமர் சந்நதியில், ஆதிகாலத்திலிருந்து பூஜிக்கப்பட்ட படமே வழிபாட்டில் இன்றும் இருக்கிறது.
கோஷ்டத்தில் பிரம்மஸ்ரீ, வைஷ்ணவி, கௌமாரி ஆகியோர் வீற்றிருக்க, வெளிச்சுற்றில் கருப்பராயர், கன்னிமார்கள், கன்னிமூல கணபதி ஆகியோர் தனிச்சந்நதிகளில் அருள்கின்றனர். ராமர் சந்நதியின் பின்புறம் துளசி மாடம் உள்ளது.
தமிழ் முறைப்படி தினமும் நண்பகல் 12 மணிக்கும் மாலை 6.30 மணிக்கும் இருகால பூஜைகள் நடந்து வருகி்ன்றன. வௌ்ளிக்கிழமை அமாவாசை, பௌர்ணமி மற்றும் கிருத்திகை ஆகிய நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் உண்டு. மாத விழாக்களில் தமிழ் வருடப் பிறப்பு ஆடிவௌ்ளி, தைப்பூசம், நவராத்திரி, மார்கழி மாத பூஜை, பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.
இத்தலத்தில் தைப்பூச விழா மிகவும் பிரதானமானதாகும். அன்று நூற்றுக் கணக்கான பக்தர்கள் விரதமிருந்து காவடி சுமந்து பழநிக்கு பாத யாத்திரையாகச் செல்வர். அப்போது அதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தேரில் வள்ளி-தெய்வானை சமேத முருகனை அலங்கரித்து பழநிவரை இழுத்துச் சென்று கிரிவலப் பாதையில் வலம் வ்நது பாதயாத்திரையை நிறைவு செய்வர்.
எல்இடி விளக்குகள் ஒளிரும் வண்ணம் உருவாக்கப்பட்ட இத்தேரை டிஜிட்டல் தேர் என அழைக்கின்றனர்.
நவராத்திரி நாட்களில் விதவிதமான அலங்காரங்களில் அம்மன் ஜொலிப்பாள். ஆடி வௌ்ளிக்கிழமைகள் மிகவும் விசேஷம் இத்தலத்தின் தலையாய பெருவிழா மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பூச்சாட்டு விழாவாகும். சித்திரை மாதம் இரண்டாம் செவ்வாய் அன்று பூச்சாட்டு, மூன்றாம் செவ்வாய் திருக்கம்பம் நாட்டுதல், பின்வரும் ஞாயிறு இரவு கிராம சாந்தி, திங்கள் மாலை திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். அடுத்த நாள் நொய்யல் நதிக்கரையில் அரச மரத்தடியில் அருள்பாலிக்கும் புராதனமான விநாயகர் கோயிலில் இருந்து அம்மனை அழைத்து வருவர். இதைத் தொடர்ந்து மகா அபிஷேகம், ஆராதனைகள், முளைப்பாரி, மாவிளக்கு, அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராட்டு என திருவிழா நிறைவு பெறும்.
இவ்விழாக்களில் சுற்று வட்டார கிராமத்திலுள்ள மக்கள் ஒற்றுமையுடன் கலந்து கொண்டு முளைப்பாரி, மாவிளக்கு எடுத்து வரும் நிகழ்ச்சி கண் கொள்ளாக் காட்சிகளாகும்.
கருணையே உருவான மாரியம்மன் பக்தர்களின் குறைகளைக் களைவதில் தன்னிகரில்லா அன்னையாய் விளங்குகின்றாள். கண் நோய் கண்டவர்களுக்கு அம்மனின் தீர்தத்தை எடுத்து அடுக்கு நந்தியாவட்டை மலரில் கண்ணில் ஒற்றிக் கொண்டால் விரைவில் குணமடைந்து விடுகிறதாம். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களையும் காத்து ரட்சிக்கின்றாள்.
திருமணத்தடை, குழந்தைப் பேறு இன்மை ஆகியவற்றுக்காக தன்னை நாடி வரும் பக்தர்களை அரவணைத்து பலன் அளிக்கிறாள். தங்களது வேண்டுதல் நிறைவேறிய பின் ம்மனுக்கு மகா அபிஷேகம் ஆராதனைகள் செய்து தங்கள் நன்றிக் கடனை நிறைவேற்றுகின்றனர்.
இத்தனை சிறப்புகள் கொண்ட மாரியம்மனை நீங்களும் தொழுது அருள்பெற்று வாருங்களேன்!
எங்கே இருக்கு: கோவையிலிருந்து தொண்டாமுத்தூர் வழியாக இக்கரை போளுவாம்பட்டி செல்லும் சாலையில் தென்னமநல்லூரில் இத்தலம் அமைந்துள்ளது. காந்திபுரம் பஸ் நிலையத்திலிருந்து பேருந்து தடம் எண்: 56, 64சி, 64யி மூலம் கோயிலை அடையலாம்.

தரிசன நேரம்: காலை 1.30 - 12; மாலை 5.30-7.30

Comments