சந்திரகாந்த லிங்கம்!

சந்திரனைச் சூடிய எம்பெருமான், சந்திர காந்தக் கல்லால் உருவாக்கப்பட்ட லிங்க மூர்த்தமாக அருட்காட்சி அளிக்கும் தலம், திருநெல்வேலி மாவட்டம் பாப்பான்குளம்.
இந்தக் கல்லின் சிறப்பு காரணமாக மூலவரை மகா மண்டபத்தில் நின்று தரிசிக்கும் போது நாம் காண்பதைவிட கொடி மரத்தின் அருகே நின்று தரிசிக்கும் போது லிங்கத் திருவுருவம் பெரிதாகத் தெரிகிறது.
கி.பி. 1239ல் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் முள்ளா நாட்டு ராஜராஜ சதுர்வேதி மங்கலத்து வடமேல் பிடாகை வேளாளர் குறி்ச்சி என்று, இவ்வூர் அழைக்கப்பட்டது. கி.பி. 1268ல் குலசேகர மாறவர்மனின் காலத்தில் இறைவனுக்க கற்றளியாக ஒரு கோயில் எழுப்பப்பட்டு, இறைவனின் பெயர் உடையார் கருத்தறித்து முடிந்த பாண்டி ஈச்சுரமுடைய நாயனார் என்று சூட்டப்பட்ட செய்தியை கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. அதில் இவ்வூரின் பெயர் கல்குறிச்சி எனக் கறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் பெயரும் இடைக்காலத்தில் மாறி, தற்போது கோயிலைச் சுற்றி உள்ள ஐந்து குளஙகளுள் ஒன்றான பாப்பான்குளம் என்ற குளத்தின் பெயராலேயே அழைக்கப்படுகிறது.
கிழக்குப் பார்த்து அமைந்துள்ள கோயிலுக்கு எதிரே, நான்கு கால் மண்டபம் ஒன்று கலைநயத்துடன் காணப்படுகிறது. அம்மண்டப வாசலில் இரு நந்தீசுவரர் சிற்பங்கள் ஒரே மாதிரியான அமைப்பில் காணப்படுகின்றன. கோயிலின் வடபுறம் உள்ள குளத்தை வெட்டும்போது இவை கிடைத்ததாம்.
மண்டபத்தின் வடக்கே அரசமரமும், அதன் கீழ் விநாயகர் சந்நதியும் உள்ளது. திருமணத்தடையால், மன் வருந்துவோர் பதினொரு வாரம், இந்த விநாயகருக்கு அபிஷேக - ஆராதனை செய்து வர மாங்கல்ய யோகம் கைகூடி வரும் என்கிறார்கள்.
கோயிலைச் சுற்றி மதில் சுவர் உள்ளது. சாலைக் கோபுர வாசல் தாண்டியதும், பிராகார மண்டபம், பிரதான நுழைவாசலிலுள்ள இரு படிகளில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. மதுரை நாயக்க மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் இம்மண்டபத் திருப்பணியைச் செய்வதர்களது சிலைகள், தூ்களில் அமைந்துள்ளன. பலிபீடம், கொடி மரம், நந்தீஸ்வரர் கடந்தால், கொடிமரத்தின் வடபுறம் நவகிரக சந்நதியும் அதற்கு மேற்கே பள்ளியறையும் இருக்கின்றன.
அடுத்து, முக மண்டபம், மகா மண்டபம, அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்பில் கற்றளியாக கோயில் கட்டப்படடுள்ளது. முக மண்டபத்தின் வடபுறம் அம்பாள் வாடா கலை நாயகி தனி் சன்னதியில் காட்சியளிக்கிறாள். இந்த அம்பாளின் திருவுருவம் 32 லட்சணங்களுடன் வடிவமைக்கப்பட்ட சிறப்புடையது. மகா மண்டபத்தில் தென்புறம் சித்தர் சந்நதி ஒன்று உள்ளது. ஆதியில் கோயில் எழுப்பப்பட்ட போது சித்த ஞானேசுவரர் கோயில் என்றே கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருப்பதால், யாரோ ஒரு சித்தர் இங்கு இறைப்பணி செய்திருக்கலாம். நடராஜர், சிவகாசி அம்பாளுடன் மண்டபத்தின் வடபுறம் இருக்கிறார். பிராகாரத்தில் நடராஜருக்கு தனி சந்நதி இருந்தாலும் தற்போது திருப்பணி நடைபெறுவதால் தற்காலிகமாக மகாமண்டபத்தில் நிறுவியுள்ளனர்.
கருவறைக்கு எதிரே நந்திதேவர் காணப்படுகிறார். இந்த இடத்திலிருந்து கருவறையிலுள்ள மூலவரான திருவெண்காடரை தரிசிக்கையில் லிங்கத் திருமேனி சிறிதாகத் தெரிகிறது. கொடி மரத்தினருகில் இருந்து பார்க்கையில் பெரிதாகவும் தேற்றமளிக்கிறது. இதற்கான காரணம், மூலவர் திருமேனி சந்திர காந்த கல்லால் உருவாக்கப்பட்டிருப்பதால் என்கிறார்கள். வெண்மையான சந்திரனைச் சூடியவர் என்பதாலும், பனி படர்ந்த வெண்மலையில் வசிப்பவர் என்பதாலும் இறைவனுக்கு திருவெண்காடர் என்று பெயர்.
உஷ்ணம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலம் றைவனை நம்பிக்கையோடு தரிசிக்க நோயின் உபாதை, நீங்கப் பெற்று தலமும், வளமும் பெறுவர் என்பது நம்பிக்கை அன்றாடம் கோ பூஜையுடன் நித்ய கைங்கர்யப் பணிகள் செவ்வனே நடைபெற்று வருகினறன. பௌர்ணமி மற்றும் பிரதோஷ கால பூஜைகள் பிரசித்தமானவை. அச்சமயம் பஞ்ச வாத்தியங்கள் வாசிக்கப்படுகின்றன. பிராகாரத்தில் தட்சிணாமூர்த்தி, கணபதி, சண்டிகேஸ்வரர், வள்ளி-தெய்வானை சமேத பாலசுப்பிரமணியர், சனீஸ்வரர், சூரியன், சந்திரன், காலபைரவர் சந்நதிகள் அமைந்துள்ளன. சண்டிகேஸ்வரர் சந்நதிக்கு அருளே தல விருட்சமான பவள மல்லி ஓங்கி நிற்கிறது.
தினமும் மூன்று வேளை பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. ஆண்டு முழுவதும் வரும் எல்லா விழாக்களையும் விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். திருமணத்தடை, உடல் கோளாறு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலம் சென்று வழிபட்டால், இறைவனின் பரிபூரண ஆசியால் நிச்சயம் சகல சௌபாக்கியங்களுடன் இனிய வாழ்க்கையை வாழலாம்!
எங்கே இருக்கு: திருநெல்வேலி - கடையம் நெடுஞ்சாலையில் 35 கி.மீ. தூரத்தில் பாப்பான்குளம் உள்ளது. பேருந்து நிறுத்தத்தில் இருந்து தெற்கே 2 கி.மீ.யில் கோயில் உள்ளது. ஆட்டோ வசதியும் உண்டு.

தரிசன நேரம்: காலை 5.00-9.00; மாலை 4.00 - 9.00.

Comments