ஆலயம் தேடுவோம்: கனவில் தோன்றிய பேரொளி சிறுவனால் வெளிப்பட்ட சிவனார்!

காசிக்குச் சென்று கங்கையில் நீராடி, காசி விஸ்வநாதரை வழிபட்டால் மட்டும் பாவங்கள் நீங்கி விடுமா?’ - காலம்காலமாக பலருடைய மனத்தில் ஏற்படும் சந்தேகம்தான் இது. நியாயமான சந்தேகம்தான். வெறுமனே கங்கையில் நீராடுவதாலோ, காசி விஸ்வ நாதரை வழிபடுவதாலோ நம்முடைய பாவங்கள் நீங்கி விடுவதில்லை. பூரண நம்பிக்கை இருக்க வேண்டும். நம்பிக்கையுடன்  பிரார்த்தனைச் செய்யும்போதுதான் உரிய பலன் நமக்குக் கிடைக்கும். இல்லையென்றால் வெற்றுச்சடங்காகத்தான் முடியும். அதனால் பலன் எதுவும் கிடைக்காது.   
நம்பிக்கையுடன் நாம் எங்கிருந்து காசி விஸ்வநாதரை வழிபட்டாலும், காசிக்குச் சென்று வழிபட்ட பலன் நமக்கு உறுதியாகக் கிடைக்கும். அதன் காரணமாகவே தென் தமிழகத்தில் தென்காசி போன்ற பல தலங்களில் காசி விஸ்வநாதரை பிரதிஷ்டை செய்து வழிபட்டு, அவருடைய அருள் நமக்கு இங்கேயே கிடைக்கும்படிச் செய்தனர் அன்றைய ரிஷிகளும், மன்னர்களும்.

பக்தர்கள் பலரும் நடைப்பயணமாகவே காசி யாத்திரையை மேற்கொண்ட காலம் அது. அந்தப் பக்தர் களின் மனத்தில் காசி விஸ்வநாதரைப் பற்றிய சிந்தனையே நிறைந்திருக்க வேண்டும் என்பதற்காக பல இடங்களில் கோயில்கள் எழுப்பி, காசி விஸ்வநாதர் என்ற திருப் பெயரில் ஐயனைப் பிரதிஷ்டை செய்திருக்கின்றனர்.

அப்படி சுமார் 1,500 வருடங்களுக்கு முன்பாக, நிர்மாணிக்கப்பட்ட கோயில்தான் எச்சூர் அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில். ஆனால், காலப்போக்கில் அந்த ஆலயம் பல்வேறு காரணங்களால் சிதைந்து மண்மூடி போய்விட்டது. ஆண்டாண்டு காலமாக எண்ணற்ற பக்தர்களால் வழிபடப்பட்ட ஐயனின் ஆலயம், மண் மூடிப்போன அவலம், அந்த ஊர் மக்கள் யாருக்குமே தெரிந்திருக்க வில்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய விஷயம்.     

ஆம்... அந்த ஊரில் அப்படி ஓர் ஆலயம் இருக்கிறது என்பதே ஆறு வருடங்களுக்கு முன்புதான், ஐயனின் அருளாடல் மூலமாகத் தெரியவந்தது என்கிறார்கள் உள்ளூர் மக்கள்.

ஆறு வருடங்களுக்கு முன்பு இந்த ஊரைச் சேர்ந்த ஒரு சிறுவனின் கனவில் ஓர் ஒளிப்பிழம்பு தோன்றி, அவனைக் குறிப்பிட்ட ஓர் இடத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. மறுநாள் காலையில் தன் பெற்றோரிடம் அவன் விவரம் தெரிவித்திருக்கிறான். அவர்களோ, வெறும் கனவுதான் என்று அப்படியே விட்டுவிட்டனர். ஆனால், சில தினங்களில் மறுபடியும் அதேபோல் கனவு வந்ததாகச் சிறுவன் தெரிவிக்க, இந்த முறை அவன் பெற்றோர், ஊர் மக்கள் சிலரிடம் விவரம் கூறி, புதையல் ஏதேனும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் அந்த இடத்துக்குச்சென்று தோண்டிப் பார்த்தனர்.

சுமார் 10 அடி ஆழம் தோண்டியதும் வெளிப்பட்டது புதையல் இல்லை... புதையல் செல்வத்தைவிட மேலான செல்வங்களை நமக்கெல்லாம் அருளும் ஐயனின் சிவலிங்க மூர்த்தம். ஐயனின் திருவுருவத்தை தரிசித்த மக்கள், உடனே சிவலிங்க மூர்த்தத்தை வெளியில் எடுத்து ஓரிடத்தில் வைத்து, தினமும் தங்களால் முடிந்த அளவு பூஜை செய்து வந்தனர். தற்போது திருப்பணிக்கமிட்டி அமைத்து திருப்பணிகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.

விஷயம் தெரிந்து நாமும் அந்த ஆலயத்தைத் தரிசிக்கச் சென்றோம். தற்போது திருப்பணிகள் தொடங்கப்பட்டிருக்கும் அந்த ஆலயத்தின் ஒருபுறமாக கல்தூண்களும் கற்களும் குவிக்கப்பட்டு ஆலயத்தின் பழைமையைப் பறைசாற்றின.
திருப்பணிக் கமிட்டியைச் சேர்ந்த அன்பர் மணிகண்டனிடம் பேசினோம்.

‘‘சிறுவனின் கனவைப் பற்றிக் கேள்விப்பட்டதும், புதையல் ஏதாவது இருக்கும்கிற எண்ணத்துலதான் நாங்க அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தோம். ஆனால், நாங்க செஞ்ச புண்ணியம் சுவாமி வெளிப்பட்டார். அவரை வெளியில் எடுத்து ஓர் எடத்துல வெச்சு, எங்களால முடிஞ்ச அளவு பூஜை செஞ்சுட்டிருந்தோம். சுவாமிக்கு ஒரு கோயில் கட்ட ஆசைப்பட்டு, திருப்பணிக் கமிட்டி அமைச்சு திருப்பணிகளைத் தொடங்க நெனைச்சோம். அப்பத்தான் குடியாத்தத்தைச் சேர்ந்த சிவ.ஆ.பக்தவத்சலம் ஐயா பத்தி தெரிஞ்சி, நாங்க அவரைப் போய்ப் பார்த்து விவரம் சொன்னோம். உடனே அவர் தன்னோட நண்பர்களுடன் வந்து சுவாமியைப் பார்த்து பரவசப்பட்டுட்டார்.

அப்புறமா பிரச்னம் பார்த்ததுலதான் சிவ பெருமான் ஒரு சித்தருக்குக் காசி விஸ்வநாதரா காட்சி கொடுத்திருக்கார்னும், அதனாலதான் இங்கே கோயில் ஏற்பட்டதுன்னும் தெரிஞ்சுக் கிட்டோம். உடனே ஐயாதான் முதல்ல 40,000 ரூபாய் கொடுத்து திருப்பணிகளைத் தொடங்கி வெச்சார். அவரோட நண்பர்களும் உதவி செஞ்சாங்க. ஊர்மக்களும் தங்களால முடிஞ்ச அளவுக்குப் பொருளுதவியும், உடலுழைப்பும் தர்றாங்க. எப்படியும் சீக்கிரம் திருப்பணி முடிஞ்சு, கும்பாபிஷேகம் பண்ணிடணும்ங்கறதுதான் எங்களோட விருப்பம்’’ என்றார்.    


தற்போது இந்த ஆலயத்தில் சுவாமி சந்நிதி, அர்த்த மண்டபம் முதலான பணிகள் நிறைவடைந் துள்ளன. சுற்றுச்சுவர்களுக்கு வெளிப்பூச்சு முழுமையடையாமல் உள்ளது. அதேபோல், அம்பாள் விக்கிரகம், அம்பாள் சந்நிதி, பரிவார தெய்வங்களுக்கான சந்நிதிகள் அமைப்பது போன்ற திருப்பணிகளும் நிதிப்பற்றாக்குறையால் தேங்கி நிற்கின்றன.

‘மண்மூடிப் போனாலும் அருள் பொழிய வேண்டிய தருணத்தில் வெளிப்பட்டே தீருவேன்’ என்று ஐயன் நமக்கெல்லாம் உணர்த்துவதுபோல், எச்சூரில் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட ஐயனின் திருக்கோயில் திருப்பணிகள் விரைவில் நிறைவு பெற்று, கும்பாபிஷேகம் நடைபெறவும் நித்திய பூஜைகள் தவறாமல் நடைபெறவும் நாமும் நம்மால் இயன்ற பொருளுதவி செய்வது நம்முடைய கடமை மட்டுமல்ல; நாளும் நல்லன எல்லாம் நமக்கு அருளும் ஐயனுக்கு நாம்பட்டிருக்கும் கடனும்கூட. எனவே ஐயன் காசி விஸ்வநாதரின் திருக்கோயில் திருப்பணி களுக்கு நாமும் நம்மால் இயன்ற பொருளுதவி செய்து, ‘நெற்றிமேற் கண்ணினானும், நீறுமெய் பூசினானும், மங்கையோர் பாகத்தானு’மான ஐயனின் திருவருளுக்கு என்றென்றும் பாத்திரர்களாவோம்.


உங்கள் கவனத்துக்கு:

தலம் : எச்சூர்

சுவாமி: ஸ்ரீகாசி விஸ்வநாதர்

அமைவிடம்: செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம் - மாமல்லபுரம் சாலையில், செங்கல்பட்டில் இருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் உள்ளது. செங்கல்பட்டில் இருந்து 108-பி என்ற எண்ணுள்ள பேருந்து எச்சூர் வழியாகச் செல்கிறது.

நன்கொடை அனுப்பவேண்டிய முகவரி:

A/C Name: SRI KASIVISHWANATHAR  THIRUKOVIL

City Union Bank   

A/C:NO:510909010062698
IFSC CODE:CIUB0000187
CHENGALPET BRANCH.

தொடர்புக்கு: மணிகண்டன்  செல்: 07708333383 

Comments