ஷீர்டியில் ஸ்ரீ ராம நவமி!

ராமர் அவதரித்தது ராவணனை சம்ஹாரம் செய்யத்தானே? சிவப்புப் பொடி கண்ணில் விழுந்தது என்ற போர்வையில் ராவணன் ரூபத்தில் வந்த அஹங்காரம், கெட்ட எண்ணங்கள் முதலியவற்றை ஒழிக்கும் பொருட்டே பாபா ஆவேசம் அடைந்தார் என்று புரிந்து கொண்டனர்.
இப்பூவுலகிலும் பர உலகிலும் நம்மை வழி நடத்துபவர் சத்குருவே. பாபாவின்பால் ஆழ்ந்த அன்பு வாக்கப்பெற்ற பக்தர்களுக்கு சத்குரு என்னும் பெயரைக் கேட்டாலே சாயிபாபாதான் நினைவுக்கு வருவார். சாயி சத்சரித்திரம் எழுதிய ஹேமத்பந்த் கூறுகிறார்: ‘எந்தப் புராணத்தைப் படித்தாலும், கேட்டாலும் உடனே சாயியின் ஞாபகமே வருகிறது. ராமாயணத்தைக் கேட்டால் சாயியே ராமனாகத் தோன்றுகிறார். பாகவதம் கேட்கலாம் என்று உட்கார்ந்தாலோ தலையிலிருந்து கால் வரை சாயியே கிருஷ்ணனாகக் காட்சியளிக்கிறார்.’
ஷீர்டியில் சாயி பாபாவின் தரிசனத்துக்காக வந்து அருளாசி பெற்ற பக்தர்களில் ஒருவர் கோபால் ராவ் குண்ட் என்பவர். அவர் கோபர்காவனின் நில அளவைத்துறையில் சர்வேயராக இருந்தவர். குழந்தை பாக்கியமில்லாத அவருக்கு பாபாவின் தரிசனத்தையும் ஆசியையும் பெற்ற பின் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு ஷீர்டியில் வருடந்தோறும் ஒரு திருவிழா (உருஸ்) கொண்டாட ஆர்வம் ஏற்பட்டது. அவர் சாயியின் நெருங்கிய அடியவர்களான தாத்யா பாடீல், தாதா கோதே பாடீல், மாதவ் ராவ் போன்றவர்களுடன் கலந்து ஆலோசித்தார். அவர்களுக்கும் இதில் இணக்கம் இருக்கவே, எல்லோரும் சென்று சாயி பாபாவின் ஆசியையும் அனுமதியையும் பெற்று விழா நடத்த முயன்றனர்.
கிராமங்களில் திருவிழா கொண்டாடுவதென்பது சட்ட திட்டங்களுக்குட்பட்டது. ஆகவே, ஜில்லா கலெக்டரிடம் மனு கொடுத்து அனுமதி கோரினர். ஆனால், கிராமக் கணக்கர் இந்தத் திருவிழா நடத்து வதை எதிர்த்தார். இருப்பினும் பாபாவின் சங்கல்பம் திருவிழா நடக்க வேண்டும் என்றிருந்ததால், பக்தர்களின் தொடர் முயற்சிக்குப் பின் கலெக்டரின் அனுமதி கிடைத்தது. சாயிபாபாவிடம் கலந்தாலோசித்து திருவிழாவினை ராம நவமியன்று நடத்தலாம் என்று தீர்மானித்தனர்.
திருவிழாவு நடத்த அனுமதி கிடைத்தபோதிலும் ஷீர்டி கிராமத்தில் மற்ற பிரச்னைகள் இருந்தன. முக்கியமாக தண்ணீர் பஞ்சம்! ஷீர்டியில் இரண்டுகிணறுகள் இருந்தன. மக்கள் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு கிணற்றில் தண்ணீர் வற்றி விட்டது. மற்றொரு கிணற்று நீரோ உப்புத் தண்ணீர்! உப்புத் தண்ணீருள்ள கிணற்றில் மலர்களைத் தன் திருக்கரங்களால் வீசினார் பாபா. என்னே ஓர் அற்புதம்! உடனே, கிணற்று நீர் கல்கண்டைப் போல இன்சுவை கொண்டதாக ஆனது. ஆயினும், அந்த ஒரு கிணற்று நீர் மட்டும் திருவிழாவுக்கு வரும் மக்கள் கூட்டத்துக்குப் போதாது என்பதால், கிராமத்துக்குச் சற்று தொலைவிலிருந்த கிணற்றிலிருந்து நீர் இறைத்து தோலினாலான சாக்குப் பைகளில் ஷீர்டிக்குக் கொண்டு வர ஏற்பாடாயிற்று.
மக்கள் கூடும் இடங்களில் அவர்களுக்குப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யும் பொருட்டு தாற்காலிகக் கூடாரங்கள் கட்டப்பட்டு மல்யுத்த சண்டைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. பாபாவுக்குமே மல்யுத்தம் செய்வதில் விருப்பம் இருந்தது. ஒரு முறை ஷீர்டியில் மெஹிதீன் தம் போலி என்னும் மல்யுத்த வீரனால் தோற்கடிக்கப் பட்ட பிறகு, அவர் அதை அறவே விட்டு விட்டார்.
கோபால் ராவ் குண்ட்-க்கு அஹமத் நகரைச் சேர்ந்த தாமு அன்னா காஸர் என்ற நண்பர் இருந்தார். இவரைத் திருவிழாவுக்காக ஒரு கொடியைத் தயாரித்துக் கொடுக்கும்படி குண்ட் கேட்டுக் கொண்டார். மற்றொரு சித்திரத்தையல் வேலை செய்யப்பட்ட கொடியை நானா சாஹேப் நிமோண்கர் தயாரித்துக் கொடுத்தார். திருவிழா துவங்குவதற்கு முன்னால் இந்த இரண்டு கொடிகளும் வாத்திய கோஷங்களுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மசூதியின் இரண்டு மூலைகளிலும் ஊன்றப்பட்டன.
இந்தத் திருவிழாவில் மற்றொரு ஊர்வலமும் நடைபெற்றது. கொரலாவிலுள்ள பாபா பக்தர் அமீர் ஷக்கர் தலால் எனும் முகம்மதியர் இந்த ஊர்வலத்தை துவக்கி வைத்தார். இதில் சந்தனக் குழம்பும், சந்தனப் பொடியும் ‘தாலி’ என்னும் தட்டுகளில் இடப்பட்டு, பேண்ட் வாத்திய இசை முழங்க கிராமத்தின் வழியாக எடுத்து வரப்பட்டு, மசூதிக்கு வந்த பின்னர் தட்டுகளில் உள்ளவை, ‘நிம்பார்’ என்னும் தொழுகை மாடத்தில் தெளிக்கப்பட்டு மசூதியின் சுவர்களில் கைகளால் பூசப்பட்டது. ஒரே நாளில் இந்த இரண்டு ஊர்வலமும் நடைபெற்றபோதிலும் பாபாவின் சங்கல்பத்தால் இந்த ஊர்வலங்கள் நடப்பதால் எந்த விதமான அசம்பாவிதமும் இல்லாமல், இப்போதும் நடைபெற்று வருகிறது.
பெரும்பாலான பக்தர்கள் இந்தத் திருவிழா நடத்தும் பொறுப்புகளைப் பகிர்ந்து கொண்டு வேலை செய்தனர். வெளி விவகாரங்களை தாத்யா கோதே பாடீல் பார்த்துக் கொண்டார். உள் நிர்வாகம் முழுவதும் சாயி பக்தையான ராதாகிருஷ்ண மாயியிடம் ஒப்புவிக்கப்பட்டது. விழாவுக்குத் தேவையான பொருட்களை வாங்கி அவள் இருப்பிடத்தில் சமையல் ஏற்பாடுகள் பெரிய அளவில் செய்யப்பட்டன. இத்திருவிழாவில் பாபாவுக்கு மிகவும் பிடித்த அம்சமான ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குதலும் மிகச்சிறப்பாக நடைபெற்றது. விருந்தாளிகளின் தேவைகளை கவனித்து அவற்றை திறம்பட நிறைவேற்றுவதில் ராதாகிருஷ்ணமாயியின் பங்கு மிகப் பெரியது. விழா ஆரம்பிக்கும் முன் ராதா கிருஷ்ண மாயி மசூதியின் தரை, சுவர்கள் எல்லாப் பகுதிகளையும் கழுவிச்சுத்தம் செய்வாள். இவ்வேலையையும் நினைத்த நேரத்தில் செய்துவிட முடியாது. பாபா ஒரு நாள் மசூதியில் உறங்குவார். அடுத்த நாள், அருகே உள்ள சாவடியில் உறங்குவார். அவர் சாவடிக்குச் செல்லும் இரவு ராதாகிருஷ்ணமாயி, துனி என்னும் அணையா நெருப்பால் கரி பிடித்துப் போயிருக்கும் சுவர்களை சுத்தமாகக் கழுவுதல், வெள்ளையடித்தல் என்று எல்லா காரியங்களையும் மிக்க விருப்பத்தோடு நேர்த்தியாகச் செய்வாள்.
கிருஷ்ண ஜாகேஷ்வர் பீஷ்மா என்கிற பக்தருக்கு ‘இது ராம ஜன்ம தினமாக இருப்பதால் வெறும் ஊர்வலத்தோடு நில்லாமல், நாம் ஏன் இந்த தினத்தில் ராம நவமி கொண்டாட்டங்களை ஆரம்பிக்கக் கூடாது? ஒரு இசை நிகழ்ச்சி நடத்தினால் என்ன?’ என்று தோன்றியது. அவர்காகா மஹாஜனியிடம் கேட்டார். பாபாவிடம் இந்தக் கோரிக்கை கொண்டு செல்லப்பட, அவரும் இதற்கு அனுமதி கொடுத்தார். ஆனால், பாடகரை எங்கேயிருந்து ஷீர்டிக்கு அழைத்து வருவது? ராமர் பிறந்ததைப் பற்றிய தன்னுடைய பாடல்களான, ‘ராம அக்யன்’ தயாராக இருப்பதாகவும், தான் அதைப் பாடி, ‘சங்கீர்த்தனம்’ செய்வதாகவும் பீஷ்மா உறுதி கூறினார். அப்போது, காகா மஹாஜனி ஹார்மோனியம் வாசிக்க வேண்டும் என்றும், ராதா கிருஷ்ணமாயி, ‘சுண்ட்வடா’ என்னும் இஞ்சியும்
சர்க்கரையும் கலந்த பொடியை பிரசாதமாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
எல்லோரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஸ்ரீராமநவமி ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தனர். அப்போது, ராதாகிருஷ்ண மாயி தொட்டில் ஒன்றைக் கொண்டு வந்து சங்கீர்த்தனம் நடக்கும் இடத்தில் வைத்தாள். இதை கவனித்த பாபா, தொட்டில் எதற்காக அங்கே வைக்கப்பட்டிருக்கிறது?" என்று கேட்டார். காகா மஹாஜனி ராம நவமித் திருவிழா தொடங்கப்பெற்றிருப்பதால் அதற்காகத் தொட்டில் வைத்திருப்பதாகவும் கூறினார்.
பாபாவும் சந்தோஷமாகவே காணப்பட்டார். நிம்பாரிலிருந்து ஒரு மாலையை எடுத்து மஹாஜனியின் கழுத்தில் இட்டு, பீஷ்மாவுக்கு மற்றொரு மாலையைக் கொடுத்தனுப்பினார். சங்கீத நிகழ்ச்சி துவங்கியது. பீஷ்மா கல்வி, கேள்விகளில் சிறந்தவர். அவர் நடத்திய, ‘ராம ஜனனத்தைப்’ பற்றிய சங்கீத உபன்யாஸம் மிகவும் ரசிக்கத் தக்கதாக இருந்தது. கேட்ட பக்தர்கள் எல்லோரும் எல்லையற்ற ஆனந்தம் அடைந்தார்கள். உபன்யாஸம் முடிவடைந்ததும், ‘ஸ்ரீ ராமருக்கு ஜயம்’ என்ற கோஷம் வானைப் பிளந்தது. ‘குலால்’ என்ற சிவப்பு வண்ணப்பொடி வாத்திய கோஷத்திடையே சுற்றிலும் தூவப்பட்டது. எல்லோரும் மகிழ்ச்சியோடு இருக்கையில் ஒரு பெரிய கர்ஜனை கேட்டது. கண்டபடி தூவப்பட்ட சிவப்புப் பொடியானது பாபாவின் கண்களுக்குள் சென்று விட்டது. பாபா பெருங்கோபமடைந்து பெருங்குரலில் திட்டவும், கடிந்து கொள்ளவும் ஆரம்பித்தார். பக்தர்கள் முதலில் பயந்தாலும், ராமர் அவதரித்தது ராவணனை சம்ஹாரம் செய்யத்தானே? சிவப்புப் பொடி கண்ணில் விழுந்தது என்ற போர்வையில் ராவணன் ரூபத்தில் வந்த, அஹங்காரம், கெட்ட எண்ணங்கள் முதலியவற்றை ஒழிக்கும் பொருட்டே பாபா ஆவேசம் அடைந்தார் என்று புரிந்து கொண்டனர். ராதாகிருஷ்ணமாயி பாபா கோபத்தில் தொட்டிலை உடைத்து விடுவாரோ என்ற பயத்தில் தொட்டிலை அங்கிருந்து அகற்ற முயன்றாள். அதற் குள் சாந்தமான பாபா,‘திருவிழா இன்னும் முடியவில்லை’ என்று சொல்லி தொட்டிலை அகற்றுவதை தடுத்து விட்டார். பிறகு, அன்றைய நிகழ்ச்சிகளான மஹா பூஜை, ஆரத்தி முதலியவை எப்போதும் போல நடந்தன. ‘கோபால் காலா’ நடக்காமல் திருவிழா பூர்த்தியாகாது என்பதால், மறுநாள் மறுபடி சங்கீத நிகழ்ச்சியும், ‘கோபால் காலா’ என்னும் உறியடி உத்ஸவமும் நடைபெற்றது. ஒரு மண் பானையில் தயிரும் பொரியரிசியும் கலந்து மேலே தொங்க விடப்பட்டிருக்கும். உறியடிக்குப் பிறகு, பானையில் உள்ளவை பிரசாதமாக எல்லோருக்கும் வழங்கப்படும்.
அடுத்த வருடம் முதல் ராம நவமி நிகழ்ச்சிகள் அதிகரிக்க ஆரம்பித்தன. ராதாகிருஷ்ண மாயி சித்திரை முதல் தேதியிலிருந்து இறைவனின் புகழை ஏழு நாட்களுக்கு இடை விடாமல் பாடும், ‘நாம சப்தாஹம்’ செய்ய ஆரம்பித்தாள். அதில் எல்லோரும் முறை வைத்துப் பங்கேற்றுக் கொண்டனர். நாட்டில் எல்லாப் பகுதிகளிலும் ராம நவமி கொண்டாடப்படுவதால் விழாவுக்கு சங்கீத உபன்யாஸம் செய்ய பாடகர் கிடைப்பது
சிரமமாக இருந்தது. அடுத்த சில வருடங்கள் பாலபுவா சதார்கர் என்பவர் சங்கீர்த்தனம் செய்தார். பிறகு தாஸ்கணு மகராஜ் என்னும் பாபாவின் அடியவர் ஒருவர் இதற்காக நியமிக்கப்பட்டு, பிறகு அவரே தொடர்ந்த வருடங்களில் ஷீர்டியில் ராம நவமிக்கு சங்கீத உபன்யாஸம் நடத்தினார்.
ஒவ்வொரு ஆண்டும் திருவிழா படிப்படியாக வளர்ந்து ஷீர்டியில் ராம நவமிக்குக் கூடும் மக்கள் அதிகரித்து ஷீர்டியே கோலாகலமாகக் காட்சியளித்தது. மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, கடைகள் அதிகரித்தன. மல்யுத்தப் போட்டிகளில் புகழ் பெற்ற மல்யுத்த வீரர்கள் பங்கு பெற்றனர்.
முன்னை விட பெரிய அளவில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. 1911ல் ஷீர்டியில் தொடங்கப்பட்ட இந்த ராம நவமி உத்ஸவம் இன்று வரை தடையில்லாமல் கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Comments