சுகப் பிரசவம் அருளும் சூலிகாம்பாள்!

சோழ மன்னன் உப்பரிகையில் உலவிக் கொண்டிருந்தான். வெளியில் இருந்த புழுக்கம் அவன் மனத்திலும் இருந்தது. சோழ நாடு அவனது நல்லாட்சியில் அமைதியாக தூங்கிக்கொண்டு இருந்தது. அவனுக்கு தான் தூக்கம் பிடிக்கவில்லை. ‘நல்ல அரசியர், மந்திரிகள், நாட்டின் மேல் அக்கறை கொண்ட போர் வீரர்கள், சோழம், சோழம் என முழங்கி பெருமிதம் கொள்ளும் மக்கள் இவை அனைத்தும் இருந்தும் எடுத்துக் கொஞ்சவோ, தனக்கு பின் சோழ நாட்டின் அரசுக்கட்டில் ஏறவோ ஒரு வாரிசு இல்லையே! நான் என்ன பாவம் செய்தேன் இறைவா...’ என்று அவன் மனம் ஏங்கியது. இறைவனை எண்ணி தனது கோரிக்கையை ஏற்க வேண்டி கண்ணயர்ந்தான்.
மறுநாள் காலை அரசன் வேட்டைக்குப் புறப்பட்டான். மனம் முழுவதும் முந்தைய நாள் இரவு இறைவனை வேண்டியதுதான் நிறைந்திருந்தது. ‘ஆண் வாரிசு இல்லாவிட்டாலும் பரவாயில்லை, பெண் குழந்தையாவது கொடு இறைவா. இந்தக் கொடுமையான வாழ்வு இனியும் எனக்கு வேண்டாம்’ என்று பெருமூச்சுடன் குதிரையில் ஏறினான்.
கானகத்தில் வேட்டையாடியபடியே வெகு தொலைவு வந்து விட்டான் அரசன். அப்போது அருகே குழந்தைகள் அழும் சத்தம். அருகிலிருந்த சேவகன், மன்னா, அருகில் குழந்தை அழுகிற சத்தம் கேட்கிறது" என்றதும் அரசனுக்கு வியப்பு தாங்கவில்லை. விரைந்து குதிரையை செலுத்தினான். குரல் வந்த திசையில் சென்ற மன்னன், சந்தோஷத்தின் உச்சிக்கே சென்றான். அங்கே, தரையில் நான்கு பெண் குழந்தைகள் அழுது கொண்டு இருந்தன. அரசன் குதிரையிலிருந்து இறங்கி குழந்தைகளை வாரி அணைத்தான். குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்தான். நான்கு பெண்களுக்கும் முறையே சரிவார்குழலி, வண்டார்குழலி, திருகுகுழல் நாயகி மற்றும் கருந்தாழ்குழலி என்று பெயர் சூட்டினான்.
அப்பெண் குழந்தைகளும் சிறந்த சிவபக்தைகளாக வளர்ந்தனர். தகுந்த வயது வந்ததும் அவர்களுக்கு திருமணம் செய்ய எண்ணினான் மன்னன். அம்பிகையின் அம்சமான பெண்களுக்கு பொருத்தமான மண மகன் ஈசனைத் தவிர வேறுயாராக இருக்க முடியும்? ஈசனிடம் தனது பெண்களை ஏற்குமாறு வேண்டினான் அரசன். ஈசனும் இசைந்தார். தகுந்த நாளில் பெண்களை மணந்து அவர்களுடன் நான்கு ஊர்களில் எழுந்தருளினார். சரிவார்குழலி திருக்கண்ணபுரத்திலும், கருந்தாழ் குழலி திருப்புகலூரிலும், வண்டார்குழலி திருமருகலிலும், திருகுகுழல்நாயகி திருச்செங்காட்டங்குடியிலும் அமர்ந்தனர்.
மக்களை நல்வழிப்படுத்திய திருப்தியுடன் மன்னனும் மறைந்தான். இறைவியர் நால்வரும் அவரவர் இடத்தில் கொண்டாடப்பட்டனர். ஒரு நாள் ஒரு ஏழை பக்தைக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அப்பெண்ணின் தாய் ஆற்றுக்கு அக்கரையில் ஒரு விசேஷத்துக்குச் சென்றிருந்தாள். பலத்த மழை பிடித்துக்கொண்டது. ஆற்றங்கரைக்கு வந்த தாக்கு எவ்வாறு வீடு திரும்புவது என்று தெரியவில்லை. ‘அம்மா தாயே, பரமேஸ்வரி என் பெண் இப்போது என்ன நிலையில் இருக்கிறாளோ தெரியவில்லையே. நீதான் தாயாக இருந்து காக்க வேண்டும்’ என்று கண்ணீர் விட்டாள்.
அதேநேரம் அந்த ஏழை கர்ப்பிணிப்பெண் குடிசையில் தனியாகத் தவித்துக்கொண்டு இருந்தாள். நேரம் ஆக ஆக வலி அதிகரித்துக்கொண்டே இருந்தது.வெளியில் சென்ற தாய் திரும்புவதாகத் தெரிய வில்லை. வெளியே பே மழை கொட்டிக்கொண்டு இருந்தது. யாரையாவது துணைக்கு அழைக்கலாம் என்றால் இடுப்பில் மின்னல் வெட்டுவது போல் வலி, அவளால் நகரவே முடியவில்லை. அழுது அழுது அரற்றி மயக்க நிலைக்குச் சென்று கொண்டிருந்தாள் அப்பெண். ‘அம்மா தாயே, ஈஸ்வரி இதற்குமேல் நீதான் எனக்கு கதி என் குழந்தையை நல்லவிதமாக பெற்றெடுக்க அருள்புரி தாயே’ என்று அலறினாள்.
நான்கு அம்பிகையரும் இக்குரல் கேட்டு மனமிரங்கினர். உடனே, அப்பெண் இருந்த குடிசை நோக்கி விரைந்தனர். சற்று நேரத்தில் அந்த வீட்டின் உள்ளே குழந்தைச் சத்தம். நல்லபடியாக பிரசவமான அசதியில் அந்த ஏழைப் பெண் உறங்கத் துவங்கினாள். சகோதரிகள் நால்வரும் குழந்தையை சுத்தம் செய்து துணியில் சுற்றி, தாய் அருகே வைத்து விட்டு, தத்தம் ஊருக்குத் கிளம்பினர். வெளியில் வந்த பிறகுதான் பகல் முடிந்து இருள் சூழ்ந்து கொண்டிருந்தது தெரிந்தது. விரைவாக நடந்தனர். அர்த்த ஜாமம் முடிந்து நடை சாத்துவதற்குள் கோயிலுக்குள் செல்ல வேண்டுமே. ஆனால், அவர்கள் கோயிலைச் சென்றடைவதற்குள் கோயில் நடை சார்த்தப்பட்டு விட்டது.
வேறு வழியின்றி கோயிலுக்கு வெளியே நின்று விட்டனர் நான்கு தேவியரும். இன்றும் திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் ஆலயத்தில் கருந்தாழ்குழலம்மையும், திருக்கண்ணபுரம் ராமநாதீஸ்வரர் ஆலயத்தில் சரிவார் குழலம்மையும், திருமருகலில் வண்டார்குழலம்மையும் திருச்செங்காட்டங்குடியில் திருகுகுழல்நாயகியும் தனிச் சன்னிதிகளில்தான் காணப்படுகின்றனர்.
ஏழைப் பெண்ணின் பிரசவம் பார்த்த காரணத்தால் இந்த நான்கு அம்மையரும், ‘சூலிகாம்பாள்’ என்று அழைக்கப்படுகின்றனர். ‘சூல்’ என்றால் கரு என்று பொருள். கருவினைக் காத்த நாயகி ஆதலால் சூலிகாம்பாள் என்று அழைக்கப்படுகிறார்கள். குழந்தை வரம் வேண்டுவோர் இந்த அம்பாள்களை வழிபட்டு அர்த்தஜாம பூஜையில் சம்பா அரிசி, மிளகு, சீரகம், உப்பு, நெய் கலந்த சாதத்தைப் படைத்து வேண்டுகின்றனர். குழந்தை பிறந்ததும் கோயிலுக்கு வந்து அர்ச்சனை, அபிஷேகங்கள் செய்து தங்கள் நன்றியை காணிக்கை ஆக்குகின்றனர்.
தேவாரத் தலங்களான இந்த நான்கு ஆலயங்களும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு வாந்தவை. திருப்புகலூர், முருகநாயனாரும் அப்பரும் முக்தி அடைந்த தலம். சுந்தரருக்கு இறைவன் செங்கல்லைப் பொன்னாக மாற்றித் தந்த இடம். தாம் திருமணம் செய்து கொள்ளவிருந்த மாப்பிள்ளை இறந்து விட, திக்கற்று நின்ற செட்டிப் பெண்ணுக்கு ஞானசம்பந்தர், மாப்பிள்ளையை உயிர்ப்பித்து, கிணற்றையும் வாழை மரத்தையும் சாட்சியாக வைத்து திருமணம் செய்து வைத்த இடம் திருமருகல்.
பிள்ளைக் கறி கேட்ட ஈசனுக்கு, தனது பிள்ளை சீராளனையே கறி சமைத்துத் தந்த சிறுத்தொண்டர் முக்தி அடைந்த தலம் திருச்செங்காட்டங்குடி. திருக் கண்ணபுரம் ராமநாதீஸ்வரரோ, ஸ்ரீராமரால் வழிபடப் பட்டவர். வழிபட வந்த ஸ்ரீராமனை சாதாரண மானிடன் என்று எண்ணி நந்தி தேவர் மறைக்க, அம்பாள் மூக்கணாங்கயிற்றைப் பிடித்து நந்தியை விலக்கி, ராமர் வழிபட உதவி செய்ததலம். இவ்வாலயங்கள் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் அமைந்துள்ளன.

Comments