மலைகளின் நடுவே மணக்கோலம்! - பெரும்பேர் கண்டிகையில் அற்பு

மையவள் உமாமகேஸ்வரனைத் தடுத்தாட் கொண்ட க்ஷேத்திரம்; இறையனார், `தான்தோன்றீஸ்வரர்’ எனும் திருப்பெயருடன் அருளும் தலம்; அகத்தியருக்கு, சிவனாரின் `மணக்கோல' தரிசனம் கிடைத்த ஊர்களில் ஒன்று. இத்தனை சிறப்புகளோடு, தரிசிக்கும் அடியார்களுக்குப் பெரும்பேறுகளை அள்ளி வழங்கும் மகிமையையும் தன்னகத்தே கொண்ட புண்ணியத் திருத்தலம், பெரும்பேர்கண்டிகை. இதன் ஸ்தல வரலாறு மகத்துவமானது!
சிவ-பார்வதியின் திருக்கல்யாணத்தைத் தரிசிக்க அனைத்துயிர்களும் கயிலையில் குவிந்துவிட, அதனால் உலகம் சமநிலையை இழந்ததையும்,   அதைச் சமன்படுத்தும் நோக்கில் அகத்தியரைத் தென்புலத்துக்குச் செல்லும்படி இறைவன் பணித்த திருக்கதையை நாமறிவோம்!
இறைவனின் ஆணையைச் சிரமேற்கொண்டு தென்னகம் புறப்பட்ட அகத்தியர், தான் விரும்பிய தலங்களில் எல்லாம் ஐயனின் திருமணக் கோலத்தைத் தரிசிக்க அருள்புரிய வேண்டும் என்றும் வரம் வாங்கியிருந்தார். அவர் பொதிகையை அடைந்ததும் உலகம் சமன்பட்டது. பின்னர், திருக் குற்றாலத்தில் ஈசனின் திருமணக்கோலத்தைத் தரிசித்தவர், அங்கிருந்து புறப்பட்டு ஒவ்வொரு தலமாகத் தரிசித்தபடி அச்சிறுபாக்கம் எனும் திருத்தலத்தை அடைந்தார். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிறது அச்சிறுபாக்கம். இங்கிருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் உள்ள கிராமம் பெரும்பேர்கண்டிகை. அச்சிறுபாக்கத்தில் இருந்து இந்தக் கிராமத்துக்கு வந்த அகத்தியர், இங்கே மலைக்குமேல் கோயில் கொண்டிருக்கும் முருகப்பெருமானை மனம்குளிர தரிசித்து வழிபட்டார்.

பிறகு, அடிவாரத்தில் இருந்து மேற்கில் சுமார் 1 கி.மீ தூரத்தில், சிவனார் சுயம்புவாக எழுந்தருளியுள்ள பெரும்பேர்கண்டிகை சிவாலயத் துக்கு வந்தார்.  ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் எனும் திருப்பெயருடன் அருளும் ஸ்வாமியைத் தரிசித்தவர், அங்கேயும் இறைவனின் திருமணக் கோலத்தைக் காண விரும்பி,  `திருவாத்தி' மரத்தடியில் அமர்ந்து தவம் செய்ய ஆரம்பித்தார். அவரது விருப்பத்தை நிறைவேற்ற விரும்பிய இறைவன், சித்ரா பெளர்ணமி தினத்தில் அகத்தியருக்குத் தமது திருமணக் கோலத்தைக் காட்டி அருளினார்.

அதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும்  சித்ரா பெளர்ணமி யில் இந்த வைபவம் வெகு விமர்சை யாகக் கொண்டாடப்படுகிறது. சித்ரா பௌர்ணமியன்று, அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரரும், பெரும்பேர்கண்டிகை மலையில் உள்ள முருகப்பெருமானும், மகா மேரு மலை, சஞ்சீவி மலை ஆகிய மலைகள் சந்திக்கும் பகுதியான `இரட்டை மலைச் சந்தில்' சந்தித்துக் கொள்வார்கள். அங்கே சிவனாரை ஆராதிக்கும் முருகப்பெருமான், மணக்கோலத்தில் சிவனையும் பார்வதியையும் பெரும்பேர் கண்டிகைக்கு அழைத்து வந்து அகத்தியருக்குத் தரிசனம் தருவதாக ஐதீகம்.

இன்னொரு கதையையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

சிவபெருமான் திரிபுரம் எரிக்கச் சென்றபோது விநாயகரைத் தொழ மறந்ததால், தேரின் அச்சு முறிந்தது. அந்த இடமே அச்சிறுபாக்கம் என்பர். இவ்வாறு தடங்கல் ஏற்பட்டதால் அங்கேயே அமர்ந்துவிட்ட சிவனாரைத் தடுத்தாட் கொண்ட அம்பாள், அவரை பெரும்பேர் கண்டிகைக்கு அழைத்து வந்ததாகவும், இங்கே மணலால் லிங்கம் ஸ்தாபித்து வழிபட்டாள்; அகத்தியருக்கும் மணக்கோல தரிசனம் கிடைத்தது என்கிறது ஸ்தல வரலாறு.

மணலால் உருவான லிங்கம் என்பதால், சுவாமிக்கு அபிஷேகம் கிடையாது. செப்புக் கவசம் மட்டுமே அணிவிக்கப்பட்டுள்ளது. 

சுவாமியை அம்பாள் தடுத்தாட்கொண்டு அழைத்துவந்ததால்தான் அவளுக்கு தடுத்தாட் கொண்ட நாயகி எனும் திருப்பெயர் ஏற்பட்டதாகக் கூறுகிறார்கள். அதேபோல், அச்சு முறிந்ததை அறிந்த முருகப் பெருமான், அச்சிறுபாக்கத்துக்கு வந்து சிவ பெருமானை தரிசித்து ஆலோசித்தவர், பிரச்னை தீர்ந்ததும் பெரும்பேர்கண்டிகை மலையில் கோயில்கொண்டார் என்கிறார்கள்.

அப்பப்பா... கதைக்குள் கதையாக எத்தனை அற்புதங்கள் இந்தத் தலத்துக்கு?!

தலத்துக்கு மட்டுமல்ல; சித்திரைத் திருவிழாவுக்கும் ஒரு சிறப்பு உண்டு என்கிறார்கள். என்ன தெரியுமா?

பொதுவாக, கோயில்களில் பிரம்மோற்ஸவம் முடிந்து, நவசந்தி காப்பை அவிழ்த்ததுமே சுவாமி, கோயிலுக்குள் சென்றுவிடுவார். ஆனால், அச்சிறு பாக்கம் ஆட்சீஸ்வரர் மட்டும் பிரம்மோற்ஸவம் முடிந்து, நவசந்தி காப்பை அவிழ்த்ததும், பெரும்பேர்கண்டிகைக்கு வந்து அகத்தியருக்குத் திருமணக் கோலத்தில் தரிசனம் தந்துவிட்டு, மறுநாள்தான் அச்சிறுபாக்கம் கோயிலுக்கு எழுந்தருள்வார் என்பதே அந்தச் சிறப்பு.

பல்லவர்களும், பிற்காலச் சோழர்களும் பெரும்பேர்கண்டிகை கோயிலுக் குத் திருப்பணி செய்துள்ளனர்; மானியம் கொடுத்துள்ளனர். பல்லவர்கள் தங்கள் வெற்றி என்றென்றும் நிலைக்க வேண்டும் என்பதற்காக, இக்கோயிலில்  கனகதுர்கையை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். பிற்காலச் சோழர்களின் திருப்பணிகள் குறித்து கல்வெட்டுத் தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.
சுமார் 300 வருடத்துக்கு முன்பு சிவன் சந்நிதியை மட்டும் புதுப்பித்து சிறிய அளவில் ஆலயம் எழுப்பியிருக்கிறார்கள். இக்கோயிலின் பிரதானமான பிரசாதம் பால். அகத்தியர் வழிபட்ட ஆலயம் என்பதால் தீர்த்தமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இங்கு வந்து, சிவனாரை வழிபட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும்; அமிர்தவர்ஷினி ராகம் இசைத்தபடி, சங்கு அபிஷேகம் செய்தால் பாவங்கள் நீங்கும் என்கிறார்கள். அஷ்டமி மற்றும் பௌர்ணமி தினங்களில் சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது. அதேபோல், இங்கு அருளும் சாமுண்டீஸ்வரிக்கு (ஸ்ரீரணபத்ரகாளி), பூசணிக்காயில் தீபமேற்றி வழிபட்டால் வாஸ்து தோஷம், சொத்து தகராறு, கணவன் - மனைவிக்கு இடையில் உள்ள கருத்து வேறுபாடுகள் ஆகியன நீங்கும் என்பது நம்பிக்கை. 
மகத்துவமான இந்தக் கோயிலில் கும்பாபிஷேகத்துக்கான திருப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நீங்களும் இத்தலத்துக்குச் சென்று அம்பாள் வழிபட்ட ஆண்டவனை, அகத்தியருக்கு அருள்செய்த ஐயனை மனதார வழிபட்டு வாருங்கள். கோயில் திருப்பணிக்கும் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்குங்கள். சிவனருளால் உங்கள் குடும்பம் செழிக்கும்; வாழ்க்கைச் சிறக்கும்.

அபூர்வ மடிச் சங்கு
ரு கோடி வலம்புரிச் சங்கு உருவானால், ஒரு மடிச் சங்கு உருவாகும் என்பர். அப்படியான மடிச்சங்கு இந்த ஆலயத்தில் உள்ளது. ஆயிரம் வருடத்துக்கு மேற்பட்ட சங்கு இது. திருவாவடுதுறை ஆதீனத்தின் ஓலைச்சுவடியில் இந்தச் சங்கு பற்றிய குறிப்புகள் உண்டு என்கிறார்கள். இதை காராம்பசுவின் மடியருகே  கொண்டு சென்றால், பசு தானாகவே பால்சுரக்குமாம்! இந்தச் சங்கினால் அபிஷேகம் செய்யும்போது, அமிர்தவர்ஷினி ராகத்தில் இசை வாசித்தால், மழை பெய்யும், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. மேலும், இந்தச் சங்கைக் கொண்டு ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்வது, அம்பாளே அபிஷேகம் செய்வதற்குச் சமம் என்கிறார்கள்.

உங்கள் கவனத்துக்கு...
தலத்தின் பெயர்: பெரும்பேர்கண்டிகை

ஸ்வாமி: ஸ்ரீதான்தோன்றீஸ்வரர்

அம்பாள்:  ஸ்ரீதடுத்தாட்கொண்ட நாயகி

செல்லும் வழி: சென்னை - திருச்சி நெடுஞ் சாலையில் தொழுப்பேடு என்ற இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்து உள்ளது பெரும்பேர்கண்டிகை. தொழுப்பேடு ரயில் நிலையத் திலிருந்தும், பேருந்து நிலையத்திலிருந்தும் ஆட்டோ வசதி உண்டு.

தொடர்புக்கு: ரவிச்சந்திர சிவாச்சார்யர் 9952965215

Comments