சிவமே என் சிவமே!

தினெட்டு ஆண்டுகால பந்தம் எனக்கும் பிரம்ம புரீஸ்வரருக்கும்’’ பரவசம் பொங்கச் சொல்கிறார் திருப்பட்டூர் பாஸ்கர குருக்கள். சிவபெருமானின் குனித்த புருவத்தையும், கொவ்வைச் செவ்வாயின் குமிண் சிரிப்பையும், வெண்ணீறு திகழும் பவழ மேனியையும், இனித்தமுடன் எடுத்த பொற்பாதத்தையும் தரிசிப்பதையே, பெறும் பேறாகப் போற்றும் அப்பர் அடிகள், அத்தகைய பாக்கியம் கிடைக்கும் எனில், ‘மனிதப் பிறவியும் வேண்டுவதே’ என்கிறார். அப்படியிருக்க, சிவனாரின் திருமேனியைத் தொட்டு ஆராதிக்கும் பேறு கிடைப்பது, பெரும் பாக்கியம் அல்லவா?

அவ்வகையில் சிவாச்சார்யர்கள் கொடுத்துவைத்தவர்கள். ‘முப்பொழுதும் திருமேனி தீண்டுவார்’ என ஞானநூல்கள் எல்லாம் போற்றும் அவர்களது சிவானுபவங்களும் நமது சிந்தையைச் சிலிர்க்கச் செய்வனவாகும். `அப்படியான சிவானுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்' என்றதுதான் தாமதம், பாஸ்கர குருக்களிடம் இருந்து கங்கையென பிரவகித்தன, திருப்பட்டூர் அற்புதங்கள்.

‘‘பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு மார்ச் மாதத்தின் நிறைவில், அந்த பாஸ்கரன் (சூரியன்) தனது கதிர்களால் எம்பெருமானின் திருமேனியைத் தொட்டுத் தழுவி பூஜித்த அதேநாளில்தான், இந்த பாஸ்கரனுக்கும் பிரம்ம புரீஸ்வரருக்கு பூஜைகள் செய்து ஆராதிக்கும் பெரும்பேறு கிடைத்தது.

ஆமாம்! எனக்குள் சிவானுபவச் சிலிர்ப்பைத் தந்த முதல் சம்பவம் அதுதான். ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத்தின் மூன்று நாட்களில் சூரியக்கடவுள் திருப்பட்டூர் ஈஸ்வரனை பூஜிப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். அதை அருகிலிருந்து தரிசிக்கும் பாக்கியம் எத்தனைப்பேருக்குக் கிடைக்கும்? எனக்கு அது கிடைத்தது, பூர்வஜன்ம கொடுப்பினை என்றே சொல்ல வேண்டும்’’ என்று நெஞ்சில் கை வைத்து, கருவறையை நோக்கி சிரம் தாழ்த்தி, பிரம்மபுரீஸ்வரரை ஒருமுறை வணங்கியவர், மேலும் தொடர்ந்தார்.

‘‘அகங்காரம் மிகுந்துவிட்டால்... அவர் யாராக இருந்தாலும் ஆண்டவனின் தண்டனையில் இருந்து நிச்சயம் தப்பமுடியாது. அதேநேரம், தனது தவற்றை உணர்ந்தவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; வாழ்வில் மகத்துவமும் உண்டு. இதற்கு அத்தாட்சியாகத் திகழும் தலம் இது. கர்வம் மிகுந்த பிரம்மதேவர் தண்டனை அடைந்தார். பின்னர், அவர் தமது தவற்றை உணர்ந்து சிவனாரை வழிபட, ஒரு நிபந்தனையோடு அவருக்கு விமோசனம் தந்தார் ஈஸ்வரன்; ‘விதி இருப்பின் விதி கூட்டி அருள்க’ என்றும் ஆணையிட்டார். அதாவது ‘யாருக்கெல்லாம் இந்தத் தலத்துக்கு வர வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறதோ, அவரே இங்கு வர இயலும். அப்படி வருபவர்களின் தலையெழுத்தை நல்லவிதமாக மாற்றியருள வேண்டும்’ என்ற நிபந்தனையோடு பிரம்மனுக்கு அருள் செய்தாராம் இந்த பிரம்மபுரீஸ்வரர். அதன்படியே, இந்தக் கோயிலில் தனிச் சந்நிதி கொண்டு அருள் பாலிக்கிறார் பிரம்மதேவன்.

‘குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வரா’ என்று துதிப்போம் அல்லவா? அவ்வகையில், இங்கே கோஷ்டத்தில் குருவையும், அவருக்கு எதிரில் பிரம்மன் சந்நிதியையும், அடுத்ததாக சிவனார் கருவறைக்குப் பின்புற கோஷ்டத் தில் விஷ்ணுவையும் தரிசித்து மகிழ முடியும்’’ - திருப்பட்டூரின் மகிமையைச் சுருங்கச் சொல்லிமுடித்த பாஸ்கர குருக்கள், அடுத்து தனது அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.

‘‘ஆரம்ப காலத்தில் கோயிலுக்கு இவ்வளவு கூட்டம் வராது. நெடுஞ்சாலையில் சிறுகனூரில் இறங்கி, நானும் நண்பன் ஒருவனும் நடந்தே வருவோம். அப்போது என்னுடன் நடந்து வந்த நண்பன் இன்று காரில் வரும் அளவுக்கு உயர்ந்திருக்கிறான். இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், உடன் வந்த அவனுக்கே அவ்வளவு அனுக்கிரகம் கிடைத்தது எனில், என்னை என் சிவம் விட்டுவிடுமா என்ன? பிரம்மசாரியாய் சிவப்பணிக்கு வந்த எனக்கு, நல்லதொரு குடும்பம், வீடு-வாசல் எல்லாமே அமைந்தது என்றால், அது அவரால்தான்.

வீடு என்றதும்தான் நினைவுக்கு வருகிறது... கோயிலுக்கு அருகிலேயே எனக்கொரு வீடு தரப்பட்டிருந்தது.  திடுமென ஒரு நாள் பற்றியெரிந்தது அந்த வீடு. உயிராபத்து எதுவும் இல்லை என்றாலும் உடைமைகள் சாம்பலாவதைத் தவிர்க்க முடியவில்லை. எனக்கு வருத்தம்தான் என்றாலும், அதை உள்ளுக்குள்ளேயே தேக்கிவைத்துக் கொள்ளவில்லை நான். ‘மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே’ என்று அப்பர்பெருமான் பாடி வைத்திருக்கிறாரே... அதன்படி, எனது இந்த துன்ப வெம்மையையும் சிவனருள் தணிக்கும் என்று திடமாக நம்பினேன்.

அந்த நம்பிக்கை வீண்போகவில்லை. வெகு சீக்கிரமே அருமையான ஓர் இடமும், அதில் அழகானதொரு வீடும் கட்டுவதற்கு வாய்ப்பளித்தார் பிரம்மபுரீஸ்வரர். ஒருவேளை, தீ விபத்து நிகழ்ந்திராவிட்டால், ‘சொந்த வீடு’ என்ற எண்ணமே எனக்கு எழாமல் இருந்திருக்கலாம்.

எவ்விதமான பொருள் வளமும் இல்லாத நிலையிலும், எப்படி எப்படியெல்லாமோ உதவி வந்து சேர, திருப்பட்டூரிலேயே புதியதொரு வீடு கிடைத்தது என்றால், அது பிரம்மபுரீஸ்வரரின் திருவருளால்தான்!’’ என்று கூறிவிட்டு சற்றே நிறுத்தி யோசனையில் ஆழ்ந்தவர், பிறகு ஏதோ நினைவுக்கு வந்தவராக மலர்ச்சியுடன் பேச ஆரம்பித்தார்.

‘‘எனக்கு மட்டுமல்ல, இங்கு வரும் ஒவ்வொருவருக்கும் பிரம்ம புரீஸ்வரரின் திருவருள் பரிபூரணமாகக் கிடைக்கும். அவரருளால் அவர் தாள் பணிந்து அன்பர்கள் அருள்பெற்ற கதைகள் ஏராளம் உள்ளன. அவற்றில் ஒன்றை மட்டும் சொல்கிறேன்...

இங்கே பிரம்மனின் திருவடியிலும் ஸ்வாமியின் சந்நிதியிலும் ஜாதகத்தை வைத்து வணங்கி வழிபடுவது விசேஷம் அல்லவா? அப்படி ஒரு குடும்பத்தினர் பிள்ளையின் ஜாதகத்தைக் கொண்டு வந்தார்கள். அவர்களின் பிள்ளைக்கு சிலபல இடங்கள் தட்டிப் போகவே, பிரம்மபுரீஸ்வரரைச் சரணடைய வந்துவிட்டார்கள்.

நானும் மனப்பூர்வமாக ஸ்வாமியிடம் வேண்டிக்கொண்டேன், `அந்தப் பிள்ளைக்கு சீக்கிரமே கல்யாணம் நடக்கட்டும்' என்று. அந்த ஜாதகத்தை ஸ்வாமியின் திருமுன் நான் வைக்கும்போது, மற்றொரு தம்பதி வந்து ஒரு ஜாதகத்தை தந்தார்கள். அது அவர் களுடைய பெண்ணின் ஜாதகம்.  சொன்னால் நம்பமாட்டீர்கள்...  இரண்டு ஜாதகத்துக்கும் அப்படியொரு பொருத்தம். அங்கேயே  ஸ்வாமி சந்நிதியிலேயே பிள்ளைக்கும் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயமானது! இந்த அற்புதத்தை என்னவென்பது?’’

கேள்வியோடு நிறுத்தியவர், ‘‘ஸ்வாமி மட்டுமல்ல, அம்பாளும் சிறந்த வரப்பிரசாதி. அருள்வதில் ஐயன் கற்பகவிருட்சம் என்றால் அம்பாள் காமதேனு. ஆக, ஒருமுறை திருப்பட்டூர் வந்தால், அதன் பிறகு வாழ்வில் ஒருபோதும் குறையே இருக்காது!’’ என்றபடி, சந்நிதியின் திருநடையைக் கண்களில் ஒற்றிக்கொண்டு உள்ளே நுழைந்தவர்,  மணியோசையுடன் தீபாராதனைக் காட்டினார்.

அந்தத் தீப ஒளியில் ஜகஜ்ஜோதியாக ஒளிர்ந்த லிங்கத் திருமேனியில் திருப்பட்டூர் பரமன் எழுந்தருளி, தன் அடியவன் சொன்னதெல்லாம் உண்மையே என்று ஆமோதித்துப் புன்னகைப்பதாகப் பட்டது நமக்கு.

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

Comments