இந்தக் கோயில் பொலிவு பெறும்’ - மகா பெரியவரின் அருள்வாக்கு!

பரமனின் பரம கருணையால் நயப்பாக்கம் சிவாலயத் திருப்பணிகள் மிக அற்புதமாக நடந்து கொண்டிருக்கின்றன என்பது ஒருபுறம் இருக்க, அன்பர் ராமச்சந்திரன் நம்மிடம் பகிர்ந்து கொண் டது, வேறொரு கோயிலைப்பற்றி.

‘‘ஞாயிற்றுக்கிழமை செய்யாறு அருகில் ஒரு கோயிலில் உழவாரப்பணி செய்யப்போகிறோம். நீங்களும் வருகிறீர்களா?’’ எனக் கேட்டார். கரும்பு தின்ன கசக்குமா என்ன? உடனே ஒப்புக்கொண்ட துடன், ‘‘எந்தக் கோயில், ஸ்வாமி பெயரென்ன?’’ என்று நாம் விசாரித்தபோது, அப்போதைக்கு போனிலும் பிறகு அவர்களோடு பயணித்து கோயிலுக்குச் சென்றபோது நேரிலுமாக அன்பர் சொன்ன விவரங்கள், சிலிர்க்கச்செய்பவை!

ஆமாம்! கோயிலின் நிலையும், அதன் பூர்வீகத்தை அண்ணாமலையார் அறப்பணிக் குழு அன்பர்கள் அறிந்துகொண்ட கதையும், நயப்பாக்கம் கோயில் சரித்திரத்தையும் விஞ்சுவன!

அன்பர் ராமச்சந்திரன் போனில் குறிப்பிட்டது போலவே, ஞாயிறன்று அதிகாலையில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் காத்திருந்த பேருந்தில் ஏறி, அறப்பணிக்குழு அன்பர்களோடு சேர்ந்து கொண் டோம். சுமார் ஆறரை மணியளவில் பேருந்து புறப்பட்டது. அன்பர்களில் சிலர் சிவநாம துதிகளைச் சொல்லிக்கொண்டிருக்க, இன்னும் சிலர் திருக்கதைகளையும் அனுபவங்களையும் பேசியபடி வந்தார்கள். நாம், அன்பர் ராமச் சந்திரனின் அருகில் அமர்ந்துகொண்டோம்.

செய்யாறு அருகில் கோயில் இருக்கும் இடத்தை அடைவதற்கு எப்படியும் மூன்று மணி நேரம் ஆகும் என்பதால், அதுவரையிலும் அன்பரிடம் கோயிலின் திருக்கதையைக் கேட்டறியலாம் என்பது எண்ணம். அவரும் வெகு பரவசத் தோடு சில சம்பவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

‘‘திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ள வெள்ளை கிராமத்தில்தான் நான் குறிப்பிட்ட கோயில் இருக்கிறது. 300 வருட காலம் பழைமையான கோயில். ஏறக்குறைய நூறு வருடங்களாக வழிபாடுகளே நடக்கவில்லையாம். அவ்வளவு ஏன்... ஸ்வாமி விக்கிரகங்களே கிடையாது தெரியுமா?’’ என்று வார்த்தைக்கு வார்த்தை நமது அதிர்ச்சியைப் பன்மடங்காக்கிக் கொண்டிருந்தார் ராமச்சந்திரன். அவரை இடைமறித்து, ‘‘ஆனால்... ஸ்வாமி பெயர் வாக்புரீஸ்வரர், அம்பாள் பிரஹன்நாயகி என்று சொன்னீர்களே..?’’ என்று கேட்டோம்.

`ஸ்வாமி சிலைகளே இல்லையென்றால் திருப் பெயர்கள் எப்படித் தெரியவந்தன?' என்ற நமது சந்தேகத்தைப் புரிந்துகொண்டவராகத் தலை அசைத்தபடி பேச்சைத் தொடர்ந்தார் ராமச் சந்திரன்... ‘‘2015-ல் நயப்பாக்கம் கோயில் உழவாரப் பணி நிமித்தமாகச் செய்யாறு வந்தபோது, அந்தக் கோயிலில் திருப்பணி செய்துகொண்டிருக்கும் ஸ்தபதி சொல்லித்தான் இங்கே இப்படியொரு கோயில் இருப்பது எங்களுக்குத் தெரியவந்தது.

‘சுக்ல-யஜுர் வேதப் பாராயணம் தொடர்ச்சியாக நடைபெற்ற திருக்கோயில் இது. அம்பாள் பிரஹன்நாயகியுடன் வாக்புரீஸ்வரர் அருளாட்சி செய்த தலம் இது. அதுமட்டுமா? பிரசன்ன வேங்கடாசலபதிக்கும் இங்கே தனிச் சந்நிதி இருந்திருக்கிறது. அந்தப் பெருமாள், நாமம் வைத்த பாதம், நான்கு திருக்கரங்களுடன் புல்லாங்குழல் ஏந்தியவராக அருள்பாலித்திருக்கிறார். கருடன் மற்றும் மதுரைவீரன் விக்கிரகங்களும் கோயிலில் இருந்திருக்கின்றன.

அதுமட்டுமா? மும்மூர்த்திகள், இந்திராதி தேவர்கள், 88,000 முனிவர்கள், நவகோடி சித்தர்கள், கின்னரர்கள், கிம்புருடர்கள், கந்தர்வர்கள், சித்தவித்யாதரர், யட்சர், அட்டதிக்கு பாலகர்கள், எண்ணாயிரம் வகைகளைக் கொண்ட உயிரினங் கள் ஆகிய யாவருக்கும் முக்காலமும் வழிகாட்டும் விதம் காகபுஜண்டரைப் படைத்தார் இறைவன் என்கின்றன ஞான நூல்கள். அப்படியான மகத்துவம் மிக்க சிரஞ்ஜீவி சித்தர் காகபுஜண்டரின் ஜீவசமாதியும் இக்கோயிலில் உள்ளது என்பது சிறப்பம்சம்.’’

‘‘அடேங்கப்பா! இவ்வளவு சிறப்புகளா அந்தக் கோயிலுக்கு. அதுசரி, இவ்வளவு மகத்துவங்கள் உண்டு என்று யார் மூலம் தெரிந்துகொண்டீர்கள்? உள்ளூர் மக்களிடம் விசாரித்தீர்களா?’’

இந்தக் கேள்விக்கு ``இல்லை... இல்லை'' என்று  மறுத்தவர், ‘‘இந்த ஊர்க்காரர்களுக்கு மட்டுமல்ல, சுற்றுவட்டார ஊர்களில் வசிக்கும் எவருக்கும் இந்தக் கோயில் பற்றி எந்தவொரு விவரமும் தெரியவில்லை’’ என்றார்.

கேள்வியும் பதிலுமாகத் தொடர்ந்தது, எங்களின் உரையாடல். நாம் அடுத்த கேள்வியை முன்வைத்தோம்.

‘‘பிறகு எப்படித் தெரிந்துகொண்டீர்கள்?’’

‘‘அதுதான் அற்புதம்!’’ என்று ஒற்றைவரி பதிலைத் தந்துவிட்டு, ஒருவிதச் சிலிர்ப்புடன் ஒரு கணம் கண்மூடி, கைகூப்பி வணங்கியவர், பிறகு  ‘‘எல்லாம் மகா பெரியவா செய்த அனுக்கிரஹம்’’ என்றார் மலர்ந்த சிரிப்புடன்.  மேற்கொண்டு பேசத் துவங்குவதற்குள், ஓட்டுநர் வழி விவரம் கேட்டு அன்பர் ராமச்சந்திரனை முன்பக்கம் அழைக்கவே, பேருந்தில் வைத்து அதற்குமேல் அவருடன் பேச்சைத் தொடரமுடியவில்லை.

நாம் யூகித்தபடியே சரியாக மூன்று மணி நேரத்தில் எங்களது பேருந்து, அந்த இடத்தை அடைந்தது. கோயிலைத் தரிசிக்கும் ஆவலுடன் பேருந்தில் இருந்து கீழே இறங்கினோம். ஆனால், அங்கே பேரதிர்ச்சி காத்திருந்தது எங்களுக்கு.

ஆமாம், கோயிலொன்று அங்கே இருப்பதற்கான எந்தச் சுவட்டையும் காணோம். பெரும் மரங்களும், செடிகொடிகளும், முட்புதர்களும் மண்டி... காடாகக் காட்சியளித்தது அந்த இடம். என்னைப் போலவே மற்றவர்களும் அதிர்ச்சியை உள்வாங்கியிருக்க வேண்டும். எல்லோருமாகச் சேர்ந்து ‘‘கோயில் எங்கே?’’ என்று கோரஸாகக் கேட்க, ஓரிடத்தை நோக்கி கைகாட்டினார், குழு ஒருங்கிணைப்பாளர் களில் ஒருவரான அன்பர் ராமதாஸ்.

அவர் சுட்டிக்காட்டிய இடத்திலும் கோபுரமோ, விமானமோ, மதில்களோ எதுவும் புலப்படவில்லை. எதுவும் புரியாமல் அவரைப் பின்தொடர்ந்தோம். அவர், முட்புதர்களை விலக்கி ஓர் ஒற்றையடிப் பாதையில் எங்களை அழைத்துச்சென்றார். பத்துப் பதினைந்து அடிகள் நடந்தபிறகே, செங்கற்களல் கட்டப்பட்ட‌ பழைமையான அந்தக் கோயில் தெரிந்தது. அருகில் நெருங்கிச் சென்று பார்க்கும்போதுதான் அதுவொரு கோயில் சந்நிதி என்று உறுதிசெய்ய முடியும். அந்தளவுக்குச் சிதிலம் அடைந்திருந்தது அந்தச் சந்நிதி. அதன் சுவர்களை பெரியதொரு விருட்சத்தின் பெரும் வேர்கள் ஊடுருவியிருந்தன. செடிகொடிகளும் தங்கள் பங்குக்கு ஆக்கிரமித்திருந்தன.

‘‘இதுதான் மூலவர் சந்நிதி’’ என்றார்  ராமதாஸ். அந்தச் சந்நிதிக்கு மட்டுமல்ல, அருகருகே அமைந் திருந்த மற்ற சந்நிதிகளுக்கும் அதே நிலைமைதான்.

பாராளும் பரமனின் ஆலயம் பராமரிப்பின்றி, இப்படியொரு நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக் கிறதே என்று எண்ணியபோது மனம் கனத்தது. நம்மையும் அறியாமல் கண்களில் நீர் கசிந்தது.

‘உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்’ என்பார்கள் பெரியோர்கள். அது பக்குவம் மிகுந்தவர்களுக்கு. தனக்குள் இறையை உணரும் அந்தப் பக்குவம் வரும்வரையிலும், மனிதன் இறைவனைத் தேடிச் செல்லும் இடமாகவும் அல்லது அப்படியொரு பக்குவத்தை வளர்க்கும் தலமாகவும்தான் கோயில்களை எழுப்பி வைத்தார்கள், நம் முன்னோர்கள்.

ராஜகோபுரமே திருப்பாதம், கொடிமரம் இருக்குமிடம் நாபிக் கமலம், கர்ப்பக்கிரகம்தான் சிரசு என்றெல்லாம் ஒப்பிட்டுப் பாடம் நடத்து கின்றனவே சிற்ப ஆகமங்கள். அட, இப்படியான தத்துவங்களை விடுங்கள்... படையெடுப்புக் காலத்தில் பாதுகாப்புக் கோட்டைகளாகவும், பஞ்சம் மிகும் காலத்தில் உணவளிக்கும் களஞ்சியங் களாகவும்,  பண்டைய கலாசாரத்தைச் சிற்பங்கள் மூலம் எதிர்காலச் சந்ததிக்கு எடுத்துச் சொல்லும்  கலைப்பொக்கிஷங்களாகவும் அல்லவா பெருங் கோயில்களை நம் மன்னர்கள் கட்டிவைத்தார்கள்?!

இப்படியான பெருமைகளை, கோயில்களின் மகிமைகளை அறியும் திறன்  இல்லாவிட்டாலும்கூட,   நீண்டநெடிய நமது வரலாற்றின் சாட்சியங்கள், ஊரின் நீராதாரம் என்ற அடிப்படையிலாவது ஆலயங்களையும் அதன் குளங்களையும் பாதுகாப்பது நமது பொறுப்பல்லவா?!

இங்ஙனம், ஆலயத்தின் நிலைகண்டு உள்ளுக் குள் உருகிக் கொண்டிருந்த நம்மை உசுப்பியது ராமச்சந்திரனின் குரல்!

‘‘நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பூஜைகளே காணாத கோயில். சுவர்களில் வேர்விட்டு வளர்ந் திருக்கும் மரங்களைப் பாருங்கள்! எங்கே, இன்னும் சில காலம் விட்டுவைத்தால், எஞ்சியிருக்கும் செங்கற்களும் உதிர்ந்துவிழுந்து, கோயில் தரைமட்டம் ஆகிவிடுமோ என்ற அக்கறை யோடுதான் இந்தக் கட்டடங்களைத்  தங்களது வேர்களால் இந்த மரங்கள் கட்டி வைத்திருப்ப தாகவேபடுகிறது எனக்கு!''

உணர்ச்சி மேலீட்டில், வேடிக்கையாக அவர் இதைக் கூறினாலும்,  சிலந்தி வலைபோன்று பெரும் வேர்களால் கட்டடத்தைப் பிணைத்து நிற்கும் மரங்களைப் பார்க்கும்போது, ஒருவேளை அவர் கூறுவது நிஜம்தானோ என்றே நமக்கும் எண்ணத் தோன்றியது. அத்துடன், `மகா பெரியவா செய்த அனுக்கிரஹம் என்றாரே... அதென்ன விஷயமாக இருக்கும்?' என்ற கேள்வி நம்மை உந்தித்தள்ள, அதுகுறித்து நினைவூட்டினோம்.

``அதுபற்றி நான் சொல்கிறேன்'' என்றபடி பேச ஆரம்பித்தார் அன்பர் ராமதாஸ்.

``சென்னை மாம்பலத்தில் மகா பெரியவாளின் பக்தை ஒருவர் உண்டு. மகா பெரியவா பிரத்யட்சமா பேசி அருள்பாலிக்கும் பாக்கியம் பெற்றவர் அவர். நாங்கள் எந்தத் திருப்பணி செய்தாலும் அவரிடம் விவரம் சொல்லி, அவர் மூலம் மகா பெரியவரின் அருள்வாக்கும் ஆசியும் பெற்ற பிறகே பணியைத் தொடங்குவோம். அப்படித்தான் நயப்பாக்கம் திருப்பணி பற்றிப் பேசுவதற்காகச் சென்றிருந்தோம். முன்னதாக ஸ்தபதி அன்புக்கரசு மூலம் எங்கள் கவனத்துக்கு வந்த இந்தக் கோயிலைப் பற்றியும் அவரிடம் சொன்னோம். அப்போதுதான் அவர் மூலம் மகா பெரியவரின் அருள்வாக்கும் அனுக்கிரஹமும் எங்களுக்குக் கிடைத்தது'' என்றவர், சற்று நிதானித்துவிட்டு, அருள்வாக்கு குறித்தும் விவரித்தார்.

``ஸ்வாமி வாக்புரீஸ்வரர், அம்பாள் பிரஹன் நாயகி, பெருமாள் மற்றும் ஜீவசமாதி என்று இங்குள்ள விஷயங்களை நேரில் பார்த்ததுபோல் துல்லியமாகச் சொன்னதோடு, வேறு சில அபூர்வ விஷயங்களையும் மகா பெரியவரின் அருள்வாக்காக  எங்களிடம் பகிர்ந்துகொண்டார்.

அதாவது, இந்தக் கோயில் இப்போது பாழடைந்து கிடந்தாலும் விரைவில் திருப்பணிகள் நடக்கும். நீங்கள் உழவாரப்பணி மட்டும்தான் செய்வீர்கள். கடற்கரை நகரத்தில் இருந்து வரும் ஒருவர்தான் இந்தக் கோயிலைப் புனரமைத்துக் கட்டுவார். நீங்கள், இந்தக் கோயிலைப் பற்றி எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள். பல தலை முறைகளாக தங்களின் குலதெய்வம் தெரியாமல் இருப்பவர்களுக்கும், செய்யாறு நதிக்கரையோரம் குலதெய்வத்தைத் தேடிக்கொண்டு இருப்பவர் களுக்கும் இதுதான் குலதெய்வக் கோயிலாக இருக்கும், எனப் பல விவரங்கள் மகா பெரியவரின் அருள்வாக்காக எங்களுக்குக் கிடைத்தன'' என்றவர், மேலும் தொடர்ந்தார்...

``அதோ அங்கே கூம்பு வடிவில் சின்ன சந்நிதி உள்ளது பாருங்கள்... அது காகபுஜண்டரின் ஜீவ சமாதி என்பதும் அருள்வாக்கு மூலம் தெரியவந்தது. முதலில் அந்தச் சந்நிதியைச் சுத்தம் செய்து, காக புஜண்டருக்கு எள்ளுச்சாதம் நிவேதித்து  பூஜித்த பிறகே உழவாரப்பணியை ஆரம்பிக்க வேண்டும் என்ற உத்தரவும் அருள்வாக்காகக் கிடைத்தது'' என்றார் பரவசத்துடன்.

பேசிக்கொண்டே நாங்கள் காகபுஜண்டரின் சந்நிதியை அடைந்திருந்தோம். சிறியளவில் சுமார் இரண்டடி உயர வாயிலுடன் திகழ்கிறது அந்தச் சந்நிதி. உள்ளே செல்ல வேண்டுமென்றால், அமர்ந்தபடியேதான் செல்லமுடியும். அதேபோல், அந்தச் சந்நிதிக்குள் இருவர் மட்டுமே உட்கார முடியும்.

கோயிலையும் ஜீவசமாதியையும் அன்பர்கள் சுற்றி வந்து, அருள்வாக்குப்படி சித்தருக்குப் பூஜை செய்தபிறகு உழவாரப்பணி துவங்கியது. அண்ணா மலையார் அறப்பணிக்குழுவைச் சேர்ந்த எழுபதுக்கும் மேற்பட்டோர் உழவாரப்பணியில் ஈடுபட்டனர். முதலில், கோயில் மீதிருந்த செடிகளை அகற்றும் பணி துவங்கியது. ஒருசிலர் புதர்களை அகற்ற, வேறு சில அன்பர்கள் தங்களால் இயன்றவரையிலும் கோயில் கோபுரத்தின்மீது இருந்த வேர்களையும், கிளைகளையும் அப்புறப்படுத்துவதில் முனைந்திருந்தனர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண்களும் பெண்களுமாக உழவாரப்பணியில் மும்முரம் காட்ட, சுமார் ஆறு மணி நேரத்தில் காடு போல் கிடந்த இடம் திருத்தப்பட்டு, கொஞ்சம் தொலைவில் இருந்து பார்த்தாலும் கோயில் புலப்படும் அளவுக்குப் பளிச்சென்றானது அந்த இடம்! அடியார்கள் முகத்தில், அவர்களது களைப்பையும் மீறிய‌ மகிழ்ச்சியையும் பூரிப்பையும் பார்க்க முடிந்தது. கோயிலைச் சுத்தம் செய்த பிறகு, மூலவர் சந்நிதியில் பூ-பழம் வைத்து விளக்கேற்றி, பெரியவாளின் திருப்படத்தையும் வைத்து வழிபட்டோம். திருமேனி எதுவும் இல்லையென்றாலும், அங்கு கம்பீரமாக எழுந்தருளப் போகும் ஈஸ்வரனை மனக்கண்ணால் தரிசித்தோம்; தெய்வ சாந்நித்தியத்தை நன்கு உணரமுடிந்தது நம்மால். பூஜைக்குப் பிறகு சிறிது களைப்பாறிவிட்டு மதிய உணவு அருந்தினோம். சாப்பிடும்போது, அன்பர் கணபதி  இந்தக் கோயில் குறித்து தான் ப்ரச்னம் பார்த்த  விவரத்தை அடியார்களிடம் பகிர்ந்துகொண்டார்.

“அபரிமிதமான தெய்வ சாந்நித்யம் கொண்ட கோயில் இது. நதிக்கரையோரமோ அல்லது ஏரியின் கரையிலோ இக்கோயில் அமைந்திருக்கும். ஒரு காலத்தில் பரிகார ஸ்தலமாகவும், பிணி தீர்க்கும் ஸ்தலமாகவும் விளங்கி இருக்கிறது. கடந்த நான்கு நூற்றாண்டுகளாக இக்கோயிலில் பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. பல சதுர் யுகங்கள் வாழ்ந்த சித்தரின் ஜீவசமாதி இங்குள்ளது. இக்கோயிலை தேடிய ஆட்கள் கட்ட மாட்டார்கள், சம்பந்தமே இல்லாத கடற்கரை நகரத்தைச் சேர்ந்த ஒருவர்தான் இக்கோயிலைக் கட்டுவார்” என்று ப்ரசன வாக்காகத் தனக்குக் கிடைத்த தகவலை அவர் சொன்னபோது எல்லோரும் மெய்சிலிர்த்துப் போனோம். ஆம்! மகா பெரியவரின் அருள்வாக்கும் இந்த ப்ரசன வாக்கும் அப்படியே பொருந்திப் போவது, இறையற்புதமே!

உணவு முடித்ததும், நந்தவனம் அமைக்கும் பணி துவங்கியது. கோயிலைச் சுற்றி நந்தவனம் அமைத்து, குழுவினர் எடுத்துவந்திருந்த 32 பூச் செடிகளையும் இரண்டு வில்வ மரங்களையும் ஊன்றி, தண்ணீர் ஊற்றினோம். கோயிலுக்கு அருகில் இருக்கும் செங்கல்சூளையில் வேலை பார்க்கும் அன்பர்கள் சிலர் மூலம், காகபுஜண்டர் ஜீவ‌சமாதிக்கு அனுதினமும் விளக்கேற்றவும், நந்த வனத்துக்குத் தண்ணீர் ஊற்றவும் ஏற்பாடு செய்யப் பட்டது.

வெள்ளைக்கிராமத்தைச் சேர்ந்த ஸ்தபதி அன்புக்கரசு சொன்ன தகவல்கள் இன்னும் அற்புதம். “இக்கோயில் 400 வருட பழைமையான கோயில் என்று ஊரில் எல்லோரும் சொல்வார்கள். நான் சின்ன வயசுல இங்க வந்து விளையாடியிருக்கேன். அப்போ இங்க சிவலிங்கம் இருந்தது. ஆனால் இப்போ எந்தச் சிலையும் இல்லை. செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயிலுக்கு, செய்யாறு மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இருபத்தேழு உப கோயில்கள் உண்டு என்பார்கள். அவற்றில் 26 கோயில்கள் எல்லோருக்கும் தெரியும். தெரியாமல் இருந்த அந்த ஒரு சிவாலயமும் இப்போது தெரிந்துவிட்டது. அதுமட்டுமின்றி, சிவனாரைப் பெருமாள் வழிபட்டதாகச் சொல்லப் படும் மூன்று கோயில்களில் இதுவும் ஒன்று என்ற தகவலையும் அறியமுடிந்தது. இப்படி மகத்துவங் கள் நிறைந்த இந்தக் கோயில், மீண்டும் உலகுக்கு வெளிப்படுவதில் நாமும் கருவிகளானோம் என்றால், அது நமக்குக் கிடைத்த சிவானுக்கிரகமே!'' என்று சிலிர்ப்புடன் கூறினார், அன்புக்கரசு.

உண்மைதான்! நமக்குக் கிடைத்த அந்தப் பாக்கியம் சிவநேசச் செல்வர்கள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்; விரைவில் கோயில் பொலிவு பெறட்டும் என்று உளமாரப் பிரார்த்தித்துக் கொண்டு, அந்தத் தலத்தில் இருந்து புறப்பட்டோம்.



அண்ணாமலையார் அறப்பணிக்குழு

ண்ணாமலையார் மீது கொண்ட பக்தியால், அவரது பெயரிலேயே  அறப்பணிக் குழுவை 2006-ம் வருஷம் துவங்கி தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.  குரங்கணில்முட்டம் பூரண கங்கண தாரிணி சமேத ஸ்ரீவாலீஸ்வரர் கோயிலில் முதல் உழவாரப் பணியைத் தொடங்கிய இவர்கள், இதுவரை எழுபதுக்கும் மேற்பட்ட கோயில்களில் உழவாரப்பணி செய்திருக்கிறார்கள். இந்த வெள்ளை கிராமத்துக் கோயிலில் இவர்கள் செய்வது 100-வது உழவாரப்பணி. 

பத்து பேருடன் துவங்கப்பட்ட இந்த அமைப்பானது, தற்போது ஆயிரத்துக்கும் அதிகமான அன்பர்களைக் கொண்டிருக்கிறது. எட்டு வயதுக் குழந்தைகள் முதல் எண்பது வயது முதியவர்கள் வரை, பலரும் இக்குழுவில் அடியார்களாகக் தொண்டாற்றி வருகிறார்கள். குறிப்பாக, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உழவாரப்பணிக்குத் தொடர்ந்து வருகிறார்கள்.

நாகர பாணி விமானம்... 400 ஆண்டுகள் பழைமை!

க்கோயிலின் பழைமை குறித்து, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முன்னாள் துணை இயக்குநர் ஸ்ரீதரனிடம் கேட்டோம்.

‘‘கட்டட அமைப்பை பார்க்கும்போது, சுமார் 400 ஆண்டுகால பைழமையான கோயிலாக தெரிகிறது. விஜயநகர காலத்துக்கு பின்னரோ அல்லது நாயக்கர் காலத்திலேயோ இக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம். இக்கோயிலின் மூலவர் விமானம் - சதுர வடிவில் நாகர  விமான பாணியில் உள்ள இருதள விமான வடிவில் கட்டப்பட்டிருக்கிறது. கருங்கல் வடிவமைப்பை போல் கட்டப்பட்ட செங்கல் கட்டுமானம்; அற்புதமான வேலைப்பாடுடன் கூடிய கட்டடக் கலையை பறைசாற்றுகிறது’’ என்றார் அவர்.

எப்படிச் செல்வது? திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ளது வெள்ளை கிராமம். சென்னையில் இருந்து காஞ்சிபுரம் வழியே செய்யாறு செல்லலாம். அங்கிருந்து வெள்ளைகிராமத்துக்கு பேருந்து வசதி உண்டு.




Comments