வாழ்க்கை ஒளிபெற வரம் தரும் பிரம்மதேசம்!

பொதிகையின் பொன்மகள் பொருநை தவழும் திருநெல்வேலி மாவட்டத்தில், நவகயிலாய திருத்தலங்கள் அமைந்திருப்பது நமக்குத் தெரியும். ஆனால், இந்த நவகயிலாய திருத்தலங்களுக்கு முன்பே அமைந்த ஒரு திருத்தலம்தான், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகிலுள்ள பிரம்மதேசம் திருத்தலம். எனவே, இந்தத் திருத்தலம் ஆதிகயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது.
பி
ரம்மாவின் பேரனான உரோமச முனிவரை, விதிப்பயனாக பிரம்மஹத்தி தோஷம் பீடித்துக்கொண்டது. பல தலங்களுக்கும் சென்று இறைவனை வழிபட்டும் அவருடைய தோஷம் விலகவில்லை. இந்நிலையில் அவர் `இலந்தைவனம்' என்றழைக்கப்பட்ட இந்தப் பகுதிக்கு வந்து சேர்ந்தார். இலந்தை மரங்கள் நிறைந்த அந்தச் சோலையில், ஓர் இலந்தை மரத்தின் அடியில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிப்பதைக் கண்டார். பின் அவ்விடத்தில் தீர்த்தம் ஒன்றை அமைத்து, அந்தத் தீர்த்தத்தால் சுவாமிக்கு அபிஷேகம் செய்து சுவாமியை வழிபட்டார். ஈசனின் அருளால் அவர் பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட்டார். அவர் வழிபட்ட சுயம்புலிங்கம் ‘ஸ்ரீஇலந்தையடி நாதர்’ என்னும் திருப்பெயருடன் திகழ்கிறார்.
பின்னர்,  இந்தத் தலத்தில் ஸ்ரீகயிலாசநாதரையும், ஸ்ரீபிரஹன்நாயகியையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டார், உரோமச முனிவர். அவரது பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கிய இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீஇலந்தையடி நாதரையும், ஸ்ரீகயிலாசநாதரையும் வழிபட்டால், பித்ரு தோஷம் உள்ளிட்ட சகல தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். மேலும் காசி, ராமேஸ்வரம் செல்ல இயலாதவர்கள் இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டால் காசி, ராமேஸ்வரம் சென்ற பலனைப் பெறலாம் என்பதும் ஐதீகம்.

தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழன், பாண்டிய நாட்டின் மீது படையெடுத்துச் சென்றபோது பிரம்மதேசம் உள்ளிட்ட பகுதிகளை கைப்பற்றி, தனது நாட்டுடன் சேர்த்துக்கொண்டார். அப்போது இக்கோயிலைப் பற்றி அறிந்து, கயிலாசநாதர் - பிரஹன்நாயகி அம்பிகையிடம் மிகுந்த பக்திகொண்ட ராஜராஜ சோழன், இந்த ஊரை அந்தணர்களுக்கு மானியமாகக் கொடுத்தார். அப்படி, அந்தணர் களுக்குத் தானமாகக் கொடுத்ததால், இந்த ஊருக்கு ‘பிரம்மதேசம்’ என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப் படுகிறது. இப்படி அவர்களுக்கு இறையிலியாகக் கொடுக்கப்பட்ட நிலங்களுக்கு வரி கிடையாது. இந்த விவரங்கள் யாவும் கல்வெட்டுச் செய்திகளில் இருந்து தெரியவந்ததாகச் சொல்கிறார்கள்.

கயிலாசநாதர் கோயிலை ஒட்டியே அமைந்திருக்கிறது ஊரின் காவல்தெய்வமான துர்கையின் கோயில். இந்த துர்கை, `ஸ்ரீநாலாயிரத்தம்மன்’ என்று அழைக்கப்படுகிறாள். அதற்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது. பிரம்மதேசம் மிகவும் செழிப்பான ஊர் என்பதால், படையெடுப்புகளும் திருடர்கள் தொந்தரவும்  அதிகமானதாம். ஆகவே, ஊரின் பாதுகாப்புக்காக நாலாயிரம் படை வீரர்களைக் காவலுக்கு வைத்திருந்தாராம் ராஜராஜ சோழன். அந்த வீரர்கள் வழிபட்டதால் துர்கைக்கு ஸ்ரீநாலாயிரத்தம்மன் என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள்.

தாமிரபரணி மஹாத்மியத்தில் இந்தத் தலம் `அயனீஸ்வரம்’ என்ற பெயரில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. கோயிலின் எதிரே தெப்பக்குளம் பிரமாண்டமாகக் காட்சி தருகிறது. ஏழு நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் வழியாக உள்ளே சென்றால், வசந்த மண்டபம், நெல் குத்தும் பிறை மற்றும் ஒரு பெரிய அறை போன்றவற்றைக் காணலாம். மன்னர்கள் காலத்தில் இந்தக் கோயிலுக்கு வரும் நெல் மூட்டைகள் சேமித்து வைக்கப்படுமாம். ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்வதற்கு மட்டுமல்லாமல், போர்க்காலங்களிலும், ஊரில் பஞ்சம் ஏற்படும் காலங்களிலும் கோயிலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நெல் மக்களுக்கு வழங்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

கோயில் உள்ளே நுழைந்ததும் அழகிய கலைநுட்பத்துடன் அமைந்த நந்திகேஸ்வரரை தரிசிக்கலாம். தொடர்ந்து முகப்பு மண்டபம், திருவாதிரை மண்டபம் கடந்து சென்றால், ஸ்ரீநடராஜர் சந்நிதி. இந்த ஸ்ரீநடராஜர் திருவாசிக்குள் இல்லாமல், ஓம்கார வடிவத்துக்குள் காட்சி தருகிறார். ஒரே கல்லால் மிக நேர்த்தியாக வடிக்கப்பட்ட இந்த ஆடலரசனின் அழகை நாளெல்லாம் தரிசித்துக்கொண்டே இருக்கலாம். மேலும், இந்த நடராஜப் பெருமான் வருடம் முழுவதும் சந்தனக்காப்புடனே காட்சி தருவார் என்பது சிறப்பம்சம். திருவாதிரை அன்று  மட்டும்தான் சந்தனக்காப்பு களையப்பட்டு அபிஷேகம் நடைபெறும்.

இவரைத் தரிசித்துவிட்டு ஸ்ரீகயிலாசநாதர், அம்பாள் ஸ்ரீப்ருஹன் நாயகி ஆகியோரது சந்நிதிகளைத் தரிசிக்கலாம். அம்பாள் சந்நிதிக்கு எதிரில், பிட்சாடன மூர்த்தி கங்காளநாதராக அருள்பாலிக்கிறார். பரிவார மூர்த்தங்களாக ஸ்ரீவல்லப கணபதி, ஸ்ரீமுருகன், சப்த மாதர்கள் ஆகியோர் தனித்தனிச் சந்நிதிகளில் அருள்கின்றனர். ஸ்ரீசரஸ்வதிக்கும் தனிச் சந்நிதி அமைந்திருக்கிறது. உரோமச முனிவர் வழிபட்ட ஸ்ரீஇலந்தையடிநாதர். ஓர் இலந்தை மரத்தின் அடியில் காட்சி தருகிறார். பொதுவாக இலந்தை என்பது செடியாகத்தான் இருக்கும். ஆனால், இந்தத் தலத்தில் இலந்தை, மரம்போல் வளர்ந்திருப் பதைக் காணலாம். 
கயிலையானுக்குக் கதிரவனின் வழிபாடு

இந்தக் கோயிலின் மற்றொரு சிறப்பு, நாள்தோறும் சூரியனின் இளங்கதிர்கள் கருவறையில் உள்ள கயிலாசநாதரின் திருமேனி யைத் தழுவி வழிபடுவதுபோல், சுவாமியின் கருவறை அமைக்கப்பட்டிருக்கிறது. தட்சிணாயனம், உத்தராயனம் என்று சூரியனின் பயணத் திசைகள் மாறும்போதுகூட, சூரியனின் கிரணங்கள் இறைவனின் திருமேனியில் படுவது வியக்கத்தக்க விஷயம். எனவே, இந்தத் தலம் சூரிய பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது.

 பரிகாரச் சிறப்புகள்

திருமணம் தடைப்பட்டு வருபவர்கள் பிரதோஷ நாளில் இந்தக் கோயிலுக்கு வந்து பிரதோஷப் பூஜையில் கலந்துகொண்டால், தடைகள் நீங்கி, திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. திருமணம் ஆகியும் நீண்டகாலம் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்கள், தம்பதி சமேதராக இந்தத் தலத்துக்கு வந்து இலந்தையடிநாதரை வலம்வந்து வழிபட்டு, இலந்தைப் பழத்தைப் பிரசாதமாக உட்கொண் டால், விரைவிலேயே அவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைப்பதாக ஐதீகம். அமாவாசை தினங்களில் கங்காளநாதரான பிட்சாடன மூர்த்தியைத் தரிசித்து வழிபட்டால், மூன்று ஜன்மங்களில் செய்த பாவங்கள் விலகுவதாகவும் ஐதீகம்.

இப்படி, மகத்துவங்களின் மகத்துவமாகத் திகழும் பிரம்மதேசம்  அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயிலில், பங்குனி மாதம் தெப்போற்ஸவம் நடைபெறவிருக்கிறது. அதேபோல், வரும்  அன்று சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு, சத்குரு ஸ்ரீகஜானன் மஹராஜ் பக்தர்கள் பேரவையின் சார்பில், மகா பிரதோஷ வழிபாட்டு வைபவம் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது. அன்று லட்சத்து எட்டு தீபங்கள் ஏற்றப்பட்டு இறைவனின் அருளொளியால் ஜொலிக்கப்போகிறது திருக்கோயில். மேலும், பிரதோஷ வேளையில், 1008 செவ்விளநீர் அபிஷேகம், செண்பகம், மனோரஞ்சிதம், தாமரை ஆகிய மலர்களை மட்டுமே ஆயிரக்கணக்கில் கொண்டு செய்யப்படும் சிறப்பு அலங்காரம்... என அழகுத் திருக்கோலம் அருளப்போகும் அம்மையப்பனைத் தரிசிப்பதற்கு நாம் கொடுத்துவைத்திருக்க வேண்டும்.

சிவாலயத்தின் தீபத் திரியைத் தூண்டிவிட்ட எலி ஒன்று, மறு ஜன்மத்தில் பேரரசனாகப் பிறக்கும் பாக்கியம் பெற்றதாம். எனில், ஆதிகயிலாயமாம் பிரம்மதேசத்தில் லட்சத்தெட்டு தீப தரிசனத்தில் கலந்துக்கொள்ளவும் அங்கே தீபங்கள் ஏற்றவும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது என்றால், நாம் பெரும்பாக்கியம் பெற்றவர்கள் அல்லவா?!

புறப்படுங்கள் பிரம்மதேசத்துக்கு. லட்சத்தெட்டு தீபங்களில் ஒன்று உங்கள் கரங்களால் ஏற்றப்படட்டும். நம் சிந்தை மகிழ, அங்கு கோயில்கொண்டிருக்கும் கயிலாயநாதரின் திருவருளால்,  இன்பங்கள் மேலோங்கிட உங்கள் வாழ்க்கை ஒளிரட்டும்!

Comments