உய்யக் கொண்டார்




வைணவ குரு பரம்பரையானது அரங்கமா நகருளானுடன் ஆரம்பத்து ரங்கநாயகி, விஸ்வக்ஷேனர், நம்மாழ்வார், நாதமுனிகள், உய்யக் கொண்டார், மணக்கால் நம்பி, ஆளவந்தார் என்று சென்று ராமானுஜர் வரை அமைகிறது.

பின்னர் ராமானுஜரைத் தொடர்ந்து எம்பார், பட்டர் எனச் சென்று மணவாள மாமுனிகள் வரை முடிகிறது. இந்த வரிசையை ஓர் ரத்ன ஆரமாகக் கொண்டால், அதன் நடுப்பதக்கமாக விளங்குகிறார். ராமானுஜர். இவருக்கு ஆசார்யரான ஆளவந்தாரை திருத்திப் பணி கொண்ட உத்தமர், மணக்கால் நம்பி மணக்கால் நம்பிக்கு ஆசாரியன் உய்யக் கொண்டார் என்பர். அவரைப் பற்றி சற்று அறிவோமா?
நாதமுனிகளின் முதன்மைச் சீடர் உய்யக் கொண்டார் எனப்படும் புண்டரிகாஷர் ஆவர். திருவௌ்ளரையில் அவதரித்த இவரைப் பற்றிய குறிப்புகள் அவ்வளவாகக் கிடைக்கவில்லை. எனினும் வைணவத்தில் மிகவும் மதிப்புடையவராக இவர் திழ்ந்ததற்கான காரணத்தை அறிவோம்.

நாதமுனிகளிடம் இரண்டு நிதிகள் இருந்தன. ஒன்று யோக சாஸ்திரம். மற்றொன்று ஆழ்வார்களின் திவ்யபிரபந்தங்கள். நாதமுனிகள் தம் இரு சீடர்களான உய்யக் கொண்டார் மற்றும் குருகை காவலப்பன் ஆகியோரிடம் யாருக்கு எது வேண்டும் என்று கேட்க, குருகை காவலப்பன் யோக சாஸ்திரத்தைப் பற்றி தெரிந்து கொண்டார். உய்யக் கொண்டாரோ ஆழ்வார் பாசுரங்களையே கேட்டுத் தெரிந்து கொண்டு அதன் அர்த்தங்களையும் குறைவரக் கற்றுத் தெளிந்தார். அதன் மூலம்தான் உலகை உய்விக்க முடியும் என்பது அவரது முடிவு. அதனையே சம்பிரதாயமாகச் சொன்னால் அவரின் உள்ளம் புரியும். உய்யக் கொண்டார் பாசுரங்களைத் தேர்ந்தெடுத்தபோது பிணம் கிடக்க மணம் புரிவார் உண்டோ என்று கூறினாராம்.

அதாவது மரணம் நிகழ்ந்த வீட்டில் திருமணம் பற்றி யாரும் பேசுவார்களோ? எனவே உலகத்தாரை உய்விக்க பாசுரங்களைத் தேர்ந்தெடுத்தார். அதைக் கண்ட நாதமுனிகள் அவரைப் பாராட்டி உய்யக் கொண்டாரே என்று அழைத்து மகிழ்ந்திட, அதுவே அவரது பெயராக அமைந்து விட்டது. நாதமுனிகள் யோக தசையில் நம்மாழ்வாரிடம் திருவாய் மொழி உபதேசம் பெற்றவர்.
நம்மாழ்வார், தன் யோக சக்தியால் வைணவம் வளர பின்னாளில் ஒரு மஹான் அவதரிக்கப் போகிறார் என்று தமது பொலிக பொலிக பாசுரத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே தமது யோக சக்தியால் ராமானுஜர் போன்ற திருவுருவம் ஒன்றை வடிவமைத்து நாதமுனிகளிடம் கொடுத்திருந்தார். தம் இறுதிக் காலத்தில் அத்திருவுருவை உய்யக் கொண்டாரிடம் கொடுத்து, தமது பேரனான ஆளவந்தாரிடம் கொடுக்கச் சொல்லி, ஆளவந்தாரை வைணவம் வளர வழிவகுக்குமாறு பணித்தார். ஆனால் உய்யக் கொண்டார் காலம் வரை ஆளவந்தார் அவதரிக்கவில்லை. எனவே அவர் தமது சீடரான மணக்கால் நம்பியிடம் அப்பொறுப்பைவிட்டு இறையுடன் இணைந்தார்.

அதன்படி மணக்கால் நம்பிதான் ஆளவந்தாரை திருத்திப் பணிகொண்டு ஆளவந்தாருக்கு வழி காட்டியாய் திகழ்ந்தார்
.

Comments