ஆரோக்கியம், செல்வம் அருளும் ஆதித்தன் வழிபாடு!




சூரிய நாராயணர் என்று வைணவர்களாலும், சிவ சூரியன் என்று சைவர்களாலும் கொண்டாடப்படும் முழுமுதற் கடவுள், சூரிய பகவான்.
இவரது அருட் கிரணங்களாலேயே இந்த உலகம் நிலை பேற்றிருக்கிறது என வேதங்கள் கூறுகின்றன. இந்த உலகத்திற்கு அத்தியாவசியமான உணவு, உடை இவை சூரியனின் அருள் இல்லாமல் கிடைக்காது. நமது முன்னோர் சூரியனின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்திரந்தனர். அது மட்டுமல்ல, சூரியனின் வடக்கு மற்றும் தெற்கு நோக்கிய நகர்வினாலேயே பருவ காலங்கள் ஏற்படுகின்றன என்பதையும் அறிந்து கொண்டார்கள். சூரியனை சிவனின் வலக்கண் என்றும் சொல்வதுண்டு. அதனால்தான் சிவாலயங்களில் வலப்புறம் சூரியன் சன்னதி் இருப்பதைக் காணலாம்.
ராசிகள் மொத்தம் 12. அதில் ஒவ்வொரு ராசியிலும் சூரியன் புகும்காலமே விஷூ எனப்படும் மாதப்பிறப்பு சூரியன் எந்த ராசியில் இருக்கிறாரோ அதையேதான் மாதத்தின் பெயராக வடமொழியில் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதப்பிறப்பன்றும் சூரியன் ஒரு ராசியை விடத்து அடுத்த ராசிக்குச் செல்கிறார். இதனை மாத சங்கராந்தி என்றும் சொல்வார்கள். சங்கராந்திகளில் மிகவும் முக்கியமானது மகர சங்கராந்தி. அதுதான் பொங்கல் திருநாள். அன்று மகர ராசிக்குள் சூரியன் பிரவேசிப்பதால் அந்தப் பெயர் பெற்றது. சூரியன் பொங்கலன்று தனது வடக்கு நோக்கிய பயணத்தைத் துவக்குகிறார். இதையே உத்தராயண புண்ணிய காலம் என்கிறோம்.

சூரியனின் பிறப்பு
சூரியன் பிறக்கக் காரணமாக ஒர புராணக் கதை கூறப்படுகிறது. முன்பொரு காலத்தில் காசியப முனிவரும், அவரது மனைவியான அதிதியும் கானகத்தில் தர்மம் தவறாத வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். ஒருநாள் காசியப முனிவர் உணவருந்திக் கொண்டிருக்கும்போது ஒரு முதிய அந்தணர் வந்து யாசகம் கேட்டார். அப்போது அதிதி தேவி நிறை கர்ப்பிணி. ஆகையால் மெல்ல நடந்து சென்று உணவளித்தாள். அதைக் கண்ட அந்த அந்தணர் கோபம் கொண்டார். 'தர்மம் காக்காமல் நீ கர்ப்பத்தைக் காக்கத்தானே மெதுவாக நடந்து வந்தாய்? ஆகையால் உன் கர்ப்பத்தில் இருக்கும் கரு கலையட்டும்! பிறக்குமுன்னே அவனுக்கு இறப்பு சித்திக்கட்டும்' என்று சாபமளித்தார்.
அதனைக் கேட்டுப் பதறிய அதிதி, கணவனிடம் நடந்ததைச் சொல்லி, தனது கரு நல்லபடியாக இருக்க வேண்டும் என்று வேண்டினாள். அவளது வேண்டுகோளை ஏற்ற காசியப முனிவர். பெரிய யாகத்தைத் துவக்கினார்.
கருவிலிருக்கும் குழந்தை நிலைத்த புகழையும் நீண்ட ஆயுளையும் பெற வேண்டும் என்று வேண்டினார். சிவபெருமான் அதன்படியே வரமளிக்க சூரியன் பிறந்தான். அவனது தேஜசையும் அழகையும், புத்திசாலித்தனத்தையும் கண்ட முனிவர் அவனை சிவபெருமானை வேண்டித் தவமிருக்குமாறு கூறினார். அதனை அப்படியே ஏற்ற சூரியன் கடுமையாக தவம் இருந்தார். அவரது தவத்தை மெச்சி வானத்தில் ஒரு கிரகமாக உலவும் தன்மையையும், உலகுக்கே ஒளியாகவும், அன்னதாதா அதாவது உணவு வழங்குபவனாகவும் இருக்கும்படி வரத்தை அளித்தார். அதனைக் கண்ட பிரம்மா காலத்தை சக்கரமாகச் செய்து, அதனைக் கொண்டு ஒற்றைச் சக்கர ரதத்தை உருவாக்கி, அதனை சூரியனுக்கு அளித்தார். மகாவிஷ்ணு ஏழு வண்ணங்கள் கொண்ட ஏழு குதிரைகளை அளித்து, வானத்தை வலம் வரச் செய்தார். அதனால்தான் ஆதவனை வணங்கினால் மும்மூர்த்திகளையும் வணங்குவதாக ஐதிகம் என்று புராணங்கள் கூறுகின்றன.

ரத சப்தமி
தனது கடமையைத் தவறாமல் செய்பவர்களை கடமையில் சூரியன் என்று புகழ்வது வழக்கம். ஒரு நாள்கூட தவறாமல் உதித்தும் மறைந்தும் இந்த உலகை அவர் வாழ வைத்தக் கொண்டிருக்கிறார். அதற்கு அவருக்கு உறுதுணையாக இருப்பது அவரது ஒற்றைச் சக்கரம் பொருத்தப்பட்ட ஏழு குதிரைகள் கொண்ட ரதம் அதனால்தான் சூரியனின் பிறந்த நாள் ரதசப்தமி என்று கொண்டாடப்படுகிறது. இதனை ஜெயந்தி சப்தமி, மகா சப்தமி, ஜெய சப்தமி என்ற பல பெயர்களால் அழைக்கிறார்கள்.

ஏன் சப்தமி?
சுக்ல பட்சத்திலும் (வளர்பிறை) கிருஷ்ணபட்சத்திலும் (தேய்பிறை) 14 திதிகள் இருக்க, ஏன் சப்தமி சூரியனைக் கொண்டாடும் நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது? காரணம் உள்ளது. சூரியனின் ரதமே மிகவும் முக்கியம் என்று பார்த்தோம். அந்த ரதத்தை இழுக்கும் குதிரைகளின் எண்ணிக்கை ஏழு அவரது கிரகணங்களில் ஏழு வண்ணங்கள் உள்ளது. அதேபோல அந்தக் குதிரைகளும் பல வண்ணங்களால் ஆனவை. அந்த எண்ணிக்கையைக் குறிக்கும் வகையில் தை அமாவாசையை அடத்த வளர்பிறை சப்தமியே ரதசப்தமியாக, சூரியனைப் பணியும் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ரதசப்தமி அன்று செய்யப்படும் தான, தர்மங்கள் ஆகியவற்றுக்கு பத்து மடங்கு பலன் அதிகம் என்று கூறுகிறார்கள். அன்றுதான் சூரியனும் பிறந்ததாக ஐதிகம் என்பதால் இதனை சூரிய ஜெயந்தி என்றும் கூறுகிறார்கள்.

ஆரோக்யமும் சூரியனும்
அதர்வண வேதம் சூரியனையே ஆரோக்யத்தின் காரணமாகக் கூறுகிறது. மற்ற வேதங்களும் சூரியனை வழிபட்டால் நல்ல ஆரோக்யம் கிடைக்கும் என்கின்றன. அதனாலேயே சூரிய வழிபாடு ஆரோக்ய வழிபாடாக இருக்கிறது. இதனை விளக்க புராணத்தில் ஒரு கதை கூறப்படுகிறது.
பல காலம் முன்பாக யசோவர்மன் என்று ஒரு மன்னன் இருந்தான். அவனுக்குப் பிள்ளைச் செல்வம் இல்லை. பல ஹோமங்கள், யாகங்கள் செய்து பிள்ளைப் பேறு வாய்த்தது. ஆனால், அந்தக் குழந்தை பலமும் ஆரோக்யமும் இல்லாமல் இருந்தான். ஒரு கட்டத்தில் தோல்நோயால் பாதிக்கப் பட்டான் ந்த இளவரசன். அரண்மனை வைத்தியர்கள் என்னென்னவோ செய்தும் நோய் குணமாகவில்லை. அப்போது அகத்திய முனிவர் அங்கு வந்தார்.
அவரை வணங்கி அரசன் தனது கவலையை சொன்னான். உடனே முனிவரும் இளவரசனது ஜாதகத்தைப் பார்த்து அவனது பூர்வ ஜன்மப் பாவங்களால்தான் அவனுக்கு இந்த நோய் பீடித்திருக்கிறது என்று உணர்ந்து கொண்டார். ஒரு வாரத்தில் அவனது நோயைக் குணப்படுத்தி விடுவதாக வாக்களித்து, அவனை அழைத்துக் கொண்டு கானகம் வந்தார். தை அமாவாசையின் போது அவனைக் கொண்டு நீத்தார் வழிபாடு செய்ய வைத்தார். அதோடு தினமும் சிறிது தயிரன்னத்தை எருக்க இலையில் வைத்து உண்ணச் சொன்னார். சூரியனுக்கு உகந்த நாளான ரதசப்தமி அன்று அதிகாலை அருணோதயத்தில் அந்த இளவரசனை பக்கத்தில் இருந்த நீர் நிலைக்க அழைத்துச் சென்று அவனது தலையிலும், தோளிலும் எருக்க இலைகளை வைத்து நீராடச் செய்தார். சூரியனுக்கு உரிய துதிகளையும் சொல்ல வைத்தார். நீராடியதுமே அவனது நோய் விலகிவிட்டது. அதோடு அவன் மிகுந்த ஆரோக்யமும் பலமும் பெற்றான் அதனால்தான் சூரிய வழிபாடு ஆரோக்ய வழிபாடு என்று புகழப்படுகிறது.

சப்தமி நீராடல்
நமது இந்து மதத்தில் நீராடல் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. கடலில், நதியில், நீர் நிலைகளில் நீராடும் முறைகள் சாஸ்திரங்களில் விளக்கப்பட்டுள்ளன. அவை எல்லாவற்றையும் விட மிகச் சிறப்பானதும், நன்மை அருள்வதும் ரத சப்தமி நீராடல் ஆகும். இதனை முறையாகச் செய்தால், ஆண்டு முழுவதும் நல்ல ஆரோக்யம், செல்வம் ஆகியவை நிலைக்கும்.
ரத சப்தமி அன்று அருணோதயம் எனச் சொல்லப்படுகின்ற அதிகாலை வேளையில் எழுந்து கொள்ள வேண்டும். பக்கத்தில் நீர்நிலைகள் இல்லாதவர்கள் வீட்டிலேயே நீராடலாம். ஆண்கள் தலையிலும் தோளிலும் எருக்க இலைகளை வைத்துக் கொள்ள வேண்டும். அதில் விபூதியும், சிறிது பச்சரிசியும் வைத்து தலைவழியே நீராட வேண்டும். பெண்களுக்கு வைக்கும் எழுக்க இலலையில், சிறிது மஞ்சளும் குங்குமமும் வைத்து நீராட வேண்டும். குளித்து முடித்ததும் சூரியனை நேருக்கு நேராகப் பார்க்கதக் தோதான இடத்தில் நின்று கொண்டு இரு கண்களாலும் ஆதித்த பகவானைப் பார்க்க வேண்டும். சிறு கிண்ணத்தில் நீர் வைத்துக் கொண்டு சூரிய பகவானின் ஒவ்வொரு பெயராகச் சொல்லிச் சொல்லி நீரை சிறிது சிறிதாகக் கீழே விடவேண்டும். இதற்கு அர்க்கியம் என்று பெயர். இப்படிச் செய்தால் சூரியனின் மனம் குளிரும் என்பது ஐதிகம்.
தெரிந்த சூரிய துதிகளைச் சொல்லலாம். தெரியாதவர்கள் சூரியனின் 12 பெயர்களையும் சொல்லி வணங்கலாம். அப்படிச் செய்வதால் வாழ்வில் வெற்றி, செல்வம், நல்ல உடல், மன ஆரோக்யம் ஆகியவற்றை அருள்வார் ஆதித்தர். அன்று வீட்டிலும் பூஜை அறையிலும் தேர்க்கோலம் போடலாம். ஒற்றைச் சக்கரத் தேர்க்கோலம் போடுவது மிகவும் சிறந்தது. அன்று சூரியனுக்குப் பிடித்தமான சர்க்கரைப் பொங்கலும் வடையும் செய்து நிவேதனம் செய்யலாம். அன்று நம்மால் இயன்ற பொருளை தானம் செய்யலாம். புதிதாகத் தொழில் தொடங்குபவர்கள் இந்த நாளில் தொடங்கினால் லாபம் பல மடங்கு பெருகும்.
இந்த வருடம் வௌ்ளிக்கிழமை ரத சப்தமி வருகிறது. நாம் அனைவரும் முறையாக நீராடி, சர்க்கரை பொங்கல் நிவேதனம் செய்து வற்றாத செல்வம், நிறைந்த ஆரோக்யத்தை சூரிய பகவானின் அருளால் பெருவோம்.

Comments