சேய்த் தொண்டர்கள்!

மக்குச் செய்யும் வழிபாடுகளைக் காட்டிலும் தன் அடியவர்களுக்குச் செய்யும் பணிவிடைகளால் இறைவன் பெரிதும் மகிழ்கிறான் என்பது ஆன்றோர் நமக்குச் சொல்லிச் சென்ற அறிவுரை. அவ்வகையில் ‘அடியார்க்கு அடியேன் போற்றி’ என்று சிவனடியார்களாம் நாயன்மார்களைப் போற்றி தொழுதார் சேக்கிழார் பெருமான். வைணவப் பெருமக்களோ ஆழ்வார்களையும் ஆச்சார்ய புருஷர்களையும் வணங்கி வழிபடுகிறார்கள்.
இந்த வரிசையில் மாயோன் மருகனாம் முருகப் பெருமானின் அடியவர்களுக்கும் இடம் உண்டு. முருகப்பெருமானின் திருப்பணிகளிலும், அவனது புகழைப் பரப்புவதிலுமே தங்களது வாழ்வை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட இந்த அடியவர்களை ‘சேய்த் தொண்டர்கள்’ எனப் போற்றிச் சிறப்பிப்பார்கள். ஒளவை பிராட்டி,  நக்கீரர், அருணகிரிநாதர் முதலாக அந்த அடியவர்களின் மகிமைகளை விளக்கிய ‘முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்’.
வரும் பிப்ரவரி-9 வியாழக்கிழமை அன்று தைப்பூசம். இந்தப் புண்ணிய திருநாளில் முருகக்கடவுளை வழிபடுவதுடன், அவரது அடியார்களின் மகிமையையும் அறிந்து மகிழ்வோமே!

▶ சோமநாதர்

ஒருவரிடம் நாம் பொருள் வேண்டியோ அல்லது உதவி வேண்டியோ ஒருமுறை செல்லலாம்; இரண்டு முறை செல்லலாம். அடிக்கடி சென்றால் அவர் வெறுப்படைவார்; கோபப்படுவார். இது இயற்கை. ஆனால், நாம் நமது குறைகளை ஒருவரிடம் கோடிமுறை சென்று சொன்னாலும் அவர் கோபமடையாமல் வேண்டியதைக் கொடுப்பார்; கோபமே அவருக்கு வராதாம். அவர் யார் என்று உங்களால் ஊகிக்க முடிகிறதா? அவர்தான் கருணைக் கடல் கந்தப் பெருமான்.

“மொழியும் அடியார்கள் கோடி குறை கருதினாலும் வேறு முனிய அறியாத தேவர் பெருமாளே” என்று இந்த அருமையான வரியைத் தமது ஒவ்வொரு சொற்பொழி விலும் சொல்லி இன்புறுவார், வான் கலந்த திருமுருக வாரியார் சுவாமிகள்.
‘சோமநாதன் மடம்’ என்று அருணகிரிநாதர் போற்றும் திருப்புகழ்த் தலத்துக்கு உரிய (ஒருவழி படாது என்று தொடங்கும்) திருப்புகழ்ப் பாடலில்தான் மேற்கண்ட அற்புதமான- கருணைக்கடல் முருகனின் அருட்பெருமையைக் காட்டும் மகுடவரி உள்ளது. அருணகிரிநாதர் தமது தலயாத்திரையில், `புத்தூர்' என்ற தலத்துக்கு வருகிறார். அங்கே சோமநாதர் என்ற மிகச்சிறந்த சிவனடியார், அருணாசலேச்வரரைத் தமது ஆத்மார்த்த மூர்த்தியாகக் கொண்டு நியமம் தவறாது பூஜை செய்துவந்தார். அவர் அமணர் குலத்தைக் கண்டித்தவர். அரிய தவராஜ ராஜனாக விளங்கி மிகவும் புகழுடன் வாழ்ந்து வந்தார். அவரது மடத்தில் முருகப் பெருமானை தினமும் விசேஷ வழிபாடு செய்து வந்தார். அவரது சிவபக்தியையும் தவமேன்மையையும் பெரிதும் சிறப்பித்து, ‘‘அரிவை ஒரு பாகமான அருணகிரிநாதர் பூசை அடைவு தவறாது பேணும் அறிவாளன்; அரிய தவராஜராஜன்; அவனிபுகழ் சோமநாதன் மடம் மேவும் முருகா!” என்று போற்றுகின்றார் அருணகிரிநாதர்.
இங்ஙனம், திருப்புகழ்ப் பாடல்களில் (இன்று நமக்குக் கிடைத்துள்ளவற்றில்) குறிப்பிடப்பெறும் மூவரில், இந்த சோமநாதரும் ஒருவர்.

சோமநாதர் வாழ்ந்த புத்தூர் என்ற தலம் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டத்தில், `12 புத்தூர்' என்ற பெயரில் உள்ளது. ஆற்காடு - ஆரணி வழியில் தாமரைப்பாக்கம் என்ற ஊரிலிருந்து 5 கிலோ மீட்டரில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து 135 கி.மீ. தொலைவு. வடமொழி வல்லுனர்களான திண்டிமக்கவிகள் பலர் வாழ்ந்த `முள்ளண்டிரம்' என்ற ஊருக்கு அருகிலுள்ளது. இந்தப் புத்தூர் தலத்தில் அருள்பாலிக்கும் அட்சரவல்லி சமேத ஸ்ரீவித்யாபதீச்வரர் திருக்கோயிலில், இந்த சோமநாதர் பற்றிய கல்வெட்டு கொண்டுதான் மேற்கொண்டு விவரம் அறிய முடிகிறது.

இக்கோயிலில் காணப்படும் நான்கு கல்வெட்டு களில் ஒன்று, சகவருஷம் 1292-க்கு (கி.பி.1348)உரியது. இதில், வீரபொக்கண் உடையார் (முதலாம் புக்கர்) காலத்தில், இத்திருக்கோயில் மாடாபத்திய காணி  ஆட்சி அம்மையப்பரான சோமநாதஜியர்க்கு வழங்கப்பட்ட தகவலும், அந்தக் காணி ஆட்சி அவருடைய பிள்ளைகள் தலைமுறையும் சந்திராதித்தர் உள்ளவரையும் நடத்திக் கொள்ள லாம் என்ற தகவலும் குறிப்பிடப்பெற்றுள்ளன.

மேற்படி கல்வெட்டில் காணப்படும் சோமநாதஜியர் என்பவர் அருணகிரியாரின் சமகாலத்தவர் என்பதை உறுதி செய்து கொள்ள முடிகிறது. இவ்வாறு புகழ்பெற்ற சோமநாதர், இங்கு மடம் அமைத்து இத்திருக்கோயிலில் பூஜை, திருப்பணி, திருவிழா முதலிய வைபவங்களைச் சிறப்பாக நடத்தி வந்துள்ளார் என்றும் அறிய முடிகிறது. சோமநாதருக்குப் பின் இவ்வூர் ‘ஐயன்புத்தூர்’ (ஐயன் - சோமநாதர்) என்று மக்களிடையே பிரபலமாக அழைக்கப்பெற்றுள்ளது எனில் இவரது பக்தியையும் தவத்தையும், பெருமை களையும் உணர முடியும்.

▶ பாலசுப்பிரமணியக் கவிராயர்

‘சரவணபவ என்னும் ஆறெழுத்து மந்திரம் பேரொளியாகி வளர்கின்ற பழநி மலை மேல் வீற்றிருக்கும் சுப்பிரமணியன்’ என்று அருண கிரியார் திருப்புகழில் போற்றுவார். மலைத் தலங்களில் தனிப்பெருமையும் அருமையும் உடையது பழநிமலை. இத்தலத்தில் திருமுறை விண்ணப்பம் செய்து திருத்தொண்டாற்றி வாழ்ந்து வந்தவர் `பெரியான் கவிராயர்' என்னும் முருகனடியார் ஆவார்.

இவருக்கு இனிய இல்லறம் அமைந்திருப்பினும் மகப்பேறு வாய்க்கப் பெறாது வருந்தினார். தினமும் மலர் மாலைகளை பழநிப் பரமனுக்கு சூட்டி, சஷ்டி விரதம் இருந்து பெருமான் அருளால் ஆண் குழந்தையைப் பெற்றனர் கவிராயர் தம்பதியர். அக்குழந்தைக்கு பாலசுப்பிரமணியன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர். குழந்தை பாலப் பருவத்தில் ஐந்து வயதாகும்போது, அதன் கண்களும் செவிகளும் செயல்படாது இருப்பதை பெற்றோர் உணர்ந்து மிகவும் வேதனை அடைந்தனர். பழநிமலை ஆண்டவர் சந்நிதியில் தம் மகனைப் படுக்கவைத்து தவமிருந்தார் பெரியான் கவிராயர். அவரது வேண்டுதலுக்கிரங்கி, கந்தப் பெருமானே ஒரு சிவனடியார் போல எழுந்தருளி, சிறுவன் உடலை வருடி கையில் ஒரு கடப்ப மலரைக் கொடுத்துக் கண்களிலும் செவிகளிலும் கடப்ப மலரால் மெல்ல ஒத்தி எடுத்தார். சிறுவன் பாலசுப்பிரமணியனின் கண்கள் ஒளிபெற்றன; செவிகள் கேட்கும் திறனைப் பெற்றன. பிறகுதான், `சிவனடியார் வேடத்தில் வந்தவர் முருகப் பெருமானே' என்பதை உணர்ந்து வியந்தார் கவிராயர். தம் மகனுக்கு தக்க ஆசிரியரிடம் தமிழ் மொழி வடமொழி ஆகிய வற்றை பயிற்றுவிக்க ஏற்பாடு செய்தார். அதன்படி, துறைசை ஆதீனத்து சுப்பிரமணியத் தம்பிரானிடம் சைவ சித்தாந்தமும் கௌமார தத்துவமும் பயின்றான், பாலசுப்ரமணியன்.

பின்னர் பல தலங்களை தரிசித்ததுடன், சைவ சித்தாந்த தரிசனம், பாஞ்சராத்ர மதச பேடிகை, வேதாந்த சித்தாந்த சமரச தீபம், கூவின நீப மான்மியம், அக்கதீபிகை போன்ற நூல்களை இயற்றிய பாலசுப்பிரமணியன், தஞ்சை சமஸ்தானத்தில் ‘கவிராயர்’ பட்டமும் பாராட்டும் பெற்றார். பழநியின் பெருமைகளையும் அற்புதங் களையும் விவரிக்கும் ‘பழநிப்புராணம்’ என்னும் மிக உயர்ந்த நூலை இயற்றி முருகன் சந்நிதியில் அரங்கேற்றி மகிழ்ந்தார். பழநிமுருகன் அருளாடல் களில் பாலசுப்ரமணியக் கவிராயர் வரலாறும் ஒன்றாகும்.

▶ திருப்புகழ் சாமி ஐயர்


ராமநாதபுரத்தில் தோன்றிய லோகநாத ஐயர் என்னும் திருப்புகழ் இசை வல்லுனர், பிற்காலத்தில் `மதுரை திருப்புகழ் சாமி ஐயர்' என்று போற்றப் பெற்றார். இவர், மன்னர் முத்துராமலிங்க சேதுபதி அரசவையில் பணியாற்றியவர். இசைச் சக்கரவர்த்தி பூச்சி சீனிவாச ஐயங்காரிடம் இசை பயின்று திருப்புகழைப் பக்திபூர்வமாகப் பாடுவதும், திருப்புகழுக்கு உரை விளக்கம் அளிப்பதும், முருகப் பெருமானை வழிபடுவதுவுமே வாழ்வின் குறிக்கோளாக வாழ்ந்தவர்.
மதுரையில் குடியேறிய பிறகு, அங்குள்ள முருக பக்தர்களை ஒருங்கிணைத்து திருப்புகழ் பஜனை செய்வதை ஓர் இயக்கமாக அமைத்தார். இவரது குழுவில் மதுரை நகரைச் சார்ந்த பலமுக்கிய பிரமுகர்கள் உறுதுணையாக இருந்தனர். அக்காலத்தில் மதுரை திருஞான சம்பந்தர் திருமடத்தின் ஆதினகர்த்தர் இவரிடம் பேரன்பு பூண்டு திருப்புகழ் இசை வளர உதவினார். 1919-ம் ஆண்டில், மதுரை மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகத்தினர் உதவியுடன், தெற்காடி வீதியில் ஸ்ரீதிருப்புகழ் சபை உருவானது.

ஒவ்வொரு நாளும் காலையில் சித்திரை வீதிகளில் திருப்புகழ் பஜனை, வெள்ளி, திங்கள் இரவில் திருப்புகழ் விரிவுரை, உற்ஸவ நாட்களில் திருவீதி உலாவில் திருப்புகழ் இன்னிசை வழிபாடு முதலான ஏற்பாடுகளுடன் ஐயர் இசைப்பணி புரிந்தார். வட இந்தியா மற்றும் இலங்கை கதிர் காமம் போன்ற இடங்களுக்கும் சென்று திருப்புகழ் இசை பாடிப் பரப்பினார். மதுரை தெற்காடி வீதி ஸ்ரீதிருப்புகழ் சபை, 2019-ல் நூற்றாண்டு விழாவைக் காண இருப்பது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலை கார்த்திகைப் பெருவிழாவில் திருப்புகழ் பாடிய சாமி ஐயரைக் கண்டு பிரமித் தார், திருமுருக கிருபானந்த வாரியாரின் தந்தையார் மல்லயதாஸ் பாகவதர். அற்புதமாகப் பாடி பிரசங்கம் செய்யும் ஆற்றல்மிக்க இவர், சாமி ஐயரைத் தம் குருவாக ஏற்றுக் கொண்டார். காங்கேய நல்லூர் ராஜகோபுரத் திருப்பணி ஐயரின் திருப்புகழ் ஆசியினால் ஆறு மாதங்களில் நிறைவுபெற்றது. வாரியார் குடும்பத்தின் குருவாக இருந்து திருப்புகழ்ப் பாடும் பணியில் தலை சிறந்து விளங்கியவர் திருப்புகழ் சாமி ஐயர் அவர்கள். 1936-ல் கந்தன் கழலடியில் இணைந்த திருப்புகழ் சாமி ஐயரின் அடியார் பெருங்கூட்டத்தினர் மதுரையில் அப்பணியைத் தொடர்ந்து ஆற்றிவருகின்றனர்.

▶ வரகவி சொக்கலிங்கம் பிள்ளை


தொண்டை நாட்டில் குன்றத்தூரில் பிறந்து, சோழ நாட்டில் முதலமைச்சராக விளங்கியவர் சேக்கிழார் பெருமான். இவர் அருளிய, திருத்தொண்டர் புராணம் எனும் பெரிய புராணம் 12-வது திருமுறையாகத் திகழ்கிறது.

திருப்புகழ் முதலான தோத்திர நூல்களுக்கு அற்புதமாக உரை கண்டவர், தணிகைமணிவாசு செங்கல்வராயப் பிள்ளை. இவர், அருணகிரியாரது நூல்களைப் பத்து திருமுறைகளாகவும், நக்கீரர், பரிபாடல் ஆசிரியர்கள், கல்லாடர் முதலான பெரியோர்களின் பாடல்களை பதினோராம் திருமுறையாகவும் தொகுத்தார். இந்நிலையில் அவருக்கு, `பெரியபுராணம் போல் முருகன் அடியார்களின் வரலாற்றை ஓதும் செய்யுட் புராணம் ஒன்று இல்லையே' என்ற கவலை உண்டாயிற்று. பின்னர், தேனூர் வரகவி வே.செ. சொக்கலிங்கம் பிள்ளை எனும் முருகன் அடியார் மூலம், நக்கீரர் முதல் 18-ம் நூற்றாண்டு வரை உள்ள காலத்து சேய்த் தொண்டர்களின் வரலாற்றைப் பாட தணிகை மணி அவர்கள் ஏற்பாடு செய்தார். ‘சேய்த்தொண்டர் புராணம்’ எனப்படும் முருகனடியார்கள் வரலாறு 66 தனி அடியார்கள் 12  தொகை அடியார்களைப் பற்றி விளக்குவதாகும். 3333 பாடல் கொண்ட இந்நூல் கவித்திறம், பக்திச்சுவை, சந்த அழகு முதலான நயமிக்க சுவை கொண்டது.

வரகவி சொக்கலிங்கம் பிள்ளையவர்கள், 1896-ம் ஆண்டு தேனூரில் (திருச்சி அருகில்) பிறந்தவர். 9-வது வயதில் தகப்பனாருடன் இலங்கை சென்று பிறகு இந்தியாவுக்குத் திரும்பினார். 19-வது வயதில்  மலேயாவுக்குச் சென்று கணக்கு வேலை பார்த்தார். ஓய்வு நேரங்களில் தமிழ் நூல்களைப் பயின்றார். 1934-ல் தேனூருக்குத் திரும்பி வந்தார்.

தேனூர்ப்புராணம், முருகூர் சிவதோத்திரத் திரட்டு, சுந்தரர் உலா, காமாட்சியம்மன் தோத்திர மஞ்சரி, திருத்தொண்டர் போற்றி கலிவெண்பா, நால்வர் அந்தாதி போன்ற பல பக்தி நூல்களைப் பாடியுள்ளார்.

வரகவி அவர்கள் முருகனடியார்களின் பெருமைகளைப் பேசும் சேய்த்தொண்டர் தொகை, சேய்த்தொண்டர் போற்றிக் கலிவெண்பா, சேய்த்தொண்டர் புராணம் ஆகிய மூன்று ஒப்பற்ற நூல்களைப் பாடியவர். தேவியின் திருவருள் பெற்ற வரகவியான இவரது பாடல்கள் வில்லிபுத்தூரார் போன்ற சிறந்த கவிகளின் வாக்குக்கு  இணையெனத் திகழ்கின்றன. பெரிய புராணத்தில் ‘உலகெலாம்’ என ஆதியிலும் அந்தத்திலும் இருப்பது போல், இப்புராணத்தில் ‘நிலம்’ என்னும் சொல் ஆதியிலும் அந்தத்திலும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
‘வாழ்க சேய்த் தொண்டரடித்தொண்ட ரெல்லாம் வழிவழியே
வாழ்க சேய்த் தொண்டர் அந்தாதி மறுநூல் மறைபிறவும்
வாழ்க சேய்த் தொண்டர் திருக்கூட்டமும் நெடுமாநிலமும்
வாழ்க குஞ்சரி வள்ளி மயில் அயில் வாரணமே!

Comments