கதிரவன் வழிபடும் ஸ்ரீ கவி கங்காதரேஸ்வரர்!

கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரின் நடுநாயகமாக அமைந்துள்ளது ஸ்ரீ கவி கங்காதரேஸ்வரர் திருக்கோயில். மிகப்பழைமையான சிவாலயங்களில் இதுவும் ஒன்று. இந்த ஆலயத்தில் சிவபெருமான் ஒரு குகையில் தென்திசை நோக்கி வீற்றிருக்கிறார். மகர சங்கராந்தி தினத்தன்று மாலையில் கருவறையில் அருள் பாலிக்கும் சிவலிங்கத்தின் மீது சூரிய கிரணங்கள் படர்கின்றன என்பது இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பு.
கர்நாடக மாநிலத் தொல்பொருள் ஆவுத்துறையின் நிர்வாகத்தில் உள்ள இக்கோயில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கருதப் படுகிறது. பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர், விஜயநகர மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் 1537ஆம் ஆண்டு பெங்களூரு நகரத்தை நிர்மாணித்து தனது தலைநகராகக் கொண்டு ஆண்ட சிற்றரசர் கெம்பே கௌடாவால் கவி கங்காதரேஸ்வரர் ஆலயம் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு விரிவாக்கம் பெற்றுள்ளது. புராண காலத்தில் கௌதமர், பரத்வாஜர் ஆகிய முனிவர்கள் இக்குகையில் தவம் செய்தததாகவும் தல புராணம் தெரிவிக்கிறது.
ஆலய நுழைவாயிலில் கோபுரம் இல்லாவிடிலும், பக்தர்களின் கண்களையும் கருத்தையும் ஒருங்கே கவர்கின்றன நுழைவாயிலை அடுத்துள்ள முற்றத்தில் நிறுவப்பட்டுள்ள சுமார் 18 அடி உயரம் கொண்ட, சிறந்த வேலைப்பாடுடன் கூடிய நான்கு கருங்கல் தூண்கள். 16வது நூற்றாண் டில் நிர்மாணிக்கப்பட்ட இந்தக் கோயிலில், முதலில் சிவபெருமானின் ஆயுதம் திரிசூலமும், அதற்கு அருகில் தூண் உச்சியில் டமருகமும் நிறுவப்பட்டுள்ளன. இவற்றை அடுத்து பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபத்தைத் தொடர்ந்து, முக மண்டப நுழைவாயிலுக்குச் சற்று முன்பாக வலது, இடது புறங்களில் (ஆலயத்தின் கிழக்கு மேற்கு திசைகளில்) மீண்டும் இரண்டு கல் தூண்களைக் காணலாம். இவற்றின் உச்சியில் இரண்டு வட்ட வடிவிலான கற்பலகைகள் காணப்படுகின்றன. இவற்றை சூரியன், சந்திரன் என்றும் விசிறிகள் என்றும் கூறுகின்றனர்.
பொதுவாக, சிவாலய மகாமண்டபத்தில் சிவ பெருமானை நோக்கி சூரியன், சந்திரன் சன்னிதிகள் அமைந்திருப்பதைக் காணலாம். சிவபெருமானின் வலக்கண் சூரியன், இடக்கண் சந்திரன், நெற்றிக்கண் அக்னி என்ற ஐதீகத்தின் அடிப்படையிலானது இது. கிழக்கு நோக்கியிருக்கும் சிவாலயக் கருவறைகளுக்கு எதிரே, சிவலிங்கத்தின் வலப்புறம் சூரியன், இடப் புறம் சந்திரன் சன்னிதிகள் அமைக்கப்படுகின்றன. இந்த அடிப்படையிலேயே ஆலயத்துக்கு வெளியே இந்த இரண்டு தூண்கள் அமைந்திருப்பதாகவும் கூறப் படுகிறது. பிரதான நுழைவாயிலின் இடப்புறம் பன்னிரு கரங்களைக் கொண்ட ஸ்ரீ சக்தி கணபதியைத் தரிசிக்கலாம்.
வெளியிலிருந்து பார்த்தால் சாதாரண ஆலயமாகத் தோன்றினாலும் முக மண்டபத்தைக் கடந்து செல்லும் போதுதான் இது ஒரு குகைக் கோயில் என்று பக்தர்களுக்குத் தெரிய வரும். ஆலயத்துக்குப் பின்புற முள்ள குன்றின் ஒரு பாகத்தில் குடைவரையாக அமைக்கப்பட்டுள்ள கருவறையில் ஒரு பீடத்தில் ஸ்ரீ கவி கங்காதரேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். கவி என்ற கன்னடச் சொல் குகையைக் குறிக்கும். எனவே, இறைவன் இங்கு கவி கங்காதரேஸ்வரர் என்று போற்றப்படுவதோடு, ஆலயம் அமைந்துள்ள பகுதியும் கவிபுரம் என்று அழைக்கப்படுகிறது. ஐந்து அல்லது ஆறு அடி உயரமான குகைக்குள் பக்தர்கள் குனிந்து சென்று சிவபெருமானையும் பரிவார தேவதைகளையும் தரிசிக்க வேண்டும்.
குகையை அடுத்துள்ள பிராகாரம் போன்ற அமைப்பில் பரிவார மூர்த்திகளான விநாயகர், சுப்ரமண்யர், சூரியன், சந்திரன், சப்த மாதர்கள், பைரவர், நாகர், ஆகியோரின் விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. கருவறையில் வலப்புறம் பார்வதி தேவிக்கும் துர்கைக்கும் சன்னிதிகள் உள்ளன. இவர்களோடு அக்னி பகவானும் பிரதிஷ்டை செய்யப்பட் டுள்ளது இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பு. மூன்று தலைகள், ஏழு கரங்கள், மூன்று கால்கள் (இவற்றுக் கான விளக்கங்கள் ஆலயத்தில் விரிவாகக் கூறப்படு கின்றன) ஆகியவற்றோடு ஆகம முறைப்படி வடிக் கப்பட்ட இந்த ஸ்ரீ அக்னி பகவானை வழிபட்டால் கண் நோய்கள் குணமாகும் என்ற நம்பிக்கை பக்தர் களிடையே உள்ளது.
ஆலயத்தின் ஒரு புறத்தில் உள்ள குகைப் பாதை வழியாக கர்நாடக மாநிலத்தின் முக்கிய சிவத்தலங்களில் ஒன்றான ஷிமோகாவுக்கும் (சிவகங்கா), காசிக்கும் செல்ல முடிந்ததாக செவிவழிச் செய்திகள் குறிப்பிடுகின்றன. தற்போது அந்தக் குகைப்பாதை அடைபட்டுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் மகர சங்கராந்தி அன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை சூரியனின் ஒளிக்கதிர்கள் பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம், முன் மண்ட பத்தூண்கள் ஆகியவற்றைக் கடந்து, சுவாமிக்கு முன்பு உள்ள நந்தியெம்பெருமானின் இரு கொம்புகளுக்கிடையே நேராக குகையில் வீற்றிருக்கும்
சிவலிங்கத்தின் மீது படர்வது ஸ்ரீ கவி கங்காதரேஸ்வரர் ஆலயத்தின் தனிச் சிறப்பு. ஆலயம் தெற்கு நோக்கியிருந்தாலும், ஏதோ ஒரு மூலை வழியாக அஸ்தமிக்கும் சூரிய பகவானின் கதிர்கள் நேராக சிவபெருமான் மீது விழும் அதிசயத்தைக் கண்டு தரிசிக்க இந்நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த ஆலயத்தில் கூடுகின்றனர். அன்றைக்கு ஸ்ரீ கங்காதரேஸ்வரருக்கு சிறப்பு வழிபாடுகள், ஆராதனைகள் நடைபெறுகின்றன.
மேலும், பிரதோஷம், சோம வாரங்கள், மாத சிவராத்திரி போன்ற வழிபாடுகளும், மகாசிவராத்திரி சிறப்பு நிகழ்ச்சிகளும் இந்த ஆலயத்துக்குப் பெருமை சேர்க்கின்றன.
அமைவிடம்:
பெங்களூரு சிட்டி மார்க்கெட்டிலிருந்து 3 கி.மீ. தொலைவில் குட்டஹள்ளி கவிபுரம் என்ற இடத்தில் கோயில் அமைந்துள்ளது.
தரிசன நேரம்:
காலை 7 மணி முதல் 12.30 வரை. மாலை 5 மணி முதல் 8.30 வரை.

Comments