அழகன் குடியிருக்கும் அலகுமலை

புகழ்விளங்கும் பொங்கலூர் நாட்டில், பூம்பொழில்களுக்கிடையே அமைந்திருக்கும் வானவன்சேரி அலகுமலை’ என்பது சான்றோர் வாக்கு. அலகுமலை என்றால் அகன்று உயர்ந்த மலை என்று பொருள். அதேபோன்று, பச்சைப்பசேல் என்று பச்சைப்பட்டு உடுத்திய பாவைபோல் இயற்கை அழகுடன் காட்சி தரும் இந்த மலையை, `அழகுமலை' என்று சொல்வதும் மிகவும் பொருத்தம்தான்.
 

திருப்பூரில் இருந்து கொடுவாய் செல்லும் சாலையில் சுமார் 22 கி.மீ. தொலைவில் எழில்கொஞ்சும் சோலைகளின் நடுவே அலகு மலையின் மீது கோயில் கொண்டு, தன்னை நாடி வருவோர்க்கெல்லாம் நல்லாசி வழங்குகிறார், அருள்மிகு முத்துக் குமார பாலதண்டாயுதபாணி ஸ்வாமி.

▶ நடுநாயகமாய் நாயகன்

முருகனின் ஐந்தாம் படைவீடாக புகழ்பெற்ற  குன்றுதோறாடல் தலங்களில் இந்த அலகுமலையும் ஒன்றாகும். 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகக் கருதப்படும் இத்திருக்கோயில் குறித்த கல்வெட்டுப் பதிவுகள் எதுவும் காணக் கிடைக்கவில்லை என்றாலும், ‘மூவேந்தர்கள் வழிபட்டு, நாவேந்தர் சொல்பட்டு, நமது வேலனின் சக்தி வெளிப்பட்டு, அவன்பாதம் பணிவார் தம் குறை அழிபட்டுப்போகும்’ என்ற பாடல், இத்திருக்கோயிலின் சிறப்பை எடுத்துக் கூறுகிறது.

வடக்கே கதித்தமலை, அரசணாமலை, வெள்ளி மலை, தெற்கில் வட்டமலை, ஊதியூர்மலை, கிழக்கில் சென்னிமலை, சிவன்மலை, மேற்கே வெள்ளியங்கிரிமலை, மருதமலை என நான்கு புறமும் சூழ்ந்துள்ள மலைகளுக்கே நடுவே நடுநாயகமாய் அமைந்திருக்கிறது அலகுமலை. மலையைச் சுற்றிவர ஒற்றையடிப்பாதை உண்டு. அந்தப் பாதை வழியாக மலையடிவாரத்தை அடையலாம். அங்கிருக்கும் மயில்மண்டபத்தைக் கடந்து சென்றதும் படிகள் தென்படுகின்றன. 285 படிகளைக் கடந்துச்சென்றால், அழகன் அருள் காட்சி தரும் திருக்கோயிலைத் தரிசிக்கலாம்.
கண்களை சற்றே தாழ்த்திய நிலையில் ஞானகுருவாக ஐயன் முருகனின் திருக்கோலம் வேறு எங்கும் காணக்கிடைக்காத அருட்கோலம். விநாயகர், வீரபாகு, தட்சிணாமூர்த்தி, பால சுப்ரமணியர், ஸ்கந்தர் என்று பரிவார மூர்த்தங்கள் காட்சி தரும் இந்தக் கோயிலில், வள்ளியும் தெய்வானையும் தனி சந்நிதியில் காட்சி தர,  மூலவராக  ஸ்ரீமுத்துக்குமார பாலதண்டாயுதபாணி அருட்காட்சி தருகிறார். ஆலயத்தின் தலவிருட்சம் வில்வம். மலை ஏறும் பாதையில் பாதவிநாயகர் சந்நிதி, இடும்பன் சந்நிதி, அதற்கு அடுத்து வலப் புறத்தில் வரஸித்தி ஆஞ்சநேயர் சந்நிதிகளைத் தரிசிக்கலாம்.
▶ சர்வே மேடை

மலை உச்சியில் கோயில் வளாகத்துக்கு வெளியே உயர்ந்த துவஜஸ்தம்பம் இருக்கிறது. அதன் அருகே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப் பட்ட ஒரு மேடையை, `சர்வே மேடை' என்று அழைக்கிறார்கள். அதன்மீது ஏறி நின்றால், சுற்றிலும் பசுமை படர்ந்திருக்கும் அந்தப் பகுதியைக் காணக்காண மனது பரவசப்படுகிறது. அக்காலத்தில் சுற்றுப்புறப் பகுதிகளின் நில அளவைக்கு இந்த சர்வே மேடையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.  இந்த மலையின் வடப்புறத்தில்தான், ஆழியாறு - பரம்பிக்குளம் கால்வாய் வரப்போகிறது என்பதை, முன்பே தன்னுடைய அருள்மொழியாக அறிவித்தவன், அர்த்தநாரீஸ்வரனின் இந்த திருப்புதல்வன்.

▶ அறுபடை வீடு

அலகுமலையில் அதிசயிக்கும் வகையில் ஒரு சிறப்பு இருக்கிறது. அதாவது அழகன் முருகனின் அறுபடை வீடுகளாம் திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி ஆகிய திருக்கோயில்களில் முருகப்பெருமான் எவ்வாறெல்லாம் காட்சியளிப் பாரோ, அதேபோன்ற தோற்றங்களில் முருகன் அருளும் சந்நிதிகள் இத்திருக்கோயிலில் அமைக்கப் பட்டிருக்கின்றன.

▶ தைபூசத் திருவிழா

சித்திரைத் திருவிழா, வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், கந்தசஷ்டி என முருகனுக்கு உகந்த தினங்களில் எல்லாம் இத்திருக்கோயிலில் வெகு சிறப்பாக வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.  பெளர்ணமி கிரிவலமும் இங்கே விசேஷம்.தைப்பூச திருவிழாவுக்காக கொடியேற்றிய தினத்திலிருந்து 7 நாட்கள் வெகு சிறப்பாக அபிஷேகங்கள், ஹோமங்கள் நடைபெறுகின்றன. நிறைவு நாளில் தீர்த்தக் குடங்களோடும், காவடி ஆட்டத்தோடும் பல்லாயிரக்கணக்கான பக்தர் களின் வெள்ளத்தில் திருமுருகனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. அன்றைய தினம் திரளாகக் கூடும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் அளிக்கப்படுகிறது.

▶  குழந்தை வரமளிக்கும் குமரன்

குழந்தை வரம் வேண்டுவோர், சஷ்டி தினங்களில் விரதமிருந்து பாலதண்டாயுதபாணிக்கு 7 அல்லது 11 அல்லது 21 வாரங்கள் செவ்வரளிப் பூமாலை அணிவித்து, தயிர் அபிஷேகம் செய்து வழிபட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

பிரார்த்தனைத் தலமாக இத்திருக் கோயில் விளங்குவதால் திருமணம், தொழில் விருத்தி போன்றவை நிறைவேறவும் பக்தர்களால் இங்குச் சிறப்பு வேண்டுதல்களும் பரிகாரங்களும் செய்யப்படுகின்றன.


நடை திறந்திருக்கும் நேரம்: காலை 6:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் மாலை 7 மணி வரையிலும் திருக்கோயில் நடை திறந்திருக்கும்


Comments