காட்டிலும் காக்கும் கந்தன்வேல்!

விபூதி அணிந்த திருமேனி, கழுத்தில் ருத்ராக்ஷ மாலை, மனதில் பதிந்த முருகனின் திருநாமம் வா வழியே அப்படியே மங்கலகரமாக வெளிப்பட அமர்ந்திருந்தவரைச் சுற்றி ஏராளமானோர் இருந்தார்கள். அவர்களில் செல்வந்தர்கள் காணிக்கையாகச் செலுத்தியிருந்த செல்வம், எதிரில் குவிந்திருந்தது. அவற்றையெல்லாம் ஏற்க வேண்டியவரோ, அங்கிருந்த செல்வத்தை, ஏழைகளை எடுத்துக் கொள்ளச் சொன்னார்.
அந்த வேளையில்... பைத்தியக்காரன்! பைத்தியக்காரன்! உதவாக்கரை யென்று நாம் ஒதுக்கிய இவன் காலில், இன்று எவ்வளவு பேர்கள் செல்வத்தைக் கொட்டுகிறார்கள்! இவற்றையெல்லாம் அள்ளிக் குவிக்காமல், வாரி விடுகிறான்பார்!" என்று முணுமுணுத்தபடியே, ஒரு கும்பல் உள்ளே புகுந்தது.
புகுந்தது மட்டுமல்லாமல், அத்தை, மாமன், சித்தப்பா, சித்தி என்றெல்லாம் உறவுமுறைகளையும் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். கூடவே, அங்கிருந்த செல்வத்தைத் தங்களுக்குள் பங்கு பிரிக்கவும் முயன்றார்கள்.
இவ்வளவுக்கும் காரணமாக அமர்ந்திருந்த துறவியோ, வாயே திறவாமல், ‘ப்ச்! என்ன உறவு இவர்கள்? ஒதுக்கியவனிடம் செல்வம் சேர்கிறது என்றவுடன், எப்படி வந்து ஒட்டுகிறார்கள்! துறவிகளுக்கும் துறவு கொடுத்து, சேற்றில் ஆழ்த்தி விடுவார்கள் இவர்கள்’ என்று எண்ணியபடியே, மெள்...ள ஒதுங்கினார். அத்துறவியின் பெயர் ஆதவர். ராமநாத புரத்துக்கு அருகிலுள்ள முதுகுளத்தூரைச் சேர்ந்தவர்; எந்த நேரமும் ‘முருகா! முருகா!’ என்று சொல்லிக் கொண்டிருப்பவர். திருமலை முருகன் மீது உள்ளம் உருகி அவர் பாடிய நூறு பாடல்களும், அடியார்களின் உள்ளங்களில் பக்தியைப் பெருக்கும்.
அப்படிப்பட்ட அவர், உறவினர்களின் தொல்லை காரணமாக, ஒரு நாள் தங்கிய ஊரில் மறுநாள் தங்காது, ஞானப் பயணம் நடத்திக் கொண்டிருந்தார். வீதி யில் நின்றபடியே பிச்சை கேட்பது, அதை அப்படியே கையில் வாங்கி உண்பது, முருகனைப் பாடுவது என நாட்கள் போக் கொண்டிருந்த வேளையில், தென் காசிக்கு அருகில் உள்ள சுரண்டை எனும் ஊருக்கு மட்டும் அடிக்கடி போய் வந்தார். அங்கே, தமிழ்ப் பாடல்களின் சுவையறிந்தவர்கள் அதிகமிருந்ததுதான் காரணம். ஆனால், அங்கும் ஒரு நாள்தான் தங்குவார். சுரண்டையில் மந்திரவாதி ஒருவன் இருந்தான். மந்திர சித்தி சிறிது கைவரப் பெற்ற அவன், ஆகாதவன் வீடு எரிய வேண்டுமா? ஐநூறு பொற்காசுகள்! அகால மரணமா? பகைவன் வாயிலும், மூக்கிலும் ரத்தம் கக்க வேண்டுமா? எது வேண்டுமானாலும் செய்வான் அத்தீயவன்.
சுரண்டையில் அம்மந்திரவாதி, யார் குடியையோ கெடுப்பதற்காக, சில நாட்களாகக் கடுமையாக மந்திரத்தை உருவேற்றிக் கொண்டிருந்தான். அப்போது உச்சி வெயில் நேரத்தில், சுரண்டையிலிருந்த ஆதவர் பிச்சைக்குப் புறப்பட்டார். கடும் பசி காதடைக்க, கால்கள் வெயிலில் கொப்புளிக்கப் புழுவாத்துடித்த ஆதவர், வெயிலின் கொடுமை தாங்காமல், எதிரிலிருந்த குடிசைக்குள் நுழைந்து, அங்கிருந்த பலகை மீது அமர்ந்து விட்டார்.
அது, அடுத்தவர் குடியைக் கெடுக்கும் மந்திரவாதியின் வீடு. முருகா! முருகா!" என்றபடியே பலகையில் அமர்ந்த ஆதவரைக் கண்டதும், மந்திரவாதி அலறினான். ஏ! அறிவு கெட்டவனே! அது மந்திரம் ஸ்தா பனம் செய்து இருக்கும் பலகையடா! அதன் மேல் உட்கார்ந்த நீ, இன்றிரவு அழியப்போகிறா. இவ்வளவு சொல்லியும் இன்னும் அதன் மேல் உட்கார்ந் திருக்கிறாபார்!" என்று கத்தினான்.
ஆதவர் பலகையிலிருந்து எழுந்தார். மன்னித்து விடுங்கள் ஐயா! வெயில் தாங்க முடியாமல் உள்ளே நுழைந்து விட்டேன்" என்று அவர் சொல்லிக்
கொண்டிருக்கும்போதே, துறவிக்கு எதற்கடா தேகாபிமானம்? மன்னிப்பதா? காஷாயம் கட்டிய உங்களையெல்லாம், கட்டிக் கடலில் வீச வேண்டும்" என்றான் மந்திரவாதி.
உண்மைதான் ஐயா! எனக்குத் தேக அபிமானம் இருந்திருக்கக் கூடாது" என ஆதவர் சொல்லும்போதே, டே! கேலியா செய்கிறா? மந்திரப்பலகை மேல் அமர்ந்த நீ, இன்றிரவு மரணமடையப்போவது உறுதி. போடா!" என்று, ஆதவர் கழுத்தில் கையைப் போட்டு, வெளியே தள்ளினான் மந்திரவாதி.
வீதியில் விழுந்த ஆதவர் எழுந்தார். மகிமை நிறைந்த மந்திரங்களை இப்படி, அடுத்தவர் மரணமடைய உபயோகிக்கும் இந்த உலகத்தை நம்மால் திருத்த முடியுமா?" என்றபடியே, சற்று தூரம் நடந்து கோயில் குளத்து நீரை அள்ளிக் குடித்துவிட்டு, கோபுர வாயிலில் அமர்ந்தார். மாலை வழிபாட்டு நேரத்தில் வந்த அன்பர்கள், ஆதவரை நெருங்கி விவரமறிந்தார்கள்.
சிலர், அந்தப் பாவி நச்சுப்பல்லனாயிற்றே!" என வருந்தினார்கள். ஆதவரோ, ஹூம்! நான் இறக்க பயப்படவில்லை. இவன் வழிபட்ட முருகன் இவனைக் காப்பாற்றவில்லை என்று சாதாரண மக்கள் பேசுவார்கள். அதை எண்ணித்தான் வருந்துகிறேன். சரி! திடீரென வரும் வெள்ளத்தை அணையிட்டுத் தடுக்க முடியுமா என்ன? மரணத்துக்குப் பின் என் உடலை, மந்திரவாதி பார்ப்பதை விரும்பவில்லை. இன்றிரவு நான் மயானத்திலிருக்கிறேன். நாளை விடியற்காலை யாராவது ஒருவர் வந்து, என் உடலை எடுத்துச் செய்ய வேண்டியதைச் செய்து விடுங்கள்!" என்றார்.
அடியார்கள் விசும்பத் தொடங்கினார்கள்.ஆதவரோ, என்ன அழுகை? அறுபது நாழிகைப் பொழுதும் ஆறுமுகனைத் தியானித்தேனா என்ன? செய்ய வேண்டியதைச் செவ்வேள் அறிவான்" என்ற படியே எழுந்து, ஊர்க் கோடியிலிருந்த இடுகாட்டுக்குச் சென்றார்.
பொழுது சாயத் தொடங்கி விட்டது. இடுகாட்டி லிருந்த செடிகளிலிருந்து தளிர்களைப் பறித்துத் தரையில் பரப்பி, அவற்றின் மேல் அமர்ந்தார். உள்ளமும் உதடுகளும் ஆறுமுக மந்திரத்தை அழுத்தமாக ஜபித்தன.
நள்ளிரவு தாண்டியதும், காரிருள் நடுவில் சிறிதாகத் தோன்றிய ஒளியொன்று, வரவரப் பெரிதாகி, ஆதவரை நோக்கி வரத் தொடங்கியது. ஆதவர் அசையவில்லை. அவ்வொளி அருகில் வந்ததும், அதன் நடுவிலிருந்து ஒரு வேல் வெளிப்பட்டு ஆட, மயிலொன்றும் வெளிப்பட்டுத் தோகையை விரித்து ஆடியது.
பார்த்ததும் கைகளைக் குவித்தார் ஆதவர். சற்று நேரத்தில், ‘எற்ற்...எற்ற்...’ என்ற ஒலியெழுப்பி, விகாரமான வடிவத்தோடு பேயொன்று பெரும் தண் டத்துடன் அங்கே வந்தது. அச்சம் தரும் அதன் வடிவத்தைப் பார்த்ததும், ஆதவருக்கு உடல் ஆடியது. ஆனால், உதடுகள் ஆறெழுத்து மந்திரத்தைச் சொல்லிக் கொண்டிருந்தன.
பே, ஆதவரை நெருங்குவதற்குள், அதை வேல் துண்டுகளாக்க, மயில் அத்துண்டுகளை விழுங்கியது. அடுத்த பே... அடுத்த பே என, பேப் பட்டாளம் ஒன்றுவர அனைத்தையும் வேலாயுதம் மாக்க, மயில் அவைகளை விழுங்கியது.
விடியற்காலை நேரம்... குதித்தெழுந்த சேவல் ஒன்று, ‘கொக்கரக்கோ’ எனக் கொக்கரித்தது. வேலும் மயிலும் மறைந்தன. ஆதவருக்கு வியர்த்துக் கொட்டியது. எழுந்தவர், இடுகாட்டை விட்டு வெளிவந்து, சுரண்டை ஊரில் உள்ள அனுமந்தப் பொகையில்
நீராடி, அனுஷ்டானங்களை முடித்து, ‘பளிச்’சென்று பொழுது விடியுமுன், ஊருக்குள் எதிர்ப்பட்ட திண்ணையொன்றில் ஏறி உட்பக்கமாக அமர்ந்தார்.
அவர் இருப்பதை அறியாத சிலர், முட்டாள்! ஆதவரைப் போய் எதிர்க்கலாமா? அரம்பாடி அழித்து விட்டார் மந்திரவாதியை. ஆமாம்! சுடுகாட்டுக்குப் போயிருந்தாரே! சும்மாவா இருக்கும்? அங்கு போய் என்னமோ மந்திரம் பண்ணியிருக்கிறார். அதுதான் மந்திரவாதி இறந்து விட்டான்" என்றெல்லாம் பேசிக் கொண்டு போனார்கள்.
அவர்கள் பேச்சைக் கேட்ட ஆதவர் நடுங்கினார்; முருகா! முருகா! என்ன இது? நானாவது? அரம் பாடுவதாவது?அந்த எண்ணம்கூட எனக்குக் கிடையாதே! கந்தா! உன் லீலைகளை யாரறிவார்?" என்ற படியே, எழுந்து ஆலயத்துக்குள் புகுந்து ஆறுமுகனை வழிபட்டு, அந்த ஊரை விட்டு வெளியேறினார்.
காலையில் தென்காசி, உச்சியில் சங்கரநாராயணர் கோயில், மாலையில் கரிவலம்வந்தநல்லூர் எனத் தரிசித்து, இரவு பத்து மணிக்கு ஒரு சத்திரத்தில் வந்து படுத்தார். நேற்றிலிருந்து உணவு உண்ணாததால், காதடைத்துக் கண்கள் இருண்டன. ப்ச்! இது சொற்றாலடித்த சுவர். என்ன சொன்னாலும் கேட்காது. வயிறு இப்படித்தான் பாதிக்கும்" என்றபடியே சும்மாயிருந்தார்.
அப்போது, யாரையா அது? இங்க வந்து பசின்னு புலம்பறது? சக்கரப்பொங்கல், வெண் பொங்கல் இருக்கு. சாப்பட்றியா?" எனக் கேட்ட படியே, பெண்மணி ஒருவர் வந்தார். பார்த்தவுடன், அம்மா! யார் நீங்கள்? என் அன்னை வள்ளிநாயகியா?" எனக் கேட்டார் ஆதவர்.
வந்த பெண்மணி சிரித்தார்; அடாடா! சொறு போட்றவங்கள்லாம் உனக்கு அம்மாதானா? பசியோட பொலம்பறது காதுல விழ, ஏதோ பொங்கல் அது இதுன்னு கொண்டு வந்து குடுத்தா, அம்மாவா அப்பாவாங்கறியே" என்றபடியே கொணர்ந்தவை களை ஆதவரிடம் அளித்தார். சற்று நேரத்தில் உண்டு முடித்த ஆதவர், கையும் வாயும் அலம்பினார்.
போயிட்டு வரேன்" என்று பெண்மணி கூற, ஆதவர் நிமிர்ந்து பார்ப்பதற்குள், அவர் அப்படியே மறைந்தார். வந்தது வள்ளிதான் என்பதை உணர்ந்த ஆதவர், கைகளைத் தூக்கிக்கும்பிட்டார். அதன்பின் ஊரெங்கும் திரிந்து, வள்ளி மணவாளனின் புகழை விரிவுரை செய்து, முருகப்பெருமானின் திருவடிகளை அடைந்தார்.

Comments