தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி’

டலூரில் திருவருட்பிரகாச வள்ளலாரால் கட்டப்பட்டது சத்திய ஞான சபை. இங்கு 1872-ம் ஆண்டு தைப்பூச நாளில் அன்பர்களுக்கு ஜோதியைக் காட்டியருளினார். அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச நாளில் ஏழு மாயா திரைகள் நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது. 

வடலூரிலிருந்து இரண்டு மைல் தொலைவில் உள்ள கிராமம், மேட்டுக்குப்பம். இங்குதான் தனது இறுதி காலத்தில் தங்கியிருந்து, மரணமில்லாப் பெருவாழ்வை அடைவதற்கான வழிபாட்டைத் துவங்கினார் வள்ளலார். அந்த முயற்சியில் வெற்றியும் அடைந்தார். நிறைவில், ‘சித்தி வளாக’ அறைக்குள்ளே சென்றவர், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரோடு கலந்து ஞான தேகத்தை அடைந்தார். தான் பெற்ற வெற்றியை உலகமாந்தர்களும் பெறும் வகையில், சிறந்த வழிகாட்டலை வழங்கியிருக்கிறார். அவை என்னென்ன... அறிந்து மகிழ்வோமா?

‘தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி’


ஒவ்வொரு உயிரும் மூன்று வகை ஒளிகளால் இயங்குகிறது. அவை வெள்ளொளி, உயிரொளி, உள் ஒளி. இவற்றில் மனித உடலானது வெள் ஒளியால் உருவானது. அந்த தேகத்தில், மூளையால் சிந்திக்கப் பயன்படும் மன ஒளியாக வெளிப்படுவது உயிரொளி. மனிதன் உள்ளத்தால் அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டி நெகிழும்போது, உருக்கமும் நிறைவும் தருவதாய் வெளிப்படுவது உள்ளொளி. இம்மூன்றையும் மக்கள் உணர்ந்து பயன்பெறவே, இறைவன் திருப்பெயரை ‘அருட்பெருஞ்ஜோதி’ என்று வள்ளற்பெருமான் போதித்திருக்கிறார்.
‘அருள்’ என்பது வெள் ஒளியையும், ‘பெரும்’ என்பது உயிர் ஒளியையும், ‘ஜோதி’ என்பது உள் ஒளியையும் குறிக்கும். ஆகவே ‘அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி” என்னும் இம்மகா மந்திரத்தை மக்கள் இடைவிடாது மனதிற்குள் ஓதும்போது  அவர் களை இயக்குகிற உயிர் ஒளியை ஓங்கச் செய்யும்.

திருமந்திரத்தின் வழியில்...

‘கோபம் முதலிய அறுபகை ஒழிந்து, சிவயோக சித்தராய் வாழ்பவர்களே, மரணத்தை வென்று சிவபெருமான் திருவடியை சென்றடைந்த மெய்நெறியாகிய சன்மார்க்கத் தன்மையை உணர்ந்தவர்கள்’ என்கிறது திருமந்திரப் பாடல் ஒன்று. ஆம்! சன்மார்க்க நெறியானது ஒருவருக்கு அன்பு உருவையும், அருள் உருவையும், ஞான உருவையும் வழங்கி அருள் செய்யும்.  வள்ளலார் இந்த மூன்றையும் பெற்று உயர்ந்ததை, திருஅருட்பாவின் ஆறாம் திருமுறையில் காணலாம்.
மன்னுகின்ற பொன்வடிவு மந்திரமாம் வடிவும்
வான்வடிவும் கொடுத்தெனக்கு மணிமுடியுஞ் சூட்டி


- திருஅருட்பா: 6:14:36:61

`பொன் போன்று ஒளிரும் சுத்த தேகமும், பிரணவ வடிவான ஒளியுடம்பும், நிழல் தரையில் விழாத வானவர் வடிவமான ஞான தேகமும் எனக்குக் கொடுத்து எனக்கு மணி முடியும் சூட்டி' என்று இந்தப் பாடல் விளக்குகிறது. தாம் பெற்ற உயர்வை உலகமும் பெற வழி செய்தார் வள்ளல் பிரான் என்று பார்த்தோம் அல்லவா? அவ்வகையில், தன் பூதவுடல் அன்பு, அருள் மற்றும் ஞான தேகம் எடுத்தது குறித்த அனுபவங்களையும்  திருஅருட்பாவில் வெளிப்படையாக விரித்துரைக்கின்றார். அவைபற்றியும் அறிவோம்.

அன்பு உருவம்:
`அறிவு நிறைந்து ஒளிரும். சித்தம் மன அறிவுகளுடன் ஒன்றாகிக் களிக்கும். அகங்காரத்தின் அதிகரிப்பு அடங்கும். உலகத்தைக் காண உள்ளம் தழைத்து மலரும். உடம்பு அறிவுமயமாகி ஆனந்திக்கும். ஆன்ம அகம்பாவம் போயகலும், உலக விஷயங்கள் எல்லாம் மறைந்திடும். அலகிலா அருளின்மேல் ஆசை பொங்கும். உள்ளத்தில் எழுகின்ற தனியன்பு உயிரெல்லாம் மலர திருவருளாக ஓங்கும். அன்புருவமாகும்’
அருள் உருவம்:
அன்புருவமாகிய சுத்த தேகத்திற்கும் மேலேயுள்ள படிநிலை அருளுருவமாகும். அதை மந்திர வடிவமென்றும், ஒளி வடிவமென்றுங் கூறுவர். ஒளியுருவாகத் தோன்றும் இவ்வருள் உருவம் நம் கண்ணுக்குப் புலனாகும். ஆனால், கைகளில் பிடிபடாதது. ஸித்திகளையெல்லாம் ஏவல் செய்யும் அருள் வல்லமை  கொண்டது இது. எனினும், `ஸித்திகளை விரும்பாதே'  என்று ஆண்டவன் வள்ளற் பெருமானுக்கு அறிவுறுத்தியதாக திரு அருட்பா சான்று பகர்கின்றது.

ஒருமுறை, வள்ளற்பெருமானைப் புகைப்படம் எடுக்க, புகழ்பெற்ற புகைப்படக் கலைஞரை அழைத்து வந்தனர். அவரும் வள்ளலாரை எட்டு முறை புகைப்படம் எடுத்தார். ஆனால், புகைப்படங்கள் எவற்றிலும் வள்ளலாரின் உடையைத் தவிர முகமோ, கைகளோ, கால்களோ பதிவாகவில்லை! ஒளியினால் ஆகிய வள்ளற் பெருமானின் உடம்பில் ஒளி ஊடுருவிப் பாய்ந்து சென்றுவிட்டதனால் புகைப்படம் எடுக்க இயலவில்லை. இதன் மூலமாக வள்ளற்பெருமானின் அருள் உருவத்தின் இலக்கணம் மெய்ப்பிக்கப்பட்டது!

ஞான வடிவம்:
வள்ளலார், தான் ஞானதேகம் எடுக்கப் போவதைப் பற்றிய குறிப்புகளை திரு அருட்பாவின் ஆறாம் திருமுறையில் “என் சாமி யெனது துரை என்னுயிர் நாயகமே...'  எனத் துவங்கும் பாடலில், குறிப்பிட்டுள்ளார். `என் கடவுளும், என் தலைவரும், என் உயிராய் ஒளிர்கின்ற நாயகனுமாகிய சிவபெருமான் இன்று வந்து நானிருக்கும் இடத்தில் அமர்கின்றார். பின்னர், ஒரு மணி நேரத்துக்குள்ளே எனது பேருடம்பில் கலந்து பிரியாமல் இருப்பார். அவருடைய சிவகணங்களான இறைநிலை அடைந்த திருக்கூட்டத்தாரில் சேர்ந்தது, நான் செய்த பெருந்தவத்தால்' என்று அந்தப் பாடல் விளக்குகின்றது.

இங்ஙனம் தமது அனுபவங்களை உபதேசித்த வள்ளலார்,  தமது வாழ்வின் நிறைவையே அதற்கு சாட்சியாக்கினார். திருவருட்பிரகாச வள்ளலார் சித்தி வளாக அறையில் நுழைந்து திருக்காப்பிட்டுக் கொண்ட பின், சில நாள் கழித்து, அவரது மறைவு பற்றி விசாரணை நடத்திய அப்போதைய மஞ்சக்குப்பம் கலெக்டர் ஜே.எச்.கார்டின்ஸ், தமது கெஜட் குறிப்பில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

“1874 ல் மேட்டுக்குப்பத்தில் அவர் ஒரு அறைக்குள் நுழைந்து கொண்டு வெளியே தாழிடச் செய்தார். அந்த அறையைச் சில காலத்துக்குத் திறக்கக்கூடாதென்று அவர் தமது சீடர்களுக்குக் கட்டளையிட்டார். அன்றிலிருந்து அவர் காணாமல் போய்விட்டார். அறை இன்னும் பூட்டப்பட்டே இருக்கிறது. அவரின் பக்தர்கள், அவர் ஆண்டவனோடு ஐக்கியமாகி விட்டதாகவும், காலம் வந்ததும் அவர் திரும்பவும் தோன்றுவார் என்றும் நம்புகிறார்கள்.’’

இங்ஙனம் தமது வாழ்வையே அற்புதமாக்கி அதையே நமக்கான அருளுபதேசமுமாகவும் தந்த வள்ளலாரின் வழியில், நாமும் இறையைத் தேடுவோம்.

Comments