சத்து மாவு ரகசியம்!

ணவில் நல்லது வேண்டும் என்பார்கள் பெரியோர்கள். உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல... உள்ளத்தின் ஆரோக்கியத்துக்கும் உணவே அடிப்படை. ‘‘தூய உணவில் ஆரம்பி. அதுதான் குணம் தூய்மையாவதற்கு வழி’’ என்று ஸநத்குமாரர், நாரதருக்கு உபதேசித்ததைச் சுட்டிக்காட்டி, நமது உணவு எப்படியானதாக இருக்கவேண்டும் என்பதை காஞ்சி மஹாபெரியவர் எவ்வளவு எளிமையாக, அழகாக விவரிக்கிறார் பாருங்கள்...

ஆஹார சுத்திதான் சாதனைக்கு ஆரம்ப அடிப்படை. பத்து இருபது சாமான் வைத்துக்கொண்டால்தான் சமையல் என்று நம் சீமையில் ஆகியிருப்பதை மாற்றவேண்டும். இதுதான் சீர்திருத்தம். ஏதோ நிர்பந்தம் மாதிரி ரசம், கறி, கூட்டு, குழம்பு என்று பிரதிவேளையும் சாப்பிட்டாக வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். இத்தனை வஸ்து இருப்பதால்தான் புளி ஜாஸ்தியாகிவிடுமோ, உப்பு ஜாஸ்தியாகிவிடுமோ, சரியாகக் கொதி வந்துவிட்டதா என்றெல்லாம் சந்தேகம். வறுக்கிறதை எப்போது நிறுத்தணும், மாவு எப்போது கரைத்து விடணும், எவ்வளவு கரைத்து விடணும் என்றெல்லாம் யோசனை!

இந்த வேண்டாத சிரமங்கள் இல்லாமல் லேசான ரீதியில், ‘லைட்’டாக ஆகாரத்தை ஆக்கிக்கொள்ள வேண்டும். பூரியைத் தட்டிப்போட்டு பாலை விட்டுக்கொண்டு சாப்பிடுவதானால், அதைப் பத்து நாட்களுக்குக்கூட கெடாமல் வைத்துக்கொண்டு வயிற்றுப்பாட்டைத் தீர்த்துக்கொள்ளலாம். வயிறு நன்றாக ரொம்பும்; வியாதியும் வராது. சரீரத்துக்கே செளகர்யம்.

நாள் கணக்கில் பிரயாணம் பண்ணும்போது கூட கண்ட இடத்தில் கண்டதைத் தின்னாமல், இந்த மாதிரிப் பற்றுப்படாத பூரி, ஸத்துமா இதுகளைக் கொண்டே காலம் தள்ளிவிடலாம்.

அரிசியைக் களைந்து உலர்த்தி, சிவக்க வறுத்தெடுத்து அரைத்து வைத்துக்கொள்வதே ஸத்துமா. ‘ஸக்து’ என்பதே அதன் சரியான பெயர். ஆனால், உடம்புக்கு நல்ல ஸத்து தருவதாலும், ஸத்வ குணம் ஊட்டுவதாலும் அந்தப் பெயரை ஸத்துமா என்று ஆக்கியிருப்பதில் அர்த்தம் இருக்கிறது! அதிலே மோரை விட்டோ பாலை விட்டோ சாப்பிடலாம். கொஞ்சம் சாப்பிட்டால்கூட புஸ் என்று ஊறிக்கொண்டு பசியடங்கிப் புஷ்டியாயிருக்கும். ‘குக்கர்’, ‘கிக்கர்’கூட வேண்டாம். சுலபமாக, சீக்கிரமாக அதில் நாலைந்து தினுசைப் பண்ணிக்கொள்ள முடியலாம்.

குக்கர் வந்தால் அப்புறம் அஞ்சறைப் பெட்டி, ரொம்பப் புளி, ரொம்ப காரம் எல்லாம் கூடவே வரும். இது சித்தத்துக்குச் செய்கிற கெடுதலோடு உடம்புக்கும் கெடுதல் வந்து, பரிகாரமாக மருந்து, அந்த மருந்திலே அநாசாரம், இந்த அநாசாரத்துக்குப் பரிகாரம் என்று போய்க்கொண்டே இருக்கும். செலவையும் சொல்லவேண்டும். நிறைய வியஞ்ஜனம் (வெஞ்சனம்) என்றால், நிறைய செலவு ஆவதுடன், மருத்துவத்துக்கு ஆகிற செலவு வேறே!

ஆகையால், பெரியவர்கள் சொல்கிற மாதிரி ‘மதுர’மாக, ‘ஸ்நிக்த’மாக (பசையுள்ளது) லேசான ஆகாரத்தைத் தானே தயார் பண்ணிச் சாப்பிட வேண்டும் என்பதை ஜன்ம விரதமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ‘ஸ்நிக்தம்’ என்பதற்காக நெய் சொட்டவேண்டும் என்று அர்த்தம் இல்லை. பாலிலோ மோரிலோ ஊறினதாக அல்லது நெய்ப்பசை உள்ளதாக இருக்கவேண்டும் என்றே அர்த்தம். அதேபோல் மதுரம் என்றால் ஒரேயடியாக தித்திப்பாக இருக்கவேண்டும் என்று அர்த்தம் இல்லை. அரிசி, கோதுமை முதலான எந்த பதார்த்த மானாலும் அதற்கென்றே ஒரு தித்திப்பு உண்டு. இப்போதைய புளி, கார சமையலில் பதார்த்தத்தை ஓவராக வேகவைத்து, அதன் இயற்கையான ஸத்து க்ஷீணிக்கும்படிப் பண்ணுவதில் தித்திப்பு போய்விடுகிறது. பண்டத்தைவிட்டு இயற்கையான தித்திப்பு போகாதபடியான ஆகாரமாகச் சாப்பிட வேண்டும் என்று அர்த்தம்.

சாப்பிடுமுன் நிவேதனம் முக்கியம். வேறு பூஜை என்று பெரிதாகப் பண்ணாவிட்டாலும், நமக்குக் கையைக் கொடுத்து அந்தக் கையாலேயே சமைத்துக் கொள்ளணும் என்ற புத்தியைக் கொடுத்து ஸ்வயம்பாகம் பண்ணிக்கொள்ள வைத்தவனுக்கு அதைக் காட்டி, நிவேதனமாக்கி அதில் இருக்கக்கூடிய கொஞ்சநஞ்சம் தோஷத்தையும் போக்கிவிடவேண்டும்.

Comments