ஏறு தழுவுதலுக்கும் ஏற்றம் தந்தவன் கண்ணபிரான்!

'நான் வளர்த்த இந்தக் காளையை அடக்கினால், என் பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பேன்’ என்று, அந்தக் காலத்தில் பெண்ணைப் பெற்ற தகப்பன் சொல்வாராம். இதை வேடிக்கையாகச் சொல்வார்கள்... ‘இந்தக் காளையை அடக்கிவிட்டால், என் பெண்ணை அடக்கிவிடுவது உனக்கு சுலபம்’ என்று பெண்ணின் தகப்பன் சொல்லாமல் சொல்வதுதான் இந்தச் செயல் என்று!
கண்ணனைக் கட்டிளம் காளை எனக் குறிப்பிடும் பாகவத புராணக் கதைகள் கண்ணனே காளைகளை அடக்கி பெண்ணை மணம் செய்ததைக் குறிப்பிடுகிறது. கண்ணனின் தாமாமன் கும்பன். அவர் யசொதையின் சகோதரர். இன்றைய நேபாளப் பிரதேசத்தில் வாழ்ந்தவர். அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு ‘நப்பின்னை’ என்று பேரிட்டு வளர்த்தார். அத்துடன், ஏழு எருதுகளையும் சேர்த்தே வளர்த்தார். அந்த எருதுகளை அடக்குபவர்க்கே தன் மகளைத் திருமணம் செய்து கொடுப்பதாகவும் கூறினார்.


கண்ணனைக் கொல்வதிலேயே குறியாக இருந்த கம்சன், இந்த ஏழு எருதுகளில், அசுரர்களை ஏவி விட்டான். இதனால், அவை மிக விரைவாகவே மாபெரும் உருக்கொண்டு வளர்ந்தன. கண்ணனுக்கு ஐந்து வயதானபோது, ஒரு நாள் யசொதை, கண்ணனை அழைத்துக் கொண்டு கும்பன் வீடு சென்றாள். அங்கே அந்த ஏழு எருதுகளைக் கண்ட கண்ணன், அதுகுறித்து விசாரித்தான். பின் தானே அவற்றை அடக்குவதாகக் கூறி, கண் இமைக்கும் நேரத்தில் ஏழு எருதுகளையும் அடக்கிவிட்டான். உடனே கும்பனும் சொன்னபடி, தனது மகளான நப்பின்னையை கண்ணனுடனேயே அனுப்பி விட்டாராம். ஸ்ரீ வேதாந்த தேசிகர் தமது ‘யாதவாப்யுதயம்’ என்பதில் இதனை சுவைபடக் கூறுகிறார்.


நம்மாழ்வார், ஸ்ரீகிருஷ்ணன் அவதரிக்க முக்கியக் காரணம், கோகுலத்தில் வெண்ணை அமுது செய்யவும், நப்பின்னை பிராட்டியை மணம் செய்யவுமே என்கிறார். எருதுகளைத் தழுவி அடக்கும் கண்ணனின் லீலையைச் சொல்லும் ஆழ்வார், அவற்றின் பெரிய கொம்புகளில் புகுந்து குழந்தைக் கண்ணன் வெளியேறினான் என்றார். அந்தக் கூத்தை, ‘கோட்டிடை யாடினை கூத்து அடலாயர்தம் கொம்பினுக்கே’ என்கிறார். கொம்புகளின் இடையே ஆடினை கண்ணா இக் கூத்தை என்று வர்ணித்தார்.
அடுத்து நம்மாழ்வாரின் திருவாமொழி (4.3.1) ‘கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் இருத்தம் எருத்தா’ என்ற பாசுரத்தில் இன்னோர் அழகு!


மூத்தவன் பலராமன் தான் முதலில் அக்காளைகளை அடக்க முயன்றாராம். ஆனால், நப்பின்னையோ கண்ணன் மீது கண்வைத்திருந்தாள். எங்கே பலராமன் இக்காளைகளை அடக்கிவிடுவாரோ என்று அவளுக்கு நெஞ்சு திக் திக் என்றிருந்த தாம். நல்லவேளை, பலராமன் பின் ஒதுங்க, கண்ணன் தன் கரத்தால் காளைகளிடம் விளையாடினான். கோவை வாயாளான நப்பின்னை பொருட்டு அவளைத் தழுவு வதற்கு வேண்டி அக் காளைகளைத் தழுவினான் கண்ணன் என்று நம்பிள்ளை ஈடு ஒன்றில் சுகமா அனுபவிக்கிறார். திருமகள் திகழும் கண்ணன் மார்பில் கோலமிட வேண்டுமே என்று யோசித்தபோது, காளைகளை அடக்கியபோது அவற்றின் கொம்புகள் பட்ட வீரத் தழும்புகளை கோலமாக கண்ணன் மார்பில் தரித்தானாம்!


பசுவைக் காத்தலுக்கு மட்டுமல்ல, ஏறு தழுவுதலுக்கும் ஏற்றம் தந்தவன் கண்ணபிரான்!

Comments