கொட்டிக்கொடுப்பார் கோலவில்லி ராமன்!

ழ்வார்களால் பாடல்பெற்ற 108 திவ்யதேச ஆலயங்களில் ஒன்று, கும்பகோணம் அருகிலுள்ள திருவெள்ளியங்குடி அருள்மிகு கோலவில்லி ராமன் திருக்கோயில். நான்கு யுகங்கள் கடந்த இந்த ஆலயத்தைத் தரிசித்தாலே, 108 திவ்யதேசங்களையும் சேவித்த பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

கும்பகோணம் - அணைக்கரை வழியில், சோழபுரம் மற்றும் திருப்பனந்தாளிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது, திருவெள்ளியங்குடி.

பெருமாள், வாமன அவதாரம் எடுத்து மகாபலி யிடம் தானம் வேண்டி வந்தார். அவருக்கு தானம் வழங்குவதைத் தடுக்க நினைத்தார் சுக்ராச்சார்யர். எனவே, ஒரு வண்டாக உருவெடுத்து வந்து, மகாபலியின் கமண்டலத்தில் இருந்து நீர் வெளியேறும் துவாரத்தை அடைத்துக் கொண் டார். அவரது சூது எண்ணத்தை அறிந்த பகவான், தர்ப்பைப் புல்லை எடுத்து, கமண்டல துவாரத்தில் நுழைத்துக் கிளறினார். அதனால், சுக்ராச்சார்யரின் பார்வை பறிபோனது. 
அதன்பிறகு,  இந்தத் தலத்துக்கு வந்து ஒரு மண்டல காலம் தவமிருந்து, பெருமாளைப் பிரார்த்தித்து, சுக்ராச்சார்யர் கண்ணொளி பெற்றதாகச் சொல்கிறது ஸ்தல புராணம். இந்த அற்புதத்தைக் குறிக்கும் வகையில், இன்றைக்கும் இந்த ஆலயத்தில் அணையா விளக்கு (நேத்திர தீபம்) சுடர்விடுவதைக் காணலாம்.
அசுரகுலச் சிற்பியான மயனின் தவத்தாலும் பிரார்த்தனையாலும் மகிழ்ந்த மகாவிஷ்ணு, சங்கு சக்ரதாரியாக அவனுக்குக் காட்சியளித்தார். அவனோ, `கல்யாணக் கோலத்தில் காட்சிதர வேண்டும்' என்று பிரார்த்திக்க, மகாவிஷ்ணுவும் தமது சங்கு - சக்கரங்களைக் கருடனிடம் கொடுத்து விட்டு, மணக்கோலத்தைக் காட்டியருளினாராம்.
இங்கே, கருடாழ்வார் நின்ற நிலையுமில்லாமல், அமர்ந்த நிலையுமில்லாமல், பெருமாளிடம் பெற்ற சங்கு - சக்கரத்தை மீண்டும் அவரிடம் அளிப்பதற் காக எழும் நிலையில் அருள்வது, விசேஷ அம்சம்.

இங்கே மூலவரின் திருநாமம் க்ஷீராப்திநாதர் என்பதே. எனினும் திருமங்கை ஆழ்வார், இந்தப் பெருமாளை `கோலவில்லி ராமன்' என்ற பெயரால் அழைத்தே பாடியுள்ளார். கோயிலின் உள் பிராகாரத்தில் கருங்கல் தரையில் முளைத்து, வாழையடி வாழையாக வளர்ந்து நிற்கும், ஸ்தல விருட்சமான செவ்வாழை மரமும் இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.

இத்தலத்தின் பிரார்த்தனை மற்றும் வழிபாட்டுச் சிறப்புகளை, ராமமூர்த்தி பட்டாச்சாரியார் விவரித்தார்: “சுக்கிர பகவானுக்குப் பார்வை கொடுத்த தலம் என்பதால், இங்கு வந்து பிரார்த் தனை செய்தால் கண் தொடர்பான அனைத்துக் குறைபாடுகளும் நீங்கும். மேலும், திருமணத் தடை நீங்குதல், தம்பதி ஒற்றுமை, புத்திர பாக்கியம், சுக்கிர தோஷம் நீங்குதல் ஆகியவை குறித்த பிரார்த்தனை களுக்கும் உகந்த தலம் இது.
சங்கு, சக்கரத்துடன் காட்சிதரும் கருட பகவானை வணங்கி வழிபட்டுச் சென்றால், வாகன விபத்துகள் நேராது. அதேபோல், வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி ஆகிய மாதங்களில் முதல் தேதியன்று வந்து வழிபட்டால், எண்ணிய காரியங்கள் கைகூடும். மேலும், இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில், விஷ்ணுபதி புண்ணியகாலமான  வைகாசி ரோகிணி நன்னாளிலும், மாசி மாதம் முழுவதிலும் அதிகாலையில் நீராடி, பெருமாளைச் சேவித்தால் சகலவிதமான தோஷங்களும் நீங்கும். இங்குள்ள யோகநரசிம்மரை பிரதோஷ நாளில் வந்து வணங்க, எல்லாவித நோய்களும் தீரும்.”

நீங்களும் ஒருமுறை இந்தத் தலத்துக்குச் சென்று வழிபட்டு வாருங்கள்; காலமெல்லாம் மகிழ்வோடு வாழவைப்பார் கோலவில்லி ராமன்.

Comments