கார்த்திகையில் கண் திறக்கும் கடிகாசலன்!

வேலூர் மாவட்டம், அரக்கோணத்துக்கு அருகில் சோளிங்கரில் அமைந்துள்ளது அமிர்தவல்லி தாயார் சமேத ஸ்ரீயோகநரசிம்மர் திருக்கோயில். பெருமாளின் 108 திருப்பதிகளில் ஒன்றான இத்தலத்தில் சப்த ரிஷிகளுக்கு ஒரு கடிகை (24 நிமிடங்கள்) நேரத்தில் எம்பெருமான் முக்தியளித்த பெருமை கொண்டதால் இத்தலம் கடிகாசலம் என்றும், இறைவன் கடிகாசலன் என்றும் அழைக்கப்படும் புகழ்மிக்க திருத்தலம். ஒரு கடிகை நேரம் இந்த கே்ஷத்ரத்தில் தங்கி, இறைவனை வழிபட்டாலே செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும்.
வருடத்தின் 11 மாதங்கள் யோக நிலையிலேயே காட்சி தரும் நரசிங்கப் பெருமாள், கார்த்திகை மாதம் முழுவதும் கண்திறந்து அருள்பாலிப்பதாக ஐதீகம். குறிப்பாக, கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில் பகவான் தமது திருநேத்ரம் திறந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
பிரகலாதனுக்கு நரசிங்க ரூபத்தில் காட்சி தந்த பெருமாளை, விசுவாமித்திரர் இத்தலத்தில் சிறிது நேரம் வழிபட்டதன் பயனாக, ‘பிரம்ம ரிஷி’ என்ற பட்டம் பெற்றார். அதேபோல், தங்களுக்கும் நரசிம் மரின் தரிசனம் கிடைத்தால் மோட்சம் எனக் கருதிய வாமதேவர், வசிஷ்டர், காஷ்யபர், அத்திரி, ஜமதக்னி, கவுதமர், பரத்வாஜர் ஆகிய சப்த ரிஷிகள் இத்தலத்தில் தவமிருந்தனர். ஆனால், அவர்களை காலன், கேயன் என்ற அரக்கர்கள் தொந்தரவு செய்தனர்.
ரிஷிகள் தங்களைக் காக்க பெருமாளிடம் வேண்டினர். பெருமாள் ஆஞ்சனேயரிடம் தமது சங்கு,
சக்கரத்தைக் கொடுத்து ரிஷிகளைக் காக்கும்படி கூறினார். ஆஞ்சநேயர் அரக்கர்களை வதைத்து ரிஷிகளின் துயர்தீர்த்தார். பின்னர், ரிஷிகளின் தவம் தடையின்றி தொடர்ந்தது. பெருமாளும் அவர்களுக்கு நரசிம்ம ராகக் காட்சி கொடுத்து அருள்பாலித்தார் என்பது வரலாறு.
கரிகாலச் சோழன் காலத்தில் கட்டப்பட்ட கோயில் என்பதால், ‘சோழசிங்கபுரம்’ என்ற பெயர் மருவி, சொளிங்கபுரமாயிற்று. ஸ்ரீயோக நரசிம்ம சுவாமி பெரிய மலை மீது அருள்பாலிக்கிறார். மலையடிவாரத்தில் உள்ள தக்கான் குளத்தில் நீராடி, 400 அடி உயரம்; 1305 படிகள் கொண்ட இம்மலை மேல் ஏற வேண்டும். அக்காலத்தில் இந்த மலை கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாகத்தான் இருந்தது. தற்போது நல்ல வசதிகளோடு படிகள் அமைத்து, கூரை வேயப்பட்டிருக்கிறது.
கருவறையில் பகவான் நரசிம்மர் யோக நிலையில் நான்கு திருக்கரங்களுடன் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். நம்பிக்கையுடன் வரும் அனைத்து பக்தர்களுக்கும் தனது யோக நிலையிலேயே அருள்பாலிப்பதாக ஐதீகம்.
பெரிய மலையிலிருந்து சற்று தொலைவில், சுமார் இருநூறு அடி உயரத்தில் 406 படிகளோடு அமைந்துள்ள சிறிய மலையின் மேல் ஸ்ரீயோக ஆஞ்சநேயர் மேற்கு நோக்கிக் காட்சி தருகிறார். ஸ்ரீஆஞ்சநேயர், பகவான் ஸ்ரீயோக நரசிம்மரை சதா சர்வகாலமும் தரிசிக்கும் கோலத்தில் யோக நிலையில் காட்சியளிக்கிறார். நான்கு திருக்கரங்களுடன் அமர்ந்திருக்கும் ஆஞ்சநேயரின் மேல் இரு திருக்கரங்களையும் பகவான் நரசிம்மரால் கொடுக்கப்பட்ட சங்கும், சக்கரமும் அலங்கரிக்கின்றன. ஆஞ்சநேயர் சன்னிதியின் எதிரில் தெரியும் துவாரத்தின் வழியே நோக்கினால் ஸ்ரீயோக நரசிம்மரின் கோயில் தெரியும். இங்குள்ள திருக்குளத்துக்கு ’ஹனுமத் தீர்த்தம்’ என்பது பெயர்.
இக்கோயிலில், முதலில் தாயார் பிறகு பெருமாள் அடுத்து, ஆஞ்சநேயர் என்ற வரிசைக்கிரமத்தில் தரிசனம் செய்ய வேண்டும். நமது கோரிக்கைகளை அமிர்தவல்லி தாயாரிடம் கூறினால், அதை அவர் பெருமாளிடம் பரிந்துரைக்க, பெருமாள் அதை ஆஞ்சநேயரிடம் கூறி நிறைவேற்றித் தருவதாக ஐதீகம்.
பெரும்பாலான கோயில்களில் மூலவர் மூர்த்த மும் உத்ஸவர் மூர்த்தமும் ஒரே சன்னிதியில் காணப்படும். ஆனால், இக்கோயில் மலையிலிருந்து அடிவாரத்தில் 2 கி.மீ. தொலைவில் உள்ள சொளிங் கரில் உத்ஸவர் ஸ்ரீபக்தவத்சலர் மற்றும் சுதாவல்லி தாயாருக்குத் தனிக்கோயில் உள்ளது. மலைக் கோயில் பெருமாளை தரிசனம் செய்துவிட்டு இக்கோயிலில் இரவு தங்கினால் வேண்டுதலுக்கான பரிகாரத்தை இத்தல அமிர்தவல்லி தாயார் பக்தர்களின் கனவில் சொல்லி விளக்குவார். இதை அனுபவத்தில் உணர்ந்தவர்கள் ஏராளம். அதேபோல் 48 நாட்கள் சேவை செய்து சுவாமி அம்பாளை பிரதக்ஷிணம் செய்து கைமேல் பலன் கண்டவர்கள் பலருண்டு.
இத்தலத்தை பேயாழ்வார், திருமங்கை ஆழ்வார், நாதமுனிகள், திருக்கச்சி நம்பி, ராமானுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோர் பாடியுள்ளனர். மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தை பாக்கி யம் வேண்டுவோர், திருமணத்தடை உள்ளவர்கள், வியாபாரம் செழிக்க விரும்புபவர்கள் இங்குள்ள திருக்குளத்தில் நீராடி, யோக நரசிம்மரையும் யோக ஆஞ்சனேயரையும் வழிபட்டு கீழ்க்கோயிலில் அன்னதானம் செய்கிறார்கள். இங்கு தானம் செய்தால் கயாவில் தானம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் இக்கோயிலை கிரிவலம் வருகிறார்கள்.
‘தயங்கித் தயங்கி நிற்பதென்ன?
மேலும் கீழும் பார்ப்பதென்ன?
மயங்கிச் சற்று நிற்பதென்ன?
அச்சம் கொண்டு அமர்வதென்ன?
பிடிப்பொன்று இருக்கையிலே
படி கண்டு மலைப்பதென்ன?
பிடிதளரின் மனந்தளரின்
மலையென்றும் ஏறோமே!’
இவ்வாக்கியங்களை மனதிற் கொண்டு, குரங்குக் கூட்டத் தொல்லைகளிலிருந்து தப்பிக்க கையில் கம்புடன் ஏறினால், வயதான காலத்தில் நடக்க உதவியாகும்; கைக்கோல் வேண்டாத திடம் பெறுவோம்.

Comments