பெரியவா-8

ஸூதி: ஸ்வேதிம கந்தளஸ்ய வஸதி: ச்ருங்கார ஸாரச்ரிய:
பூர்தி: ஸூக்திஜரீரஸஸ்ய லஹரீ காருண்யபாதோநிதே:
வாடீ காசந கௌஸுமீ மதுரிமஸ்வாராஜ்யலக்ஷ்ம்யாஸ் தவ
ஸ்ரீகாமாக்ஷி மமாஸ்து மங்களகரீஹாஸப்ரபாசாதுரீ

ஸ்ரீகாமாக்ஷி அம்பிகையே, உன் புன்சிரிப்பின் அழகு, வெண்மை துளிர்க்கும் இடம்; சிருங்கார ரஸமான அழகின் இருப்பிடம்; அழகிய பேச்சின் இனிமைக்கு பூர்ணத்துவம் தரும் இடம்; கருணைக் கடல் அலைபாயும் இடம்; இனிமை என்னும் பேரரசி லக்ஷ்மி உலாவும் சிறந்த பூஞ்சோலை, அந்த உன் புன்சிரிப்பு எனக்கு மங்களம் அருளட்டும்.

-மூகபஞ்சசதீ


லேசான மழைத் தூறல் பூமியை இதமாக வருடிக் கொடுத்த அதிகாலைப் பொழுது. வயது முதிர்ந்த ஒரு பாட்டி தன்னுடன் இளம் பெண் ஒருத்தியை அழைத்துக் கொண்டு, கயிலை சங்கரனின் அவதாரமாக அருளாட்சி செலுத்திக் கொண்டிருந்த காஞ்சி மஹா ஸ்வாமிகளை தரிசிப்பதற்காக ஸ்ரீமடத்துக்குச் சென்று கொண்டிருந்தாள்.

பாட்டி ஸ்ரீமடத்தை அடைந்தபோது, பக்தர்களுக்கு விஸ்வரூப தரிசனம் அருளிய மஹான், தம்முடைய அறைக்குச் செல்வதற்காக எழுந்தார். எழுந்தவர், பாட்டியைப் பார்த்ததும் திரும்பவும் அமர்ந்துகொண்டார்.

‘‘அடடே, மீனாட்சி பாட்டியா? எப்பவும் நீ பத்து பத்தரை மணிக்குத்தானே சந்திரமௌலீச்வரர் பூஜைக்கு பாரிஜாத புஷ்பம் கொண்டு வருவே? இன்னைக்கு அதிகாலையிலயே வந்திருக்கியே? ஏதும் விசேஷமோ? இது யாரு உன்னோட பேத்தியா?’’ என்று கனிவுடன் கேட்டார்.

அந்தப் பாட்டி, ‘‘விசேஷம்தான் பெரியவா. இவ என்னோட மக வயத்து பேத்திதான். இந்த ஊர்ல பொறந்ததால காமாட்சின்னு பேரு வச்சிருக்கேன். பெத்தவங்களை சின்ன வயசுலயே பறிகொடுத்துட்டா. நான்தான் வளர்த்துட்டு வர்றேன். இவளுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வச்சிட்டா என் கடமை முடிஞ்சிடும்’’ என்று பாட்டி சொல்லிக் கொண்டிருந்தபோதே குறுக்கிட்ட மஹான்,
‘‘அதுக்கென்ன பேஷா செஞ்சிடறதுதானே.’’ என்றார்.

‘‘நானும் அதுக்காக அலைஞ்சி திரிஞ்சி ஒரு நல்ல வரன் பார்த்திருக்கேன். பையன் வாத்தியார் உத்தியோகம் பார்க்கறான். அவாளுக்கும் என் பேத்தியை பிடிச்சிருக்கு. ஆனா, பையனோட அம்மா வரதட்சணையா எட்டு பவுன்ல ரெட்டைவட சங்கிலி ஒண்ணு போடச் சொல்றா. என்கிட்ட அவ்வளவு வசதி இல்லை. என்னோட சேமிப்புல ரெண்டு பவுன்ல வளையல் செஞ்சு வச்சிருக்கேன். அதத் தவிர சிக்கனமா கல்யாணம் செஞ்சு வைக்க முடியும். ஆனா, எட்டு பவுன்ல ரெட்டைவட சங்கிலிக்குத்தான் என்ன பண்றதுண்னு புரியலை’’

‘‘அதுக்கு நான் என்ன செய்யணும்கிறே?’’ குரலில் கனிவு ததும்பக் கேட்டார் மஹான்.

‘‘பெரியவாதான் கிருபை செய்யணும். மடத்துக்கு வர்ற பணக்காராள் யாரையாச்சும் உபகாரம் பண்ணச் சொன்னா பேத்தியோட கல்யாணம் நல்லபடியா முடிஞ்சிடும்’’

அதைக் கேட்ட மஹான் சட்டென்று, ‘‘அதெல்லாம் என்னால செய்யமுடியாது. நீ வேணும்னா ஒண்ணு பண்ணு. எட்டு பவுன்ல ரெட்டைவடச் சங்கிலி கேட்காத இடமா உன் பேத்திக்கு வேற பையனைப் பார்த்துக்கோ’’ என்று சொல்லிவிட்டு உடனே எழுந்துகொண்டார்.

கலங்கிப் போன பாட்டி கலக்கம் குரலிலும் தெரிய, ‘‘பெரியவா அப்படி எங்களைக் கைவிட்டுடக் கூடாது. கண்ணுக்கு கண்ணா வளர்த்த பேத்தியை நல்ல இடத்துல கல்யாணம் செஞ்சு கொடுக்கணும்னுதான் இந்த வரனைப் பார்த்தேன். ஜாதகம் கூட நன்னா பொருந்தியிருக்கு. பெரியவாதான் அனுக்கிரஹம் செய்யணும்’’ என்றார்.

பாட்டியின் சோகக் குரல் மஹா ஸ்வாமிகளை சற்றே கட்டிப் போட்டது. அன்பும் கருணையும் ஒருசேர வடிவெடுத்து வந்தவர் அல்லவா மஹான்! எழுந்துவிட்ட ஆச்சார்யாள் மீண்டும் கீழே அமர்ந்தார். சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தார். பிறகு கருணையோடு பேச ஆரம்பித்தார், “நா ஒரு கார்யம் சொல்றேன்.... பண்றயா?”

“கண்டிப்பா பண்றேன். என்ன பண்ணணும்னு சொல்லுங்கோ” என்று பரபரத்தாள் பாட்டி.

உடனே மஹா ஸ்வாமிகள், “ஒம் பேத்தியை அழச்சிண்டு அஞ்சு நாளைக்கு காமாட்சியம்மன் கோயிலுக்குப் போ. ரெண்டு பேருமா சேந்து, “எட்டு பவுன்ல ரட்ட வட சங்கிலி போட்டு கல்யாணம் ஜாம்ஜாம்னு நடக்கணும்....நீதாண்டி அம்மா நடத்தி வைக்கணும்னு பிரார்த்திச்சுண்டு ரெண்டு பேருமா சந்நிதியை அஞ்சு பிரதட்சணம் பண்ணுங்கோ, அம்பாளுக்கு முன்னாடி அஞ்சு தடவை நமஸ்காரம் பண்ணிட்டுக் கெளம்புங்கோ. இப்படி அஞ்சு நாளக்கி பண்ணுங்கோ... ஒம் மனசுல நெனச்சிண்டிருக்கறபடியே காமாட்சி நடத்தி வெப்பா” என்று சிரித்துக்கொண்டே அனுக்கிரகித்தார்.

நமஸ்காரம் பண்ணி எழுந்த மீனாட்சி பாட்டி, “அதென்ன பெரியவா... எல்லாமே அஞ்சஞ்சா சொல்றேளே. அப்டி பண்ணா பேத்தி காமாட்சிக்கு அம்பாள் காமாட்சி கல்யாணத்த நடத்தி வெச்சுடுவாதானே” என ஆர்வத்தோடு கேட்டாள்.

உடனே மகா ஸ்வாமிகள், “அஞ்சஞ்சுனு நானா சொல்லலே. அம்பாளுக்கு, ‘பஞ்ச ஸங்க்யோபசாரிணி’னு ஒரு பெருமை உண்டு.  அஞ்சஞ்சா பண்ற உபசாரத்திலே சந்தோஷப்பட்டு அனுக்கிரகம் பண்றவ அவ, அதத்தான் சொன்னேனே தவிர, வேற ஒண்ணுமில்லே” எனச் சிரித்துக்கொண்டே சொன்னார்.

“சரி பெரியவா. அப்படியே பண்றேன்” என்று சொல்லிப் பேத்தியுடன் காமாட்சி அம்மன் கோயிலுக்குப் புறப்பட்டுவிட்டாள் பாட்டி. வெள்ளிக்கிழமையானதால் அன்னை காமாட்சி அன்று விசேஷ அலங்காரத்தில் ஜொலித்தாள்.

இருவரும் கண்களை மூடிப் பெரியவா சொன்னது போலவே பிரார்த்தித்துக் கொண்டனர். பிறகு பேத்தியும் பாட்டியும் அம்மனிடம், ‘எட்டு பவுன் ரெட்டவட சங்கிலி’யையே பிரார்த்தித்தபடி ஐந்து பிரதட்சணம் வந்தனர். ஸ்வாமிகள் சொன்னபடி அம்பாளுக்கு முன்பாக ஐந்து நமஸ்காரம் பண்ணினார்கள். பிறகு நம்பிக்கையுடன் வீடு திரும்பினர்.


இப்படி நாலு நாட்கள் சென்றுவிட்டது. அற்புதம் எதுவும் நடக்கவில்லை. ஆனாலும் மஹானின் வார்த்தைகளில் அதீத நம்பிக்கை வைத்திருந்த பாட்டி, ஐந்தாவது நாளும் பேத்தியை அழைத்துக் கொண்டு காமாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றாள். அன்று காமாட்சியம்மன் கோயிலில் அவ்வளவாகக் கூட்டமில்லை. காலை 11 மணி. வழக்கத்தைவிட நேரமாகிவிட்டதால் பேத்தியுடன் கோயிலை நோக்கி வேகமாக நடந்தாள் மீனாட்சி பாட்டி. கோயில் வாசலில் அர்ச்சனைத் தட்டு வியாபாரம் செய்கிற கடைக்கு முன் நின்ற பாட்டி, பேத்தியிடம், ‘‘அடியே காமாட்சி, இன்னிக்கு பூர்த்தி நாள்டீ. அதனால எல்லாத்தயுமே ஆச்சார்யாள் சொன்னபடி அஞ்சஞ்சா பண்ணிடுவோம். நீ என்ன பண்றே..அர்ச்சனைக்கு அஞ்சு தேங்கா, அஞ்சு ஜோடி வாழப்பழம், வெத்தல பாக்குனு எல்லாமே அஞ்சஞ்சா வாங்கிண்டு ஓடி வா, பார்ப்போம் என்று காசைக் கொடுத்தாள்.

பாட்டி சொன்னபடியே வாங்கி வந்தாள் பேத்தி. அம்பாளுக்கு அர்ச்சனை பண்ணி, கண்களில் நீர் மல்கப் பிரார்த்தித்துக் கொண்ட பாட்டி, “அம்மா காமாட்சி, ஒன்னைத்தாண்டியம்மா பூர்ணமா நம்பிண்டிருக்கேன். ஒன்னையும் ஸ்வாமிகளையும் விட்டா வேற கதி நேக்கு இல்லடிம்மா. நீதான் எப்படியாவது அந்த எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலிக்கு ஏற்பாடு பண்ணித் தந்து பேத்தி கல்யாணத்தை நல்லபடியா முடிச்சு வெக்கணும்.”

பாட்டியின் பிரார்த்தனை நிறைவேறியதா? அந்தப் பேத்தியின் கல்யாணத்தை எந்தக் குறைவும் இல்லாமல் நல்லபடியாக நடத்திக்கொடுத்தாளா காஞ்சி காமாட்சி?

அதில் சந்தேகமென்ன? பெரியவாளின் திருவாக்கு அந்தப் பரமேஸ்வரனின் அருள்வாக்குக்குச் சமமானது அன்றோ? அன்றைக்கு ஆதிசங்கரரின் பிரார்த்தனைக்கு இரங்கி மஹாலக்ஷ்மி தங்க நெல்லிக் கனிகளை வர்ஷித்ததுபோலவே, இன்றைக்கு ஆதிசங்கரரின் அவதாரமேயான காஞ்சி மஹா ஸ்வாமிகளின் ஆக்ஞையின்படி தன்னிடம் பிரார்த்தித்துக் கொண்ட பாட்டியின் வேண்டுதலையும் அம்பிகை நிறைவேற்றவே செய்தாள்.

ஆனால், அதன் பின்னணியில் மஹா ஸ்வாமிகள் ஒரு படிப்பினையை நமக்கெல்லாம் அருளி இருக்கிறார். அந்தப் படிப்பினை..?

Comments