மஹா ஸ்வாமிகள் -5

ஜாதா சீதலசைலத: ஸுக்ருதிநாம் த்ருச்யா பரம் தேஹிநாம்
லோகாநாம் க்ஷணமாத்ர ஸம்ஸ்மரணத: ஸந்தாப விச்ச்சேதிநீ
ஆச்சர்யம் பஹுகேலநம் விதநுதே நைச்சல்யமா பிப்ரதீ
கம்பாயாஸ் தடஸீம்நி காபி தடிநீ காருண்யபாதோமயீ


கம்பை நதிக்கரையில் அசையாததும், கருணை என்னும் நீர் நிரம்பியதுமான மற்றொரு நதியானது விந்தைக்கு உரிய பல விளையாட்டுகளைப் புரிகிறது. அதுவும் பனிமலையில் தோன்றியதே! புண்ணியம் செய்தவரால் மட்டுமே காணத் தக்கது.  நொடிப் பொழுது தியானித்தாலே போதும், உலகத்தின் தாபங்களைப் போக்கிவிடும்.

- மூகபஞ்சசதீ

கருணையே வடிவாக காஞ்சியில் தவக்கோலம் பூண்டிருக் கும் அம்பிகை காமாட்சி, திருவிழா நாட்களில் வீதியுலா வருவதும், அவளை தரிசிக்க அக்கம்பக்கத்து கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதும் வழக்கம். வீதியுலாவின்போது கச்சபேஸ்வரர் கோயில் அருகில் நடைபெறும் வாணவேடிக்கைகளை ஆர்வத்துடன் பார்ப்பதில் சிறியவர் பெரியவர் என்ற வேறுபாடே இருக்காது.

ஒருமுறை, கச்சபேஸ்வரர் கோயில் அருகில் வாண வேடிக்கைகள் முடிந்த பிறகு, அம்பிகையின் வீதியுலா மேற்கொண்டு தொடராமல் அப்படியே நின்றுவிட்டது. காரணம், வீதியுலாவின் முன்பாக வந்துகொண்டிருந்த யானை அப்படியே அசையாமல் நின்றுவிட்டது. அருகில் சென்றாலே ஆக்ரோஷத்துடன் பிளிறத் தொடங்கியது. காரணம் புரியாமலும், மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமலும் அனைவரும் தவித்துக் கொண்டிருந்த வேளையில் அந்த அற்புதம் நிகழ்ந்தது.

‘ஜய ஜய சங்கர; ஹர ஹர சங்கர;’ என்று குரல் வந்த திசையில் அனைவரும் திரும்பிப் பார்த்தனர். இருள் நீக்க வந்த ஒளிஞாயிறு போல் மஹா ஸ்வாமிகள் வந்துகொண்டிருந்தார். நேராக அம்பிகையிடம் வந்த மஹா ஸ்வாமிகள் அம்பிகையைக் கண்குளிரத் தரிசித்து மனம் நிறைய வழிபட்டார். அப்போது அவர் திருமுகத்தில்தான் எத்தனை ஆனந்தம்?!

பின்னர், யானையின் அருகில் சென்ற மஹா ஸ்வாமிகள் அதன் உடலைத் தம் திருக்கரங்களால் தடவிக் கொடுத்தார். என்ன ஆச்சர்யம்..! அடமாக நின்ற இடத்தில் நின்றபடி இருந்த யானை அடுத்த கணமே மெள்ள மெள்ள அசைந்து நடக்கத் தொடங்கியது. அம்பிகையின் வீதியுலா வும் தொடர்ந்தது. அம்பாளை தரிசித்த மன நிறைவுடன் மஹா ஸ்வாமிகளும் தம்முடைய யதாஸ்தானத்துக்குப் புறப்பட ஆயத்தமானார்.

இதன் பின்னணியில் சிலிர்ப்பூட்டும் ஒரு நிகழ்வு உள்ளது.மஹா ஸ்வாமிகளுக்காகத் தேனம்பாக்கம் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் சந்நிதி கொண்டு அருள்புரியும் சந்திரசேகர கணபதி புரிந்த அருளாடலே அது!

மஹா ஸ்வாமிகள் தேனம்பாக்கத்தில் இருந்தபோது ஒருநாள், தொடர்ந்து பட்டாசுகள் வெடிக்கும் சத்தம் கேட்டது. ‘‘இன்னிக்கு என்ன விசேஷம்? பட்டாசுகள் வெடிக்கும் சத்தம் கேட்கிறதே?’’ என்று அங்கிருந்தவர்களிடம் விசாரித்தார் பெரியவா.


காமாட்சி அம்மன் கோயில் திருவிழா நடப்பதாகவும், அம்பிகை வீதியுலா வந்துகொண்டிருப்பதாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். உடனே மஹா ஸ்வாமிகள் மிகுந்த ஆர்வத்துடன், “அடடா..! நான் இப்போதே சென்று வீதியுலா வரும் அம்பாளை தரிசிக்கவேண்டுமே’’ என்றார். அங்கிருந்தவர் களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. காரணம், மஹா ஸ்வாமிகள் தேனம்பாக்கத்தில் இருந்து புறப்பட்டு காஞ்சிபுரம் வருவதற்குள் வீதியுலா முடிந்து, அம்பிகை கோயிலுக்குள் சென்றுவிடுவாள். இதுபற்றி அங்கிருந்தவர்கள் எடுத்துச் சொன்னார்கள்.

ஆனால், மஹா ஸ்வாமிகள் அவர்கள் சொன்னதைக் காதிலேயே வாங்காமல், எழுந்து நேராக சந்திரசேகர கணபதியின் சந்நிதிக்குச் சென்று, சில நிமிடங்கள் அவருடைய காதருகில் எதையோ முணுமுணுத்தபடி இருந்தார். பின்பு, காஞ்சியை நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கிவிட்டார். மஹா ஸ்வாமிகளின் வேக நடைக்கு ஈடுகொடுக்க முடியாமல் மற்றவர்களும் வேகமாக அவருக்குப் பின்னால் ஓடி வந்தனர். காஞ்சியை அடைந்ததும்தான், அம்பிகையின் வீதியுலா ஒரே இடத்தில் நின்றுகொண்டிருப்பதைக் கண்டனர்.

அவர்களுக்குச் சட்டென்று ஓர் உண்மை புரிந்தது. மஹா ஸ்வாமிகள் தேனம்பாக்கத்தில் இருந்து புறப்பட்டபோது, தாங்கள் நினைத்ததுபோல் அவர் சந்திரசேகர கணபதியை வெறுமனே வழிபடவில்லை என்பதையும், அம்பாளை அன்றே அப்போதே தரிசித்துவிட வேண்டும் என்கிற தம்முடைய விருப்பத்தையே அவரின் காதருகில் முணுமுணுத்தார் என்பதையும், மஹா ஸ்வாமிகள் பிரார்த்தித்துக் கொண்டபடியே சந்திரசேகர கணபதி, வீதியுலாவுக்கு முன்பாக வந்துகொண்டிருந்த யானையை இருந்த இடத்திலேயே நிற்கச் செய்து, பெரியவா அம்பிகையை தரிசித்து, யானையைத் தடவிக்கொடுத்த பிறகே அது மேற்கொண்டு நடக்கவும், அம்பிகையின் வீதியுலா தொடரவும் செய்தார் என்பதையும் புரிந்து, மெய்சிலிர்த்தனர்.

நமக்கெல்லாம் கண்கண்ட தெய்வமாக, மண்ணுலகின் கற்பக விருட்சமாக அவதரித்த மஹா ஸ்வாமிகள், தம்முடைய சங்கல்ப மாத்திரத்திலேயே இப்படி எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்தி இருக்கிறார். அதுமட்டுமல்ல, தமக்குத் தாமே வகுத்துக் கொண்ட கடுமையான நியதிகளையும் மனிதநேயத்தின்பொருட்டு மீறத் தயங்காத மஹான் அவர். அப்படி, தாம் வகுத்துக்கொண்ட நியதி ஒன்றை அவரே மீறிய சம்பவம் நம்மைப் பெரிதும் நெகிழ்ச்சியில் ஆழ்த்திவிடும்.

Comments