மஹா ஸ்வாமிகள் -4

ஸாரூப்யம் தவ பூஜனே சிவ மஹாதேவேதி ஸங்கீர்த்தனே
ஸாமீப்யம் சிவபக்தி - துர்ய - ஜனதா ஸாங்கத்ய ஸம்பாஷனே
ஸாலோக்யஞ்ச சராசராத்மகதனு த்யானே பவானீபதே
ஸாயுஜ்யம் மம-ஸித்த மத்ர-பவதி ஸ்வாமின் க்ருதார்த்தோஸ்ம்யஹம்


ஸாரூப்யம் என்னும் முக்திநிலை உன்னுடைய பூஜையிலும், ஸாமீப்யம் என்னும் முக்திநிலை உன்னுடைய திருநாமங்களை சங்கீர்த்தனம் செய்வதிலும், ஸாலோக்யம் என்னும் முக்திநிலை உன்னுடைய அடியார்களுடன் சேர்ந்திருந்து உன் புகழைப் பேசுவதிலும், ஸாயுஜ்யம் என்னும் முக்திநிலை பிரபஞ்ச வடிவான உன் திருமேனியை தியானிப்பதிலும் எனக்கு இங்கேயே இந்தப் பிறவியிலேயே கிடைத்துவிட்டதாக ஆகிறது. பார்வதி நாதனே! இறைவனே! நான் அடையவேண்டிய பலனை அடைந்தவனாக ஆகிறேன்.

- சிவானந்த லஹரி

மனிதர்களாகப் பிறந்த நாம், நம்முடைய பிறவிப் பயனை இந்தப் பிறவியிலேயே அடையவேண்டும் என்று திருவுள்ளம் கொண்டுவிட்ட கயிலை நாயகன், பூமியில் வந்து அவதரிக்கவேண்டும் என்றால், காஞ்சி காமகோடி பீடத்தின் ஜகத்குருவாக ஆரோஹணித்து உலகம் உய்ய அருளாட்சி செலுத்தவேண்டும் என்றால், அவருடைய அவதாரம் பவித்ரமான ஒரு வம்சத்தில்தானே நிகழவேண்டும்?

உண்மைதான். காஞ்சி மடத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த, பாரம்பர்யம் மிக்க ஒரு குடும்பத்தில்தான் கயிலை சங்கரனின் கலியுக சங்கர அவதாரம் நிகழ்ந்தது.

காஞ்சி காமகோடி பீடத்தின் 64-வது பீடாதிபதியாக அருளாட்சி செலுத்தியவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள். அவரிடம் மிகுந்த பக்தியும் விசுவாசமும் கொண்டிருந்தவர் கணபதி சாஸ்திரிகள். அவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, மராட்டி ஆகிய நான்கு மொழிகளிலும் பாண்டித்யம் பெற்றிருந்தவர். அவருடைய திறமையைப் பாராட்டி, அவரை ஸ்ரீமடத்தின் சர்வாதிகாரியாக நியமித்திருந்தார் ஸ்வாமிகள். அந்தப் பணியில் திறமையுடன் ஈடுபட்ட கணபதி சாஸ்திரிகள், காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையும், திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி தாடங்க பிரதிஷ்டை வைபவத்தையும் ஸ்வாமிகளின் பரிபூரண ஆசிகளுடன் சிறப்பான முறையில் நடத்தி வைத்தார்.

ஒருமுறை ஆசார்ய ஸ்வாமிகள் தஞ்சைக்கு விஜயம் செய்திருந்தபோது, அப்போது தஞ்சையை ஆண்டு வந்த மன்னர், ஸ்வாமிகளை உரிய முறைப்படி வரவேற்று, (தங்க நாணயங்களால்) கனகாபிஷேகமும் செய்து மகிழ்ந்தார். அதனால் கிடைத்த ஐந்தாயிரம் தங்கநாணயங்களைக் கண்ட ஆசார்ய ஸ்வாமிகள், ஸ்ரீமடத்தில் அதிகப் பொருள் இருந்தால் அதைப் பாதுகாக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு விடும். அது அவ்வளவு சிலாக்கியமும் அல்ல என்று கூறி, அந்த தங்க நாணயங்களை தக்க வித்வான்களுக்கு வழங்கும்படி கணபதி சாஸ்திரிகளுக்கு உத்தரவிட்டார்.

  ஆனால், அந்த தங்க நாணயங்களைக் கொண்டு ஸ்ரீமடத்துக்கு நிலம் வாங்க விரும்பினார் கணபதி சாஸ்திரிகள். தம்முடைய விருப்பத்தை ஸ்வாமிகளிடம் தயங்கியபடியே தெரிவித்து ஒருவழியாக சம்மதமும் பெற்றுவிட்டார். அதன்படியே அணக்குடி பிள்ளை என்பவருக்குச் சொந்தமாக கருப்பூரில் இருந்த 40 வேலி நிலத்தை ஸ்ரீமடத்தின் பெயரில் சாசனம் செய்துகொண்டார் இப்படியாக ஸ்ரீமடத்தின் சேவைகளிலேயே தம்மை அர்ப்பணித்துக் கொண்ட கணபதி சாஸ்திரிகளின் மூத்த பிள்ளைதான் சுப்ரமணிய சாஸ்திரிகள். அக்கால வழக்கப்படி ஆங்கிலக் கல்வி கற்று, கல்வித் துறையில் பணியாற்றிய சுப்ரமண்ய சாஸ்திரிகள், அன்றைய தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்த விழுப்புரத்தில் பணியாற்றிக் கொண்டு இருந்த காலத்தில்தான், அவருக்கும் மஹாலக்ஷ்மி அம்மையாருக்கும் அவர்தம் தவப் பயனாகவும், நாமெல்லாம் உய்யும்படியும் கயிலை நாயகனின் சங்கர அவதாரம் நிகழ்ந்தது.

உலகத்தின் அஞ்ஞான இருளை அகற்ற வந்த ஞானசூரியனின் அவதாரம், அனுஷ நட்சத்திரம் கூடிய ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்றுதான் நிகழ்ந்தது என்பது பொருத்தமானதே அல்லவா? பிரபஞ்ச வடிவினனாகிய அந்தப் பரம்பொருளே உலகம் உய்ய தங்கள் வம்சத்தில் அவதாரம் செய்துள்ளது என்பதை அறியாத பெற்றோர், தாங்கள் பெற்றெடுத்த பிள்ளைக் கனியமுதுக்கு ஸ்வாமிநாதன் என்று திருப்பெயர் சூட்டி மகிழ்ந்தனர். தந்தைக்குப் பொருளுரைத்த அழகு முருகனின் பெயரும்கூட, பின்னாளில் நமக்கெல்லாம் ஞானப் பொருள் விளங்கிடும் வண்ணம் உபதேசிக்கப்போகும் அந்த ஞானக் குழந்தைக்கு பொருத்தமாகவே அமைந்துவிட்டது.

அந்தக் குழந்தைதான், காஞ்சி ஸ்ரீகாமகோடி பீடத்தின் அதிபதியாக ஆரோஹணித்து அருளாட்சி புரிந்து வந்த ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். பால்மணம் மாறாத பால்ய பருவத்திலேயே அந்தக் குழந்தை துறவறம் மேற்கொண்டுவிட்டது. நம்மையெல்லாம் கடைத்தேற்று வதற்கு அத்தனை அவசரம் போலும் அந்தக் குழந்தைக்கு!

1907-ம் வருடம் தம்முடைய 13-வது வயதில் துறவறம் மேற்கொண்டு, காஞ்சி ஸ்ரீகாமகோடி பீடத்தின் அதிபதியாக ஆரோஹணித்த நாள் முதற்கொண்டு, 87 வருடங்களாக அருளாட்சி செலுத்தி வந்த மகான், தம்முடைய மகா சமாதிக்குப் பிறகும் தம்மை பக்திபூர்வமாக வழிபடும் பக்தர்களின் அபிலாஷைகளை எல்லாம் பூர்த்தி செய்து அனுக்கிரஹித்து வருகிறார்.

மஹா ஸ்வாமிகள் தம்முடைய ஜீவித காலத்தில் இந்தப் புண்ணியபூமி முழுவதும் விஜயம் செய்திருந்தாலும்கூட, இறுதியில் சுமார் பத்து ஆண்டு காலம் அவர் எழுந்தருளி இருந்த தேனம்பாக்கம் தலத்தில்தான், ஞாலம் உய்வு பெற மஹா ஸ்வாமிகளின் மோனத்தவமும், எண்ணற்ற அருளாடல்களும் நிகழ்ந்தன.

மஹா ஸ்வாமிகள் தம்முடைய பக்தர்களுக்கு நிகழ்த்திய அருளாடல்கள் ஒருபுறம் இருக்க, மஹா ஸ்வாமிகளுக்காகவே தேனம்பாக்கம் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் சந்நிதி கொண்டி ருக்கும் சந்திரசேகர கணபதி ஓர் அருளாடலை நிகழ்த்தி உள்ளார்.

சந்திரசேகர கணபதி மிகுந்த வரப்பிரசாதி. காரியத் தடைகளைத் தகர்ப்பவர் மட்டுமல்ல, முடியவே முடியாது என்று மற்றவர்கள் நினைக்கும் காரியங்களைக்கூட முடித்து வைப்பவர்.
மஹா ஸ்வாமிகள் தேனம்பாக்கம் தலத்தில் எழுந்தருளி இருந்த காலம்.

காமாட்சி அம்மன் ஆலயத்தில் பிரம்மோற்ஸவம் நடைபெற்றது. தினமும் அம்பிகை தன் கோயிலில் இருந்து புறப்பாடு கண்டு, நான்கு ராஜ வீதிகளிலும் வீதியுலா வருவதும், லட்சக்கணக்கான பக்தர்கள் அம்பிகையை தரிசித்து வழிபடுவதும் கண்கொள்ளா காட்சியாக இருக்கும். குறிப்பாக தெற்கு ராஜவீதியும் மேற்கு ராஜவீதியும் சந்திக்கும் இடத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீகச்சபேஸ்வரர் கோயிலுக்கு அருகில் அம்பிகை நீண்டநேரம் எழுந்தருளி, சுற்றுப்புற கிராமங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு தரிசனம் தருவாள். அப்போது வாணவேடிக்கைகளும் நடைபெறும்.

அப்படி ஒருமுறை அம்பிகை வீதியுலா வந்தபோது, ஓர் இடத்தில் வீதியுலா அப்படியே நின்றுவிட்டது. காரணம் அம்பிகைக்கு முன்பாக வந்துகொண்டிருந்த யானை, வீதியுலா மேற்கொண்டு தொடர முடியாதபடி செய்துவிட்டது. அருகில் சென்றாலே ஆக்ரோஷத் துடன் பிளிறியது. யானை நகர்ந்தால்தான் அம்பிகையின் வீதியுலா தொடரும் என்ற நிலையில், அதற்கான காரணம் புரியாமல் அங்கிருந்தவர்கள் தவித்துக் கொண்டிருந்தனர்.

சற்றைக்கெல்லாம் அங்கே ஓர் அற்புதம் நிகழ்ந்தது...

Comments