மன நலம் தருவாள் பொன்னேஸ்வரி!

திருச்சி மாவட்டம், பொன்மலையில் அமைந்துள்ளது அருள்மிகு பொன்னேஸ்வரி அம்மன் திருக்கோயில். மலையடிவாரத்தில் அன்னை ஈஸ்வரியும், மலையின் மேல் முத்துக்குமார சுவாமியும் குடி கொண்டதலம். யுகம் பல கடந்த மிகப் பழைமையான இது, ‘பொன்மலை’ என்றே அழைக்கப்படுகிறது.
சுமார் 200 அடி உயரமுள்ள இம்மலையின் மேல் நின்று பார்த்தால், கிழக்கே எறும்பீஸ்வரர் மலை, மேற்கே இரட்டை மலை, வடக்கே திருச்சி மலைக்கோட்டை, தெற்கே நார்த்தா மலை ஆகியவை தெரியும். இந்த நான்கு மலைகளும் தெய்வாம்சம் கொண்டவை. பொன்மலை மூன்று அடுக்குகளைக் கொண்டது. முதல் அடுக்கில் அன்னை ஈஸ்வரியின் கோயிலும், இரண்டாம் அடுக்கில் முருகன், ஐயப்பன் கோயில்களும் அமையப் பெற்றிருக்க, மூன்றாம் அடுக்கான உச்சிப் பகுதி திறந்தவெளியாக உள்ளது.
இங்கே அம்பாள் ஈஸ்வரி கோயில் கொண்ட விதம் சுவாரஸ்யமானது. கயிலைவாசியான நாகார்ஜுன முனிவர் தாம் செய்த தவறுக்கு பிராயச் சித்தமாக, பூவுலகில் அழகான இம்மலையடிவாரத்தில் தவம் செய்ய நேர்ந்தது. நெடுநாட்கள் தவத்தில் கழிந்தது. ஒரு நாள் கண் விழித்துப் பார்த்தார். அருகே புதரில் ஓர் ஒளி தெரிந்தது. அருகே சென்று பார்த்தார். புதர் நடுவில் அம்மனின் சிரசு மட்டும் வெளித் தெரிந்த நிலையில் விக்ரஹம் ஒன்று கண்டார்.
அம்மனின் விக்ரஹத்தை எடுக்க முயன்றார். அத் திருமேனி பூமியில் அழுந்தியிருந்தது. உடனே, அதை ஒழுங்குபடுத்தி, திருவுருவை வெளியே எடுத்தார். அதனுடன் பொற்காசுகள் சிலவும் இருந்தன. எனவே ஈஸ்வரிக்கு, ‘ஸ்ரீபொன்னேஸ்வரி அம்மன்’ என்று பெயரிட்டு அருகிலிருந்த சரக்கொன்றை மரத்தடியில் நிறுவி வழிபட்டார். அப்பகுதியினரும் பயபக்தியுடன் அம்மனை வழிபட்டு வந்தனர்.
அம்மனுக்கு அபிஷேகம் செய்ய எண்கோண வடி வில்கிணறு ஒன்றை அமைத்த முனிவர், தன் தவ வலிமையால் மலை மேலிருந்து, கிணறுக்கு நீர் வரும்படி செய்தார். இன்றும் அவ்வாறே நீர் கசிந்து கிணற்றில் சேகரமாகிறது. இது ‘அக்னி தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. பின்னாளில் அம்மனுக்கு சிறிய கோயில் ஒன்றை நிர்மாணித்த முனிவர், பின்னர் கயிலாயம் திரும்பினார் என்கிறது தல புராணம்.
கிழக்கு பார்த்த கோயில். கருவறையின் வலதுபுறம் ராஜகணபதி எழுந்தருளியுள்ளார். இவரைத் தரிசித்த பின்பே அம்மனை தரிசிப்பது மரபு. இங்கே, சுயம்புத் திருமேனியான ஆதிபொன்னேஸ்வரி பின்புறமும், புதிதாகப் பிரதிஷ்டையான ஸ்ரீபொன்னேஸ்வரி முன்புறமும் என, கருவறையில் இரண்டு அம்பாள் திருவுருவங்களைக் காணலாம்.
மூலவர் அன்னை ஈஸ்வரி அமர்ந்த கோலத்தில், நான்கு திருக்கரங்களில்டமருகம், சங்கு, சூலம், கிண்ணம் ஏந்தி, முகத்தில் புன்னகை அரும்ப அருள் பாலிக்கிறாள். கருவறையில் பலமுறை மின் விளக்குகள் பொருத்த முயற்சித்தும் இடையூறுகளும், விபத்துகளும் ஏற்பட்டனவாம். பூமிக்கடியில் இருளில் இருந்ததால், ‘தமக்கு மின்னொளி வேண்டாம்’ என்று மூதாட்டி ஒருவரின் வாயிலாக அம்மன் அருள் வாக்கு சோன்னாளாம். சந்நிதிக்கு எதிரில் சிம்ம வாகனமும், பலி பீடமும், கொடி மரமும் உள்ளன.
கருவறை திருச்சுற்றில் மதுரைவீரன், கருப்பண்ண சாமி தனிச்சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர். கன்னி மூலையில் கணபதி, மகா மண்டபத்தின் மேற்குப் பகுதியில் நாகர் சிலைகள் மற்றும் சிறிய விநாயகர், சிவலிங்கம், பால முருகன், கருமாரி அம்மன் ஆகியோரும் உள்ளனர். கருவறை வடபகுதியில் விஷ்ணு துர்கை, சப்த கன்னியர், நவக்கிரக சன்னிதியும் காணலாம்.
சன்னிதியின் இடதுபுறம் பன்னி ரெண்டு படிகள் ஏறினால், இடும் பன்சன்னிதியைக் காணலாம். மேலும் ஆறு படிகள் ஏறி முருகன், வள்ளி - தெய்வானையுடன் தனி சந்நிதியில் திகழ்வதைக் கண்டு, வலப்புறம் பதினெட்டு படிகளின் மீது ஸ்ரீஐயப்பன் கிழக்கு நோக்கி அருள்பாலிப்பதையும் கண்டு வணங்குகிறோம்.
கார்த்திகை தீபத் திருநாள் விசேஷம். கோயில் முன் சோக்கப்பனை கொளுத்துவதும், மலை உச்சியில் தீபம் ஏற்றலும் சிறப்பு. இங்கே தீபம் ஏற்றுவதற்கு இலுப்ப எண்ணெய் பயன்படுகிறது. கந்த சஷ்டி, வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட விழா நாட்களிலும் பக்தர் கூட்டம் அலைமோதும்.
பில்லி, சூனியத்தால் பாதிக்கப்பட்டோர் பாலபி ஷேகம் செய்ய, பிரச்னை தீரும். திருமணத் தடை நீங்கவும், குழந்தைப் பேறு கிடைக்கவும், குடும்பத்தில் மகிழ்ச்சி, நினைத்த காரியம் நிறைவேற அம்பாளுக்கு சந்தனக் காப்பு செய்கின்றனர். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அக்னி தீர்த்தத்தில் தொடர்ந்து 18 நாள் நீராடி அம்பாளை வழிபட்டால் விரைவில் குணம் காணலாம். மலையடிவாரத்தில் அருள்பாலிக்கும் அம்பாளையும், மலை மேல் அருளும் முத்துக்குமார சுவாமியையும் வழி பட, மலைபோல் வரும் துயரங்கள் பனிபோல் விலகுவது கண்கூடு.
அமைவிடம்: திருச்சி ரயில் நிலையத்திலிருந்து 4 கி.மீ. தொலைவு.
தரிசன நேரம்: காலை 6 - 12.30 வரை. மாலை 4 - 8 மணி வரை.

Comments