வைத்தியம் பார்க்க வந்த வேலவன்!

வடசென்னை - மஹான்களும் ஞானிகளும் தலை சிறந்த கவிவாணர்களும் இறையடியார்களும், அளவிட முடியாத அளவுக்கு ஏராளமானோர் இருந்து அருளாடல் நடத்திய பூமி.
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீமுத்துஸ்வாமி தீக்ஷிதருக்கும் அவரது தந்தைக்கும்; ராமநாடக கீர்த்தனை பாடிய ஸ்ரீ அருணாசலக்கவிராயருக்கும், மணலி முதலியார் அவர்கள் கனகாபிஷேகம் நடத்திய, கல்வியருமை உணர்ந்தோர் வாழ்ந்த பூமி!
பட்டினத்தார், ஞானசம்பந்தர், அப்பர் முதலானோர் வழிபட்டுத் துதித்த பூமி.
அத்வைத ஸ்தாபகர் எனும் ஆதிசங்கரர் வந்து அம்பிகையைப் பூஜித்து, வழிபாட்டு முறைகளை வகுத்துத் தந்த பூமி! இன்றும் அதன்படியேதான் நடக்கிறது. ஆதிசங்கரருக்கு முழு விக்கிரகமே இங்குள்ளது.
கம்பர் ராமாயணம் எழுத, ஒற்றியூர்க் காளி வந்து பந்தம் பிடித்த பூமி!
சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளுக்குத் திருமணம் நடந்த பூமி!
பிரம்மதேவருக்கு சிருஷ்டித் தொழில் செய்வது எப்படி ? எனச் சிவபெருமானே பாடம் நடத்தியதால், ‘ஆதிபுரி’ எனப் பெயர் பெற்ற பூமி!
பட்டினத்தார், குணங்குடி மஸ்தான் முதலான
சித்த புருஷர்கள் வந்து தங்கள் திருமேனியை ஒடுக்கிக் கோயில் கொண்ட பூமி!
ரோமச மஹரிஷி எனும் மஹா ஞானியும் சித்த புருஷருமானவர் இருந்து இன்றும் தவம் புரியும் பூமி!
ஞான பூமியான வடசென்னை, ராயபுரத்தில் முருகப்பெருமான் நடத்திக் காட்டிய திருவிளையாடல் இது.
சித்த புருஷர்கள் பலரும் வழிபட்ட, ராயபுரம் அங்காளம்மன் கோயிலருகில் துரைசாமிக்கவிராயர் என்பவர் வாழ்ந்து வந்தார். பரம்பரை பரம்பரையாகக் கவிபாடுவதில் கைதேர்ந்தவர்கள் உருவான குடும்பமிது.
பரம்பரை பரம்பரையாக வந்த கவிபாடும்சொத் தும் பண்பாடும் பக்தியும், துரைசாமிக்கவிராயருக்கு இளமையிலேயே அமைந்திருந்தது.
பக்தியுடன் பாடல் பாடித் துதித்து வழிபாடு செவதில், மிகுந்த ஊக்கத்துடனிருந்த கவிராயர், பழனியாண்டவன் படத்தை ஓர் அட்டையில் ஒட்டி, அதற்கு வழிபாடு செய்து வந்தார். பூமாலைகளுடன் பாமாலைகளையும் சூட்டி வழிபாடு செய்த கவிராயர், தினந்தோறும் வழிபாடு முடிந்ததும், யாராவது ஏழை பாழைகளுக்கு உணவிட்டு விட்டு, அதன்பிறகேதான் உண்ணும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.
ஒருசமயம், அடியார்களுக்கு உணவளிக்க வழியில்லாத நிலையில், கவிராயரின் மனைவிதன் கழுத் தில் இருந்த திருமாங்கல்யத்தைக் கழற்றிக் கொடுத்து, மஞ்சள் கயிற்றை அணிந்தாள்.
மனைவியளித்த மாங்கல்யத்தைக் கொண்டு, அதன் மூலம், தன் அன்னதானத்தைத் தொடர்ந்தார் கவிராயர்.
குதிரை கீழே தள்ளியது மட்டுமல்லாமல், குழியும் பறித்த கதையாகக் கவிராயருக்கு முன்வினைப் பயனால், விறைவாதம் எனும் நோய் வந்து வாட்டியது.
கவிராயர் கலங்கினார். வலி தாங்க முடியவில்லை. எந்தவிதமான மருத்துவமும் செல்லுபடியாகவில்லை. நாளாக நாளாக நோயின் கொடுமை அதிகமானதே தவிர, வலி குறைந்தபாட்டைக் காணோம். உண்மையான செல்வம் என்பது ஆரோக்கியம்தானே!
அந்த ஆரோக்கியம் கெட்டு அல்லல்படுத்தும்போது, ஆண்டவனைத் தவிர வேறு யார் துணை?
கவிராயர் கதறினார்: பழனியாண்டவா! பால தண்டாயுதபாணி! செய்த பாவம் என்னவென்று தெரியவில்லையே முருகா! உன்னைத் தவிர உற்றார் எனக்கு யார் உளர்? கந்தா! உன் சித்தம் என்னவோ தெரிய வில்லையே ஐயா" எனக் கதறி மயங்கி விழுந்தார்.
அதற்காகவே காத்திருந்ததைப்போல, ‘அழகென்றசொல்லுக்கு முருகா’ என்பதைப்போல, அழகு மிகுந்த இளைஞர் ஒருவர் கையில் ஒரு சிறு மண் குடுவையுடன் அங்கு தோன்றினார். குடுவையில் இருந்த தைலத்தை, சிறு குச்சி முனையில் இருந்த பஞ்சினால் தோத்து, கவிராயருக்கு நோய் கண்ட பகுதியில் தடவினார்.
கூடவே, அன்பனே! அழாதே! நாளை காலை குணமாகிவிடும்" என்றுசொல்லி மறைந்தார்.
நடந்ததெல்லாம் ஏதோ கனவு போலிருந்தது கவிராயருக்கு. சற்று நேரம் கழித்து அவர் கண் திறந்து பார்க்கையில், மருந்து தடவப்பட்டிருந்தது தெரிய வந்தது.
படுத்திருந்த நிலையிலேயே, பழனியாண்டவா! தேடி வந்து அருள்புரிந்த தெய்வமே! அன்னக்காவடி கட்டி, அடியேன் பழனிக்கு வருகிறேன் ஐயா" எனக் கைகளைக் கூப்பித்துதித்தார்.
செவ்வேள்சொன்னதைப் போலவே மறுநாள், கவிராயரின் நோய் இருந்த இடம் தெரியாமல் மறைந்தது.
கவிராயரின் கண்களில் கந்தன் கருணையை எண்ணிக் கண்ணீர் வழிய, கந்தப்பெருமானோ, அவ்வூர்க் குயவர் ஒருவரின் கனவிலே தோன்றி, கவிராருக்கு இருபானைகள் கொடு" என உத்தரவிட்டதோடு, கந்தன் செட்டியார் எனும் அரிசி வியாபாரியின் கன விலும் காட்சி கொடுத்து, கவிராயருக்கு வேண்டிய அரிசியைக்கொடு" எனக் கட்டளையிட்டு மறைந்தார்.
அத்துடன், கவிராயரின் கனவிலும் காட்சி தந்த கந்தக் கடவுள், பானையும் அரிசியும் வரும்.பெற்றுக்கொள்" எனக் கூறினார்.
அன்னக்காவடி கட்டிக்கொண்டு, ராயபுரத்திலிருந்து புறப்பட்டார். (கவிராயர் நடந்து, பழனியை அடைய நாற்பத்தைந்து நாட்களாயின என ஒரு நூல் கூறுகிறது.)
கவிராயர் அன்னக்காவடியுடன் நடந்து வந்து கொண்டிருந்த அதேவேளையில், கவிராயர் நமக்காக அன்னக்காவடி சுமந்து வருகிறார். அவரை சகலவித மான மரியாதைகளுடன் வரவேற்க ஏற்பாடு செய்யுங்கள்" எனக் கோயில் பொறுப்பாளர்களின் கனவிலும் போக்கந்தக்கடவுள் உத்தரவிட்டார்.
கவிராயர் மலையடிவாரத்தை நெருங்க, அனைவருமாகக் கூடி வாத்தியங்கள் முழங்க, மாலை மரியாதைகளுடன் வரவேற்று, சன்னிதிக்கு அழைத்துச் சென்றார்கள்.
அங்கும் அவர்களுக்கு ஓர் அதிசயம் காத்திருந்தது.கவிராயரின் காவடியிலிருந்து, அன்னம் நிறைந்த மண் பானைகளை அவிழ்த்துத் திறந்தபோது, அவைகளில் அன்னம், கொதிக்கக் கொதிக்க இருந்தது.
அனைவரும் அதிசயிக்க, வழிபாட்டை முடித்துக் கொண்டு, ராயபுரம் திரும்பினார் கவிராயர்.
கவிராயரின் கடைசிக் காலம்...
கவிராயர்தான் வழிபடும் பழனியாண்டவன் படத்தின் அடியில்படுத்திருந்தார். உறவினர்கள் சுற்றியிருக்க, கவிராயரின் பேரனான சிறுவன் ஒருவனும் அங்கிருந்தான். அனைவருக்கும் நல்லுபதேசம் செய்த வாறே கவிராயர், கந்தப்பெருமானின் திருவடிகளை அடைந்தார்.
அப்போது, கவிராயர் பலகாலம் வழிபட்ட பழனியாண்டவன் படத்தின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து, நெஞ்சுவரை வந்து அப்படியே நின்று விட் டது. அந்தக்கறை பல நாட்கள் இருந்தது.
அப்போது, அருகிலிருந்த சிறுவன்தான், இருபதாம் நூற்றாண்டிலும் இமவான் பேரனை நேருக்கு நேராகத் தரிசித்த ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகளின் பிரதான சீடரான ஸ்ரீபாலசுந்தர ஸ்வாமிகள்.

Comments