வரம் தரும் ஸ்ரீநிவாசன்!

திருமாலை தனியாக வழிபடுவதை விட,
திருமகளோடு சேர்த்து தரிசிப்பதே
விரைவில் பலன் தரவல்லது.
ஸ்ரீயாகிய திருமகளை, தன் மார்பிலேயே
இருத்திக் கொண்டு இருப்பதால்தானே,
திருமலைவாசன் திருவேங்கடநாதன் ஸ்ரீனிவாசனாகக் கொண்டாடப்படுகின்றார்.
ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்ரீ லட்சுமி வராகர், ஸ்ரீலட்சுமி நரசிம்மர், ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர், ஸ்ரீலட்சுமி நாராயணர் என பற்பல அற்புதத்
திருக்கோலங்களில், பல்வேறு
திருத்தலங்களில் தரிசனம் தந்து அருள்பாலிக்கின்றார்.
ஸ்ரீ லட்சுமி வராகர்: ‘ஹிரண்யாட்சன்’ என்ற அரக்கன், பூமித் தாயை பாய் போல் சுருட்டி, கடலுக்கு அடியில் மறைத்து வைத்தான். திருமால் வராகமாக (பன்றியாக) உருக்கொண்டு பூமாதேவியைக் காப்பாற்றி, தனது இரண்டு பெரிய பற்களின் மேல் அமர்த்தி, மேலே கொண்டு வந்ததோடு, அரக்கனையும் அழித்து வெற்றிவாகை சூடி, கோலவராகராகக் காட்சியளித்தார்.
இதனால் எம்பெருமான் பூவராகன், ஆதிவராகன், ஸ்ரீலட்சுமிவராகன் என்றெல்லாம் துதிக்கப்படுகின்றார். திருமலையில் உள்ள ஆதிவராக மூர்த்தி, ஸ்ரீனிவாசனுக்கு தன் இடத்தை அளித்ததாக ஐதீகம். எனவே, ஸ்வாமி புஷ்கரணியின் கரையில் உள்ள இவரையும் தரிசித்த பின்னரே திருமலை யாத்திரை பூர்த்தியாவதாக ஐதீகம். ஸ்ரீ முஷ்ணத்தில் இரண்டு திருக்கரங்களையும் இடுப்பில்வைத்துக் கொண்டு அதியற்புதமாக, பூவராகனாகக் காட்சியளிக்கிறார். திருவிடந்தையில் நித்ய கல்யாணப் பெருமாளாகவும், திருவலவெந்தையில் வலப்புறம் அமர்ந்துள்ள திருமகளோடு, ஸ்ரீ லட்சுமி வராகமூர்த்தியாகவும் சேவை ஸாதிக்கிறார்.
‘என்னை ஒரே ஒருமுறை சேவித்தாலே, அந்த ஜீவனை நான் கரை சேர்ப்பேன்’ என்று தன் பத்தினியி டம் வாக்குக் கொடுத்திருக்கிறார். திருவிடந்தையில் அகிலவல்லித் தாயார் எனப் போற்றப்படுகிறாள் அன்னை. பூமி பிராப்தி, வீடு, சொத்துக்கள், நிலம் என அனைத்து செல்வங்களையும் நல்குவார் இந்த ஸ்ரீலட்சுமிவராக மூர்த்தி!
ஸ்ரீ லட்சுமி நரஸிம்மர்: குழந்தை பிரகலாதனின் வேண்டுதலின்படி தூணிலிருந்து நரசிம்மமாக வெளிப்பட்டு அவனைக் காப்பாற்றியதோடு, அகந்தை கொண்ட அவனது தந்தை ஹிரண்ய கசிபுவை வதம் செய்தார் ஸ்ரீ நரசிம்மமூர்த்தி. அவரது கோபாக்னியைக் கண்டு, மகாலட்சுமியே நடுங்கி விட்டாளாம். பிறகு, நரசிம்மர் பிரகலாதனாலும், மகாலட்சுமி மடியில் அமர்ந்தமையாலும் சாந்த மூர்த்தியானார். யோக நரசிம்மர், நவநரசிம்மர், ஸ்ரீலட்சுமி நரசிம்மர் எனப் பல்வேறு திருநாமங்களில் பல கோயில்களில் தரினசம் தரும் இவரை வழிபட்டால், கடன்கள், கஷ்டங்கள், நோய்கள் நீங்கும். அகோபிலம், சொளிங்கர் போன்ற இடங்களிலும் மற்ற பல்வேறு தலங்களிலும் நீக்கமற நிறைந்து சேவை ஸாதிக்கிறார்.
ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர்: ‘ஹயம்’ என்றால் குதிரை. பரிமுகக் கடவுள் என்று போற்றப்படும் இவர், குதிரை முக அசுரனைக் கொன்று, வேதங்களை மீட்டு, நான்முகன் படைப்புத் தொழிலைத் தொடங்க உதவினார். இவர், ‘ஞானப்பிரான்’ எனக் கொண்டாடப்படுகின்றார். தேர்வு பயம் போக்கும் பரிமுகக் கடவுளாகிய ‘ஹயக்ரீவர்’ திருவஹிந்திரபுரம், செட்டி புண்ணியம், நங்கநல்லூர் போன்ற பற்பல இடங்களில், ஸ்ரீ யோக ஹயக்ரீவராகவும், ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவராகவும் தரிசனம் தருகின்றார்.
தேர்வுகளில், நல்ல மதிப்பெண்கள் கிடைக்க, இவரை வழிபடலாம். இவருக்கு ஏலக்காய் மாலை மிகவும் விசேஷம். கடலைப் பருப்பு, வெல்லம் கொண்டு தயாரிக்கப்படும் ஸ்ரீஹயக்ரீவ பண்டியும் இவருக்கு மிகவும் உகந்ததாகும். இவரை வழிபட, அஞ்ஞானம் விலகி, ஞானம் பெறலாம்.
ஸ்ரீ லட்சுமி நாராயணர்: ஸ்ரீ மகாலட்சுமி எப்போதும் மகா விஷ்ணுவை விட்டுப் பிரிய மாட்டாள். நமக்காகப் பரிந்து பேசி, பெருமாளிடம் சிபாரிசு செய்வாள். ‘பாவம் நம் குழந்தைகள். யார்தான் பாபம் செய்ய வில்லை. இனிமேல் செய்ய மாட்டார்கள். இந்த ஒரு முறை மன்னித்து வரம் கொடுங்கள்’ என்று திருமாலின் திருமுகத்தைத் தன் பக்கம் திருப்பி, கருணை பொழியும் கண்களால் பேசி, நமக்கு வரம் தர அருள் செய்வாள். திருமாலின் வரம் கிடைத்து விட்டால் நமக்கு எப்போதும் நிம்மதிதானே!
வேப்பஞ்சேரி, கப்பூர் போன்ற இடங்களில் ஸ்ரீ லட்சுமி நாராயணர் கோயில் கொண்டுள்ளார். வேண்டிய வரம் தரும் வள்ளல் இவர். நமது பாபத்தைப் போக்கி விரும்பியவரங்களை விரைவில் நல்குவார் இவர். இந்த தெய்வத் தம்பதி திவ்ய தரிசனம் நம்மை என்றும் காப்பாற்றும்.

Comments